Sunday, January 18, 2015

"கருத்துச் சுதந்திரவாதிகள்" உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள்


இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன?

பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது.

சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது.
French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy jibe 

தற்போது கருத்துச் சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் போராளிகள், இது போன்ற சுதந்திர மறுப்புகளை கண்டுகொள்ளாத மர்மம் என்னவோ?

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை மூளைச் சலைவை செய்கின்றன என்பது, சில அடிமை விசுவாசிகளின் கருத்துக்களை வாசிக்கும் பொழுது தெரிகின்றது.

Charlie Hebdo தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தை வெறுப்பவர்களின் பயங்கரவாதம் என்ற கருத்தியலே அபத்தமானது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னர், "அவர்கள் எமது சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்..." என்று புஷ் சொன்னதைப் பிரதிபலிக்கின்றது.

இதனை வெறுமனே மதம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பது, "கலாச்சாரங்களின் மோதல்" என்ற காலாவதியான மேலைத்தேய கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்கின்றது. கலாச்சாரங்களின் மோதல் குறித்து கோட்பாட்டு விளக்கம் கொடுத்த அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா கூட, தான் அன்று தப்புக் கணக்கு போட்டு விட்டதாக ஒப்புக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பு தனது கண்களை திறந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்செயலாக மேற்குலகில் கிறிஸ்தவ கலாச்சாரமும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய கலாச்சாரமும் இருப்பதால், அது அடிப்படையில் கலாச்சாரங்களின் மோதல் ஆகாது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல பிரச்சினைகள், ஐரோப்பிய காலனிய கால கட்டத்தின் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள், ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்பதை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சார்லி எப்டோ விவகாரம் தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகள் யாவும், "கிறிஸ்தவ - முஸ்லிம் பிரச்சினை" என்று தவறாக புரிந்து கொள்ளப் படுகின்றன. அந்த அபத்தமான கருத்தை பல தமிழர்களும் எதிரொலிக்கின்றனர். உண்மையில், இவற்றை மதப் பிரச்சினையாக கருதிய மதத் தலைவர்கள், இரண்டு மதங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி இருந்தனர். போப்பாண்டவரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தாங்கள் பிரச்சினையை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், இங்குள்ள அடிப்படை பிரச்சினை மதம் அல்ல. நவ காலனித்துவம், வெள்ளையர்களின் நிறவெறி, ஐரோப்பிய இனத் துவேஷம், பொருளாதார மேலாண்மை, குடியேறிகளின் பிரச்சினை... இன்ன பிற ஆகும்.

தமிழீழம் கோரிப் போராட்டம் நடத்திய புலிகளும், அவர்களை ஆதரித்த மக்களும், இலங்கையின் இனப் பிரச்சினையானது சிங்கள - தமிழ் முரண்பாடு என்று தான் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நவ காலனித்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியான தமிழ் தேசியம் ஊடாக எதிர்ப்புக் காட்டத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், முன்னாள் காலனிய அடிமை நாடுகளில் வாழும் மக்கள் முஸ்லிம்கள் என்பதால், மதத்தின் ஊடாக தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அடிப்படைப் பிரச்சினை நவ காலனித்துவம். நைஜர் நாட்டில் நடந்த, சார்லி எப்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பிரெஞ்சு கலாச்சார நிலையம் எரித்து நாசமாக்கப் பட்டது. (French centre in Niger set ablaze in Charlie Hebdo protests http://www.france24.com/en/20150116-niger-zinder-french-cultural-centre-set-ablaze-charlie-hebdo-protest-prophet-mohammed-cartoon/)

நைஜர் நாட்டில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சு படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு காலனியாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. ஆனால், உள்ளூர் ஆட்சியாளர்கள், காலனியாதிக்கத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகின்றனர். (Why Charlie Hebdo attack is not about Islam http://www.aljazeera.com/indepth/opinion/2015/01/charlie-hebdo-islam-cartoon-terr-20151106726681265.html)

கருத்துச் சுதந்திர அடிப்படைவாதிகள், நிச்சயமாக இந்த உண்மைகளை உங்களுக்கு சொல்லப் போவதில்லை. பிரான்ஸ் நாட்டு பிரஜைகளில், அண்ணளவாக அரைவாசிப் பேர், "முஸ்லிம்களின் இறைதூதர் முகமதுவை கேலி செய்யும் கார்ட்டூன்கள் தவிர்க்கப் பட வேண்டியவை" என்று கருத்துக் கூறியுள்ளனர். அதாவது, அரைவாசி பிரெஞ்சு மக்கள், சீண்டிப் பார்க்கும் வக்கிரமான கேலிச் சித்திரங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்று நம்புகிறார்கள். (Caricatures de Charlie Hebdo : Plus de 4 Français sur 10 estiment qu'il faut éviter les dessins de Mahomet; http://www.huffingtonpost.fr/2015/01/18/caricatures-charlie-hebdo-francais-eviter-dessins-mahomet_n_6495204.html?ncid=fcbklnkfrhpmg00000001

மேலும், Charlie Hebdo பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் ஆசிரியர், பத்திரிகை நிர்வாகம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாக குற்றஞ் சாட்டியுள்ளார். ஒரு கேலிச்சித்திரத்தை ஒரு தடவை போட்டால் அது அந்தப் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஒரே மாதிரியான கார்ட்டூன்களை திரும்பத் திரும்ப போடுவதும், உச்ச கட்ட வக்கிர புத்தியுடன் வரைவதும், குறிப்பட்ட சிலரை வேண்டுமென்றே ஆத்திரமுற வைக்கும் நோக்குடன் நடந்துள்ளது. இதையும் அந்த முன்னாள் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

அநேகமாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன், அல்லது வர்த்தக நோக்கில் செயற்பட்ட யாரோ சிலரின் சதியாலும் இந்தத் தூண்டுதல்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்கு ஊடகவியலாளர்கள் பலியாகி உள்ளனர். தாக்குதலில் கொல்லப் பட்ட, Charlie Hebdo பத்திரிகை ஆசிரியர் உட்பட சில ஊடகவியலாளர்கள், போலிக் கம்யூனிசக் கட்சியான PCF அனுதாபிகள். (l'Humanité, 14 ஜனவரி 2015) தாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுப்பதாக அப்பாவித்தனமாக நம்பி உள்ளனர். (படுகொலைகள் பிரெஞ்சு சமுதாயத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைத்தன் காரணம் புரிந்து கொள்ளத் தக்கதே.)

இந்தத் தாக்குதலை அல்கைதா நடத்தி இருக்கிறது என்று பிரெஞ்சு அரசு கூறுகின்றது. ஆனால், அல்கைதாவுக்கும் சிஐஏ க்கும் இடையிலான தொடர்புகள் ஊர் அறிந்த இரகசியம். பொலிஸ் நடவடிக்கையில் கொல்லப் பட்ட பயங்கரவாதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறான். அதில், 2009 ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தில், பாதணிக்குள் குண்டு வைத்துக் கொண்டு சென்ற நபருடன், யேமனில் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறியுள்ளான். அந்த நபர் சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

2006 ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த வலதுசாரி UMP கட்சி, மத நிந்தனை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர விரும்பியது. ஆனால், கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த யோசனை பின்போடப் பட்டது. (l'Humanité, 15 ஜனவரி 2015) தற்போது நடந்து முடிந்துள்ள, பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

மத நிந்தனை தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டால், அதனால் பலனடையப் போவது முஸ்லிம்கள் அல்ல. மாறாக, கிறிஸ்தவ - வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்

1 comment:

Unknown said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.