Sunday, December 13, 2020

இதுவரை தமிழில் வெளிவராத எங்கெல்சின் எழுத்துகள்

எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூல் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை தரலாம் என நினைக்கிறேன்.

இதனை தமிழில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் அந்த மொழி பெயர்த்து இருந்தாலும் இதன் சரியான மொழி பெயர்ப்பு "கம்யூனிசத்தின் அடிப்படைகள்" (ஜெர்மன் மொழியில்: Grundsaetze des Kommunismus) என்று இருக்க வேண்டும். 

இந்த நூல் தோன்றக் காரணமாக இருந்த வரலாற்று சம்பவங்கள் குறித்த விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தகவல்கள் தமிழில் மிக மிக அரிதாகவே காணக் கிடைக்கின்றன.

1836 ஆம் ஆண்டு, போர்க்குணாம்சம் மிக்க ஜெர்மன் தொழிலாளர்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி நியாய வாதிகளின் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அது பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் சங்கம் என்று அழைக்கப்படலாயிற்று. சில வருடங்களுக்குப் பின்னர் லண்டனை தளமாகக் கொண்டு அந்த அமைப்பு இயங்கி வந்தது. 
 
அன்று அவர்கள் தமது அமைப்புக்கு ஒரு பொதுவான செயல் திட்டம் தேவை என்பதை உணர்ந்தார்கள். அது பிற்காலத்தில் கம்யூனிசத்தின் அடிப்படை நூலாக பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்பினார்கள். அந்த அடிப்படை நூலானது கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தால் அதை விவாதத்திற்கு விடுவதுடன், சுருக்கமாகவும் தெளிவாகவும் செழுமைப் படுத்த முடியும் என நம்பினார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தம்மை கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், என்று அழைத்துக் கொண்டவர்கள் பெரும்பாலும் ஒரு கற்பனாவாத சோசலிச கொள்கையைத் தான் பின்பற்றினார்கள். விஞ்ஞான ரீதியான அணுகுமுறை மிகக்குறைவாக இருந்தது. ஆகவே அன்றைய நியாயவாதிகளின் சங்கத்திலும் கற்பனாவாத சோசலிஸ்ட்களின் தாக்கம் பெருமளவு இருந்தமை தெரியவருகின்றது.

1846 ஆண்டளவில் இதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் விஞ்ஞானபூர்வமான சோசலிச கோட்பாடுகளை எழுதி வெளியிட்டு வந்தனர். அவர்கள் கம்யூனிச தொடர்பு கமிட்டி என்ற பெயரில் தமது எழுத்துப் பிரதிகளை வெளியிட்டு பாட்டாளிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முயன்றனர். இந்த கமிட்டியின் சார்பாக நியாயவாதிகளின் சங்கத்துடன் விவாதங்களில் ஈடுபட்டனர். மறுபக்கத்தில் அந்த நியாயவாதிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கற்பனாவாத சோசலிசத்தின் தாக்கத்திலிருந்து விடுபட விரும்பினார்கள்.

1847, தீர்மானகரமான முடிவுகளை எடுக்கும் ஆண்டாக அமைந்திருந்தது. லண்டன் நியாயவாதிகள் சங்க செயற் குழுவை சேர்ந்த ஜோசப் மோல், சங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக பாரிஸ், பிரசல்ஸ் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தார். அவர் அப்போது அங்கிருந்த மார்க்சையும், எங்கெல்சையும் சந்தித்து, தமது சங்கத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அடுத்து நடக்கவுள்ள மகாநாட்டில் அவர்கள் தமது கோட்பாட்டு விளக்கங்களை செயல்திட்டம் ஆக்குவதற்கான வரைபுகளை முன்வைக்கலாம் என்று கூறினார். மார்க்சும் எங்கெல்சும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிறு கிளைக் குழுக்களாக பல நாடுகளிலும் நகரங்களிலும் வாழ்ந்தனர். இதனால் இரண்டு மகாநாடுகள் நடத்தி மார்க்ஸ், எங்கெல்சின் முன்மொழிவுகள் மீது விவாதங்கள் நடத்தி, இறுதியான செயற்திட்டம் அல்லது புதிய யாப்பு எழுதப் பட வேண்டும் என தீர்மானித்தனர்.

1847 ஆம் ஆண்டு ஜூன் இரண்டு முதல் ஒன்பதாம் தேதி வரையிலான காலப்பகுதியில் லண்டனில் முதலாவது மாநாடு நடந்தது. இந்த மகாநாட்டின் போது இன்னமும் பலர் கற்பனாவாத சோஷலிச கொள்கைகளை கைவிடவில்லை என்பது தெரியவந்தது.

இந்த மகாநாட்டில் கம்யூனிஸ்ட் வாக்குமூலத்திற்கான வரைபு என்ற ஒரு நகல் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலாகவும் உருவானது. அந்த வரைபில் உள்ள பல கேள்வி பதில்கள் இந்த நூலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடலாம். தற்போது பாவனையில் உள்ள கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில், கேள்வி 22 கேள்வி 23 ஆகியவற்றுக்கு பதில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக "இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் அந்த மகாநாட்டின் முன்மொழியப்பட்ட "கம்யூனிச வாக்குமூலத்தின் வரைபு" என்ற பிரதியில் எழுதப்பட்டுள்ளது. (அதை நான் ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். பின்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூல் பற்றிய எனது விளக்கவுரையில் அந்தக் கேள்வி வரும் போது அதற்கான பதிலை சொல்லி விடுகிறேன்.)

உண்மையில் அன்று நடந்த விவாதங்கள் தான் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, கம்யூனிசத்தின் அடிப்படைகள் ஆகிய இரண்டு சிறிய நூல்கள் வெளிவரக் காரணமாக அமைந்திருந்தன.

கம்யூனிச வாக்குமூலத்தின் வரைபு என்ற கையெழுத்துப் பிரதி தொலைந்து போயிருந்தது. நீண்ட காலமாக யாராலும் கவனிக்காமல் படாமல் கைவிடப் பட்டிருந்தது. அது கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் தொகுப்பு நூல்களில் இடம் பெறவில்லை. அது பிற்காலத்தில் அந்த சங்கத்தின் ஜேர்மன், ஹம்பூர்க் கிளையை சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. உறுப்பினரின் மறைவுக்குப் பின்னர் அவரது உறவினர்கள் அந்தப் பிரதியைத் ஹம்பூர்க் நூலகத்திற்கு கொடுத்து விட்டனர்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக யார் கண்ணிலும் படாமல் இருந்த அந்த பிரதி, தற்செயலாக நூலக வேலையாட்கள் ஆவணப்படுத்தும் போது கண்டெடுக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் வெளியிடப்பட்ட அந்த பிரதி உடனடியாக பெர்லினில் புதிதாக தொகுக்கப் பட்ட கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூலிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1847 ஜூன் மாதம் நடந்த நியாயவாதிகள் சங்க மகாநாட்டில் எங்கெல்ஸ் முன்மொழிந்த விஞ்ஞானபூர்வமான சோசலிச கோட்பாடுகளை அந்த சங்கத்தின் செயலதிபர் வில்லெம் வோல்ஃப் ஆதரித்தார்.

அந்த மாநாட்டில் தான் "அனைத்துலக பாட்டாளிகளை ஒன்று சேருங்கள்" என்ற கோஷம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அந்த சங்கத்தின் பெயரும் "கம்யூனிஸ்டுகளின் சங்கம்" என மாற்றப்பட்டது.

எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ வாக்குமூலத்தின் வரைபு விவாதத்திற்கு விடப்பட்ட நேரம் கற்பனாவாத சோசலிசம் பற்றிய சில கருத்துகளும் இருந்தன. அதனால் மேற்படி வரைபிலிருந்த சில பகுதிகள் பின்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில் இல்லாதிருப்பதை அவதானிக்கலாம்.

நியாயவாதிகள் சங்கத்தின் கிளைக் குழுக்களில் நடந்த தொடர்ச்சியான விவாதங்களின் பின்னரும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முன்வைத்த திருத்தங்களின் பின்னரும், 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி லண்டனில் இரண்டாவது மாநாடு ஒன்று கூடியது. விஞ்ஞானபூர்வமான சோசலிசம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அதைச் ஏற்படுத்தப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய இரண்டு நூல்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வெறுமனே மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துக்கள் மாத்திரமல்ல, அது ஒரு கட்சிகள் நீண்ட காலமாக நடந்த விவாதங்களின் விளைவு ஆகும். விவாதங்கள் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தன. இவற்றின் விளைவாகத்தான் கம்யூனிஸ்டுகளின் சங்கம் என்ற முதலாவது புரட்சிகர பாட்டாளிகளின் அமைப்பு தோற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்தக் கட்டுரை குரல் பதிவாக You Tube பில் உள்ளது.

No comments: