Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, December 21, 2011

தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்




[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 9]
(ஒன்பதாம் பாகம்)


பைபிளும், குரானும் குறிப்பிடும் ஏடன் தோட்டமெனும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இனவாத, மதவாத சிந்தனைகள் துளியும் தலைகாட்டாத காலத்தில், உலகிலேயே உன்னத நாகரீகத்தைக் கட்டிய இனமாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு வேளை, அவர்கள் தமிழர்களாக வாழ்ந்திருக்க மாட்டார்கள். தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், மலையாளிகளுக்கும் மற்றும் பல திராவிட இனங்களுக்கும் பொதுவான "தாய் இனமாக", அது இருந்திருக்கும். அவர்கள் பேசிய மொழி கூட வேறாக இருந்திருக்கலாம்."கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்க் குடி" என்று பெருமை பேசித் திரியும் தமிழினம், தன்னோடு கூடி வாழ்ந்த சகோதர மூத்த குடிகளை மறந்து போனது துரதிர்ஷ்டம். தமிழர்கள் மனதில் சர்வதேசிய சிந்தனைகள் மறைந்து, அந்த இடத்தில் சுயநலப் போக்குகள் தலை காட்ட ஆரம்பித்தன. தமிழினத்தின் வீழ்ச்சி அன்றே ஆரம்பமாகி விட்டது.

இந்திய உப கண்டத்தை சூழவுள்ள கடற்பரப்பில், கடந்த பத்தாண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பல மறைந்த நாகரீகங்களை வெளிப் படுத்தியுள்ளன. குஜராத் கரைக்கு அருகிலும், தமிழகத்திற்கு அருகாமையிலும், கடலில் மூழ்கிய நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அதே போன்று, இலங்கையின் தென் கிழக்கு கடலடியிலும் மறைந்திருந்த நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர், உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனித குலத்தின் தோற்றம் பற்றிய முந்திய ஆய்வுகளை மறுத்துரைக்கும், புதிய நிரூபணங்கள் கிடைத்துள்ளன. சங்க கால தமிழ் இலக்கியங்களில், கடல் கொண்ட குமரி கண்டம் பற்றிய தகவல் வருகின்றது. அந்த தகவலை மெய்ப்பிக்கும் அளவிற்கு, நவீன கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆயினும், இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. மறைந்த நாகரீகமான குமரி கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழர்களா?

குமரி கண்டத்தின் பரப்பளவு, இன்றைய இந்திய உப கண்டத்தை விடப் பெரியது. வடக்கே, குமரி முனையையும், இலங்கைத் தீவையும் இணைத்திருந்தது. மேற்கே மடகஸ்காருடன், கிழக்கே அவுஸ்திரேலியாவுடன் தொடுத்திருந்தது. இந்த மிகப் பெரிய கண்டத்தில், "தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்" என்பது சாத்தியமல்ல. முன் தோன்றிய மூத்த குடிகளான "ஆப்பிரிக்க" இனங்களில் ஒன்றாக தமிழினம் இருந்திருக்கும். இன்றைக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உடற்கூற்று ஒப்பீடுகளும், கலாச்சார ஒப்பீடுகளும் இதனை நிரூபிக்கின்றன. அதே நேரம், ஆப்பிரிக்க இனங்கள் மட்டுமல்லாது, மத்திய அமெரிக்காவை சேர்ந்த மாயர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், மேலும் பல மேற்காசியப் பழங்குடி இனங்களும் குமரி கண்டத்தில் இருந்தே பிரிந்து சென்றிருப்பார்கள். அதற்கு என்ன ஆதாரம்? கடல் பெருக்கால் அழிந்த கண்டம் பற்றிய தகவல் பண்டைய தமிழ் இலக்கியங்களில் எழுதப் பட்டுள்ளது. தமிழர்கள் தமது மொழியில் அதனை குமரி கண்டம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஒரு வேளை, தமிழர்களின் நாடு இன்றைய குமரி முனைக்கு அருகில் இருந்திருக்கலாம்.

சிங்கள செவி வழி கர்ண பரம்பரைக் கதைகளும் கடலில் மூழ்கிய கண்டம் பற்றி நினைவு கூறுகின்றன. சிங்களவர்கள் அதனை "இரிசியாவா" என்ற பெயரில் அழைக்கின்றனர். கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ "அட்லாண்டிஸ்" என்றொரு மறைந்த கண்டம் பற்றி எழுதியுள்ளார். இதே போன்று, எகிப்தியர்கள், மாயா இந்தியர்கள், பைபிள் கதையில் வரும் நோவாவின் மக்கள், என்று பல்லின மக்கள், இழந்த கண்டத்தை வெவ்வேறு பெயர்களில் நினைவுகூருகின்றனர். அதாவது, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற மொழிகளைப் பேசும் மக்கள், தமது பூர்வீகம் பற்றி ஒரே மாதிரியான கதையை கொண்டுள்ளனர். சுருக்கமாக சொன்னால், தமிழில் குமரி கண்டம் என்று அழைக்கப்படும், இழந்த சொர்க்கத்தில் பல்வேறு சகோதர இனங்கள் வாழ்ந்துள்ளன. "முன் தோன்றிய மூத்த குடி, தமிழர்கள் மட்டுமே" என்ற கற்பிதம், ஐரோப்பியரின் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிகின்றது. நாகரீகமடைந்த பண்டைய சகோதர இனங்களை பிரித்து வைத்திருப்பதால் தான், இன்றைக்கும் ஐரோப்பிய மையவாத வரலாற்றுப் புரட்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களும், சகோதர மூத்தகுடி இனங்களும் தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ஐரோப்பியரிடம் பறிகொடுத்து விட்டனர். நாகரீகமடைந்த புராதன இனங்களின் அறிவியலை அபகரித்த ஐரோப்பியர்கள், அதைக் கொண்டே உலகம் முழுவதும் அடிமைப் படுத்தினார்கள்.

குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த மிகவும் பழமையான நிலப்பகுதி ஆகும். உலகின் முதலாவது மனிதனான "ஆதாம்", தென்னிலங்கையில் உள்ள சிவனொளிபாத மலையில் (ஆதாமின் மலை) தோன்றியதாக ஒரு செவி வழிக் கதை நிலவுகின்றது. (ஆதாம், சிவனொளிபாதமலை என்பன பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள்.) முதல் மனிதனான "ஆதாம்", மலையில் இருந்து இறங்கி வந்தவிடத்தில், பூத கணங்களும், யானைகளும் இளைப்பாறிய இடத்தைக் கண்டதாகவும், அதுவே கதிர்காமம் என்றும் அந்தக் கதையில் சொல்லப் படுகின்றது. உண்மையில், "முதல் மனிதன், சிவனொளிபாத மலை, கதிர்காமம்" என்பனவற்றின் மூலக் கதை, பழங்குடி இனமான வேடுவர்க்கு உரியது. "கல் தோன்றா, மண் தோன்றாக் காலத்தில்" இருந்தே, சமுதாய அமைப்பையும், கலாச்சாரத்தையும் மாற்றிக் கொள்ளாத மூத்தகுடியான வேடுவர்கள், இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிப்படையிலான பிரிவினை தோன்றியது. சிங்களவர், தமிழர் இரண்டுமே "இன அடையாளத்தை" குறிக்கும் சொற்கள் அல்ல. வேடுவர்கள் மட்டுமல்லாது, இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இனங்களும், இரண்டு மொழிச் சமூகங்களிலும் கலந்துள்ளன.

அண்மைய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் பிரகாரம், குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, தற்போதுள்ளதை விட ஏழு மடங்கு அதிகமான பரப்பளவைக் கொண்டிருந்தது. இராவணனின் அரச வம்சம், அந்த நிலப்பரப்பை ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆண்டு வந்துள்ளது. இராவணன் ராட்சத இனத்தை சேர்ந்தவன். அநேகமாக, அது ஒரு கருப்பினமாக இருக்கலாம். இலங்கையில் இராவணனை தொடர்பு படுத்தும் இடங்கள் பொதுவாக இராமாயண அடிப்படையிலேயே ஊகிக்கப் பட்டன. இலங்கை மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இராமனின் ஆரியப் படைகள், இலங்கையின் நகரங்களை எரியூட்டி அழித்து விட்டன. அப்போதே இலங்காபுரியின் தொன்மையான நாகரீகம் அழிந்து போயிருக்கும். இராமாயணம் வென்றவர்களின் பார்வையிலேயே எழுதப் பட்டிருப்பதால், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. இன்று எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விடயம் என்னவெனில், பல முக்கியமான கண்டுபிடிப்புகள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. அதாவது, தமிழரோ, சிங்களவரோ அறிந்திராத தகவல்கள், சில ஆங்கிலேய ஆய்வாளர்களுக்கு தெரிந்துள்ளது. ஆப்பிரிக்க மக்களை அறியாமை இருளில் வைத்திருந்ததைப் போன்று தான், ஆங்கிலேயர்கள் எம்மையும் நடத்தி வந்துள்ளனர்.

ஆர்தர் சி. கிளார்க் என்றொரு பிரிட்டிஷ் எழுத்தாளர், இலங்கையில் வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர். அவர் எழுதிய நாவல்கள் பல வருங்காலத்தை பற்றிய கற்பனைகளை கொண்டிருந்தாலும், அவற்றின் கரு இலங்கையில் இருந்து கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கையில் குடியேறி, இறக்கும் வரையில் இலங்கைப் பிரஜையாகவே வாழ்ந்திருப்பாரா? ஆர்தர் சி கிளார்க், ஒரு சாதாரண எழுத்தாளரா, அல்லது பிரிட்டிஷ் உளவாளியா? அவர் ஆழ்கடல் சுழியோடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். திருகோணமலைக்கு அருகில், கடலின் அடியில் மறைந்திருந்த பண்டைய நகரத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்திருந்தார். அதைவிட பல தகவல்களை அறிந்து வைத்துக் கொண்டு பகிரங்கப் படுத்தாமல் இருந்திருக்கலாம். அவரைப் போலவே காலனிய இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேய ஆய்வாளர் ஒருவர், "இராவணணின் ஆகாய விமானம்" பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து சீதையை கவர்ந்து சென்றதாக இராமாயணம் கூறுகின்றது. விமானம் பற்றிய மேலதிக விபரங்களை அங்கே, தேடினாலும் கிடைக்காது. அதனாலேயே, "அது ஒரு கற்பனை" என்று இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், உண்மையிலேயே இராவணின் இராஜ்யத்தில், ஆகாய விமானங்களின் பயன்பாடு இருந்துள்ளது. இராவணனின் நாடு, விமானம் தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவு படைத்த நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தது. பொறாமை கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், அந்த உன்னத நாகரீகத்தை அழிப்பதற்காகவே போர் தொடுத்திருப்பார்கள். இராவணன் காலத்தில் கட்டப்பட்ட விமானம் பறவையைப் போன்ற வடிவில் அமைக்கப் பட்டிருந்தது. சிறிய ரக கடல் விமானம் அளவிலானது. நமது காலத்து கடல் விமானம் போன்று நீரிலும் செல்லும், ஆகாயத்திலும் பறக்கும் வல்லமை கொண்டது. இரண்டு, மூன்று விமானிகள் ஓட்டும் விமானங்கள். யுத்தத்திலும் பயன்படுத்தக் கூடியதாக அமைக்கப் பட்டிருந்தன. விமானத்தை பறப்பதற்கான எரிபொருளாக பாதரசம் (மெர்குரி) பயன்படுத்தப் பட்டுள்ளது.

பண்டைத் தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான உறவு. சித்தர்கள் அறிமுகப் படுத்திய பாதரசம். இவை பற்றி எல்லாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். போகர் சித்தர் கதிர்காமம் சென்றதையும், ஆகாய விமானம் தயாரிக்கும் செய்முறையை, சீனாவில் உள்ள சீடர்களிடம் கொடுத்த விபரத்தையும் எழுதியிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேய ஆய்வாளர்கள் இலங்கையில் சேகரித்த தகவல்கள் அதனை உறுதி செய்கின்றன. விமானம் தயாரிக்கும் முறை, விமானிகளுக்கான உணவு, பறத்தல் நெறி முறைகள் போன்ற பல விபரங்கள் அவர்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்கள் போன்ற பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த இனங்கள், பிற்காலத்தில் அவற்றை மறந்து விட்டன. அதற்கு காரணம், ஆட்சியாளர்கள் தமது பிராந்திய நலன் கருதி மட்டுமே ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் இனவுணர்வு கொண்டவர்களாக இல்லாவிட்டாலும், மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மத நம்பிக்கை, பகுத்தறிவை ஒடுக்கியது. நமது காலத்தில் இந்த குறுகிய சுயநலம் பேணும் சிந்தனை, இனவுணர்வு என்ற வடிவம் பெற்றுள்ளது.

மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த தமிழரும், சீனரும்,பிற நாகரீகமடைந்த சமூகங்களுடனான தொடர்பு அறுந்ததையிட்டு கவலை கொள்ளவில்லை. அதைத் தேடித் பார்க்கும் ஆர்வமும் இருக்கவில்லை. தமிழர்கள் சர்வதேசிய கொள்கையை கைவிட்டதால், எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்துள்ளனர், என்பதையிட்டு இன்றைக்கும் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. விமானம் செய்யும் தொழில்நுட்ப அறிவு, போகர் மூலம் கிடைத்திருந்தாலும், சீனர்களும் அதில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு பின்னர், சீனா வரை பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் அந்த தொழில்நுட்பக் குறிப்புகள் படிக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில், நவீன கால விமானம் பற்றிய சிந்தனை, மத்திய கால துருக்கியில் இருந்து தான் ஐரோப்பா சென்றது. இஸ்தான்புல் நகர மத்தியில் உள்ள ஒரு கோபுரத்தில் இருந்து, சிறகு கட்டிப் பறக்கும் பரிசோதனை செய்யப் பட்டது. அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வி கிட்டியது. இஸ்லாமிய துருக்கியுடன் தொடர்பு வைத்திருந்த வெனிஸ் (இத்தாலி) நாட்டு வர்த்தகர்களுக்கு, இந்த விபரங்கள் எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தன.

இலங்கையில், இன்றைக்கு உள்ள கொந்தளிப்பான இன முரண்பாட்டு அரசியலை காணும் ஒருவருக்கு, அந்த நாட்டின் தொன்மையான நாகரீகம் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. இன முரண்பாட்டை உருவாக்கி விட்ட ஆங்கிலேயர்களின் நோக்கமும் அதுவாகத் தானிருக்கும். சிங்களவனும், தமிழனும், நீயா, நானா என்று ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்டிருந்த தருணத்தை பயன்படுத்தி; ஆங்கிலேயர்கள் பல அறிவியல் செல்வங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். இன்று வரையில் வெளியிடப் படாத பல இரகசிய ஆவணங்கள், லண்டனில் மத்திய ஆவணக் காப்பகத்திலும், பிரிட்டிஷ் மியூசியத்திலும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்பதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை. (அந்த ஆவணங்களை வெளியார் பார்வையிடக் கூட அனுமதியில்லை.) ஆங்கிலேயர்கள் எமது அறிவியலை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த பொருட்களை, எமக்கே விற்று காசாக்குகிறார்கள். நாம் எவற்றை எல்லாம் அந்நியரிடம் பறிகொடுத்துள்ளோம் என்பதை அறியாதவர்களாக, பழம்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கின்றோம்.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Lost city 'could rewrite history'
ANCIENT FLYING MACHINES
Vimanas - King Ravana



*****************************************

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

Thursday, December 15, 2011

பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஏழாம் பாகம்)

"சித்தர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழர்களுடைய தனியுடமை. சித்த வைத்தியமும், தற்காப்புக் கலையும் தமிழகத்தில் இருந்தே சீனா சென்றன. " என்று சுய தம்பட்டம் அடிக்கும் தமிழினவாதிகள், அறிவியலில் பிற இனத்தவர்களின் பங்களிப்பை மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் சித்தர் மரபை தோற்றுவித்த முதலாவது சித்தரான திருமூலர் ஒரு தமிழரல்ல, காஷ்மீரை சேர்ந்தவர். அதே போன்று, சீனா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பலர், தமிழகம் வந்து சித்த அறிவியலை வளர்த்துள்ளனர். தமிழ்ச் சித்தர்கள் பலர், சீனா, அரேபியா சென்று தாம் அறிந்தவற்றை கற்பித்துள்ளனர். பண்டைய தமிழர்கள் நம்மைப் போல குறுகிய சிந்தை கொண்ட இனவாதிகளாக இருக்கவில்லை. இருந்திருந்தால், இன்று நாங்கள் சித்தர் அறிவியலுக்காக பெருமைப் பட்டிருக்க முடியாது. அறிவியலை ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக உரிமை பாராட்டுவது பேதைமை. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழகம் வருவதும், தமிழ் நாட்டு அறிஞர்கள் வெளிநாடு செல்வதுமாக, சர்வதேச தொடர்புகள் காரணமாகவே தமிழர் அறிவியலும் வளர்ந்தது.

சித்தர் மரபில் முக்கியமானவராக கருதப்படும் அகத்தியர், சீன தேசத்தில் இருந்து வந்தவர் என்பதை முன்னரே பார்த்தோம். இம்முறை, மேலும் இரண்டு சீனர்களின் பங்களிப்பை விரிவாகப் பார்ப்போம். இவர்களில் ஒருவராவது சீனர் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும், பதினெட்டு சித்தர்களின் பட்டியலில், பெயர் குறிப்பிடப் பட்டவர்களைப் பற்றி மட்டுமே, நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களை விட பல சீன நாட்டு சீடர்கள், அறிவியல் கற்க வந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அதே போன்று, பல தமிழ் சீடர்கள் அறிவுத் தேடல் காரணமாக சீனா சென்று தங்கி விட்டனர். "சீனர்களுக்கு நாம் தான் அறிவு புகட்டினோம்" என்பது தற்புகழ்ச்சி. "சீனர்களுடன் நாம் அறிவியலை பகிர்ந்து கொண்டோம்", என்பதே மெய்யான வரலாறு. எம்மிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டனர். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.

போகநாதர் என்ற சித்தரின் கதை அதனை உறுதிப் படுத்துகின்றது. தமிழகத்தில் போகர் அல்லது போகவா முனிவர் என அறியப் படுபவர், சீனாவில் போ யங் (Bo Yang ) என அழைக்கப் படுகிறார். பிறப்பால் அவர் சீனர் என்று நம்பப் படுகின்றது. அதே நேரம், போகநாதர் ஒரு இந்தியர் என்றும் சிலர் கூறுகின்றனர். இரண்டுமே இன்னும் உறுதிப் படுத்தப் படவில்லை. எந்தவொரு சித்தரும் தன்னை ஒரு இனத்தை, அல்லது தேசியத்தை சேர்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. அத்தகைய அடையாளத்தை ஏற்றுக் கொள்ள விரும்பியதுமில்லை. போகநாதர் தமிழகத்தில் மட்டுமல்லாது, சீனாவிலும் அறிவியலை போதித்தார். இரண்டு நாடுகளும், சித்தர்களின் அருஞ்செயல்களால் நன்மை அடைந்துள்ளன. உண்மையில், போகவா முனிவரை தமிழகம் மறந்து விட்டது. ஆனால், சீனர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். சீனாவில் டாவோயிசம் என்ற மதத்தை உருவாக்கிய லாவோசியும், போகநாத சித்தரும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.(பார்க்க :
Becomes known as Lao-Tzu, founder of Taoism)

வட இந்தியாவில், காசியில் பிறந்த காளிங்க நாதர் என்ற சித்தர், சீனா சென்றிருந்த சமயம், போகநாதர் அவரது சீடரானார். இந்திய ஞானிகள் சீனா சென்று போதனை செய்வது, 5000 அல்லது 3000 வருடங்களுக்கு முன்னர், வழக்கமாக நடந்து கொண்டிருந்த விடயம். பௌத்த மதமும் அவ்வாறு தான் பரவியது. அந்தளவுக்கு பண்டைய இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது. காளிங்க நாதர், சீனாவில் தனது சீடர்களுக்கு, தத்துவ ஞானம் போதிக்கும் பள்ளிகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான், போக நாதர் அவருக்கு அறிமுகமானார். அடுத்த தடவை இந்தியா செல்லும் பொழுது, போக நாதரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். இருவரும் பழனியில், சித்தர்கள் கல்லூரியை ஸ்தாபித்தனர். காளிங்க நாதர் தனது சக்தி முழுவதையும், தலைமைச் சீடரான போக நாதருக்கு தாரை வார்த்தார். அதே போன்று, போகநாதர் சமாதி அடைவதற்கு முன்னர், புலிப்பாணி சித்தருக்கு தனது சக்திகளை தாரை வார்த்தார்.

போகநாதர் காலத்தில் தான், பழனியில் சித்தர்களின் கல்லூரி அமைக்கப் பட்டதாகத் தெரிகின்றது. நமது கால கல்வி முறையுடன் ஒப்பிட்டால், அன்றிருந்தது ஒரு கல்லூரி தான். "பழனி சித்த அறிவியல் கல்லூரி" யில் தமிழ் சித்தர்கள் மட்டுமே படித்ததாக நினைப்பது தவறு. இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், சீனா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பன்னாட்டுச் சித்தர்கள் வந்து படித்தார்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். போக நாதருக்கு பின்னர், கல்லூரியின் தலைமைப் பொறுப்பேற்ற புலிப் பாணிச் சித்தர், ஒரு சீனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. புலிப் பாணிச் சித்தரின் நிஜப் பெயர் "யி"(Yi). சந்தேகத்திற்கிடமின்றி, புலிப் பாணிச் சித்தர் ஒரு சீனர் என்பதை, அனைத்து தரவுகளும் நிரூபிக்கின்றன. அந்தக் காலத்தில், சீனச் சித்தர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த நேரம், தமிழ்ப் பெயர் ஒன்றை தெரிவு செய்வது வழக்கம். Bo Yang என்ற சீன நாட்டு போகரும், அவ்வாறே தமிழராக கருதப் பட்டிருக்க வாய்ப்புண்டு.

காளிங்க நாதர், தனது வாரிசான போகரை சீனாவில் தேர்ந்தெடுத்தார். போகநாதரும் அதே வழி முறையை பின்பற்றினார். தனக்கு அடுத்தாக, பழனி சித்தர்களை தலைமை தாங்குவதற்கு, புலிப் பாணிச் சித்தரை (யி) சீனாவில் இருந்து கூட்டி வந்தார். சீனாவில் இருந்து வந்த தலைமைச் சித்தரான யி, வசியக் கலையில் வல்லவர். புலியை வசியம் செய்து, அதன் மேல் அமர்ந்து சவாரி செய்வார். மந்திரம் சொல்லி தண்ணீரை உறைய வைப்பார். அதனால் தான் அவருக்கு "புலிப் பாணி சித்தர்" என்ற பெயர் வந்தது. சித்தர்கள் மரபில், மெஸ்மரிசம் எனப்படும் வசியக்கலை புலிப் பாணிச் சித்தர் மூலமாகத் தான் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகமாகியது. இன்றைய தமிழர்களின் உணவுப் பழக்கம் கூட, சீனத் தொடர்பால் பெருமளவு மாறி விட்டது. பண்டைத் தமிழர்கள் அரிசியை கண்ணால் கண்டிருக்கவில்லை. சீனாவில் இருந்து அறிமுகமான அரிசியை, நாம் இன்று நாளாந்த உணவாகப் புசிக்கின்றோம். போகநாதர் சீனாவில் இருந்து கொண்டு வந்த உப்பு, தமிழகத்தில் "சீனாக் காரம்" என்ற பெயரில் அறிமுகப் படுத்தப் பட்டது.

சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக இன்றைக்கும் காட்சியளிக்கின்றது, பழனி முருகன் ஆலயம். தமிழகத்தில் பெருமளவு வருமானத்தை ஈட்டும் முருகன் கோயில். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. சிவன், பார்வதியிடம் இருந்து ஞானப்பழத்தை பெறுவதற்காக, முருகனும், விநாயகரும் போட்டி போட்டார்கள். யார் முதலில் உலகை சுற்றி வலம் வருவது, என்பதே போட்டி. அண்ணன் விநாயகர், தாய், தந்தையை சுற்றி வந்து ஞானப் பழத்தை வாங்கிக் கொண்டார். மயில் மீதேறி உலகை சுற்றி வந்த முருகன், கோபித்துக் கொண்டு சென்று, பழனி மலையில் தங்கி விட்டார். இது புராணக் கதை. பெரும்பாலான முருக பக்தர்கள் அறியாத நிஜக்கதை ஒன்றுண்டு. அதுவே தண்டாயுதபாணி எனும் பழனி ஆண்டவரின் இரகசியம். பழனியின் சிறப்பு, கோயில் மூலவர் சிலையிலும், அதைச் செதுக்கிய சித்தர்களிலும் தங்கி உள்ளது. பழனி முருகனை பிரதிஷ்டை செய்த போகநாதரின் சமாதியும் அங்கே தானுள்ளது.

பழனியில் கூடிய சித்தர்கள் மகாநாட்டில், பழனி முருகன் சிலை அமைப்பது பற்றி முடிவெடுக்கப் பட்டது. சித்தர்களும், பொது மக்களும் வழிபடுவதற்காக மட்டுமல்லாது, புதிய வேதியியல் அற்புதமான கண்டுபிடிப்பொன்றை காட்சிப் படுத்துவதற்காகவும் அந்த சிலையை செதுக்க விரும்பினார்கள். அதாவது, பழனி முருகனின் "தெய்வ சக்தி", சித்தர்களின் விஞ்ஞான அறிவியலுக்கு எடுத்துக் காட்டாகும். பழனி முருகன் சிலையை செதுக்கும் பொறுப்பு போக நாதரிடம் விடப்பட்டது. அந்தச் சிலை கல்லில் செதுக்கப் படவில்லை. மூலிகைகளால் தயாரிக்கப் பட்டது. ஒன்பது இரசாயன கலவைகளை கொண்டு தயாரிக்கப் பட்ட முருகன் சிலை, பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும், இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பழனியில் அபிஷேகம் செய்யும் முறை கூட, விஞ்ஞான முறைப்படி அந்த சிலையை பராமரிக்கும் யுக்தியாகும். பழனி முருகன் சிலை செய்வதற்கு பயன்படுத்தப் பட்ட இரசாயன சூத்திரம், இன்றைக்கும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. நவ பாஷாணங்கள் என்று அழைக்கப் படும் வேதியல் நச்சுப் பொருட்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன, ஒன்றைத் தவிர. பாதரசம் (Mercury) என்ற பதார்த்தம் இன்றி அந்தச் சிலை முழுமை அடைந்திராது. பாதரசம் இந்தியாவில் எங்கேயும் கிடைக்கவில்லை. போகநாதர் அதனை சீனாவில் இருந்து கொண்டு வந்தார். பழனி முருகன் சிலை, சித்தர்களின் அறிவியல் சாதனையை மட்டும் பறைசாற்றவில்லை. சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக, இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (
Siddha Bhoganāthar: An Oceanic Life Story)

இரசாயனவியல் (வேதியியல்) எனும் அறிவியலை ஐரோப்பியர்களே கண்டுபிடித்தார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு அல்ல. அந்த அறிவியலைக் குறிக்கும் பெயரான Chemistry, ஒரு ஆங்கிலச் சொல் அன்று. Al - Chemi என்ற அரபுச் சொல்லில் இருந்து உருவானது. (அரேபியர்களும் கிரேக்க மொழியில் இருந்து கடன் வாங்கியிருந்தனர்.) வேதியியல் (இரசாயனவியல்) கல்வியை, ஐரோப்பியர் அரேபியரிடம் இருந்து கற்றனர். கிரேக்கர், எகிப்தியர், (இஸ்லாமிற்கு முந்திய) அரேபியர் ஆகிய பண்டைய மேற்காசிய ஞானிகளின் குறிப்புகள், பிற்காலத்தில் அல்கெமி என்ற கற்கைநெறியாக தொகுக்கப் பட்டது. பண்டைய காலத்தில், சீனர், அரேபியர், கிரேக்கர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, தமிழர்களும் இரசாயனவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். (George Lockemann, The Story of Chemistry, Philosophical Library, U.S.A, 1959, pp.30-31.) பழனியாண்டவர் சிலையை செய்ய பயன்பட்ட சீனப் பாதரசம், தமிழகத்தில் வேதியியல் அறிவியலை தோற்றுவித்தது. பாதரசம் என்ற சொல்லில் இருந்து தான், சித்தர்கள் பயன்படுத்திய "ரசவாதம்" என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பீங்கான் மட்பாண்டம் செய்வதற்கான தொழில்நுட்ப அறிவை, சீனாவில் இருந்து வந்த சித்தர்கள் சொல்லிக் கொடுத்தனர். அதே போன்று, பட்டுத் துணி நெசவு செய்யும் தொழில் நுட்பமும், சீனச் சித்தர்களின் தொடர்பால் பெறப் பட்டிருக்கலாம்.

பண்டைய காலத்தில் நிலவிய, சீனர், அரேபியர், தமிழர்களுக்கு இடையிலான நெருக்கமான உறவு எவ்வாறு அறுந்து போனது? "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வரவில்லை", என்று மறுக்கும் வரலாற்று அறிஞர்களும், தென்னிந்தியா ஆரிய மயமானதை மறைக்க முடியாது. சமஸ்கிருதம் பேசிய, பிராமண- இந்து மதத்தை பின்பற்றிய வட நாட்டு மன்னர்கள், தென்னிந்தியப் பகுதிகளை படிப்படியாக ஆக்கிரமித்தார்கள். அந்தக் காலங்களில், வட நாட்டு மன்னர்களும், தென் நாட்டு மன்னர்களும் மாபெரும் போர்க் களங்களில் மோதிக் கொண்டார்கள். அந்தப் போர்களைப் பற்றிய தகவல்கள், தமிழில் புறநானூறு என்ற பெயரில் குறித்து வைக்கப் பட்டன. அதாவது, அந்நிய "இந்து" ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட, தமிழர்களின் வீரஞ் செறிந்த வரலாறு தான் புறநானூறு ஆகும். அன்று ஆரிய மன்னர்களுக்கு காட்டிக் கொடுத்து, அவர்களைப் போலவே "சமஸ்கிருதம் பேசும் இந்துக்களாக" மாறியவர்களின் வாரிசுகள்,இன்று "தமிழரின் புறநானூற்று வீரம்" பற்றி பேசுவது வேடிக்கையானது. அவர்கள் தான், பண்டைய தமிழர்களின் நண்பர்களான சீனர்களையும், அரேபியர்களையும் எதிரிகளாக கருதிக் கொண்டார்கள். உண்மையான தமிழர்கள் ஒன்றில் போரில் மாண்டு விட்டனர், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகள் என்ற பெயரில் அடிமைகளாக்கப் பட்டனர்.

ஆரிய ஆக்கிரமிப்பின் கீழ் இந்துக்களாக மாறிய தமிழர்கள், சித்தர்களையும், சர்வதேச நட்புச் சக்திகளையும் மறந்தார்கள். வட நாட்டவரின் இந்து மதம், சித்தர்களின் அறிவியலை புறக்கணித்தது. போலிச் சாமியார்கள், மந்திரம், பில்லிசூனியம் போன்ற தீய நோக்கங்களுக்காக சித்த அறிவியலை பயன்படுத்தி வரலாயினர். தமிழகத்தில் ஒரு இருண்ட காலம் வரப்போகின்றது என்பதை, சித்தர்கள் அன்றே அறிந்திருப்பார்கள். அதனால், கடுமையாக உழைத்து, ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த அறிவியல் குறிப்புகளை எல்லாம், தாமே அழித்து விட்டுச் சென்றனர். அன்றிலிருந்து பல போலிச் சித்தர்கள் தோன்றினார்கள். பிற்காலத்தில் தமிழில் எழுதப் பட்ட, சித்தர்களின் அறிவியல் நூல்கள் பல போலியானவை என்று தெரிய வருகின்றது.

போகநாத சித்தர், ஆகாய விமானம், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை உருவாக்கும்
தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தார். (அவர் அவற்றை எல்லாம் சீனர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.) அதே போன்று, ஜெருசலேம்
சென்ற போகநாத சித்தர், புகை கக்கும் மோட்டார் வாகனத்தில் சவாரி செய்ததாகவும் ஒரு தகவல். அவர் மெக்காவில் முகமது நபிகளை சந்தித்து முஸ்லிம் ஆக மாறினார். (Bogar.3.222and 3.227). சீன, அரேபிய தரவுகளைக் கொண்டு அந்தத் தகவல்களை உறுதிப் படுத்துவதற்கு ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பல விஞ்ஞான அற்புதங்களை எல்லாம் ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அவை குறித்த சாத்தியப்பாடுகளை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தார்கள். சீன, அரேபிய மூலங்களில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பியர்கள் அவற்றை பரிசோதனை செய்து மீளக் கண்டுபிடித்தார்கள்.

(தொடரும்)

மேலதிக விபரங்களுக்கு:
1.
Arulmigu Dandayudhapani Swami Devasthanam, Palani
2.
Hindu Web site
3.The Encyclopaedia Of Indian Literature (Volume Five)
---------------------------------------------


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்

Saturday, December 10, 2011

காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஐந்தாம் பாகம்)


பண்டைய இந்தியர்களின் அறிவியல், இனவாத ஆரியர்களின் கைகளில் சிக்கி விடாமல் தடுப்பதற்காக, சித்தர்கள் அவற்றை தமிழகக் காடுகளில் கொண்டு வந்து மறைத்து வைத்தார்கள். இன்று, ஆரிய மயப்பட்ட தமிழ் இனவாதிகளிடம் இருந்து சித்தர்களின் அறிவியலை காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன்னே விரிந்து கிடக்கிறது. மனித இனத்தின் வரலாறு முழுவதும், ஆங்காங்கே பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் அவற்றை, இனம், மொழி, மதம் கடந்து தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு இனத்தின் கண்டுபிடிப்பை இன்னொரு இனம் மெருகூட்டி வளர்த்தது. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, இடம்பெற்று வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, எந்த இனமும் தனது என்று உரிமை கோர முடியாது. நமது பாடசாலைகளில் போதிக்கப்படும் நவீன அறிவியல் கல்விக்கு சொந்தக்காரர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. சீனர்களிடமிருந்தும், அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்ட நவீன அறிவியலை ஐரோப்பியர்கள் தமது என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம். "வெள்ளையர்களை உலகிலேயே உன்னதமான கலாச்சாரம் கொண்ட சிறந்த இனம். வெள்ளை இனத்தில் மட்டுமே மேதாவிகள் தோன்ற முடியும்." என்பன போன்ற நிறவெறிக் கருத்துக்கள் அங்கிருந்து தான் உதயமாகின்றன.

சித்தர்கள் யார்? சித்தர்கள் தமிழர்களா? அவர்களது அறிவியலை, தமிழர்களது அறிவியலாக கருதலாமா? தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியின் பின்னர், சித்தர்கள் மீதான ஆர்வம் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே சித்தர்கள் பற்றிய நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், தொலைக்காட்சி தொடர்கள் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர வழிவகுத்தது. புனைவுகளை கலந்து தயாரிக்கப்பட்ட மர்மதேசம், மற்றும் சித்தர்கள் குறித்த தொடர் நாடகங்களும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கவர்ந்திருந்தன. இருப்பினும், அந்த தொடர்கள் தோற்றுவிக்காத அரசியல் விழிப்புணர்வை, "ஏழாம் அறிவு" எனப்படும் வணிகப் படம் ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்த திரைப்படம் சித்தர்களின் பற்றிய அறிவியல் தகவலை, தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றது.

வெறும் வாய் மென்று கொண்டிருந்த தமிழ் இனவாதிகளுக்கு அவல் கிடைக்கவே, "தமிழர்கள் உலகிற்கே நாகரீகத்தை சொல்லிக் கொடுத்த உன்னத மனிதர்கள்." என்று தற்பெருமை கொள்ளத் தொடங்கி விட்டனர். ("ஆசிய, ஆப்பிரிக்க மக்களுக்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுப்பது எமது கடமை." என்று இனவாத வெள்ளையர்களும் இறுமாப்புடன் கூறிக் கொண்டனர்.) தமிழ் இனவாதிகளின் உரிமை கோரல், சித்தர்களின் கொள்கைகளுக்கே முரணானது. தமிழகத்தின் சித்தர்கள் மரபின் மூலவராகக் கருதப்படுபவர் திருமூலர். தமிழ் மொழியிற் சிறந்த தத்துவமாக கருதப்படும் திருமந்திரத்தை எழுதியவர். திருமூலர் தன்னை ஒரு குறுகிய எண்ணம் கொண்ட தமிழ் இனவாதியாகவோ, அல்லது சைவ மத அடிப்படைவாதியாகவோ என்றுமே காட்டிக் கொள்ளவில்லை. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" போன்ற வாசகங்கள் மூலம் அவர் தன்னை ஒரு சர்வதேசவாதியாக தான் காட்டிக் கொள்கிறார்.

முதலில், சித்தர்கள் என்றால் யார்? நாலாயிரத்திற்கும் அதிகமான நோய்களைப் பற்றியும், அவற்றின் குணம் குறிகளையும், நோய் தீர்க்கும் மருந்துகளையும் சித்தர்கள் தமிழில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். நவீன மருத்துவம் பயின்றோர், இவற்றை புறக்கணிப்பது அறிவீனம். இந்த விடயம் குறித்து பிறகு பார்ப்போம். சித்தர்கள் என்றால், மருத்துவர்கள் என்பது போன்ற கருத்து தவறானது. பல்வேறு பட்ட துறைகளில் சித்தர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

தத்துவ ஆசிரியராக, மொழியியல் அறிஞராக, சமூக ஆய்வாளராக மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களாக கூட சித்தர்கள் இருந்துள்ளனர். சித்தர்களை நமது காலத்தில் விஞ்ஞானி என்று அழைப்பார்கள். நமது காலத்தில் அரிய கண்டுபிடிப்புகளை செய்த விஞ்ஞானிகள் எல்லோரும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் அல்ல. தேடல், திறமை, அறிவு, புத்திசாதுர்யம் என்பனவே அவர்களை விஞ்ஞானிகளாக்கியது. உதாரணத்திற்கு, ஒரு இலத்திரனியல் கண்டுபிடிப்பை செய்தவர் மட்டுமே விஞ்ஞானி அல்லர். சமூகத்தை ஆய்வு செய்தவரும், இயற்கையின் இரகசியங்களை தத்துவங்களாக விளக்கத் தெரிந்தவரும் விஞ்ஞானி தான்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், விஞ்ஞானிகளை சித்தர்கள் என்று அழைத்தனர். சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தில்,அல்லது நாட்டில் மட்டும் தோன்றவில்லை. உலகம் முழுவதும் இருந்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்த பதினெண் சித்தர்களினதும் பூர்வீகம் கூட பல வகைப் பட்டது. சித்தர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். நம் மத்தியிலும் வாழ்கின்றனர். நாம் அவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாததால், கிறுக்கன் என்று நினைத்திருப்போம்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர்களையும், அன்றைய மக்கள் "புத்தி சுவாதீனமற்ற பைத்தியக்காரர்களாக" கருதினார்கள். தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதிதர்மன், ஷவோலின் ஆலயத்தினுள் சுவரை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாராம். யாருடனும் எதுவும் பேசாமல், நாட்கணக்கில் சுவரை வெறித்துப் பார்த்த போதிதர்மனை பார்த்தவர்கள் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள். அந்த "புத்திசுவாதீனமற்ற" நபர் தான், ஜென் பௌத்தர்களால் தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கப் படுகிறார். கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள் அவரை, "தமிழ் தேசிய வீர புருஷனாக" வெள்ளித்திரையில் காட்டினார்கள்.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" என்று, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதிய சித்தர்களை, தமிழ்த் தேசியத்தின் தூண்களாக திரித்துக் கூறும் போக்கு அபாயகரமானது. அது சித்தர்களுக்கே விரோதமான போக்கு மட்டுமல்ல, அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு "பேட்டன்ட்" உரிமை கோருவது போன்றது. அமெரிக்க, ஐரோப்பிய தேசியவாதிகளும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், தேசியவாதிகளிடம் இருந்து அறிவியலை விடுதலை செய்ய வேண்டிய மாபெரும் கடமை மக்களுக்குண்டு. அறிவியல் அனைத்துலக மக்களின் பொதுச் சொத்து.

திருமூலர் அதனை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியுள்ளார், என்பதை மறந்து விடலாகாது. சிவ பக்தனான திருமூலர், சைவ சித்தாந்தவாதிகள் போன்று "ஒரு இந்துவாக" வாழவில்லை. சிவனைத் தவிர வேறெந்த கடவுளையும் ஏற்க மறுத்தார். யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் மையமாகக் கொண்ட "ஓரிறைக் கோட்பாட்டை" திருமூலர் அன்றே போதித்தார். அது மட்டுமல்ல, ஆகம வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவராக, ஆலயம் சென்று தொழுவது வீண்வேலை என்றும் சாடினார். "அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்..." என்று அன்பிலே இறைவனைக் கண்டார்.

"அறிவியல் மக்கள் மயப் படுத்தப் பட வேண்டும்", என்ற நல்லெண்ணத்துடன் தான், திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதினார். பண்டைய தமிழர்கள் பேசிய இலகு தமிழில், அந்த செய்யுள்கள் இயற்றப் பட்டன. திருமூலரை அடியொற்றிய சித்தர்களும், தமிழ் மொழியில் தமது குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள பாடநூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டும் என்பதற்காக, நாங்கள் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். "அறிவியலை கற்பதற்கு குறிப்பிட்ட மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்," என்ற மூட நம்பிக்கையை, சித்தர்கள் அன்றே தகர்த்திருந்தனர்.

உலகம் முழுவதும், சோஷலிச இயக்கம் வளர்ந்த காலத்தில் தான், தாய் மொழியில் கல்வி கற்க வேண்டுமென்ற அரசியல் மயப் பட்டது. அடித்தட்டு மக்களும் கல்வியறிவு பெறுவதற்கு, அவர்களது தாய் மொழியில் கற்பிப்பது அவசியம், என்பதை சித்தர்கள் அன்றே உணர்ந்திருந்தனர். அந்த வகையில், சித்தர்கள் சமூகப் புரட்சியாளர்களாக கருதப் பட வேண்டும். நமது சித்தர்கள் அறிவியலை மட்டும் உலகிற்கு அறிமுகப் படுத்தவில்லை, கூடவே சோஷலிச தத்துவங்களையும் கூறிச் சென்றனர்.

திருமூலர் போன்ற சித்தர்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் தமிழர்களை சமதர்மவாதிகளாக உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும். சமதர்மக் கொள்கை மூலம், நாம் அறிவியல் மேன்மை அடையலாம் என்பதையே சித்தர்களது வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. தூய இனத் தேசியவாதம் பேசினால், திருமூலரையும் ஒதுக்க வேண்டியேற்படும். ஏனெனில் திருமூலர் ஒரு தமிழரல்ல! அவர் ஒரு காஷ்மீர்க் காரன்!! திருமூலரின் பிறப்பிடம் கைலாச மலைக்கு தெற்கே இருந்ததாக, அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. அநேகமாக அது இன்றைய காஷ்மீராக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

இன்று திபெத்திற்குள் உள்ள கைலாச மலைக்கு அருகில் தான் காஷ்மீர் உள்ளது. ஒரு காலத்தில் காஷ்மீர் முழுவதும் சைவ சமயம் தழைத்திருந்தது. இன்றைக்கும், சிவனுக்கு சிறப்புச் சேர்க்கும் ஒன்பது புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று காஷ்மீரில் உள்ளது. பிற்காலத்தில், ஆரிய- பிராமண இனக்குழுக்களின் வருகையே, காஷ்மீரின் சமூகக் கட்டமைப்பை மாற்றியது. பிராமணீய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் திபெத்திய பௌத்த மதத்தில் சேர்ந்தனர். இன்றைக்கும், காஷ்மீரின் லடாக் பகுதியில் பௌத்தர்களே பெரும்பான்மையினர். ஆரிய- பிராமணர்கள், "காஷ்மீர் பண்டிதர்கள்" என்ற பெயரில் இன்றைக்கும் தமது இனத் தூய்மையை பாதுகாத்து வருகின்றனர். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்து தப்புவதற்காகத் தான், காஷ்மீர் பள்ளத்தாக்கு சைவர்களும், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறினார்கள்.

திருமூலர், காஷ்மீரை ஆரியர்கள் ஆக்கிரமித்த காலத்தில் தப்பிப் பிழைத்த அரசியல் அகதியாக இருக்கலாம். தாந்திரிய சைவ சமயம் கட்டிக் காத்து வந்த, அறிவுச் செல்வத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு, தெற்கு நோக்கி பயணமானார். தனது தாயகமான காஷ்மீரை ஆக்கிரமித்த அன்னியர்கள், சைவ மதத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்று, அவர் ஞானதிருஷ்டியால் உணர்ந்திருப்பார். இன்னமும் ஆரியரின் கால் படாத தமிழகம், புகலிடம் கோருவதற்கு சிறந்த இடம் என்று நினைத்திருப்பார்.

காஷ்மீரத்து திருமூலர் தமிழகம் வந்து, பழனி அருகில் ஒரு ஆச்சிரமத்தை நிறுவினார். ஆரியக் கலப்பற்ற தமிழ் மொழி, இந்திய உப கண்டத்திலேயே பழமையான மொழியாகும். அதன் காரணமாகவே, தமிழை கடவுளின் மொழி என்று, பிற மாநிலத்தவர்கள் மதித்த காலமொன்று இருந்தது. சம்ஸ்கிருத மொழியானது, தமிழில் இருந்து உருவான, சித்தர்களால் பயன்படுத்தப் பட்ட இரகசிய பரிபாஷை என்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது. அதாவது, சித்தர்கள் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை சம்ஸ்கிருத மொழியில் வைத்திருந்தனர். ஆரியர்கள் அந்த அறிவுச் செல்வத்தை கைப்பற்றி, தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்கள், சமஸ்கிருதத்துடன், கூடவே அறிவியலையும், ஆரியரிடம் பறிகொடுத்தார்கள். பல நூறாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா வரையில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அவற்றை ஆரியரிடம் இருந்து கேட்டறிந்து கொண்டனர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த பாக்தாத்தில், அறிவியல் குறிப்புகள் யாவும் அரபு மொழியில் எழுதி வைக்கப் பட்டன. அவற்றை பின்னர், ஐரோப்பியர்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொண்டனர். அந்த லத்தீன் மொழிபெயர்ப்புகள் தான், பிற்கால ஐரோப்பியரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தது.

பாக்தாத்தில் கூடிய அறிஞர்கள், தமிழ் சித்தர்களின் குறிப்புகளை மட்டுமல்ல, சீன தேசத்து சித்தர்களின் குறிப்புகளையும் அரபியில் மொழிபெயர்த்தார்கள். கூடவே அரேபிய சித்தர்கள் எழுதிய அறிவியல் நூல்களையும் மறந்து விடலாகாது. இவை எல்லாம் தான், லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டன. இவற்றை எல்லாம் தொகுத்து தான், நவீன விஞ்ஞானம் உருவானது. இந்திய, சீன, அரபு அறிஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஐரோப்பியர் தமது என்று உரிமை கோரினார்கள். மோசடிக் கார ஆங்கிலேயர்கள், தமது கண்டுபிடிப்புகள் என்று சொல்லி, எமக்கு போதித்தார்கள்.

நாம் இன்று பாடசாலைகளில், கல்லூரிகளில் கற்கும் நவீன விஞ்ஞானத்தின் ஒரு பகுதி, ஏற்கனவே சித்தர்களால் தமிழில் எழுதப்பட்டுள்ளன, என்ற உண்மை எமக்குத் தெரியாது. இது எவ்வளவு பெரிய அறியாமை? ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆரியரால் சிறைப் படுத்தப் பட்டிருந்த தமிழரின் அறிவியல், அரேபியரால் விடுதலை செய்யப் பட்டது. வரலாற்றில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்புமுனைகளால் தான், உலகில் நாகரிக வளர்ச்சி சாத்தியமானது. இல்லாவிட்டால், இன்றைக்கு நாம் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி வாழ்ந்து கொண்டிருப்போம்.

வட இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆரியர்கள், தென்னிந்தியாவில் மறைந்திருந்த அறிவியலை தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு உளவாளியை அனுப்பி வைத்தனர். இந்துப் புராணக் கதைகளில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதே நேரம், வடக்கே உள்ள "எதிரி நாடொன்றின்" வரலாற்றுக் குறிப்புகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் கூட, அவரை "தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய மாமுனிவர்" என்று சிலாகித்து பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்த திருமூலரும், அந்தப் பிரபலமான வட நாட்டு ஒற்றர் பற்றி கேள்விப் பட்டிருந்தார். யார் அந்த உளவாளி?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"