Wednesday, January 14, 2015

இனவாத சார்லிக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள்


பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில், அந்த தடைகளினால் பிரெஞ்சுப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் கீழ், ஐரோப்பிய கூட்டாளிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதன் மூலம் தான், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது பிடியை வலுவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, Charlie Hebdo பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள், GLADIO பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புண்டு.

GLADIO என்பது, நேட்டோவின் தலைமையின் கீழ் இயங்கும் ஐரோப்பிய பயங்கரவாத அமைப்பு ஆகும். நாற்பது நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றிய, பயங்கரவாதத்திற்கு எதிரான பாரிஸ் அணிவகுப்பில் அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சார்லி எப்டோ (Charlie Hebdo), ஒரு "இடதுசாரிப்" பத்திரிகை என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். போலி இடதுசாரிகள் இலங்கை, இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பிரான்சிலும், ஐரோப்பாவிலும் கூட, போலி இடதுசாரிகள் மலிந்து போயிருக்கிறார்கள்.

அந்தப் பத்திரிகையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள் சிலர் இடதுசாரிகளாக, அல்லது கம்யூனிஸ்டுகளாக கூட இருக்கலாம். அது ஐரோப்பாவில் ஒன்றும் புதுமை அல்ல. ஏனெனில், ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள், தனிப்பட்ட கொள்கை அளவில் இடதுசாரிகள் தான். ஆயினும், அவர்கள் தமது கொள்கையை வீட்டில் கழற்றி வைத்து விட்டு வேலைக்குப் போகிறார்கள். இது புள்ளிவிபரம் மூலம் நிரூபிக்கப் பட்ட உண்மை.

சார்லி எப்டோ, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் ஒரு வகையில் நாஸ்திக - இடதுசாரிப் பாரம்பரியத்தின் விளைவாக தோன்றிய பத்திரிகை தான். அது ஏற்கனவே கத்தோலிக்க போப்பாண்டவரையும், இயேசு கிறிஸ்துவையும் கேலிச்சித்திரம் போட்டிருக்கிறது. ஆனால், மதச்சார்பற்ற அல்லது நாஸ்திக பிரெஞ்சு சமுதாயத்தில் அது பெருமளவு தாக்கத்தை உண்டு பண்ணுவதில்லை.

அதே நேரம், யூத மதத்தையும் கேலி செய்துள்ளது தான். ஆனால், சட்டச் சிக்கல்கள் வராமல் மிகவும் அவதானமாக அதைச் செய்துள்ளது. ஏனெனில், பிரான்சிலும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்று, யூத மதத்தை அல்லது யூதர்களைப் பற்றி கேலிச்சித்திரம் போடுவது, Antisemitism எனும் தண்டனைக்குரிய குற்றம் ஆகலாம்.

அண்மைக் காலமாக, தனது விற்பனையை அதிகரிப்பதற்காக, சார்லி எப்டோ பத்திரிகை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் உள்ள இனவாதக் கருத்துக்களை பிரதிபலித்து வந்துள்ளது. அது இஸ்லாமியருக்கு எதிராக மட்டும் துவேஷத்தைக் காட்டவில்லை. பிரான்சில் குடியேறியுள்ள, தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் இனத் துவேஷத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.

"போகோ ஹராம் பாலியல் அடிமைகள் 
கோபமாக இருக்கிறார்கள்" 
"எமது சமூகக் கொடுப்பனவுகளில் 
கை வைக்காதே!"

இங்கேயுள்ள சார்லி எப்டோ அட்டைப் படத்தில், என்ன எழுதி இருக்கிறது என்று, பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கேலிச்சித்திர விளக்கம்:

"போகோ ஹராம் பாலியல் அடிமைகள் கோபமாக இருக்கிறார்கள்" 
"எமது சமூகக் கொடுப்பனவுகளில் கை வைக்காதே!"

ஆப்பிரிக்க கருப்பின கர்ப்பிணிப் பெண்கள், பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு கிடைக்கவிருக்கும் பிரெஞ்சு அரசின் சமூக கொடுப்பனவுகளை குறி வைக்கிறார்களாம். இந்த இனவாத கேலிச்சித்திரம் மறைமுகமாக தமிழர்களையும் கிண்டல் செய்கின்றது. பிரான்சில் வாழும் தமிழ்க் குடும்பங்களில், பலருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும். ஏனென்றால், மூன்று பிள்ளைகளுக்கு மேலே இருந்தால், அரசு அதிகமான பணம் கொடுக்கிறது.

ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் அரச கொடுப்பனவுகளை எதிர்பார்த்து, அதிகளவு பிள்ளைகளை பெறுவதாக பிரெஞ்சு இனவாதிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. சார்லி எப்டோ பத்திரிகையும் பிரெஞ்சு பெரும்பான்மை சமூகத்தின் இனவாதக் கருத்துக்களை கேலிச்சித்திரமாக வரைந்து காசு சம்பாதித்து வருகின்றது.

தாக்குதலின் பின்பு, தன் வெளியீட்டைக் கண்ட இப் பத்திரிகை முப்பது லட்சம்  (3 மில்லியன்) பிரதிகள் விற்றது! அது மட்டுமல்ல, இனிமேல் ஆங்கிலம், அரபி, துருக்கி, இத்தாலி ஆகிய பிறமொழிகளிலும் பத்திரிகை வெளியாகவுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு சிறந்த வழி. உலகை நாகரிகப் படுத்தும் வெள்ளையனின் காலனிய கால கடமை நிறைவேறியுள்ளது.


பிற்குறிப்பு:
ஏற்கனவே, ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சுப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்திருந்தனர். அவை யாவும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. 
Claims of French Complicity in Rwanda’s Genocide Rekindle Mutual Resentment 

Sarkozy admits France's role in Rwandan genocide 

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், பிரான்ஸ் அரசு, "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு ஆயுத விநியோகம் செய்து, தமிழினப் படுகொலையில் பங்கெடுத்திருந்தது. 
While condemning Sri Lanka violence, EU still sells arms to government 

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த பிரான்சுக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள். ‪
#‎IAmNotCharlie‬ – ‪#‎JeNeSuisPasCharlie‬ 


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, January 12, 2015

தமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பாரிஸ் பேரணி




சர்வதேச சமூகத்தின் இரட்டை வேடம்! 
முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்த நேரம், கண்களை மூடிக் கொண்டிருந்த உலக நாடுகளின் தலைவர்கள், பாரிஸ் படுகொலைக்காக அணிவகுத்துச் செல்கிறார்கள்.

Dear Mahinda Rajapakse, hope you were in Paris. 
We miss you in the march against Terrorism!

பாரிஸ் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணியில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகித்த கொடுங்கோலர்கள். இவர்களுடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் பிரகீத், லசந்த போன்றோரை கொலை செய்த மகிந்த ராஜபக்சவும் சேர்ந்திருந்தால், அந்தப் பேரணி முழுமை அடைந்திருக்கும்.


  • 1) இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு. கடந்த வருடம் காஸாவில் 7 ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர். 
  • 2) ஜோர்டான் மன்னர் அப்துல்லா. கடந்த வருடம் ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்தார். 
  • 3) துருக்கி பிரதமர் Davutoglu. உலகிலேயே பெருமளவு ஊடகவியலாளர்களை சிறைக்கு அனுப்பிய பெருமைக்குரியவர். 
  • 4) அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் Lamamra. அவரது நாட்டில், சில வருடங்களுக்கு முன்னர் கூட, ஊடகம் ஒன்றில் எழுதுவது தற்கொலைக்கு சமமானதாக இருந்தது. இப்போதும் சிலர் விசாரணை இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். 
  • 5) ஜோர்ஜியா, பல்கேரியா பிரதமர்கள். ஊடகவியலாளர்களை அடிப்பதற்கு பேர் போனவர்கள். 
  • 6) கிரேக்க பிரதமர் Samaras. அவரது நாட்டில், ஊர்வலங்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்களை, கலவரத் தடுப்பு பொலிஸ் அடித்து நொறுக்குவது வழமையான சம்பவங்கள். 
  •  7) பாஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர். குறைந்த சனத்தொகை கொண்ட சிறிய நாட்டிற்குள் அதிகளவு ஊடகவியலாளர்களை துன்புறுத்திய சாதனைக்குரியவர். 
  • 8) கட்டார் ஷேக் Mohamed Ben Hamad Ben Khalifa Al Thani. மல்லிகைப் பூவைப் பற்றி கவிதை எழுதிய குற்றத்திற்காக ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கிய புண்ணியவான்.
  • 9) பாலஸ்தீன அதிபர் அப்பாஸ். தன்னை அவமதித்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர்களை தடுத்து வைத்து துன்புறுத்தியவர். 
  • 10) பிரான்சுக்கான சவூதி தூதுவர். அவரது நாட்டில் ஒரு நாஸ்திக இளைஞர், தனது வலைப்பூவில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தினார் என்ற குற்றச் சாட்டில் பொது இடத்தில் கசையடித் தண்டனை வழங்கப் பட்டது.


இன்னும் பலர்... 

அநேகமாக பேரணியில் கலந்து கொண்ட 90% உலக நாடுகளின் தலைவர்கள், தமது நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஊடக சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர்கள். இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகத்திற்கு எதிரான தாக்குதலை கண்டிக்கிறார்கள். நம்புங்கள், இவர்கள் தானாம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் மனித உரிமைக் காவலர்கள்!


பாரிஸ் நகரில், 2013 ஜூன் 5 அன்று, கிளேமோ மேரிக் (Clément Méric) என்ற 19 வயது இளைஞன், பிரெஞ்சு இனவெறிக் காடையர்களினால் தெருவில் அடித்துக் கொலை செய்யப் பட்டான். பலியான இளைஞனும் ஒரு வெள்ளையின பிரெஞ்சுக்காரன் தான். அவன் செய்த குற்றம் என்ன? குண்டு வைத்தானா அல்லது சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டானா? இல்லை. பிரெஞ்சு நிறவெறிக்கு எதிராக, இடதுசாரி சிறு பத்திரிகை ஒன்றில் கட்டுரைகள் எழுதியது மட்டும் தான் அவன் செய்த குற்றம்!

சார்லி எப்டோ அலுவலகத்தில் 12 பத்திரிகையாளர்களை கொன்ற தாக்குதல் பயங்கரவாதம் என்றால், Clément Méric என்ற 19 வயது பத்திரிகையாளனை கொன்றதும் பயங்கரவாதம் தான். "Je suis Charlie" என்று கிளர்ந்தெழுந்தவர்கள், அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் ஆயிரக் கணக்கானோர், அன்று நிறவெறிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக "je suis Clément Méric" என்ற பதாகை தாங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை?

இதைத் தான் "Media Manipulation" என்று சொல்வார்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. அரசுக்கு ஆதரவான வெகுஜன ஊடகங்கள், குறிப்பிட்ட அரசியலுக்கு ஆதரவாக அல்லது எதிராக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்டுள்ளன.

அன்று பிரெஞ்சு ஊடகங்கள் நினைத்திருந்தால், Clément Méric கொலைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, ஆயிரக்கணக்கான மக்களை நிறவெறிப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வைத்திருக்க முடியும். ஒவ்வொருவரையும் "Je suis Clément Méric" என்று சொல்ல வைத்திருக்க முடியும். ஆனால், செய்ய மாட்டார்கள். குறைந்த பட்சம், அந்தக் கொலைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி கூட தெரிவிக்கவில்லை.

பிரெஞ்சு அரசும், வெகுஜன ஊடகங்களும், நிறவெறிப் பயங்கரவாதிகளும், ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் "முஸ்லிம் பயங்கரவாதிகள்" மட்டுமல்ல. பிரான்சில் வாழும் மூன்றமுலக நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுக் குடியேறிகளும் தான். அத்துடன், பிரெஞ்சு பேரினவாத வெறியை அல்லது நிறவெறியை எதிர்க்கும், வெள்ளையின இடதுசாரி ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிரிகள் தான்.

பிரெஞ்சு அரசு லிபியாவிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்களுக்கு ஏராளமான நிதி, ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்து வந்தது. இதனை பிரஞ்சு அரசு பகிரங்கமாகவே அறிவித்து இருந்தது. அப்போதெல்லாம், லிபியா, சிரியா தீவிரவாதிகளையும், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களையும் ஆதரித்து வந்தவர்கள் பலர்.

அப்படியான கபட வேடதாரிகள், பாரிஸ் பத்திரிகை அலுவக தாக்குதலை கண்டிக்கிறார்களாம். அதாவது, பிரெஞ்சு அரசு ஆதரித்த அதே பயங்கரவாதிகள், பிரான்ஸில் தாக்குதல் நடத்தினால் மட்டும் விழித்தெழுந்து, குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைப்பார்கள். தங்களது தகிடுதத்தங்களை, அயோக்கியத்தனத்தை மக்கள் அறிய மாட்டார்கள் என்ற தைரியத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக வீராவேச உரையாற்றுகின்றார்கள்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை விதைத்தவன், தனது நாட்டிலும் அதே பயங்கரவாதத்தை அறுவடை செய்வான். அது பிரெஞ்சு அரசுக்கு நன்றாகப் பொருந்தும்.

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்குப் பின்னர், ஐயோ... பயங்கரவாதம் என்று அலறுபவர்கள், அந்த நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக, பிரான்சில் தான் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நாடுகளில் பிரான்சும் ஒன்று.

எங்கேயாவது வேலை வாய்ப்பு தென்பட்டால், அதனை பூர்வீக வெள்ளையின பிரெஞ்சு மக்களுக்கே முதலில் கொடுப்பார்கள். இதனால், பன்னாட்டுக் குடியேறிகளின் சமூகங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, ஐந்து மில்லியன் இஸ்லாமிய அல்ஜீரியர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். ஏழைகள், வேலையில்லாதோர் எண்ணிக்கை, அந்த சமூகத்தில் அதிகம்.

இந்த உண்மைகளை ஏற்க மறுப்போர், பாரிஸ், மார்செய் புறநகர்ப் பகுதிகளை சென்று பார்வையிட வேண்டும். அவை இன்று மும்பை சேரிகள் போன்று மாறிக் கொண்டிருக்கின்றன. ஏழைகள் மத்தியில் இருந்து தான் திருடர்கள் தோன்றுவார்கள். அது உலக நியதி. ஒரு சில அல்ஜீரியர்கள் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிப் பரம்பரை ஆக்குவது இனவாத உள்நோக்கம் கொண்டது.

சாதாரண வழிப்பறித் திருடர்களை குறைகூறும் பலர், கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? பிரெஞ்சு அரசாங்கத்தில் ஊழல் வாதிகள் மலிந்து போயிருப்பதை, பிரெஞ்சு ஊடகங்களே வெளிப்படுத்தி உள்ளன. இலங்கை மாதிரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதிகள் பலர் அடித்த கொள்ளை ஊரறிந்த இரகசியம்.

காலஞ் சென்ற பிரான்சுவா மித்தரோன் அடித்த கொள்ளை எவ்வளவு? அவருக்கு பின்னர் வந்த ஜாக் சிராக், சார்கோசி தமது பதவிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்த கதைகள் அனைவருக்கும் தெரியும். இனவாதி லெ பென்னுக்கு எதிராக, ஜாக் சிராக் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நேரம், "இனவாதியை தோற்கடிப்பதற்கு, ஒரு திருடனை தேர்ந்தெடுப்போம்" என்று பிரெஞ்சு மக்கள் பகிரங்கமாகவே பேசிக் கொண்டனர். ஏன் இன்று அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

ஏனென்றால், இங்கே பயங்கரவாதத்திற்கு எதிராக கொடி பிடிக்கும் அநேகமானோர் கபட வேடதாரிகள். நேர்மையற்ற அயோக்கியர்கள்.

Nous sommes hypocrites! We are hypocrites!


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:
பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்

Thursday, January 08, 2015

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்





பிரான்சில், பாரிஸ் நகரின் மையப் பகுதியில் உள்ள, சார்லி எப்டோ பத்திரிகை காரியாலயம், மூன்று தீவிரவாதிகளினால் தாக்கப் பட்டது. நடந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இன்றி, எழுந்தமானமாக கருத்துக் கூறுவது, சமூகத்தில் பல எதிர்விளைவுகளை உண்டாக்கும்.

முகமூடி அணிந்த மூன்று ஆயுதபாணிகள், ரைபிள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்து, பத்திரிகை ஆசிரியரையும், மூன்று கார்ட்டூன் ஓவியர்கள், மற்றும் சில ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அத்துடன், வெளியே காவலுக்கு நின்ற இரண்டு பொலிஸ்காரர்களையும் பக்கத்தில் சென்று தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே அந்தப் பத்திரிகை இஸ்லாமிய விரோத கார்ட்டூன் படங்களை பிரசுரித்து வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப் பட்டது. அதனால் பொலிஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. அதனால், கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், அல்லது அல்கைதா போன்ற இயக்கத்தினர் செய்திருக்கலாம் என பொதுவாக சந்தேகிக்கப் படுகின்றது.

ஆயினும், தாக்குதல் நடைபெற்ற முறையைப் பார்க்கும் பொழுது பல கேள்விகள் எழுகின்றன. அது ஒரு கமாண்டோ பாணியிலான தாக்குதல். நன்கு பயிற்சி பெற்ற ஆயுதபாணிகள், அமைதியாக பதற்றப் படாமல் கொலைகளை செய்துள்ளனர். பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் மட்டத்திலான ஊழியர்களின் கூட்டம் நடைபெறுகின்றது என்ற துல்லியமான தகவல் தெரிந்திருக்கிறது. அந்த இலக்கை நோக்கி சென்று கொலைகளை செய்தவுடன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வெளியேறி உள்ளனர்.

கொலையாளிகள் நன்றாக பயிற்சி அளிக்கப் பட்ட இராணுவ வீரர்கள் போன்று செயற்பட்டுள்ளனர். ரைபிள் துப்பாக்கிகளை கையாண்ட விதம், இலக்கை மட்டும் குறி வைத்து தாக்கியுள்ளமை, காரியமே கண்ணாக எந்தப் பதற்றமும் இன்றி அமைதியாக நடந்து கொண்டமை, இவை எல்லாம் சாதாரண தீவிரவாதிகளின் செயற்பாடுகளாக தெரியவில்லை.

Charlie Hebdo பத்திரிகை மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதன் அர்த்தம், சார்லி எப்டோ வின் இனவாத கார்ட்டூன்களை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல. 

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், ஒரு மதத்திற்கு, சமூகத்திற்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்திய கார்ட்டூன்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பத்திரிகையின் சமூகப் பொறுப்பற்ற தன்மையை அலட்சியப் படுத்த முடியாது.

இலங்கையில் சிங்களப் பத்திரிகைகள், பல தடவைகள் தமிழர்களை மோசமாக சித்தரித்து கார்டூன்களை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றை நாங்கள் இனவாதம் என்றே ஒதுக்கி வந்துள்ளோம். சிங்களப் பத்திரிகையாக இருந்தாலும், பிரெஞ்சுப் பத்திரிகையாக இருந்தாலும், இனவாதக் கார்ட்டூன்கள் பிரசுரிப்பதை கருத்துச் சுதந்திரத்திற்குள் அடக்க முடியாது.

மூன்று வருடங்களுக்கு முன்னர், சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஒருவர், ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் பலர் கிளர்ந்தெழுந்தனர். ஜெயலலிதாவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப் பத்திரகையின் கார்ட்டூன் இனவாதம் என்றால், சார்லி எப்டோ பத்திரிகை முகமதுவை ஆபாசமாக சித்தரித்து, பல கார்ட்டூன் படங்களை வெளியிட்டதும் இனவாதம் தான்.

வெறுமனே மதத் துவேஷம் மட்டுமல்ல, இனத் துவேஷமும் அந்தக் கார்ட்டூன்களுக்கு பின்னால் மறைந்திருந்தன. ஐரோப்பாவில் எந்த நாட்டிலும், யூத மதத்தவரை புண்படுத்தும் கார்ட்டூன்கள் வெளியிட முடியாது. அது சட்டப் படி தடை செய்யப் பட்டுள்ளது.

Charlie Hebdo பத்திரிகை, ஏற்கனவே சில நிறவெறிக் கார்ட்டூன்களையும் பிரசுரித்திருந்தது. பிரான்ஸ் நாட்டில் நீதி அமைச்சராக இருக்கும் கருப்பின பெண்மணியை குரங்கு மாதிரி வரைந்திருந்தது. சார்லி எப்டோ என்ற ஊடகம் மீதான தாக்குதலுக்கு எதிராக, தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்த, ஐரோப்பிய மக்களின் தார்மீக கோபம், நியாயமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளை இஸ்லாமியருக்கு எதிரான துவேஷமாக திசைதிருப்பி விடும் வேலைகள் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்றன.

அது மத்திய கிழக்கில் வல்லாதிக்கப் போர்களுக்கு ஆதரவு திரட்டுவதாகவும் அமையக் கூடும். சிலநேரம், உள்நாட்டில் இனக் கலவரங்களை தூண்டி விடவும் உதவக் கூடும். இஸ்லாமிய வெறுப்புணர்வு "முஸ்லிம்களுக்கு மட்டுமே" எதிரானதல்ல. அது பிற மதங்களை பின்பற்றும் குடியேறிகள், அகதிகள் அனைவருக்கும் எதிரானது.

ஆகவே, ஊடகங்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டிப்போம். பாரிஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். அதற்கும் அப்பால், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையின் கீழ், இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்.

ஆகையினால்... எல்லோரும் சார்லி எப்டோவுக்கு பின்னால் அணிதிரளவில்லை என்பதை அறியத் தருவோம்.

#‎JeNeSuisPasCharlie‬

பாரிசில், Charlie Hebdo பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் பலியான 12 பேரில், காவல் கடமையில் இருந்த அஹ்மட் என்ற முஸ்லிம் பொலிஸ்காரரும் ஒருவர் என்பதையும் மறந்து விடக் கூடாது.

Wednesday, January 07, 2015

தேர்தல்கள் : தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒன்று பேய், மற்றது பிசாசு. தமிழ் வாக்காளர்கள், இந்த இரண்டில் ஒன்றுக்கு மட்டும் தான் ஒட்டுப் போடுவார்கள் என்றால், அது அவர்களது அரசியல் பாமரத்தனத்தையும் காட்டுகின்றது.

இந்தத் தேர்தல்களினால் எந்த மாற்றமும் வந்து விடாது. அவை எல்லாம், மக்களை ஏமாற்றுவதற்கான நாடகங்கள். தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் மக்களும் அந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் அர்த்தம் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதல்ல.

மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்ட, உண்மையான மாற்றத்தை கொண்டு வரக் கூடிய ஒருவரை ஆதரிக்க வேண்டும். அது பேய், பிசாசு இரண்டில் ஒன்றல்ல. மூன்றாவதாக ஒரு அரசியல் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இங்கே முக்கியமானது, அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதல்ல. மக்களுக்கு என்ன செய்வார் என்பது தான் முக்கியம்.

எத்தனை தேர்தல் வந்தாலும், நாங்கள் பேய், பிசாசுகளை தான் தேர்ந்தெடுப்போம் என்பது விவேகமானது அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ், பொலிவியாவில் ஏவோ மொராலேஸ்... இவர்கள் எல்லாம் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்? அதற்கு முன்னர், அந்த நாடுகளிலும் பல தசாப்த காலமாக, பேய், பிசாசுகள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட்டு வந்தன.

வெனிசுவேலா, பொலிவியா மக்களுக்கு இருக்கும் அரசியல் விழிப்புணர்வில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இலங்கையில் இல்லை. சிங்களவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல, "யூதர்களுக்கு அடுத்த புத்திசாலிகளான" தமிழர்களிடமே இல்லை. அதற்காக நாங்கள் வெட்கப்பட வேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்தால், இன்னும் நூறாண்டுகள் போனாலும் இலங்கையில் எந்த மாற்றமும் வராது.

இலங்கையில் அமையப் போகும் மைத்திரி அரசாங்கத்தில், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு "அடக்கமாக" தெரிவித்துள்ளது. ஆனால், "அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் அங்கம் வகிப்பார்கள்" என்று த.தே.கூ. சார்பாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடைசியில், தாங்களும் "இணக்க அரசியல்" செய்பவர்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.

எதிர்ப்பு அரசியல் என்பது, ஆளும் கட்சிக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சி அரசியல் அல்ல. அது நடைமுறையில் உள்ள அரசு கட்டமைப்பை மாற்றும் புரட்சிகர அரசியல். முதலாளிய ஆதரவு வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகளுக்கும், எதிர்ப்பு அரசியலுக்கும் வெகு தூரம்.

கடந்த முப்பது வருடங்களாக, ஈழப்போர் நடந்த காலங்களிலும், இலங்கையில் பொதுத் தேர்தல்கள் நடந்தன. அப்போதும் "தமிழீழ மக்கள்", சிங்கள தேசம் நடத்தும் தேர்தல்களில் ஓட்டுப் போட்டு "ஆட்சி மாற்றத்தை" கொண்டு வர நினைத்தார்கள்.

போருக்கு நடுவில் மக்களுக்கு "மூச்சு விட அவகாசம்" கொடுக்க வேண்டும் என்பதை புலிகளும் உணர்ந்து கொண்டு, தேர்தல் நடக்கும் காலங்களில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சம்மதிப்பார்கள். தெற்கில் நடக்கும் "ஆட்சி மாற்றத்தால்", புதிதாக பொறுப்பேற்கும் கட்சி அல்லது ஜனாதிபதி தமக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருவார்கள் என்று தமிழ் மக்கள் நம்புவார்கள். கூடவே, போர் நிறுத்தம் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

அந்த தருணத்தில் புலிகள் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள்: "தமிழீழ மக்களே, சிங்கள தேசம் நடத்தும் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடரும். ஆகவே, எங்களது இறுதி இலட்சியமான தமிழீழத்திற்காக தொடர்ந்தும் போராடுவோம்..." 

புலிகளின் அறிக்கைக்கு பின்னர் மக்கள் பலவிதமாக எதிர்வினையாற்றுவார்கள். "போர்நிறுத்த நிலைமை இப்படியே இருக்குமென்று நினைத்தால்... உவங்கள் திரும்பவும் சண்டைக்குப் போகப் போறாங்கள் போலக் கிடக்கு..." என்று புலிகளை விமர்சித்த மக்களும் இருந்தார்கள்.

பொதுவாகவே மக்கள் எப்போதும் தற்காலிக தீர்வை பெரிதென நினைப்பது வழமை. ஆனால், புலிகளைப் போன்று ஒரு குறிக்கோளுடன் போராடும் இயக்கம், சாதாரண மக்களை மாதிரி நடந்து கொள்ள முடியாது. அதனால் தான், தேர்தல்களில் ஒட்டுப் போடுவதற்கு மக்களை அனுமதித்தாலும், அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்கள். தேர்தல்கள், ஆட்சி மாற்றங்கள் எந்தத் தீர்வையும் கொண்டு வராது என்று தங்கள் நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தார்கள்.

மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு இயங்கும் சமதர்மவாதிகளும் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் அபிலாஷைகளுக்கும் மதிப்புக் கொடுத்து, தேர்தலில் எதிரணி வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர ஊக்குவிக்க வேண்டும்.

இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் போன்றோர், புலிகளை மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். "எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டு, உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினாலும், எமது இறுதி இலட்சியம் சோஷலிசம் என்பதை மறந்து விடாதீர்கள் மக்களே!" என்று புலிகளின் பாணியில் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


Monday, January 05, 2015

தேசியவாதம் சோறு போடாது! "பிரதிநிதித்துவம்" ஒரு முதலாளித்துவ கொள்கை!!


தேசியவாதம் சோறு போடாது. தெரிஞ்சுக்கோங்க மக்களே!

1991 ம் ஆண்டு, பல்லாயிரம் மக்களை பலி கொண்ட தேசிய இன விடுதலைப் போரின் பின்னர், யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்து சென்று தனி நாடான குரோவாசியாவின் இன்றைய நிலைமை இது. குரோவாசியா மக்கள், இன்று தேசியவாதத்தை குப்பைத் தொட்டிக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னர் தேசியவாதம் பேசிய நடுத்தரவர்க்கத்தினர் மட்டும், இன்றைக்கு பணக்காரர்களாக தங்களது குடும்ப நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூகோஸ்லேவியா முன்னர் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பிரஜைகள் எல்லோருக்கும் போதுமான உணவு, வசிக்க வீடு, நல்ல வருமானம் தரும் வேலைவாய்ப்பு எல்லாம் தாராளமாக கிடைத்து வந்தன. அது வேண்டாம் என்று சொல்லித் தான், குரோவாசிய தேசியவாதிகள் போரிட்டு தனி நாடாக பிரிந்து சென்றார்கள்.

சோஷலிசம், இடதுசாரியம் மக்களுக்கு சோறு போடுவதாக கூறிக் கொள்கிறது. ஆனால், தேசியவாதம் வெறும் பாசாங்குக்காக கூட அப்படி எதுவும் சொல்வதில்லை. குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தக் கருத்தும் இருக்காது. தூய தேசியவாதம் மட்டும் பேசி, தனி நாடாக பிரிந்து சென்ற எல்லா நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆகவே, குறைந்த பட்சம் சோஷலிசம், இடதுசாரியம் பேசாத எந்தவொரு தேசியவாதியையும் நம்பாதீர்கள் மக்களே!

மீண்டும் மீண்டும் ஓர் உண்மையை, இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. "தமிழ் அல்லது சிங்கள தேசியவாதிகள், புலி ஆதரவாளர்கள் அல்லது எதிர்ப்பாளர்கள், ராஜபக்ச ஆதரவாளர்கள் அல்லது எதிப்பாளர்கள், இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதவாதிகள்..." இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளி ஒன்றுள்ளது. அது தான் கம்யூனிசத்தின் மேலான வெறுப்புணர்வு.

இதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சமூக வலைத் தளங்களில், கம்யூனிசத்தை எதிர்த்து விவாதிப்பவர்களின் அரசியல் பின்னணியை தெரிந்து கொண்டாலே போதும். தமது வழமையான கொள்கை வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, வரிந்து கட்டிக் கொண்டு கம்யூனிசத்தை எதிர்த்துப் பேச வந்து விடுவார்கள். தாங்கள் இப்படி ஓரணியில் சேர்ந்து நின்றால், மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோமே என்ற எந்தப் பயமும் அவர்களிடம் கிடையாது.

கம்யூனிச வெறுப்பு என்பது, அவர்களது மத்தியதர வர்க்க குணாம்சம். பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடக்கி வைத்திருப்பதற்காகவும், அவர்களிடம் சுரண்டும் பணத்தில் சொகுசான வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதற்காகவும் முதலாளிய வர்க்கத்தை ஆதரிக்கிறார்கள். மக்களுக்கு இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, வர்ண மயமான முகமூடிகளை அணிந்து கொள்கிறார். 

ஒருவர் புலி ஆதரவாளராம்... மற்றவர் ராஜபக்சே ஆதரவாளராம்... இன்னொருவர் இஸ்லாமிய மதப் பற்றாளராம்.... மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்? இப்படி ஆளுக்காள் தங்களுக்கு வாய்த்த முகமூடியை அணிந்து கொண்டாலும், அவர்களின் அடி மனதில் இருக்கும், உழைக்கும் மக்களுக்கு எதிரான துவேஷம் மட்டும் மாறுவதில்லை. அவர்கள் தமக்குள் முரண்பட்டு பிரிந்து நிற்பதாக காட்டிக் கொண்டாலும், கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

உலகம் முழுவதும், கடந்த நூறாண்டு காலமாக இது தான் நடந்து கொண்டிருக்கிறது. 19 ம் நூற்றாண்டில், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, பிரான்சும், ஜெர்மனியும், பாரிஸ் கம்யூனை அழிப்பதற்காக ஒன்று சேர்ந்தன. 20 ம் நூற்றாண்டில், ரஷ்யாவில் தோன்றிய போல்ஷெவிக் புரட்சியை நசுக்குவதற்காக, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தமது பகைமையை மறந்து கூட்டுச் சேர்ந்தன. உலகில் உள்ள "முஸ்லிம் நாடுகளில்" எல்லாம், மக்கள் சோஷலிசத்தை ஆதரித்த காலங்களில், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இப்படிப் பல உதாரணங்களை, வரலாறு நமக்குப் படிப்பினையாக விட்டுச் சென்றுள்ளது.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். தாம் தமிழ் மக்களுக்கு மேலே இருப்பதாக கருதிக் கொள்பவர்கள், "ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தின் பிரதிநிதிகள்" என்று கூறிக் கொள்கிறார்கள். அப்படி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பார்த்தால், அந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வரும்.

குறைந்த பட்ச ஜனநாயகத்தில் கூட, மக்கள் எல்லோரும் சமமானவர்களாக கருதப் பட வேண்டும். ஆனால், யதார்த்தம் அதற்கு முரணாக உள்ளது. ஒரு சிலர், தாங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட, ஒரு தனித்துவமான வர்க்கமாக கருதிக் கொள்கிறார்கள். தங்களால் மட்டுமே எல்லாம் முடியும் என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்.

"மக்களின் பிரதிநிதிகள்" என்பது முதலாளித்துவ அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கை. மக்களுக்கு அரசியல் தெரியாது. எல்லோரும் அரசியலில் பங்கெடுக்க முடியாது. அதற்காக அரசியல் பயிற்சி பெற்ற சில பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இப்படி சொல்லிச் சொல்லியே, மக்களை அரசியல் தெரியாத ஞானசூனியங்களாக வைத்திருக்கிறார்கள். மக்களை ஆட்டு மந்தைகளாக மேய்ப்பது தான் ஒரு சிலரின் நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்புக் கொடுக்கப் படும். இந்த "பிரதிநிதி அரசியல்" படித்த மத்தியதர வர்க்கத்திற்கு சாதகமானது. அவர்கள் மக்களின் பெயரில் தங்களது வர்க்கத்தின் நலன்களுக்கான அரசியலை நடத்த முடிகின்றது.

இதைத் தான் நாங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் என்று சொல்கிறோம். முதலாளித்துவ அறிவுஜீவிகள் அதனை "பிரதிநிதித்துவ ஜனநாயகம்" என்று கூறிக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக, மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் ஜனநாயகத்தை தோற்றுவிப்பது எமது கடமை ஆகும். மக்களுக்கு பிரதிநிதிகள் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு முறை வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.