Showing posts with label மீனவர்கள். Show all posts
Showing posts with label மீனவர்கள். Show all posts

Thursday, February 17, 2011

தமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை

[இந்திய மீனவர் பிரச்சினையும், தமிழ் குறுந்தேசிய வெறியும்] (பகுதி -2)
- மணலை மைந்தன் -

வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை

வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.

வடபகுதின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல வலைபடுத்தலேயாகும். இவ் வலைகளின் கண் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக யந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீட்டர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீட்டர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தனர். கண்ணாடி இழைப்படகுகளில் தொழில் செய்தோர் 5 இன்ச் கண்விட்டத்திலிருந்து 8 இன்ச் கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாக செய்யப்பட்டது.

இவ்வாறு ஓப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடி, 83 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்தக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உள்கட்டுமானமும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில், புலிகள் மக்களை யாழிலிருந்து வன்னிக்கு அனுப்பியபோது முற்றாக அழிக்கப்பட்டது. மன்னாரின் நிலையும் அதேபோன்று பழுதுபாற்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.

இன்று வடக்கின் மீன்பிடித் திறனானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும், 1800 மரவள்ளங்களையும், 120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக்கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் றோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.


தமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வையும் சில தரவுகளும்

தமிழ்நாட்டின் மீன்பிடி உள்நாட்டு உணவுக்காகவே பயன்தரும் வளமாக பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித்திட்டத்தின்படி சர்வதேசதரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில் நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன் அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப்படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளை பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான பொறிமுறையை பாவிப்பதனால், உற்பத்தித்திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 இல் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித்திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்தியா அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18131.4 மில்லியன்)இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடியானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.

ஆனால் மீன்பிடியால் பெறப்படும் செல்வம் எதுவும் யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் அரசதிட்டத்தில் கூறப்பட்டதோ அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள் இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும்பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமேயாகும். அரச மீன்பிடித்திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச யந்திரத்தின் லஞ்ச லாவண்யக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானதெனலாம்.

மேலும் நோர்வே அரசினால் ரோலர் இழுவைப்படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்திய போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கு பாரம்பரிய மீனவர்கள் வாழ்க்கை பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியை தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு துணைபோன நோர்வே அரசு, தமது கேரள அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆய்வுசெய்து, அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கைவள அழிவுக்கும் வழிவகுத்ததென ஐக்கியநாடு சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்ட தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ஒருநாட்டில் அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்ளக்கூடாதென்பதற்கு உதாரணமாகவுள்ளது.

ஆனால் இதை ஒன்றும் கணக்கில் எடுக்காது இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் கேரளாவில், சமூகப் பாதிப்பையும், இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி ஒருசில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தியதின் விளைவு, பஞ்சத்திலும் அடுத்தவர்க்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமைமிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரபடகுகளில் நாட்கூலிகளாக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் இந்தியக் கரையோர பிரதேசங்கள் பற்றி பார்ப்போமாகில் மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடி தளமேடையில் நாகப்பட்டினம் வடக்கிலிருந்து ராமேஸ்வரம் தெற்கு வரையாக கிட்டத்தட்ட 480 கீலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரையோர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 சதவீதமாகும்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1465 றோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 றோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1865 றோலர்களில் 980 றோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றனர்), அதவாது மொத்தமாக 3780 இந்திய றோலர்கள் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இத்தகவல் 2002 ஆம் ஆண்டை சேர்ந்தது. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதி கொம்பனிகளுக்கும் சொந்தமானதாகும்.

இதைவிட இப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12500 மரவள்ளங்களும், 19500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளை பாவித்து மீன்பிடிக்கின்றனர்.


(தொடரும்)

இந்திய மீனவர் பிரச்சினையும், தமிழ் குறுந்தேசிய வெறியும்

மீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து!

இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!!

இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.

இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.

யுத்தம் முடிந்து இருவருடங்களாகும் இன்றைய நிலையில், இலங்கை தமிழ் மீனவர்களின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கிழக்கு மற்றும் தென் தமிழ் கரையோர பிரதேசக் கடல்வளம் சர்வதேச மீன்பிடிக் குத்தகைக்காரர்களான சீனர்கள், ஜப்பானியர்களாலும், உள்ளுர் அரசுசார் கிரிமினல்களாலும் சுரண்டப்படுகிறது. யுத்தத்தாலும், சுனாமியாலும், இயற்கை அனர்த்தங்களாலும் மீன்பிடிசார் சமூகம் பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பாரியளவில் இனவழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் சமூகம், இன்று இந்திய இழுவைப்படகுகளின் நாசகார மீன்பிடிமுறையால் சூறையாடப்படுகின்றனர். தேசத்தின் மீன்வளத்தை அத்துமீறி திருடுவது மட்டுமல்லாமல், மீன்வள வளர்ச்சிக்கு ஆதாரமான கடலடித்தள வளங்களையும் இந்திய இழுவைப்படகுகள் நாசப்படுத்துகின்றது. இதைத் தட்டிக் கேட்பாரின்றி நியாயப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் ஏதிலிகளாக, யுத்தத்தின் பின்னும், இலங்கை அரசின் கொடும் முகாம்களிலிருந்து ஊர் திரும்பிய மீனவர் சமுதாயம் சிறுகச் சிறுக முதலிட்டு உருவாக்கிய மீன்பிடி உபகரணங்களையும், வலைகளையும் கூட கடற்கொள்ளையர்கள் அழித்தொழிக்கின்றனர். இவர்கள் தமிழக மீனவர்கள் போர்வையில், கடல் கொள்ளையில் ஈடுபடும் மூலதனமாகும்.

உலக அளவில் ஐந்தாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்ட இந்த இந்திய இழுவைப்படகுகள், தமது எல்லைக்குட்பட்ட கரையோர வளங்களை அழித்தது. இதன் மூலம் தன்சொந்த கரையோர சிறு மீன்பிடித் தொழிலாளர்களை பட்டினியாக்கி விட்டு, இன்று துளிர்க்க முயலும் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கின்றது.

இந்நிலைக்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தமிழ் சமூகமும், இடதுசாரி இந்திய தோழர்களும், இந்நிலையை தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான இன முரண்பாடாக சித்தரித்துக் காட்ட முயல்கின்றனர். இதன் அடிப்படையில், இலங்கை மீனவர்களை பலியிட்டு குறுகிய இனமுரண்பாட்டை மேலும் கூர்மையடையச் செய்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இலங்கை இராணுவம் இந்திய மீனவர்களை கொல்கின்றதென்பதாகும். கொலைகள் நிறுத்தப்படவேண்டுமென்பதில் எமக்கு எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதில் முரண்பாடும் இல்லை. அதே வேளை இலங்கை இராணுவம், இனவெறி இராணுவம் என்பதிலும் முரண்பாடில்லை.

ஆனால் கொலைகளின் மறுபுறத்தில் இழுவைப் படகுகளால் நடாத்தப்படும் நாசகார மீன்பிடியும், அதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர் வாழ் நிலையையும், இக் கொலைகளைக் காட்டியே மூடி மறைக்கின்றனர். இந்திய அரசும், இந்தியாவை ஆளும் கட்சிகளும் இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாதக் கொள்கைக்கு ஏற்ப பயன்படுத்துவதும், இதன் பின்னணியில் தான் அரங்கேறுகின்றது.

இதன் அடிப்படையில் நாம் :

இலங்கை அரசே!
1. இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணம் மூலம் மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் (இந்திய வள்ளம் உள்பட) வள்ளங்களை முடக்கு!!
2. அதன் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடு!!
3. கூலிக்கு வந்தவர்களை உடன் விடுதலை செய்!!!
4. பிராந்திய மீன்பிடி மேலாதிக்கம் செலுத்தும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்கப்ப்பட்ட மீன்பிடி அனுமதியை உடனே நிறுத்து!!!
5. கிழக்கு மற்றும் தென் இலங்கை மீன்பிடியை புனருத்தாரணம் செய்!!
6. இறந்த தமிழக மீனவர்களுக்கும், இந்தியாவில் அத்துமீறி அழிந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நஷ்டஈடு வழங்கு!!

இந்திய அரசே!
1. பாக்குநீரிணையில் இழுவைப்படகு மீன்பிடியை உடனே தடை செய்!!
2. இலங்கை தமிழ் மீனவர்களுக்கு அவர்களின் அழிந்து போன மீன்பிடி உபகரணங்களுகான நஷ்டஈடு வழங்கு!!
இலங்கை அரசே! இந்திய அரசே!!
1. மீனவர் கொலையை சர்வதேச மட்டத்தில் ஆராய ஆவன செய்!!!
2. பாக்குநீரிணையின் இருகரையிலும் கரையோர மீன்பிடியை அபிவிருத்தி செய்!! அதை பாதுகாக்கும் மீன்பிடிக் கொள்கையை வை!!!
3. இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(துண்டுப்பிரசுரம் 16.02.2011)

http://www.ndpfront.com
http://www.tamilarangam.net
http://www.ndpfront.net
http://www.tamilcircle.net
http://kalaiy.blogspot.com/