Showing posts with label கத்தலூனியா. Show all posts
Showing posts with label கத்தலூனியா. Show all posts

Saturday, June 08, 2019

கத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்


நான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் தெரிய வந்தது. அவரது தாய்மொழி கத்தலான். அதாவது ஸ்பெயினில் சிறுபான்மை இனத்தவர். பெரும்பான்மை சமூகத்தினரின் "பேரினவாத ஸ்பானிஷ் மொழி" கற்பிக்கும் ஆசிரியர்.

நாங்கள் ஸ்பானிஷ் மொழி என்று பொதுவாக சொல்வது கஸ்திலியான் மொழியைத் தான். தலைநகரம் மாட்ரிட், அதை அண்டிய மத்திய ஸ்பெயின் பகுதியில் பேசப்படும் பெரும்பான்மையின மொழி. அதில் நிறைய அரபு மொழிச் சொற்கள் கலந்துள்ளன.

ஸ்பெயினில் அதைத் தவிர, கத்தலான், பாஸ்க், கலேக்கோ மொழிகளை பேசும் சிறுபான்மையின மக்களும் வாழ்கின்றனர். ஆனால், இன்று வரைக்கும் கஸ்திலியான் (ஸ்பானிஷ்) மட்டும் தான் உத்தியோகபூர்வ மொழி.

ஏற்கனவே பாஸ்க் மொழி பற்றி உலகில் பலருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அவர்களது ஆயுதப் போராட்டம். எங்களது ஸ்பானிஷ் ஆசிரியையும் அதைக் குறிப்பிடத் தயங்கவில்லை. "நாங்கள் பாஸ்க்காரர் மாதிரி பயங்கரவாதிகள் அல்ல. மேலும் நாங்கள் தனிநாடு கோரவில்லை." என்றார்.

கத்தலான் ரோம மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இத்தாலி மொழிக்கு நெருக்கமானது. கத்தலான் மக்கள், ஸ்பெயின் தேசிய நீரோட்டத்தில் ஒன்றுகலந்து விட்டவர்கள். பார்சலோனா போன்ற தொழிற்துறை நகரங்களின் வளர்ச்சி அதற்கு முக்கிய காரணம்.

ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில், கத்தலூனியா, கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகள் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திரமாக இருந்தது. அவர்கள் அப்போதே நினைத்திருந்தால் தனிநாடு பிரகடனம் செய்திருக்கலாம்.

கத்தலூனியாவின் இடதுசாரிப் பாரம்பரியம் இன்றைக்கும் தொடர்ந்து இருக்கிறது. அகதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு முற்போக்கான சமூகம். ஸ்பெயின் பிற பாகங்களை விட, அங்கு தான் வெளிநாட்டவருக்கு வரவேற்பு அதிகம்.

பொதுவாக, மேற்கத்திய நாடுகளில் பிரிவினைக் கோரிக்கைகள் எழும் பொழுது, தமிழர் உட்பட வெளிநாட்டுக் குடியேறிகள் எதிராக இருப்பார்கள். உதாரணத்திற்கு, கனடாவில் இருந்து கியூபெக் மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடந்த நேரம், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் (தமிழர்கள் உட்பட) எதிர்த்து வாக்களித்தனர். ஸ்கொட்லாந்து வாக்கெடுப்பிலும் இது தென்பட்டது.

ஆனால், கத்தலூனியா விடயத்தில் நடந்ததோ வேறு. அங்கு வாழும் வெளிநாட்டவரும் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குக் காரணம், கத்தலூனியா தேசியவாதிகளின் இடதுசாரி சார்புத் தன்மை என்றால் அது மிகையாகாது. தமிழ்த் தேசியவாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் இது.

இதற்கு முன்னர் பிரிவினை கோராத கத்தலான் சமூகம், இப்போது மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய காரணம் என்ன? அநேகமாக, அண்மைக் காலத்தில் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முக்கியமான காரணம். மேற்கு ஐரோப்பாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஸ்பெயினில் அதிகம்.

ஸ்பெயின் பொருளாதாரத்தில், கத்தலூனியா பிரதேசத்தின் பங்களிப்பு அதிகம். பொருளாதார உற்பத்தி அடிப்படையில், "பணக்கார மாநிலம்" என்று சொல்லலாம். ஸ்பெயின் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பிரிவினை சிறந்த வழி என்று நம்புகிறார்கள். அது சாத்தியமா என்பது கேள்விக்குறி. கத்தலூனியா தனி நாடானால், அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டி இருக்கும். அதே நேரம், யூரோ நாணயமும் பாவிக்க முடியாது.