Saturday, December 12, 2020

புலம்பெயர்ந்த தமிழருக்கு பொருந்தும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (பகுதி - 2)

 

(எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், தொடர்ச்சி...) 

கேள்வி 6: தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த தொழிலாளர் வர்க்கங்கள் எவை? 

பதில்: ஆளும் வர்க்கம் அல்லது சொத்துடைமை வர்க்கத்தை சார்ந்து நின்ற தொழிலாளர் வர்க்கங்கள், சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், வெவ்வேறான நிலைமைகளிலும், வெவ்வேறான உறவுகளுடனும் இருந்துள்ளன. பண்டைய காலங்களில் தொழிலாளர்கள் சொத்துடைமையாளர்களின் அடிமைகளாக இருந்தனர். அவர்கள் இப்போதும் அதே நிலைமையில் சில பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்காவின் தென் பகுதியிலும் வாழ்கின்றனர்.

மத்திய காலங்களில் அவர்கள் நிலவுடைமை பிரபுக்களுக்கு பண்ணையடிமையாக இருந்தார்கள். இப்போதும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யாவில் அந்த நிலைமை உள்ளது. மத்திய காலத்திலும், தொழிற்புரட்சி நடக்கும் வரையிலும் நகரங்களில் கைவினைத் தொழில் செய்த குட்டி முதலாளிய சிறு தொழிலதிபர்கள் கீழ் வேலை செய்த பணியாளர்கள் இருந்தனர். பெரும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியினால், மிகப் பெரிய முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப் பட்ட ஆலைத் தொழிலாளர்கள் மெல்ல மெல்ல உருவானார்கள்.

கேள்வி 7: எவ்வாறு ஒரு பாட்டாளி தன்னை அடிமையிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்கிறான்?

பதில்: ஓர் அடிமை ஒரே தடவையில் நிரந்தரமாக விற்கப் பட்டு விடுகிறான். ஆனால் ஒரு பாட்டாளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தன்னைத் தானே விற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தனிப்பட்ட அடிமை ஒரேயொரு எஜமானின் சொத்து ஆவான். அந்த எஜமானின் நலைனை ஒட்டியே, அது எவ்வளவு இன்னல் மிக்கதாக இருந்த போதிலும், அவனால் உத்தரவாதம் அளிக்கப் பட்ட இருப்பைக் கொண்டிருக்கிறான். அதற்கு மாறாக, ஒரு தனிப்பட்ட பாட்டாளி, ஒட்டு மொத்த முதலாளிய வர்க்கத்தினதும் சொத்தாக இருப்பதால், யாருக்காவது தேவைப் படும் போது மட்டுமே அவனது உழைப்பு வாங்கப் படுகிறது. அதனால் ஒரு பாட்டாளிக்கு இருப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. இந்த இருப்புக்கான உத்தரவாதமானது ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தினால் மட்டுமே வழங்கப் பட முடியும்.

ஓர் அடிமை போட்டிகளுக்கு வெளியே நிற்கிறான். ஆனால் ஒரு பாட்டாளி போட்டிக்கு உள்ளே நிற்பதுடன், அதன் ஏற்ற இறக்கங்களையும் உணர்கிறான். ஓர் அடிமை பொருளாகவே கருதப் படுவானே தவிர, (ஒரு தேசத்தின்) குடியுரிமை கொண்ட சமூகத்தின் உறுப்பினராக கருதப் படுவதில்லை. அதற்கு மாறாக ஒரு பாட்டாளி குடியுரிமைச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப் படுகிறான். இதன் மூலம் ஓர் அடிமை பாட்டாளியை விட நல்ல நிலையில் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பாட்டாளி ஒரு வளர்ச்சி அடைந்த சமுதாயத்திற்கு உரியவன். அதனால் அடிமையை விட மேலான படி நிலையில் நிற்கிறான். அடிமையானவன், குறிப்பாக அடிமை முறை சார்ந்த தனியார் சொத்துடைமையை மட்டும் உடைப்பதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதன் மூலம் தானாகவே பாட்டாளியாக மாறுகிறான். தனியார் சொத்துடைமையை முற்று முழுதாக இல்லாதொழிப்பதன் மூலமே ஒரு பாட்டாளி தன்னை விடுதலை செய்து கொள்ள முடியும்.

கேள்வி 8: ஒரு பாட்டாளி பண்ணை அடிமையிடமிருந்து எவ்வாறு தன்னை வேறு படுத்திக் கொள்கிறான்? 

ப‌தில்: 

1. ஒரு ப‌ண்ணை அடிமை சிறு துண்டு நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறான். அதில் வேலை செய்வதுடன், அதனால் கிடைக்கும் விளைச்சலில் ஒரு பகுதியை கொடுத்து விடுகிறான். அதற்கு மாறாக பாட்டாளி இன்னொருவனுக்கு சொந்தமான உற்பத்தி சாதனங்களை கொண்டு வேலை செய்து, அதனால் கிடைக்கும் வருமான‌த்தில் ஒரு ப‌குதியை பெற்றுக் கொள்கிறான். 

2. ஒரு ப‌ண்ணை அடிமை கொடுக்கிறான். பாட்டாளி கொடுக்க‌ப் ப‌டுகிறான். 

3. ஒரு ப‌ண்ணை அடிமைக்கு உத்த‌ர‌வாத‌மான‌ இருப்பு உள்ள‌து. பாட்டாளிக்கு அது இல்லை. 

4. பண்ணை அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளி அதற்குள் நிற்கிறான். 

5. ஒரு பண்ணை அடிமை நகரத்திற்கு சென்று கைவினைத் தொழில் செய்வதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். ஒரு பண்ணை அடிமை நிலப்பிரபுவுக்கு தனது உழைப்பையும், பொருட்களையும் கொடுப்பதற்கு பதிலாக பணத்தை கொடுத்து சுதந்திரமான குத்தகைக் காரராக மாற முடியும். நிலப்பிரபுவை விரட்டி விட்டு நிலத்தை தானே சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம், அல்லது வேறெந்த வழியிலாவது சொத்துடைமை வர்க்கமாகி போட்டியில் பங்கெடுக்க முடியும். ஒரு பாட்டாளி தனியுடைமையையும், வர்க்க முரண்பாடுகளையும் ஒழிப்பதன் மூலம் தன்னைத் தானே விடுவித்துக் கொள்கிறான்.

(அடுத்த கேள்வி பற்றிய சிறு குறிப்பு: புலம்பெயர்ந்த நாடுகளில் பாட்டாளிவர்க்கமாக வாழும் தமிழர்கள், ஊரில் தமக்கிருந்த பரம்பரை சொத்துக்களை எண்ணி எங்குவதைக் கண்டிருக்கிறேன். 150 வருடங்களுக்கு முன்னர் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில் எங்கெல்ஸ் அதற்கான தத்துவார்த்த விளக்கம் கொடுத்துள்ளார்:)


கேள்வி 10: ஒரு பாட்டாளி பட்டறைத் தொழிலாளியிடம் இருந்து எவ்வாறு தன்னை வேறுபடுத்திக் கொள்கிறான்?

பதில்: பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பட்டறைத் தொழிலாளி குடும்பக் கைத்தறி போன்ற உற்பத்திக் கருவிகளை சொந்தமாக வைத்திருந்தான். அத்துடன் ஓய்வு நேரத்தில் வேலை செய்வதற்கான சிறு துண்டு விவசாய நிலமும் சொந்தமாக இருந்தது. ஒரு பாட்டாளியிடம் இது எதுவுமே கிடையாது. 

- ஒரு பட்டறைத் தொழிலாளி எப்போதும் நாட்டுப் புறத்தில் வாழ்வதுடன் தனது நிலப்பிரபு அல்லது தொழில் வழங்குனருடன் ஏறத்தாழ ஒரு தந்தை வழி சமூக உறவுகளை பேணி வருகிறான். 

- அதற்கு மாறாக ஒரு பாட்டாளி பெரும்பாலும் பெரிய நகரங்களில் வாழ்வதுடன் தனது தொழில் வழங்குனருடன் ஒரு தூய பண உறவை மட்டுமே பேணி வருகிறான். 

- பட்டறைத் தொழிலாளி பெரும் தொழிற்துறையால் அவனது தந்தை வழி உறவுகளில் இருந்து துண்டிக்கப் படுகிறான். அவன் தனது சொத்துக்களை இழந்து அதனூடாக தானாகவே ஒரு பாட்டாளியாக மாறி விடுகிறான்.*

(எனது குறிப்பு: *கடைசி வரி அப்படியே இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பொருந்துவதை அவதானிக்கலாம்.)


(அடுத்த கேள்வி பற்றிய சிறு குறிப்பு: இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல், வளர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை வசதிகள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் தோற்றம் குறித்து எங்கெல்ஸ்.)


கேள்வி 11: தொழிற்புரட்சியாலும், சமுதாயத்தை முதலாளிகள், பாட்டாளிகள் என்று பிரித்தமையாலும் ஏற்பட்ட நேரடி விளைவுகள் என்ன?


பதில்: 

1. முதலாவதாக;

- எல்லா உலக நாடுகளிலும் பழைய முறை பட்டறைத் தொழில், அல்லது கைவினைஞர்களின் தொழிற்துறை யாவும் எந்திரங்களினாலும், தொடர்ச்சியாக குறைந்து வரும் தொழிற்துறைப் பொருட்களின் விலைகளினாலும் அழித்தொழிக்கப் பட்டன. 

- இந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இருந்து முடிந்த அளவுக்கு தனிமைப் பட்டிருந்த குறை விருத்தி நாடுகளும், அவற்றின் தனிமை நிலையில் இருந்து பலவந்தமாக இழுத்தெடுக்கப் பட்டன. அவை ஆங்கிலேயரின் மலிவான பொருட்களை வாங்கியதுடன், தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்கள் அழிந்து போக இடமளித்தன. 

- ஆயிரமாயிரம் வருடங்களாக எந்த முன்னேற்றமும் கண்டிராத இந்தியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டன. சீனாவும் கூட ஒரு புரட்சியை நோக்கிச் செல்கிறது. 

- அது எந்தளவு தூரம் வந்துள்ளது என்றால், இன்று இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு புதிய இயந்திரம், ஒரு வருடத்திற்குள் சீனாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அன்றாட உணவைப் பறிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

- இந்த வகையில் பெரும் தொழிற்துறையானது இந்தப் பூமியின் அனைத்து மக்களையும் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள வைத்துள்ளது. 

- சிறிய உள்ளூர் சந்தைகளை ஓர் உலகச் சந்தையுடன் ஒன்றாகப் பிணைத்துள்ளது. எல்லா இடங்களிலும் நடக்கும் நாகரிகம், முன்னேற்றம் எந்தளவு தூரம் வந்திருக்கிறது என்றால், வளர்ந்த நாடுகளில் நடப்பன யாவும் பிற நாடுகளிலும் நடைமுறைக்கு வர வேண்டும். 

- ஆகையினால் இங்கிலாந்து, பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் தம்மைத் தாமே விடுதலை செய்து கொண்டால், அதற்கு முந்தியோ பிந்தியோ சம காலத்திலும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள்.

2. இரண்டாவதாக;

- எல்லா இடங்களிலும், பெரும் தொழிற்துறை பட்டறைத் தொழிலுக்கு பதிலாக வந்த இடத்தில், முதலாளித்துவம் தனது செல்வத்தையும், அதிகாரத்தையும் அதி உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், தன்னை அந்த நாட்டில் முதலாவது வர்க்கமாக மாற்றிக் கொண்டுள்ளது. 

 - இதன் விளைவாக, இது எங்கெல்லாம் நடந்ததோ, அங்கெல்லாம் முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. நிலப்பிரபுக்கள், கைவினைஞர்களை பிரதிநிதித்துவப் படுத்திய எல்லாம் வல்ல முடியாட்சியையும் தூக்கி எறிந்தது. நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அழித்தொழித்த முதலாளித்துவம், அன்னியமாக்க முடியாத சொத்துக்களையும், பிரபுக்களின் முன்னுரிமைகளையும் முடிவுக்கு கொண்டு வந்தது. 

- கைவினைஞர் சங்கங்களின் சிறப்புரிமைகளை இரத்து செய்ததன் மூலம் கைவினைஞர்களின் அதிகாரத்தை இல்லாதொழித்தது. - அந்த இடத்தில் சுதந்திரமான போட்டியை கொண்டு வந்தது. அதாவது ஒவ்வொருவரும் தான் விரும்பிய தொழிற் துறைப் பிரிவை தெரிவு செய்து செயற்படும் சமூக நிலைமையை உருவாக்கியது. போதுமான நிதி மூலதனத்தை தவிர வேறெதுவும் அவரைத் தடைசெய்யாது. 

- சுதந்திரமான போட்டியை அறிமுகப் படுத்தியதன் மூலம், இன்று முதல் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அவர் வைத்திருக்கும் மூலதன அளவில் மட்டுமே சமமற்ற தன்மையில் இருப்பார்கள் என்று பிரகடனப் படுத்தியது. - மூலதனம் தான் தீர்மானகரமான சக்தி. முதலாளிகளே சமுதாயத்தில் முதலாவது வர்க்கமாகி விட்டனர். 

 - சுதந்திரமான போட்டி பெரும் தொழிற்துறைக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் அத்தகைய சமுதாய சூழ்நிலையில் மட்டுமே பெரும் தொழிற்துறை உருவாக முடியும். - முதலாளித்துவமானது நிலப்பிரபுக்களின், கைவினைஞர்களின் அதிகாரத்தை அழித்த பின்னர், அது அரசியல் அதிகாரத்தையும் அழித்தது. 

- அது தன்னை சமுதாயத்தின் முதலாவது வர்க்கமாக உயர்த்திக் கொண்டதும், அரசியல் ரீதியாகவும் தான் ஒரு முதலாவது வர்க்கம் என்று அறிவித்துக் கொண்டது. - சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றும், சுதந்திரமான போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியும், ஒரு பிரதிநிதித்துவ அமைப்பின் ஊடாக முதலாளித்துவம் இதை சாதித்துக் கொண்டது. 

- அது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சியை கொண்டு வந்தது. இந்த முறையின் கீழ் குறிப்பிட்டளவு மூலதனம் வைத்திருந்த ஒரு சிலர் மட்டுமே வாக்குரிமை பெற்றுக் கொண்டனர். அதாவது முதலாளித்துவ வாக்காளர்கள் மட்டுமே பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் அவர்கள் தமக்கு வரிச் சலுகை கொடுக்கும் ஒரு முதலாளித்துவ அரசை ஏற்றுக் கொண்டனர்.

3. மூன்றாவதாக;

 - எல்லா இடங்களிலும் அது எவ்வாறு முதலாளிகளை உருவாக்கியதோ, அதே மாதிரி பாட்டாளிகளையும் உருவாக்கியது. 

- இந்த உறவின் மூலம், முதலாளிகள் எந்தளவு பணக்காரர்கள் ஆனார்களோ, அதே மாதிரி பாட்டாளிகளும் பெருகினார்கள். ஏனென்றால் மூலதனம் மட்டுமே பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்த முடியும் என்பதாலும், உழைப்பை பயன்படுத்தும் போது தான் மூலதனம் பெருகும் என்பதாலும், மூலதனம் பெருகும் போதெல்லாம் பாட்டாளிகளும் பெருகுகின்றனர். 

- அதே நேரம், இது தொழிற்துறை இலாபகரமான முறையில் வளரக் கூடிய நகரங்களை நோக்கி முதலாளிகளையும், பாட்டாளிகளையும் ஒன்றாக நகர்த்துகிறது. இவ்வாறு பெருமளவு மக்களை ஒரே இடத்தில் குவிப்பதால், பாட்டாளிகள் தமது பலத்தை உணர்ந்து கொள்கின்றனர். 

- மேலும், அது எந்தளவு அதிகமாக விருத்தி அடைகின்றதோ, அந்தளவுக்கு புதுப்புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு குடிசைக் கைத்தொழில்கள் அழிக்கப் பட்டு விடும். ஏற்கனவே கூறிய படி, அது கூலியை குறைந்த அளவிலிருந்து கீழ் நோக்கித் தள்ளுவதால் பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமை மென்மேலும் சகிக்க முடியாததாக மாறுகிறது. 

- இவ்வாறாக, அது ஒரு பக்கம் பாட்டாளிகளின் அதிருப்தியை உருவாக்கிய போதிலும், மறுபக்கம் பாட்டாளிகளின் வல்லமையை வளர்ப்பதுடன், ஒரு சமுதாயப் புரட்சிக்கும் வழிவகுக்கிறது.


*எங்கெல்ஸ் எழுதிய மூல நூலில் இருந்து எளிமையான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். 
- கலையரசன், 
12.12.2020

 

இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிப்பதற்கு:

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1  https://kalaiy.blogspot.com/2020/12/1.html 

No comments: