Friday, December 27, 2013

தென்னாபிரிக்காவில் கறுப்பின விடுதலைக்கு போராடிய வெள்ளையினத் தலைவர்

தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில், நெல்சன் மண்டேலாவை தவிர பிறரை உலகம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அதிலும், "வெள்ளையினத்தில் பிறந்த ஒருவர், கறுப்பின மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடினார்" என்று சொன்னால், இன்று கூட யாரும் நம்ப மாட்டார்கள். அவர் பெயர் "ஜோ ஸ்லோவோ"! (Joe Slovo; http://en.wikipedia.org/wiki/Joe_Slovo) லிதுவேனியாவில் இருந்து வந்து, தென்னாபிரிக்காவில் குடியேறிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர். மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் பற்றுக் கொண்டவர். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர உறுப்பினர்.

தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் தேசியவாத இயக்கமாக இருந்த, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ANC) தலைமைப் பொறுப்பை நெல்சன் மண்டேலா ஏற்ற பின்னர், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. கறுப்பின தேசியவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ANC "ஐரோப்பியர் அல்லாத அனைத்து இன மக்களினதும்" விடுதலைக்கான இயக்கமானது. "கருப்பர்கள் வெள்ளையர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. இந்தியர்களை நம்ப முடியாது" என்பன போன்ற பிற்போக்கான இனவாதக் கருத்துக்கள் களையப் பட்டன. இந்தியர்களின் அமைப்புகளுடனும், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஐக்கிய முன்னணி அமைப்பது மூலமே, கறுப்பின மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை, நெலசன் மண்டேலா உணர்ந்து கொண்டார்.

"தோழர் நெல்சன் மண்டேலா, தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார்!" நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் தான், அந்தத் தகவல் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) தானாகவே அந்த உண்மையை பகிரங்கப் படுத்தி இருந்தது. (SACP confirms Nelson Mandela was a member; http://www.bdlive.co.za/national/politics/2013/12/06/sacp-confirms-nelson-mandela-was-a-member) மண்டேலா கைது செய்யப் படும் வரையில் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். ஆயினும், அன்றைய நிறவெறி அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாக, அந்த உண்மையை மறைக்க வேண்டியேற்பட்டது. அன்றைய தென்னாபிரிக்காவில், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வெள்ளையர்களை மட்டுமல்லாது, கறுப்பர்களையும் உறுப்பினர்களாக கொண்டிருந்த ஒரேயொரு கட்சி ஆகும். நிறவெறி அரசு தடை செய்த முதலாவது அரசியல் கட்சியும் அதுவாகும்.

தென்னாபிரிக்க விடுதலைக்காக காந்தீய வழியில் போராடுவதை கைவிட்டு விட்டு, ஆயுதப் போராட்டத்தில் மண்டேலா நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்காக எத்தியோப்பியா சென்று துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று திரும்பி வந்தார். தென்னாபிரிக்காவில் தலைமறைவாக வாழ்ந்த நெல்சன் மண்டேலா, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக் குறைவாக இருந்ததினால், நிறவெறி அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். எனினும், அவர் உருவாக்கிய கெரில்லா இராணுவம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. "உம்கொந்தோ வே சிஸ்வே" (Umkhonto we Sizwe) என்ற பெயரிலான கெரில்லா இராணுவத்திற்கு மண்டேலாவுடன், ஜோ ஸ்லோவோவும் தலைமை தாங்கினார்.

நிறவெறி அரசினால், "கம்யூனிச பயங்கரவாதி" என்று அறிவிக்கப்பட்டு தேடப் பட்ட ஜோ ஸ்லோவோ,  தென்னாபிரிக்காவில் வாழ முடியாமல் புலம்பெயர்ந்து சென்றார். அவர் வெளிநாட்டில் வாழ்ந்த காலத்தில், அவரது குடும்பத்தினர் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகினார்கள். நிறவெறி அரசு, ஜோ ஸ்லோவோவின் மனைவி Ruth First னை பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது. ஜோ ஸ்லோவோ மாதிரி, அவரது மனைவி ரூத் பெர்ஸ்ட்டும் ஒரு யூதர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். ரூத் பெர்ஸ்ட்டும், அவரது 13 வயது பருவ மகளும், நிறவெறி ஆட்சியின் கீழ் பட்ட துன்பங்களை, "A World Apart" (http://www.imdb.com/title/tt0096464/)  என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில், வெள்ளையின கம்யூனிஸ்டுகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அந்தத் திரைப்படத்தை பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

உம்கொந்தோ வே சிஸ்வே நடத்திய இராணுவ தாக்குதல்கள், குறிப்பிடத் தக்களவு வெற்றி பெறவில்லை. ஆனால், நிலைமை எல்லை மீறிப் போவதை உணர்ந்த "சர்வதேச சமூகம்", மண்டேலாவை "அஹிம்சா வழியில் போராடிய காந்தீய வாதி" போன்று பிரச்சாரம் செய்து, நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர விரும்பியது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில், சோஷலிச நாடுகள் தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்திற்கு வேண்டிய உதவிகள் செய்ய முன்வந்தன. ஜோ ஸ்லோவோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவர் பிரிட்டன், சாம்பியா, அங்கோலா, மொசாம்பிக் போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் ஆதரவை திரட்டினார்.

ஒரு இடதுசாரி கெரில்லாப் படையான உம்கொந்தோ வே சிஸ்வே, "அப்பாவி வெள்ளையின மக்கள் மீது இனவாத தாக்குதல்கள் நடத்தியதாக"  வெள்ளையின நிறவெறி அரசும், அதன் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்து வந்தனர். வெள்ளையர்களினால் அடிமைப் படுத்தப் பட்டிருந்த தென்னாபிரிக்காவில்,  ANC மட்டும் கறுப்பின மக்களின்  விடுதலைக்காக போராடவில்லை. வேறு சில அமைப்புகளும் இருந்தன.  உதாரணத்திற்கு, ANC யில் இருந்து பிரிந்து சென்ற, Pan Africanist Congress (PAC) மிகத் தீவிரமான கறுப்பின தேசியவாத அமைப்பாக இயங்கியது. அது போன்ற பல குறுந் தேசியவாத இயக்கங்கள், வெள்ளையின பொது மக்கள் மேல் இனவாத தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கும் எல்லா நாடுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம்.

உம்கொந்தோ வே சிஸ்வே பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால்,அந்தத் தாக்குதல்கள் கம்யூனிச கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தன. முடிந்த அளவு உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலேயே குண்டுகள் வெடிக்க வைக்கப் பட்டன. அநேகமாக, இரவு நேரங்களில், அரசாங்க கட்டிடங்களே தாக்குதல் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப் பட்டன. "உம்கொந்தோ வே சிஸ்வே" மொசாம்பிக், அங்கோலா போன்ற சோஷலிச நாடுகளில் முகாம்களையும், அலுவலகங்களையும் அமைத்திருந்தது. அதன் போராளிகள், அங்கோலா, மொசாம்பிக் நாடுகளில் நடந்த யுத்தங்களில் பங்கெடுத்து நேரடி கள அனுபவம் பெற்றனர். அங்கோலாவில் MPLA, மொசாம்பிக்கில் FRELIMO ஆகிய மார்க்சிய-லெனினிச கட்சிகளுடன் அவர்கள் நல்லுறவை பேணி வந்தனர்.

தென்னாபிரிக்கா விடுதலை அடைந்த பின்னர், ஜோ ஸ்லோவோ தாயகம் திரும்பி வந்தார். அப்போது சோவியத் ஒன்றியமும், பிற சோஷலிச நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து கொண்டிருந்தன. அந்த தருணத்திலும், ஜோ ஸ்லோவோ கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் பற்றுக் கொண்டிருந்தார். (பார்க்க: Has Socialism Failed?; http://www.marxists.org/subject/africa/slovo/1989/socialism-failed.htm) தென்னாபிரிக்க வரலாற்றில் நடந்த முதலாவது ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்ட, ஜோ ஸ்லோவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடன் கூட்டரசாங்கம் அமைத்தது. ஜோ ஸ்லோவோ, 6-1-1995 அன்று புற்று நோயால் மரணமடைந்தார். அவர் இன்றளவும், தென்னாபிரிக்காவின் தேசியத் தலைவர்களில் ஒருவராக, எல்லா இன மக்களாலும் நினைவு கூரப் படுகின்றார்.


***************

நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி, பிபிசி தமிழோசை  "போராட்ட ஒப்பீடு: தென்னாபிரிக்கா - இலங்கை." (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131215_mandela_and_tamilstruggle.shtml) என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இரண்டு விடுதலைப் போராட்டங்களில் இருந்த குறை நிறைகளை ஒப்பிடுமாறு, பேராசிரியர் மு.திருநாவுக்கரசுவிடம் பேட்டி காணப் பட்டது. அந்த பிபிசி தமிழோசை பேட்டியில், பேராசிரியர் மு.திருநாவுக்கரசு சொல்லத் தவறிய உண்மைகள்: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்ஸின் போராட்டத்தை, அன்று உலகில் இருந்த அனைத்து சோஷலிச நாடுகளும் பகிரங்கமாக ஆதரித்தன. சோவியத் யூனியனின் முயற்சியினால், ஐ.நா. மன்றத்தில் பல தடவைகள் தென்னாபிரிக்க நிறவெறி அரசைக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டு வரப் பட்டன.

ஒரு இடதுசாரி தேசியவாதக் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தோழமைக் கட்சியாக இருந்ததால், சர்வதேச கம்யூனிஸ்டுகளின் ஆதரவை பெற்றுக் கொடுத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இடதுசாரி அமைப்புகள் தமது அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த தென்னாபிரிக்க கருப்பின மக்களும், "சர்வதேச கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் எமது நண்பர்கள்" என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப் படவில்லை. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம்மைக் காப்பாற்றும் என்று நம்பி இருக்கவில்லை. (அந்த நாட்டில், வலதுசாரி தேசியவாதக் கட்சி ஒன்றும் கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடியது. இன்று அதைப் பற்றி பேசுவதற்கு கூட ஒருவரும் இல்லை. நமது தமிழ் வலதுசாரிகள் கூட, இடதுசாரி மண்டேலாவை தானே தூக்கிப் பிடிக்கிறார்கள்?)

அது பனிப்போர் நிஜப் போராக மாறிய காலகட்டம். சோவியத் யூனியனும், அமெரிக்காவும் தெற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதிலிப் போரில் ஈடுபட்டன. அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து, கியூபப் படைகள் நேரடி யுத்தம் செய்தன. அந்த யுத்தத்தில் தென்னாபிரிக்கப் படைகள் தோல்வியடைந்தன. மண்டேலா விடுதலையாகி, கருப்பின மக்களும் கலந்து கொள்ளும் ஜனநாயக தேர்தல்கள் நடைபெறுமென உறுதிமொழி கிடைக்கும் வரையில், கியூபப் படைகள் வெளியேறவில்லை. (கியூபப் படைகளை வெளியேற்ற வேண்டுமென்பதற்காகவும், தென்னாபிரிக்காவில் மாற்றத்தை கொண்டு வர அமெரிக்கா சம்மதித்தது.)

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெள்ளையின மக்கள் மீது நிறவெறித் தாக்குதல் எதையும் நடத்தவில்லை. கருப்பின மக்கள் மத்தியில் நிலவிய, வெள்ளையருக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை கடுமையாக எதிர்த்துப் போராடியது. விடுதலைப் போராட்ட காலத்தில், வெள்ளையின மக்கள் மீது இனவாத தாக்குதல் நடந்துள்ளன. ஆனால், அவை விதிவிலக்காக நடந்த அசம்பாவிதங்கள். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தோழமைக் கட்சியான தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கூட "வெள்ளையர்களின் கட்சி" தான். இரண்டுக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்தது.

No comments: