Sunday, July 26, 2009

கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்


கொழும்பு மாநகரம் வழக்கத்திற்கு மாறாக சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்னர், இனக்கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. அரச போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் வண்டியில், எங்களைத் தவிர வேறு தமிழர்கள் இருப்பதாக தெரியவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிங்களத்திலேயே உரையாடிக் கொண்டோம். 

கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைந்திருக்கும் அகதி முகாம் நோக்கி பயணம் செய்கிறோம். வழி நெடுகிலும், அரை குறையாக எரிந்து போன தமிழர்களுடைய வீடுகள். அந்த வீடுகளில் வசித்தவர்கள் என்னவானார்கள்? நெருப்பில் கருகி இறந்திருப்பார்களா? அல்லது உடுத்த உடையோடு கிளம்பிப் போய் அகதிமுகாம்களில் அடைக்கலம் புகுந்திருப்பார்களா? நினைக்கவே ஒரு கணம் மெய் சிலிர்த்தது.

அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பில் எமது வீடு இருந்ததால், கலவரத்திற்குள் அகப்படாமல் தப்பிப் பிழைத்தது. இன வெறியூட்டப்பட்ட காடையர் கூட்டத்தை அப்போது சில அரசியல்வாதிகள் தான் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிங்களக் காடையர்கள் எங்கெங்கே அப்படியெல்லாம் கொலை செய்தார்கள், கொள்ளையடித்தார்கள், பாலியல் பலாத்காரம் செய்தார்கள், போன்ற கதைகளை எமது வீடுகளில் கூடும் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். 

வசதி படைத்தோரின் குடியிருப்புகளுக்குப் பக்கத்திலேயே சேரிகளும் இருந்தன. சேரிகளில் இருந்த சிங்களவர்கள், வசதியான தமிழரின் வீடுகளை எரிக்கவும், கொள்ளையடிக்கவும் முன் நின்றதாக கேள்விப்பட்டோம். சில பணக்காரத் தமிழரின் வீடுகளில் வேலை செய்த சிங்கள வேலைக்காரர்கள், கலவரத்தை பயன்படுத்தி தமது எஜமானர்களையே கொலை செய்தனர், அல்லது காட்டிக் கொடுத்தனர். விதி விலக்காக சில கருணையுள்ள சிங்களப் பொது மக்கள் தமிழருக்கு அடைக்கலம் கொடுத்த கதைகளையும் கேள்வியுற்றோம். இத்தகைய சம்பவங்களை அறியும் வேளை, அப்போது சிறுவனான நானும் விரும்பியோ, விரும்பாமலோ அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டேன்.
தமிழர்கள் அதிகமாக வசித்து வந்த நகர்ப்பகுதியிலேயே, தற்காலிக அகதி முகாமாக மாற்றப்பட்ட அகதி முகாம் இருந்தது. பாடசாலை நுழை வாயிலில் ஆயுதமேந்திய காவல்துறையின் பிரசன்னம். 'சப் மெஷின் கன்' என்ற இயந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீசாரை அப்போது தான் பார்த்தேன். இந்த ஆயுதங்களால் ஏன் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, என்பது எனக்கு அப்போது புரியவில்லை. போலிஸ் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். போலீஸ என்பது புனிதமான ஒரு நிறுவனமல்ல என்ற உண்மை எனக்கு அப்போதே புரிந்தது. சாதாரண சிங்கள மக்களைப் போலவே, பொலிஸ் மற்றும் பல அரச துறைகளில் கடமையாற்றிய சிங்களவர்களின் இன உணர்வும் இருந்தது. நான் வசித்த குடியிருப்பில் பல தமிழ் அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் இருந்தன. தமிழர்கள் என்ற ரீதியில் நாம் கூடிப் பேசுவது வழமை. சக சிங்கள பணியாளர்கள் "தமிழர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என்று திட்டுவது பற்றிய கதைகள் கலந்துரையாடலில் இடம்பெறும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கொழும்பு மாநகரில் அதிக தமிழர்கள் பெரிய பதவிகளை வகித்து வந்தனர். அரசாங்கம் மற்றும் பல நிறுவனங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் சற்று அதிகமாகவே இருந்தது. இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள் மட்டும் மிக மிகக்குறைவு. ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில், கலப்பின பரங்கியர்களுக்கு (Burghers) மட்டுமே இடமளித்து வந்தனர். 1961 ம் ஆண்டு, பரங்கி இராணுவ அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியுற்றது. அதன் பிறகு, பெருமளவு பரங்கியர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இராணுவத்தில் அதிகளவு சிங்கள இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கொழும்பில் வசித்த யாழ்ப்பாண தமிழர்கள் எப்போதும் பதவிகளை எதிர்பார்த்து தம்மை தயார்படுத்திக் கொள்பவர்கள். அதைக்காட்டியே இனவாதத்தை தூண்டி விட்ட சிங்கள அரசியல்வாதிகள், இனக்கலவரங்கள் மூலமும், சிங்கள மொழி மட்டும் சட்டம் மூலமும், தமிழரின் பதவிகளை பறித்துக் கொண்டனர்.

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் கடமையாற்றிக் கொண்டிருந்த தமிழ் அரச உத்தியோகத்தர்கள், சிங்களம் சரளமாக தெரிந்திருந்தால் மட்டுமே அரச பதவிகளில் நிலைக்க முடியும் என்ற சட்டம் வந்த போது எதிர்த்தனர். கூடவே சிங்களமயமாக்கல் நாடெங்கும் தொடர்ந்தது. தமிழர்கள் எதிர்ப்பு காட்டிய போது, அதை அகம்பாவம் என்று சிங்களவர்கள் புரிந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொரு தடவையும் தமிழரின் எதிர்ப்புக்கு பதிலடியாக இனக்கலவரம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது கலவரக் காலத்திற்கு மீண்டும் வருவோம்.

இந்துக் கல்லூரி அகதிமுகாமில், இரண்டு மாடிகளில் இருந்த வகுப்பறைகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனேகமாக அனைவரும் உடுத்த உடையுடன் வந்திருந்தனர். அவர்களில் பலர் வசதியாக வாழ்ந்தவர்கள். டாக்டர்கள், பொறியியலாளர்கள் என்று கௌரவமான பதவிகளை வகித்தவர்கள். சேர்த்து வைத்திருந்த, நகைகள், பணம் எல்லவாற்றையும் பறி கொடுத்து விட்டு வந்திருந்தனர். முகாமில் நிலவும் வசதிக் குறைபாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, ஓரிடத்தில் சலசலப்பு காணப்பட்டது. சனங்கள் இரண்டு பகுதியாக பிரிந்து வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு விசாலமான மண்டபம். அகதிகள் சுவர்ப்பக்கமாக இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று வாய்ச் சமரில் ஈடுபட்டனர்.

நடுப்பகுதி மட்டும் வெற்றிடமாக இருந்தது. அங்கே 'சாக்' கட்டியால் கோடு கீறப்பட்டிருந்தது. எனக்கு உடனே அசோகவனத்தில் சீதை கிழித்த கோடு ஞாபகம் வந்தது. கோட்டுக்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமுமாக இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அங்கே என்ன நடக்கின்றது என்பது, ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்க மாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

எமது பாடசாலையில் அகதிகள் அதிக காலம் தங்கி இருக்கவில்லை. அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு கப்பல், மட்டக்களப்பிற்கு ஒரு கப்பல் என்று ஒழுங்கு செய்து, அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பி வைத்தது. அதுவரை இலங்கை என்பது அனைத்து சமூகத்தினருக்குமான தாயகம் என்று தான் என்னைப் போன்ற பலர் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வடக்கு, கிழக்கு மட்டுமே எமது இடம் என்பதும், கொழும்பில் தமிழர்கள் "வந்தேறுகுடிகளாகவே" கணிக்கப்படுகின்றனர் என்பதும் அப்போது தெளிவாகியது.

அரசு என்ற அமைப்பு கலவரத்தின் போது தனது தமிழ் பிரசைகளை பாதுகாக்கத் தவறியது. இப்போது அதுவே தமிழருக்கு ஒரு தாயகப் பிரதேசத்தை சுட்டிக் காட்டியது. இனப்பிரச்சினையை இன்று பலர் பல்வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். யானையை பார்த்த குருடர்களைப் போல, அவரவர் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமே இனப்பிரச்சினைக்கான புரிதலை உருவாக்குகின்றது. தமிழர் என்று தம்மை பகிரங்கமாக அடையாளப்படுத்த முடியாதது ஒரு சிலரின் பிரச்சினை. கலவரத்தில் உறவினர்களை, வீடுகளை இழந்தது இன்னொரு பிரிவினரின் பிரச்சினை. பிற்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போரில் ஏற்பட்ட இழப்புகளை முன்னிலைப்படுத்தினர். இவ்வளவுக்கும் மத்தியில் சிங்கள பேரினவாத அரசு அமைதியாக தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
...............................................................................................................................
(83 கருப்பு ஜூலையின் 26 வது நினைவுதினத்தையொட்டி பதிவிடுகின்றேன்.)

5 comments:

தங்க முகுந்தன் said...

Arumai! Inraiya kaalaththukku eetra mukkiiyamaana sinthanai seiyavaikkum thelivaana pathivu! nantrikal - konjam puththiyayai kaluviththudaiththu yosikkaveenum!

ஃபித்னா.காம் said...

புலியாக மாற மறுத்த சிறு பிள்ளையைக் கதறக் கதற கொலை செய்த கொடூரன் பிரபாகரன் குறித்து அந்தப் பிள்ளையின் தாய் அளித்த பரபரப்பு வாக்குமூலம் http://sweetlanka.blogspot.com/2009/07/blog-post_26.html

kalagam said...

\\ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்க மாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்\\


செம அடி, செருப்படி

kalagam

Anonymous said...

thozlarae,

When i talk regarding this problem with my family, they are saying I am up-normal.
then what is normal??
normal means dont see/listen any other problems other than ours??

How to educate such a people?

-Giri

Anonymous said...

யாழ் திலீபன் போன்ற நாசமறுப்பான்கள் மண்ணாப் போக விமர்சனம் செய்ய ஒரு நியாயம் வேண்டும் இவனுகள் மகிந்தட ............. மனிதர் என்ற வகைக்குள் அடங்காதவர்கள். திட்ட எனக்கு வார்த்தை வரவில்லை