Sunday, May 09, 2021

யாழ்ப்பாணத்தில் எழும் சாதிய மதில் சுவர்!

யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள மயிலிணி கிராமத்தில் சாதிப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வழமை போல இதுவும் கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த சாதிப் பிரச்சினை தான். ஈழப்போர் நடந்த முப்பது காலங்களில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்த சாதிப் பிரச்சினைகள் தற்போது மெல்ல மெல்ல தலைதூக்கி வருகின்றன.

மயிலிணி பிரச்சினை தொடர்பாக இதுவரை எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: அங்குள்ள முருகன் கோயிலை அண்டி யாராலும் உரிமை கோரப்படாத வெட்டையான காணி ஒன்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர்த் திருவிழாக் காலங்களில், சாமி வெளிவீதி உலா வருவதை தவிர ஏனைய நாட்களில் அந்த இடம் பாவனையில் இருப்பதில்லை.

அதனால், அயல் கிராமத்து இளைஞர்கள் அந்தக் காணிக்குள் வந்து உதைபந்து, அல்லது வலைப் பந்து விளையாடுவது வழக்கம். சிலநேரம் விளையாட்டுப் போட்டிகளும் நடந்துள்ளன. கடந்த பல வருடங்களாக அனைத்து சாதிகளை சேர்ந்த இளைஞர்களும் வந்து விளையாடி வந்தனர். ஏற்கனவே யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் பாடசாலைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் ஒன்று கூடும் இளைஞர்கள் தமக்குள் சாதி வேற்றுமை பார்ப்பதில்லை. இந்த வழக்கம் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றது.

அண்மைக் காலமாக குறிப்பிட்ட காணியில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம், உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் வேறொரு இடத்தில் தனியாக பிரிந்து விளையாடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருந்தாலும் ஆரம்பத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.

சில தினங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட மைதானம் அமைந்துள்ள காணியை சுற்றி மதில் கட்டப் பட்டுள்ளது. ஊர் மக்கள் இதுகுறித்து காரணம் கேட்ட பொழுது, திருவிழாக் காலங்களில் சுவாமி வெளி உலா வருவதற்கான வீதியை சுற்றி மதில் கட்டுவதாக நிர்வாகத்தினர் பதில் கூறினார்கள். யாழ்ப்பாணக் கோயில்களில் பொதுவாக தேர்ப் பவனி நடக்கும் உள்வீதிகளை சுற்றித் தான் மதில் கட்டப் படுவதுண்டு. வெளி வீதி எப்போதும் குடியிருப்புகளை அண்டிய திறந்த வெளியாகத் தான் இருக்கும்.

மதில் கட்டுவதற்கு இன்னொரு காரணமாக, சில இளைஞர்களின் மது பாவனை சுட்டிக் காட்டப் பட்டது. அப்படியான ஒரு சிலர் இருந்தாலும் அதற்காக மதில் கட்டுவதை நியாயப் படுத்த முடியாது. இது சில மாதங்களுக்கு முன்னர், நல்லூர்க் கோயிலுக்கு அருகாமையில் காதல் ஜோடிகள் ஒன்று கூடுகிறார்கள் என்று கழிவு எண்ணை ஊற்றிய சம்பவத்தை நினைவுகூருகின்றது. அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இந்துமதக் கலாச்சாரக் காவலர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும், இதே இடத்தில் இது போன்ற சாதிய மதில் கட்டப் பட்டதாகவும், அப்போது எழுந்த பிரச்சினையின் முடிவில் புலிகள் அந்த மதிலை இடித்து விழுத்தியதாகவும் தெரிய வருகின்றது. தற்போது ஆலய நிர்வாகத்தினர் பிரதேச சபையில் உள்ள தமது சாதியை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவில் மீண்டும் அந்த மதிலை கட்டி எழுப்பி உள்ளனர்.

இதைத் தவிர, மதிலை சுற்றி உயரமான கம்பங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. கோயில் காணியாக இருந்தாலும் பொது இடங்களில் கமெரா பொருத்த காவல்துறை அனுமதி தேவை. அப்படி எந்த அனுமதியும் பெறப் பட்டதாக தெரியவில்லை. பொது இடங்களில் மற்றவர்களின் சுதந்திரத்தில் (privacy) தலையிடுவதற்கு தனியாருக்கு உரிமை இல்லை.

அத்துடன் இந்தக் கமெராக்கள் அயலில் உள்ள வீடுகளை கண்காணிக்கும் வகையில் பொருத்தப் பட்டுள்ளன. இதனால் தங்களது தனிமனித சுதந்திரம் மீறப் படுவதாக ஊர் மக்கள் முறையிடுகின்றனர். கிணற்றடியில் குளிக்கும் பெண் பிள்ளைகளும் அச்சமடைந்து காணப் படுகின்றனர்.

கோயிலை அண்டிய கிராமங்களில் குடியிருப்பவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினர் ஆவர். அதனால் மதில்சுவர் மட்டுமல்லாது, கண்காணிப்பு காமெராக்களும் சாதிய ஒடுக்குமுறையின் நவீன வடிவமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இரண்டுமே அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சினை என்பதால், ஊர் மக்கள் அது குறித்து காவல்துறை, பிரதேச சபை உறுப்பினர்களிடம் முறையிட்டு இருந்தனர். ஆனால், இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. வழமை போல ஆதிக்க சாதியினர் பக்கமே அதிகார வர்க்கமும் இருப்பதாகத் தெரிகின்றது.

இது குறித்து மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.

4 comments:

Unknown said...

தோழர் வணக்கம் நான் உங்கள் வலையொளி பதிவேற்றங்கள் மற்றும் கட்டுரைகளை வாசித்து வருகிறேன்...மிக அதிக தகவல்களை தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி...

Kalaiyarasan said...

நன்றி தோழர்

Unknown said...

தாழ்த்தப்பட்ட/ உயர்த்தப்பட்ட சாதியினர் என்ற சொல்லாடல் தவறாக தெரிகிறது.பதிவுகளில் வேவ்வேறே குடிகளை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடலாம். தாழ்வு உயர்வு என்று எதுவும் இல்லை.. இவ்வாறான கட்டுரைகளில் தவிர்ப்பது நல்லது. நன்றி!

சேகர் said...

உயர்ந்த என்பது பொருத்தமற்றது. ஆதிக்கம் செலுத்த முனையும் கீழன எண்ணம் கொண்டவர்கள் எப்படி உயர்ந்தவராவர்? தமிழகத்தில் ஆதிக்க சாதி என்ற சொல்லாடல் பரவலாக பலராலும் பாவிக்கப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட அந்த ஆதிக்க சாதியினரின் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.தவிர இப்படிப்பட்ட ஆதிக்க சாதி கொடூரங்களை ஏன் எழுதாமல் தவிர்க்க வேண்டும்? ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராட்டவதுதானே சரியானது. புண்ணுக்கு புனுகு தடவுவது நோயைத் தீர்க்க உதவாது.