Showing posts with label பிரேசில். Show all posts
Showing posts with label பிரேசில். Show all posts

Friday, May 20, 2011

அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்

["இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா", தொடர் - 3]
(பிரேசில், பகுதி: இரண்டு)

பிரேசிலில், அடிமைத்தளைகளை அறுத்தெறிந்த கறுப்பின அடிமைகள், ஒரு சுதந்திர தேசத்தை நிர்மாணித்திருந்தனர். தென் அமெரிக்காவில், அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள். அமெரிக்க கண்டத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் காலந்தோறும் கட்டுண்டு கிடந்ததாக கருதுவது தவறு. வெள்ளையின கனவான்களின் பெருந்தன்மையே அடிமைத் தளையை தகர்த்தாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது. விடுதலைக்காக இரத்தம் சிந்திய போராட்டம் நடத்திய கறுப்பின அடிமைகளைப் பற்றிய ஆவணங்கள் குறைவு. அதனால் ஆயுதமேந்திய அடிமைகளின் எழுச்சி குறித்து அறிந்தவர்கள் குறைவு. தென் அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் போராடி, தமக்கென சுய நிர்ணய உரிமை கொண்ட தனி நாடு அமைத்துக் கொண்டனர். Palmares என்று அழைக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் தேசம், ஒன்றிரண்டு வருடங்களல்ல சுமார் 90 ஆண்டுகளாக (1605 - 1694) தனது சுதந்திரத்தை நிலை நாட்டியது. பிரேசிலின் வட கிழக்கு கரையோரம் உள்ள Alagoas மாநிலத்தில் அந்த நாடு (Palmares) அமைந்திருந்தது. அண்ணளவாக போர்த்துக்கல் அளவு நிலப்பரப்பு, ஒரு கறுப்பின ராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிறப்பு பயிற்சி பெற்ற கறுப்பினப் படையணிகள் காலனியாதிக்கவாதிகளுக்கு சவாலாக விளங்கின.
பிரேசிலில் அடிமை வியாபாரிகளும், கரும்பு ஆலை அதிபர்களும், அனைத்து ஆப்பிரிக்கர்களையும் கால்நடைகளாக கருதிய காலமது. அங்கோலாவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு வந்த அடிமைகளில் பலர், நாகரீகமடைந்த "இம்பன்களா" வகுப்பை சேர்ந்தவர்கள், என்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இம்பங்களா என்பது இந்தியாவில் ஷத்திரிய குலத்திற்கு ஒப்பானது. அங்கோலா ராஜதானியை ஸ்தாபித்த பெருமைக்குரியவர்கள். காலம் செய்த கோலம். போர்த்துக்கேயரின் சூழ்ச்சிக்கு இரையாகி இராஜ்ஜியத்தை இழந்தார்கள். அடிமைகளாக பிரேசில் கொண்டு செல்லப்பட்டார்கள். சொந்த நாட்டில் வீர புருஷர்களாக வலம் வந்தவர்கள், கடல் கடந்த தேசத்தில் அடிமை உழைப்பாளிகளானார்கள். கரும்பு ஆலை அதிபர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள். டச்சு- போர்த்துக்கல் யுத்தம் அதற்கு வழி சமைத்துக் கொடுத்தது.

கரும்புத் தோட்டங்களில் நிலவிய கடுமையான தண்டனைகள், அடிமைகளை பயமுறுத்தி பணிய வைக்கவில்லை. மாறாக கொடுமை கண்டு கொதித்தெழுந்த அடிமைகள் ஆலை முதலாளியையும், வெள்ளையின காவலர்களையும் கொலை செய்து விட்டு தப்பியோடினார்கள். நிச்சயமாக, முன்னாள் இம்பங்களா வீரர்களின் போர்க்குணாம்சம் கிளர்ச்சியை தூண்டிய காரணியாக இருந்தது. இருப்பினும் கலகம் செய்யும் அடிமைகளுக்கு தப்பிச் செல்ல ஒரு புகலிடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்க அம்சம். அந்தப் புகலிடங்கள் "கிளம்போஸ்" (Quilombos ) என அழைக்கப்பட்டன. மலைகளும், காடுகளும் இயற்கையான தடுப்பரண்களாக இருந்தன. கரும்புத் தோட்ட காவலர்கள் தப்பிச் சென்ற அடிமைகளை பிடிக்க முடியாதவாறு அவை பாதுகாத்தன. சிறிது காலம் செல்ல கிளம்போஸ் குடியேற்றங்கள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு மன்னரால் நிர்வகிக்கப்பட்டன. தமக்கு தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொண்டனர். ஆயுதங்களுக்காக கரும்பாலை முதலாளிகளின் வீடுகளை தாக்கினார்கள்.

ஆரம்ப காலத்தில் தப்பியோடிய அடிமைகள் ஆண்களாக இருந்தனர். இதனால் பெருந்தோட்டங்களில் கட்டுண்டு கிடந்த பெண் அடிமைகளை விடுதலை செய்தனர். புதிய தேசத்தில் குடும்பங்களும், கிராமங்களும் உருவாகின. இருப்பினும் சனத்தொகையில் குறைந்தளவு பெண்கள் இருந்ததால், பாண்டவர்களைப் போல ஒரு பெண்ணை பல ஆண்கள் மணந்து கொண்டனர். பல்மாரஸ் தேசத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்த முன்னாள் அடிமைகள், கரும்பாலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பல காரணங்கள் இருந்தன. ஒன்று, அடிமைகளின் எஜமானர்களான ஆலை முதலாளிகளை பழி வாங்குவது. இரண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை அபகரிப்பது. மூன்று, பிற அடிமைகளை விடுதலை செய்து தம்மோடு கூட்டிச் செல்வது. இதன் மூலம் சுதந்திர கறுப்பின தேசத்தின் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அந்த நாடு, முப்பதாயிரம் குடிமக்களை கொண்டிருந்தது. அவர்களில் பலர் சுதந்திர தேசத்தில் பிறந்த பிள்ளைகள்.

பல்மாரஸ் குடிமக்கள், வெள்ளையின காலனியாதிக்கவாதிகளின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை. போராட்டமே வாழ்க்கை என்றாகி விட்டதால், அதற்கேற்ற கலைகளும் தோன்றின. கப்புஈரா (Capoeira) என்ற தற்காப்பு நடனம் அந்தக் காலத்தில் தோன்றியது. பார்ப்பவர்களுக்கு கராத்தே சண்டை போலவும், அதே நேரம் நடனம் போலவும் தோன்றும். அது தான் அந்தக் கலையின் சிறப்பம்சம். காலனியாதிக்கவாதிகள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கவில்லை. சுதந்திர அடிமைகளின் தேசத்தை கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்கள். ஆயினும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவின. பல்மாரஸ் மக்கள் பொறிகளை, அகழிகளை அமைத்து தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். முடியாத பட்சத்தில் தமது வயல்களை தாமே அழித்து விட்டு காடுகளுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

இறுதியில் போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகளுக்கு கைகொடுக்க வந்தார்கள் Bandeirantes. அதாவது போர்த்துக்கல்லில் இருந்து நாடுகடத்தப்பட்ட கொடிய கிரிமினல்கள். இவர்களின் தாக்குதல்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் பல்மாரஸ் நிலைகுலைந்தது. 1695 ம் ஆண்டு, சுதந்திர கறுப்பின தேசத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதப்பட்டது. மன்னன் Zumbi கொல்லப்பட, குடிமக்கள் மீளவும் அடிமைகளாக்கப்பட்டனர். அந்த தேசத்தில் சுதந்திரமாகப் பிறந்த பிள்ளைகளும் அடிமைத்தளைக்கு தப்பவில்லை. Bandeirantes வீரர்களின் சேவைக்கு நன்றிக்கடனாக ஸௌ பவுலு (Sao Paulo ) நகரில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. பிரேசிலின் பிரதான குடியேற்றமான ஸௌ பவுலுவை பாதுகாப்பதே Bandeirantes வீரர்களின் ஆரம்பகால கடமையாக இருந்தது. பிரேசில் அரசியலில் "பவுலிஸ்ட்டா" க்களின் (ஸௌ பவுலுக் காரர்கள்) ஆதிக்கம் அதிகம். இன்றைக்கும், ஸௌ பவுலுவில் தூய வெள்ளையர்கள் குடியிருப்பதும் அதற்குக் காரணம்.
ஆயிரத்திற்கும் குறையாத வங்கிகள், லட்சக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்ட ஸௌ பவுலு São Paulo நகரம் பிரேசில் தேசிய வருமானத்தில் 40 % த்தை உற்பத்தி செய்கின்றது. மோட்டார் கார், விமானங்களைக் கூட உற்பத்தி செய்யுமளவுக்கு தலை சிறந்த தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரம். ஸௌ பவுலு, பொருளாதார வளர்ச்சிக்கு அங்கே குடியேறிய பெரும்பான்மை ஐரோப்பிய வெள்ளையருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. ஸௌ பவுலு நகரின் மொத்த சனத்தொகையில் 70 % தூய ஐரோப்பிய வெள்ளையர்கள். நிச்சயமாக முதன்முதல் குடியேறியவர்கள் போர்த்துக்கேயர்கள் தான். அவர்களைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் வந்து குடியேறினார்கள். அவர்களைத் தவிர பெருமளவு யூதர்கள், லெபனான் அரேபியர்கள், ஜப்பானியர்கள் ஆகியோரும் 19 ம் நூற்றாண்டிலேயே வந்து குடியேறியுள்ளனர். இன்றைக்கும் ஸௌ பவுலு நகரின் ஒவ்வொரு பகுதியும் பல்லின மக்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கின்றன. "சாந்தோ அமரோ" வட்டாரம் குட்டி ஜெர்மனியாக காட்சியளிக்கின்றது. அதே போல, "ஆர்மேனியா" ஆர்மேனியரின் வட்டாரம், "விலா மரியானா" அரபு வட்டாரம், "பெர்டிசெஸ்" யூத வட்டாரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஸௌ பவுலு நகரிற்கு அருகாமையில் "Holambra" என்றொரு குடியேற்றம் உள்ளது. பெயரில் இருந்தே அது டச்சுக் காரரின் பிரதேசம் என்று ஊகிக்கலாம்.

அனேகமாக அனைத்து ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும் தமது நாட்டில் தீராத வறுமை காரணமாக பிரேசிலுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த சில வருடங்களின் பின்னரும் இந்த புலம்பெயர் படலம் தொடர்ந்தது. தமது ஏழைகள் பொருளீட்டுவதற்காக கடல்கடந்து செல்வதை ஐரோப்பிய அரசுகளும் ஊக்குவித்தன. பிரேசில் அரசு ஐரோப்பிய குடியேறிகளை இருகரம் நீட்டி வரவேற்றது. இன்று ஐரோப்பா வரும் மூன்றாம் உலக குடியேறிகளை நடத்தும் விதமானது, அவர்களது இரட்டை அளவுகோலை எடுத்துக் காட்டுகின்றது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதியாக வந்தாலும் "அதிர்ஷ்டம் தேடி பிழைக்க வந்தவர்கள்" என்று ஐரோப்பிய அரசுகள் ஏளனம் செய்கின்றன. அன்று தமது குடிமக்கள் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்ததை மறந்து விட்டு பேசுகிறார்கள். இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், தொழில்நுட்ப அறிவின் பரவலாக்கம். ஐரோப்பியர்கள் தமது முன்னாள் ஆசிய, ஆப்பிரிக்க காலனிகளுடன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் ஸௌ பவுலு நகரில் குடியேறியவர்கள் தமது வெள்ளை இனத்தவர்கள் என்பதால், விமானம் செய்யும் தொழில் நுட்பத்தைக் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பொத்தாம்பொதுவாக பிரேசிலை வறிய நாடு என்று கூறுவது முறையாகாது. பிரேசிலுக்கு விஜயம் செய்பவர்கள் அங்கு காணப்படும் முரண்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். வளர்ச்சியடைந்த முதலாம் உலகமும், அபிவிருத்தியையே கண்டிராத மூன்றாம் உலகமும் அருகருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, காலனிகளை சுரண்டிய காலம் மாறி விட்டது. இப்பொழுது எஜமானர்களின் வாரிசுகள், அந்தக் காலனிகளிலேயே நிரந்தரமாகக் குடியேறி சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய காலகட்டத்தை பிரேசிலில் தெளிவாக காணலாம். அந்தக் மாற்றம் இடம்பெற்ற பொழுது தான் அடிமை முறையும் ஒழிக்கப்பட்டது. பிரான்ஸ், அமெரிக்காவில் தோன்றிய பூர்ஷுவா புரட்சிக் காற்று பிரேசிலிலும் வீசியது.

ஔரோ பிரேட்டோ (Ouro Preto), 18 ம் நூற்றாண்டில் தங்க வேட்டைக்கு புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. பிரேசில் முழுவதிலும் அந்தப் பிரதேசத்தில் மட்டுமே அதிகளவு தங்கமும், வைரமும், பிற விலைமதிக்க முடியாத ரத்தினக் கற்களும் கிடைத்தன. அங்கே குடியேறிய மக்கள் அனைவரும் தங்கம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். தங்கத்தை சாப்பிட முடியாது என்பதை காலந்தாழ்த்தி புரிந்து கொண்ட பொழுது, நிலைமை கட்டுமீறி சென்று விட்டது. உணவுப்பொருட்கள் யாவும் தங்கத்தை விட பதினைந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. உணவுப் பற்றாக்குறையால் பஞ்சம் தலைவிரித்தாடியது. பை நிறைய தங்கம் இருந்தும் சாப்பிட எதுவுமின்றி பலர் இறந்தார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, போர்த்துக்கேய காலனிய அதிகாரிகள் வரியை உயர்த்தி மக்களை வருத்தினார்கள். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கூட காலனிய ஆட்சியாளருக்கு எதிராக திரண்டனர்.

பிரேசிலை குடியரசாக்கும் இலக்கோடு புரட்சிக்கு தயாரானது ஒரு சிறு குழு. நடுத்தர வர்க்க புத்திஜீவிகளைக் கொண்ட அந்தக் குழுவினர் செயலில் இறங்கும் முன்பே கைது செய்யப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்பு குற்றம் சாட்டப்பட்ட குழவில் இருந்த சிலர் அதிகாரத்தில் இருந்த உறவினர் உதவியால் விடுதலை பெற்றனர். பிறர் தமக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்து தண்டனையில் இருந்து தப்பிவிட்டார்கள். ஒரேயொரு உறுப்பினர் மட்டும், ஜோகிம் ஜோஸ் த சில்வா சாவியர் என்ற பல் வைத்தியர், கொள்கையில் உறுதியாக நின்றார். தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க மறுத்தார். ஆட்சியாளர்கள் அவரது தலையை வெட்டி நகர சதுக்கத்தில் காட்சிக்கு வைத்தார்கள். இந்த ஒரு சம்பவத்தை தவிர பிரேசிலில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டம் எதுவும் நடக்கவில்லை.

1822 தொடக்கம் 1889 வரை பிரேசிலை பேட்ரோ அரசவம்சத்தினால் (Pedro I & II) ஆளப்பட்ட சாம்ராஜ்யமாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் காலனிய எஜமானான போர்த்துக்கல் ஐரோப்பாவில் நெருக்கடியில் சிக்கியிருந்தது. நெப்போலியனின் படையெடுப்புகள் காரணமாக மன்னர் குடும்பம் பிரேசிலுக்கு தப்பியோடியது. அங்கிருந்த படியே பிரேசிலையும், போர்த்துக்கல்லையும் ஆட்சி செய்தனர். ஒரு ஐரோப்பிய நாட்டின் தலை நகரம் லத்தீன் அமெரிக்காவில் அமைந்திருந்தது, உலக வரலாற்றில் அது தான் முதலும் கடைசியுமாகும். 15 நவம்பர் 1889 ல், இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சக்கரவர்த்தியை போர்த்துக்கல்லுக்கு கப்பலேற்றி அனுப்பி விட்டு குடியரசு பிரகடனம் செய்தார்கள். இந்த முறை குடியரசுவாதிகளுக்கு இங்கிலாந்து பக்கபலமாக இருந்தது. பிரேசிலின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை, முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றியதில்
ஆங்கிலேயரின் பங்களிப்பு பிரதானமானது.

நகரங்களில் முதலாளித்துவ பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்ட பொழுதிலும், நாட்டுப்புறங்களில் பெரும் நிலச்சுவாந்தர்களின் ஆதிக்கம் குறையவில்லை. நிலமற்ற விவசாயிகளின் பிரச்சினையும் தீரவில்லை. அடிமை முறை ஒழிப்பில் இருந்து ஆரம்பிப்போம். சுதந்திரம் பெற்ற அடிமைகளில் பலர் வேலை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். எஞ்சிய சிலர் கிராமத்தில் விவசாயம் செய்ய விரும்பினர். ஆனால் அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, முன்னாள் எஜமானிடம் கூலி வேலை செய்வது அல்லது அவனிடமே குத்தகை நிலம் எடுப்பது. இரண்டாவது, வளமற்ற தரிசு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது. சுயாதீனமாக கமம் செய்யும் விவசாயிகளின் நிலங்கள் அதிக விளைச்சலை தருமாயின், அவற்றை பெரிய பண்ணையார்கள் அபகரிக்க பார்ப்பார்கள். அடிமாட்டு விலைக்கு விற்க மறுக்கா விட்டால், குண்டர்களை வைத்து அடித்துப் பறிப்பார்கள். வெள்ளையின சிறு விவசாயிகளின் கதியும் அது தான்.

Movimento dos Trabalhadores Rurais Sem Terra (MST) என்ற நிலமற்ற விவசாயிகளின் அமைப்பு இன்று அரசுக்கு சவாலாக விளங்குகின்றது. எழுபதுகளின் இறுதியில் பிரேசிலின் தென் மாநிலங்களில் தோன்றியது அந்த அமைப்பு. நிலப்பிரபுக்களின் நிலங்களை பறித்து நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றது. உலகில் எந்தவொரு பண்ணையாரும் தனது நிலத்தில் சிறு பகுதியை ஏழை விவசாயிக்கு தானமாக கொடுப்பதில்லை. போராடாமல் எந்த உரிமையும் கிடைப்பதில்லை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள், MST யில் அங்கம் வகிக்கும் ஒன்றைரை மில்லியன் ஏழை விவசாயிகள். இது வரை காலமும் 350 க்கு மேற்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம், நிலமற்ற விவசாயிகள் சிறு துண்டு நிலமாவது சொந்தமாக்கியுள்ளனர். MST நிலப்பறிப்புடன் மட்டும் நிற்காது, நகர்ப்புற இடதுசாரி ஆர்வலர்களின் உதவியுடன் சமூக நலன் பேணும் திட்டங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதைகளை, விவசாய உபகரணங்களை, பூச்சி கொல்லி மருந்துகளை வழங்கி வருகின்றது. அதிக விளைச்சலை பெறும் வகையில் உற்பத்தி செய்வதற்கு, பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். பாடசாலைகளைக் கட்டி விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பான்மை வாக்குப்பலத்தில் ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சியும், ஜனாதிபதி லூலாவும் சர்வதேச இடதுசாரிகள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த லூலா, சிறு வயதில் கஷ்டப்பட்டவர். ஆரம்ப பாடசாலையுடன் படிப்பை இடைநிறுத்தி விட்டு ஆலைத் தொழிலாளியாக வேலை செய்தவர். இதனால் ஏழைகளின் மனதறிந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்ததால், பிரேசிலில் புரட்சிகர மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. லூலா ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் ஆச்சரியப்பட வைத்தார். ஐ.எம்.எப். சொற்கேட்டு ஆட்சி செய்தார். லூலா தெரிவான காலகட்டம் இங்கே முக்கியமானது. 1998 ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி பிரேசிலை வெகுவாகப் பாதித்தது. அத்தகைய தருணத்தில் லூலா போன்ற இடதுசாரித் தலைவரின் அவசியத்தை முதலாளிகளும் உணர்ந்திருந்தனர். பதவிக்கு வந்த சில வருடங்களிலேயே தொழிற்கட்சி மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். லூலாவின் மந்திரிசபை பொருளாதார சீர்திருத்தம் எதிலும் இறங்காததால், வெறுத்துப் போன MST ஆதரவை வாபஸ் வாங்கியது. MST போர்க்குணாம்சம் மிக்க அமைப்பாக இருந்த போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவது என்.ஜி.ஒ. என்ற தொண்டு நிறுவனங்களாகும். பிரேசிலின் ஏழைகள் காலம் ஒரு நாள் மாறும் என்று காத்திருக்கிறார்கள்.


தொடரின் முன்னைய பதிவுகள்:

Thursday, September 30, 2010

பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

"இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா" தொடர் - 3
(பிரேசில், பகுதி 1)

"நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" - Dom Hélder Pessoa Câmara (கத்தோலிக்க மேற்றிராணியார், பிரேசில்)

உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 km) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?

மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்... உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து "ஷாப்பிங்" செய்கிறார்கள்.

பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை "உலகத்தரம் வாய்ந்த சேரிகள்." புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை "பவேலா" (Favela ) என்றழைப்பார்கள்.

பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் - மாபியா சண்டையில் மடிகின்றனர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். "திருடுவது பாவம்" என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dom Hélder Câmara பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். "நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.

பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை "கொய்யாவா" (Goiaba ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான "மண்டியோக்" போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் "மைஞோக்கா" என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.

பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

"சரித்திரம் எமக்கு அவசியமில்லை", என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.

ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.

போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bandeirantes என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bandeirantes கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)