Showing posts with label ஈராக் வரலாறு. Show all posts
Showing posts with label ஈராக் வரலாறு. Show all posts

Sunday, August 17, 2014

ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம்.

மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சார கருத்தியல், பிற்காலத்தில் வலிந்து புகுத்தப் பட்டிருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் இருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள ஈராக்கில் வாழும், யேசிடி மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில், கிட்டத்தட்ட இதே மாதிரியான புராணக் கதை இருந்து வருகின்றது.

யேசிடி என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். 

தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது.

முருகனைப் பற்றிய கதைகளில் ஒன்று, முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கூறுகின்றது. முருகன் குழந்தையாக இருந்த நேரம், ஏழு அல்லது ஆறு கார்த்திகைக் கன்னியர்கள் அவனை சரவணப் பொய்கையில் நீராட்டினார்கள். அதனால் முருகனுக்கு ஆறு தலைகள் உண்டாகி, கார்த்திகேயன் (தமிழில் ஆறுமுகன்) என்று அழைக்கப் பட்டான். (ஆரம்பத்தில் ஏழு தலைகள் இருந்தன என்றும் சொல்லப் படுகின்றது.)

இந்துக்களுக்கு மேற்குறிப்பிட்ட புராணக் கதை நன்கு தெரிந்திருந்த போதிலும், அதற்குப் பின்னால் உள்ள வான சாஸ்திர அறிவியலை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலர் தான். விண்வெளியில் இருக்கும் ஏழு கார்த்திகை நட்சத்திரங்கள் தான், அந்த ஏழு கன்னிகைகளும். நமது பூமி உள்ள பால்வெளியில் அந்த நட்சத்திரங்களும் உள்ளன. (ஏழு பின்னர் ஆறாகி உள்ளது. அதற்கும் ஒரு காரணக் கதை இருக்கிறது.)

சரவணப் பொய்கை என்பது அண்டவெளியில் உள்ள பால் வெளியை குறிக்கும். ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், புராணக் கதையில் முருகனின் ஆறு முகங்களாக உருவகிக்கப் பட்டது. உண்மையில் இது மதம் சம்பந்தமான விடயம் அல்ல. ஆதி கால மனிதர்களின் வான சாஸ்திர அறிவியல், இப்படியான கதைகள் மூலமாகத் தான் பரப்பப் பட்டு வந்துள்ளது. யேசிடி மதத்தவர்கள், இதே மாதிரியான கதையை ஏழு வர்ணங்களாக உருவகித்து உள்ளனர். ஆனால், இரண்டுக்கும் இடையிலான அறிவியல் அடிப்படை ஒன்று தான்.

தென்னிந்திய முருகன் வழிபாட்டில் காணப்படும் சேவல், மயிலில் காலின் கீழ் மிதிபடும் பாம்பு ஆகியன, யேசிடி மதத்தவராலும் புனித சின்னங்களாக கருதப் படுகின்றன. இவற்றை நேரில் கண்டறிய விரும்புவோர், வட ஈராக்கில் உள்ள லாலிஷ் எனும் இடத்தில் உள்ள யேசிடி மதத்தவரின் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அல்கைதா, ISIS போன்ற முஸ்லிம் மதவெறி இயக்கங்கள், அந்தக் கோயிலை தகர்ப்பதற்கு பல தடவைகள் முயற்சித்துள்ளன.

“முருகன் வழிபாடு, தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமானது!” என்ற ஒரு பிழையான கட்டுக்கதை தமிழர்கள் மத்தியில் உள்ளது. அநேகமாக, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழினவாதிகளே இது போன்ற கட்டுக் கதைகளை பரப்பி வந்துள்ளனர். முருகன் வழிபாடு, தென்னிந்தியாவில் உள்ள பிற திராவிட இனங்கள் மற்றும் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. அநேகமாக, முருகன் வழிபாடு ஆரிய மயமாக்கலுக்கு முந்திய திராவிட இனங்களின் வழிபாடாக இருந்திருக்கலாம்.

ஒரு காலத்தில், இந்தியா முதல், அரேபியா வரையில், முருகன் வழிபாடு இருந்திருக்க வேண்டும். சில அரேபியர்கள் இஸ்லாமியராக மாறிய பின்னரும், முருகனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அரபு இஸ்லாமியர் மத்தியில் “அல் கதிர்” என்று அழைக்கப்படும் தெய்வம், முருகனை நினைவுபடுத்துகின்றது. முருகனுக்கு “கதிர் (காமன்)” என்ற இன்னொரு பெயர் இருப்பதை, நான் இங்கே சொல்லத் தேவையில்லை. இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இஸ்லாமியர் வழிபாடு நடத்தும் பகுதி ஒன்று இன்றைக்கும் உள்ளது.

யேசிடி மதத்தவரின் கோயில் பூசாரிகளை "பிர்" என்று அழைப்பார்கள். கதிர்காமத்தில் பூசை செய்பவர்களும் பிராமணர்கள் அல்லர். அதற்கென்று தனியான பூசாரிகள் உள்ளனர். அவர்கள் பூசை வழிபாடு நடத்தும் முறை, பிற இந்துக் கோயில்களில் இருந்து மாறுபட்டது. யேசிடி மதத்தில் உள்ள, பக்திப் பாடல்களை  "கவ்வல்" என்று அழைப்பார்கள். அவற்றைப் பாடுவோர் "கவ்வாலிகள்" ஆவர். 

இன்றைய பாகிஸ்தானில், கர்நாடக சங்கீதம் போன்று, கவ்வாலி இசை மரபு இருந்து வருகின்றது. தமிழில் "காவாலி" என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அது வேண்டுமென்றே எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. இந்து மத மேலாதிக்கவாதிகள், தமிழர்களின் மரபு வழி மத நம்பிக்கைகளை அழிப்பதற்காக, வேண்டுமென்றே அப்படியான தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். 

ஈராக்கில் வாழும் யேசிடி குர்தியர்கள் திராவிடர்கள் அல்ல, ஆரியர்கள். அவர்களுக்கும் முஸ்லிம் குர்தியர்களுக்கும் இடையில், உருவத் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இல்லை. குர்து மொழியானது, பார்சி, சமஸ்கிருதம் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு நெருக்கமானது. குர்து மக்களில் பெரும்பான்மையானோர் சன்னி முஸ்லிம்கள். ஆயினும், மிகக் குறைந்த அளவில், யூத மதத்தை பின்பற்றுவோரும், ஷியா முஸ்லிம்களும், குர்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் வாழ்கின்றனர். யேசிடி மதத்தை சேர்ந்த மூன்று இலட்சம் குர்தியர்கள், ஒரு புராதன கால மதத்தை பின்பற்றுவதால், பல்வேறு பக்கங்களாலும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.

அரேபியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். பண்டைய காலத்தில், அரேபியர் என்றால், அரபு மொழி பேசுவோர் என்று அர்த்தம். இனம் பற்றிய கற்பிதங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் தோன்றின. ஈராக்கில் வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானோர், அரபு மொழியை பேசியதால் அரேபியர் ஆனவர்கள். அவர்களின் பூர்வீகம் கிரேக்கமாக கூட இருக்கலாம். அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்கு பின்னர் ஏராளமான கிரேக்கர்கள் அங்கே குடியேற்றப் பட்டனர். 

அலெக்சாண்டரின் காலத்திலேயே,  ஈராக்கில் இருந்த பாபிலோனிய கலாச்சாரம் அழிந்து விட்டது. கூடவே பாபிலோனியரின் மத நம்பிக்கைகளும் காணாமல் போய் விட்டன. ஆயினும், வெளியுலக தொடர்பற்ற வட ஈராக்கிய மலைப் பிரதேசத்தில், அது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்திருக்கலாம். யேசிடிகள் அந்தத் தொடர்ச்சியை பேணி வருபவர்களாக இருக்கலாம்.

யேசிடிக்கள் ஒரு புராதன கால மதத்தை பின்பற்றினாலும், அது காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அது பிற மதங்களுடன் சமரசம் செய்து கொண்டு (syncretic), தன்னைத் தானே மறு வார்ப்புச் செய்து கொண்டுள்ளது. ஆதிகால பாரசீக மதமான, சரதூசரின் மதத்தின் சில கூறுகளை கொண்டுள்ளது. அதே நேரம், பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் போன்று ஞானஸ்நானம் எடுப்பது, இஸ்லாமியர்கள் போன்று ஐந்து வேளை தொழுவது.

உண்மையில் “யேசிடி” என்பது அந்த மதத்தின் பெயர் அல்ல. அது, பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். அந்த மதத்தின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதைப் பின்பற்றும் மக்களுக்கும் தெரியாது. கி.பி. 680 - 683 காலத்தில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபா "யாசிட்" இன் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். ஒருவேளை அந்தக் கால கட்டத்தில், மேற்கத்திய நாடுகளில் இருபதைப் போன்று, ஜனநாயக சமுதாயம் இருந்திருக்கும். பல கல்வியாளர்கள் மத்தியில், அழிந்து போன புராதன மதங்களை ஆராயும் ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். யாசிட் கலீபா அப்படியான அறிஞர்களை ஆதரித்திருக்கலாம்.

அந்தக் காலகட்டத்திற்கு பின்னர் தான், யேசிடி ஒரு மத நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் நமது நாட்டில் உள்ள சிறு தெய்வ வழிபாடு போன்று இருந்து வந்துள்ளது. இன்றைய லெபனானில் பிறந்த "அடி பின் முஸாபர்" (Adi bin Musafar) பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வி கற்பதற்காக வந்திருந்தார். அங்கே தான் யேசிடி மதம் பற்றி அறிந்து கொண்டார். அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, வட ஈராக்கில் உள்ள ஹக்கரி மலைகளுக்கு சென்றார். நமது காலத்தில் அப்படியானவர்களை Anthropologist என்று அழைப்பார்கள்.

ஹக்கரி மலைகளில் வாழ்ந்த குர்து மொழி பேசும் மக்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். அதனால், முஸாபர் அவர்களுக்கு ஒரு மீட்பர் போன்று தென்பட்டார். முஸாபர் அந்த மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார். அந்த மக்களை நிறுவன மயப் படுத்தினார். அவரின் விசுவாசிகள் அடவைஜா குழு என்று அறியப் பட்டனர். முஸாபர் இறந்த பின்னரும், மொசுல் நகருக்கு அருகில் இருந்த அவரது சமாதி, புனித யாத்திரை செல்லும் ஸ்தலமாகியது. பதினான்காம் நூற்றாண்டில், இஸ்லாமிய தூய்மைவாதிகள் அந்த சமாதியை உடைத்து விட்டனர்.

இஸ்லாமிய ஈராக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும், புனித நூலின் மக்களாக கருதப் பட்டனர். அதனால் அவர்கள் மேல் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் படவில்லை. ஆனால், யேசிடி மக்கள் “பிசாசை வழிபடுபவர்கள்” என்று தவறாக கணிக்கப் பட்டார்கள். அதிகார வர்க்கம் ஒடுக்குமுறைகளை பிரயோகித்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த எந்த மதத்தை சேர்ந்த மக்களும் உதவ முன் வரவில்லை. இன்று வரைக்கும் அது தான் நிலைமை. 

19 ம் நூற்றாண்டில் இருந்த துருக்கி ஆட்சியாளர்களும், குர்து முஸ்லிம் நிலப்பிரபுக்களும் கூட, யேசிடி மக்களை புறக்கணித்து ஒதுக்கி வந்துள்ளனர். சதாம் ஹுசைன் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் யேசிடி மக்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் மீளக் குடியேற்றப் பட்டனர். அதன் விளைவாக, யேசிடிகள் குறிப்பிட சில பிரதேசங்களில் நெருக்கமாக வாழும் சமூகமானார்கள். அவர்களின் பிரதேசங்களை சுற்றிலும் அரேபியர்கள் வாழ்ந்தனர். இது அரசினால் திட்டமிடப் பட்ட, ஒரு வகையான சமூக கண்காணிப்பு எனலாம்.

2003 ம் ஆண்டு, ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த நேரம், அடக்கப்பட்ட சிறுபான்மை இனமான யேசிடி குர்தியர்கள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர். சதாம் காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்த சன்னி அரேபியர்கள் அமெரிக்கப் படையினரின் கடுமையான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியருக்கும், யேசிடிகளுக்கும் இடையில் ஒரு பிளவை உண்டு பண்ணியது. அன்று அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய அல்கைதா பாணி இயக்கங்கள், யேசிடிகள் மீது இடைக்கிடையே வன்முறை பிரயோகித்து வந்தன.

அண்மைக் காலத்தில், ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ISIS இயக்கம், சன்னி - இஸ்லாமிய மதவாத இயக்கம் ஆகும். அதனால், ஈராக்கின் சன்னி முஸ்லிம் மக்களும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அண்மையில், சின்ஜார் பகுதியில் இடம்பெற்ற யேசிடி இனச் சுத்திகரிப்பின் போது, ISIS இயக்கத்திற்கு உள்ளூர் சன்னி முஸ்லிம் அரேபியரின் ஆதரவு கிடைத்தது. தம்மோடு ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்தவர்கள், அயலவர்கள் காட்டிக் கொடுத்ததாக, அகதிகளாக வெளியேறிய யேசிடி மக்கள் கூறுகின்றனர். 

யேசிடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. மதச் சின்னங்களை அணிவதில்லை. அரேபியர் போன்று நடந்து கொள்கின்றனர். அவர்கள் சரளமாக அரபு மொழி பேசினாலும், உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில், யேசிடிகளின் தாய் மொழி குர்து ஆகும்.

ISIS ஒரு பாசிஸ இயக்கம் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அவர்களது “இஸ்லாமியத் தாயகத்தில்” சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே “பிரஜாவுரிமை” கிடைக்கும். ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகின்றனர். யேசிடிகளுக்கு அந்த சலுகை கிடையாது. ஏனென்றால், அவர்கள் “பிசாசை வழிபடுபவர்கள். அதனால், அழிக்கப் பட வேண்டியவர்கள்.” என்பது ISIS முன்வைக்கும் வாதம்.

துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் உள்ள பிற அரேபியர்களும் அந்தக் கருத்தை மௌனமாக வழி மொழிகின்றனர். ஈராக்கில் யேசிடிகளுக்கு எதிரான இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மிகவும் கொடூரமாக நடந்துள்ளன. அதற்கு, உள்ளூர் மக்களின் மௌனமான அங்கீகாரமும் ஒரு காரணம். சில இடங்களில், சாதாரண அரபி மக்களே, இனச் சுத்திகரிப்புக்கு துணை போயுள்ளனர்.

வசதியான யேசிடி மக்கள் பிரிவினர், துருக்கி சென்று அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஜெர்மனியில் மிகப் பெரும் எண்ணிக்கையில், புலம்பெயர்ந்த யேசிடி மக்கள் வாழ்கின்றனர். தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் யேசிடி மதம் வளர முடியுமா? குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருகின்றது. அவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பழைய சடங்குகளை புறக்கணித்து வருகின்றனர். 

யேசிடி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்குட்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள் என்பன, யேசிடி மக்களை ஒரு சமூகமாக சேர்ந்திருக்க வைத்தது. நேற்று வரையில், ஈராக்கில் அது சாத்தியமானது. யேசிடி மதம் அழிந்து போகாமல், தொடர்ந்தும் நிலைத்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான்.


யேசிடி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

Thursday, August 26, 2010

பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்

பகுதி : இரண்டு)
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஜேர்மனிய தேசிய அரசுக்கும், ஒஸ்மாமானியர்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்தது. அதன் நிமித்தம் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் பாதை நிர்மாணிக்கும் திட்டம் வந்தது. அதே காலத்தில் தான், ஜேர்மனிய பெற்றோலிய நிபுணர்கள் ஈராக்கில் செய்த ஆராய்ச்சியின் பயனாக நிலத்தடி எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பானது பிற்கால ஈராக்கின் அரசியல்-பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் எதிர்பாராத விதமாக, முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியுற்றது. போரில் ஜெர்மனியை ஆதரித்ததால் துருக்கியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஒஸ்மானிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து, அந்நியரின் ஊடுருவலுக்கு வழிவகுத்தது. போரில் வெற்றி வாகை சூடிய பிரிட்டனும், பிரான்சும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ஒஸ்மானிய ஆதிக்கத்தில் இருந்த அரபு பிரதேசங்கள் யாவும், ஒன்றில் ஆங்கிலேயரினால் அல்லது பிரெஞ்சுக்காரரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அப்படித்தான் ஈராக் ஆங்கிலேயர் காலனியாகியது.

துருக்கியர் காலத்தில் ஈராக் ஒரே தேசமாக கருதப்படவில்லை. அப்போது அங்கே மூன்று மாகாணங்கள் இருந்தன. (தேசம் என்ற சொல் ஒஸ்மானிய சாம்ராஜ்யத்தை குறிக்கும்.) ஈராக்கின் தென் பகுதி, குவைத்துடன் சேர்த்து, பஸ்ரா மாகாணம் என்று அழைக்கப் படலாயிற்று. மத்திய ஈராக், பாக்தாத் மாகாணம். குர்திய மக்கள் வாழும் வட ஈராக் மொசுல் மாகாணம். ஆங்கிலேயர்கள் அந்த மூன்று மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஈராக் என்று பெயரிட்டனர். அப்போதே குர்திய இனத்தவர்கள் தமக்கென தனி நாடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். (குர்து வீரர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்டனர்.) குர்திஸ்தான் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆங்கிலேயர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் இறுதியாக பாக்தாத்தில் ஒரு அரசை நிறுவி, அவர்கள் கையில் முழு ஈராக்கையும் ஒப்படைத்து விட்டு போய் விட்டார்கள். குர்தியரின் தனி நாட்டுக் கோரிக்கை குப்பைக் கூடைக்குள் போனது.

1960 வரையில் குவைத் தனியாக பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. குவைத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, குவைத் என்ற மாநிலத்தில் மட்டும் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய எண்ணெய் வளம். இரண்டு, புதிய ஈராக் அரசும், துருக்கியும், பாரசீக வளைகுடாப் பகுதியை பாவிக்க விடாமல் தடுப்பது. வளைகுடாவின் பொருளாதார-கேந்திர முக்கியத்துவம் காரணமாக தான் தொன்னூறுகளில் குவைத் மீட்பு யுத்தம் நடந்தது. துருக்கிய மேலாதிக்கத்திற்கு எதிராக போராடிய அரபு விடுதலைப் போராளிகளின் தலைவர் பைசல், டமாஸ்கஸ் (சிரியா) தலைநகராகக் கொண்ட அகண்ட அரபு தேசம் அமைக்க விரும்பினார். ஆனால் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் காரணமாக அந்தக் கனவு பலிக்கவில்லை. சிரியாவும், லெபனானும் பிரான்சுக்கு தாரை வார்க்கப்பட்டது. பைசலுக்கு கிடைத்தது ஈராக் மட்டும் தான். ஆங்கிலேயர்கள் பைசலை ஈராக் மன்னனாக முடி சூட்டி விட்டு 1932 ல் சுதந்திரம் வழங்கினார்கள். இதிலே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஜனநாயகப் பாதுகாவலர்களான பிரிட்டிஷார் ஈராக்கில் தேர்தலையோ, பல கட்சி ஜனநாயகத்தையோ அறிமுகப் படுத்தவில்லை. தேசங்களின் எல்லை பிரிக்கும் பொழுது உள்ளூர் மக்களின் விருப்பத்தை கேட்காமல், ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள்.

எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவரான பைசல் சுதந்திரத்தின் பின்னர் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் முடிசூட்டிக் கொண்ட இளவரசர் காசியின் காலத்தில் பல பிரச்சினைகள் தோன்றின. ஈராக் இராணுவம் அரசியலில் தலையிட ஆரம்பித்தது. இரண்டாவது உலகப்போர் காலத்தில் இராணுவ அதிகாரிகள் பிரிட்டனுடனான உறவை துண்டித்து விட்டு, ஜெர்மனியுடன் உறவை ஏற்படுத்தினார்கள். ஏதோ அவர்கள் விருப்பம், என்று பிரிட்டன் விட்டுக் கொடுக்கவில்லை. ஈராக் மீது படையெடுத்தார்கள். பாக்தாத் கடற்கரையில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், ஒரு மாதத்திற்குள்ளேயே பாக்தாத்தை கைப்பற்றி விட்டன. (2003 ம் ஆண்டு சரித்திரம் திரும்பியது. பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஈராக்கை ஆக்கிரமித்தன.) பாக்தாத்தில் பிரிட்டிஷ் சார்பு பொம்மை அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டது. புதிய உடன்படிக்கை ஒன்று போடப்பட்டது. அதன் பிரகாரம் ஈராக் பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்துறை துரித கதியில் வளர்ந்தது. நிலங்கள் தொடர்பான புதிய சட்டம் ஒன்று நிலவுடமையாளருக்கு சாதகமாக அமைந்தது. சிறிய விவசாயிகளின் நிலங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதனால் நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்கள் தொழில் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நகரங்கள் பெருகின. கல்வி கற்ற மத்திய தர வர்க்கம் ஒன்று உருவானது. இந்த வர்க்கம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பொழுது, தமது நாடு நிலப்பிரபுக்களால் ஆளப்படுவதை புரிந்து கொண்டனர். அவர்களது மனக்குமுறலை பிரதிபலிக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது.
மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்லாது, நகர்ப்புற தொழிலாளர்களும் ஆதரவளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க விடுதலை குறித்து பேசியதால், பெருமளவு ஷியா முஸ்லிம்களும், குர்து இன மக்களும் கவரப்பட்டனர். இதற்கிடையே அரச குடும்பம் அரசியல் செல்வாக்கு இழந்திருந்தாலும், அவர்களது உல்லாச வாழ்வு பறிபோகவில்லை. ஈராக் அரசு நிலவுடமையாளர்களினதும், பிரிட்டிஷாரினதும் நலன்களை மட்டுமே கவனித்து வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்தன. இராணுவத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவியது.

எகிப்தில் நாசர் தொடங்கி வைத்த அரபு தேசிய அலை ஈராக் கரையை அடைந்தது. 14 ஜூலை 1958 ம் ஆண்டு, பிரிகேடியர் காசிம் தலைமையில் "சுதந்திர அதிகாரிகள்" ஆட்சியை கைப்பற்றினார்கள். மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டார்கள். ஈராக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் 1958 ம் ஆண்டு இடம்பெற்ற ஈராக் புரட்சி தான் ஜனநாயகத்திற்கான முதற்படியாகும். அதுவரை காலமும் ஜனநாயகத்தின் காவல் தெய்வங்களான பிரிட்டிஷ்காரர்கள், ஈராக்கில் பிற்போக்கு மன்னராட்சியை ஆதரித்து வந்தார்கள். அவர்கள் எப்போதும் தமது நலன்களைப் பேணும் அரசாங்கத்தை அமைக்கவே விரும்பினார்கள். 1958 ஈராக் புரட்சி ஈராக் மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவை மேற்கத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தன.

ஈராக்கில் எண்ணெய் அகழும் தொழிலில் பிரிட்டிஷ், பிரெஞ்சு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. கொள்ளை லாபமீட்டிய இந்த நிறுவனங்கள் ஒரு சிறு தொகையை மட்டும் ராயல்ட்டியாக ஈராக் அரசுக்கு வழங்கி வந்தன. அது கூட மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. ஈராக் அரச குடும்பமும், அதிகாரிகளும் எண்ணெய் விற்ற ராயல்ட்டி பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தார்கள். புரட்சிக்குப் பின்னர் வந்த அரசாங்கம் ராயல்ட்டி தொகையை அதிகரித்தது. எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உடன்பாட்டுக்கு வரமுடியாமல் போனதால், எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறின. இதனால் ஈராக் அரசு எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியது. தகுதியற்ற உள்நாட்டு முகாமைத்துவம் காரணமாக பல பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டன. பல வருடங்களுக்குப் பின்னர், 1968 ம் ஆண்டு, சோவியத் யூனியன் நிபுணர்களின் வருகைக்கு பின்னரே பெற்றோலிய உற்பத்தி அதிகரித்தது. அதன் பிறகு தான் ஈராக் உலகில் இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டது.

1958 புரட்சி ஈராக் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. பெறும் நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. (சதாம் ஹுசைன் காலத்திற்குப் பின்னர் தான் விவசாயத் துறையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தலையெடுத்தன.) பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. பெண்களுக்கு சமவுரிமை கிடைத்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஈராக்கில் மொத்த பணியாட்களில் இருபது வீதமானோர் பெண்கள். இத்தகைய சமூக நலன் சார்ந்த பொருளாதார திட்டங்கள் சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை அமுலில் இருந்தன. இடையில் எத்தனையோ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்திருக்கலாம். ஆனால் சமுதாய முன்னேற்றம் தடைப்படவில்லை.

(தொடரும்)

முதலாவது பகுதி:

1. (ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்