Sunday, March 10, 2019

ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்

9 நவம்பர் 1918, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மன் தேசியக் கொடி இறக்கப்பட்டு, செங்கொடி ஏற்றப் பட்டது. அந்த நகரங்களில் "Räte" எனும் தொழிலாளர் மன்றங்கள் (ரஷ்யாவில் சோவியத் மாதிரி) உருவாகி இருந்தன.

நீங்கள் இந்த வரலாற்றுத் தகவல்களை இதற்கு முன்னர் கேள்விப் பட்டிரா விட்டால் ஆச்சரியப் படாதீர்கள். புதிய தலைமுறை ஜெர்மனியர்களுக்கு கூடத் தெரியவிடாமல் மூடி மறைக்கப் படுகிறது. ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

நவம்பர் 1918, முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த காரணத்தால், ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் இராணுவம், அப்போது தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை ஜெர்மன் மக்கள் போரை விரும்பவில்லை. பசி, பட்டினியால் வாடிய மக்களிடம் தேசியப் பெருமிதம், இனவுணர்வு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால், அன்றைய ஜெர்மனி முழுவதும் போருக்கு எதிரான குரல்களே அதிகமாக கேட்டன.

4.11.1918, வட ஜெர்மனியின் துறைமுக நகரமான 'கீல்" (Kiel) பதற்றமாக காட்சியளித்தது. சுமார் ஐயாயிரம் பேர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் கைகளில் செங்கொடிகள் பறந்தன. "சமாதானமும் உணவும் வேண்டும்!", "அப்பாவிகளை விடுதலை செய்!" போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன. அவர்கள் கீல் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வடக்கே உள்ள கீல் நகரை அண்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும், ஜெர்மன் கடற்படையும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தப் போரில் ஜெர்மனிக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜெர்மன் தளபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மாலுமிகள் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர். ஊரில் தமது உறவுகள் பசியால் வாடிக் கொண்டிருக்கையில், தாம் இங்கே போரிடுவது யாருக்காக என்று குமுறினார்கள்.

தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்பட மறுத்த மாலுமிகள், இயந்திரங்களை நிறுத்தி, கப்பல்களை கரைக்கு கொண்டு வந்தனர். கலகம் செய்த குற்றச்சாட்டில், 47 மாலுமிகள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப் பட்ட மாலுமிகளின் விடுதலையை வலியுறுத்தி, சக மாலுமிகள் மட்டுமல்லாது கப்பல் கட்டும் தளத்தில் இருந்த தொழிலாளர்களும் சேர்ந்து போராடினார்கள்.

தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சோஷலிச அரசியல் ஆர்வலர்கள் அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான USPD உறுப்பினர்களாக இருந்தனர். சிறையில் இருந்த 47 மாலுமிகளை விடுதலை செய்வதற்காக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்கரார்கள் கடற்படை முகாமை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கடற்படை அதிகாரி, கூட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

புரட்சியில் முதல் களப்பலியான தோழர்களின் மரணத்தைக் கண்டு புரட்சியாளர்கள் பின்வாங்கவில்லை. மாலுமிகள் இன்னும் பல போர்க் கப்பல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிறு ஆயுதங்களை கைப்பற்றினார்கள். அந்த ஆயுதங்களை கொண்டு கீல் நகரில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் கொள்ளையிடப் பட்டன. ஒரு சில மணிநேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. முன்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்து தடுத்த கடற்படை முகாம் அதிகாரி, வேறு வழியின்றி சிறை வைத்திருந்த மாலுமிகளை விடுதலை செய்தார்.

அப்போது சமூக ஜனநாயகக் கட்சி தான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோஷலிச குறிக்கோள் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியாக ஆரம்பிக்கப் பட்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD), புரட்சி நடந்த நேரத்தில் கொள்கையற்ற முதலாளித்துவ அரசியல் கட்சியாக சீரழிந்து போயிருந்தது. லெனின் அவர்களை "திருத்தல்வாதிகள்" என்று குறிப்பிட்டு பேசினார்.

SPD எப்போதோ தனது கொள்கையை கைவிட்டு விட்டு, சாதாரண அரசியல் கட்சியாகி ஜெர்மன் தேசியத்தை ஆதரித்தது. "தாய்நாட்டை பாதுகாக்கும் போருக்கு" முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. "ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது சோஷலிசக் கொள்கைக்கு முரணானது" என்று கூறி போரை எதிர்த்த கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர். "நான் இங்கே ஜெர்மானியர்களை மட்டுமே பார்க்கிறேன், கட்சிகளை அல்ல." என்று சக்கரவர்த்தியால் புகழப் படும் அளவிற்கு, சமூக ஜனநாயக் கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முண்டு கொடுத்து வந்தது.

ஜெர்மன் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடிய சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நொஸ்கே, கீல் நகர புரட்சியை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப் பட்டார். நொஸ்கே ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்க கைக்கூலி என்ற உண்மையை அறியாத தொழிலாளர்கள், அவரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதே நொஸ்கே தான் புரட்சியை காட்டிக் கொடுத்து, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடப் போகிறார் என்ற உண்மையை, அன்றைய தினம் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதைப் போன்று நடித்த நொஸ்கே, புரட்சியை நீர்த்துப் போக வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். "பிரிட்டன் படையெடுக்கும் அபாயம்" இருப்பதாக பயமுறுத்தி, மாலுமிகளை மீண்டும் போர்முனைக்கு அனுப்பும் வகையில் உரையாற்றினார். நொஸ்கேயின் துரோகம் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால், அது கீல் நகரில் மட்டுமே சாத்தியமானது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த சில நாட்களில் கடலை அண்டிய பிற நகரங்களுக்கும் புரட்சி பரவி விட்டது.

5 நவம்பர், லுய்பேக் (Lübeck) நகரம் புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 6 நவம்பர், குக்ஸ்ஹாவன் (Cuxhaven), பிறேமன்(Bremen), அத்துடன் ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரமான ஹம்பேர்க்(Hamburg) ஆகிய நகரங்கள் தொழிலாளர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. ஹம்பேர்க் நகரத்தின் பிராந்திய பத்திரிகை "செங்கொடி" என பெயர் மாற்றப் பட்டு வெளியிடப் பட்டது.

அடுத்து வந்த சில நாட்களில் இன்னும் பல வட- மத்திய ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்களும், படையினரும் கிளர்ந்தெழுந்து அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றினார்கள். தொழிற்சாலைகளும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அங்கெல்லாம் தொழிலாளர் மன்றங்கள் (சோவியத்) ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின. 8 நவம்பர், மேற்கு ஜெர்மன் நகரமான கெல்ன் (ஆங்கிலத்தில்: Cologne) வரை புரட்சி பரவி விட்டது. அதையடுத்து பிராங்க்பெர்ட், மியூனிச், லைப்சிக், மக்டபூர்க் ஆகிய பிற நகரங்களும் புரட்சியாளர்களின் வசமாகின. 9 நவம்பர், ரயில் வண்டிகளில் செங்கொடி ஏந்திய தொழிலாளர்கள் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

9.11.1918, பெர்லின் நகரம். ஜெர்மன் புரட்சிக்கு தலைமை தாங்கிய நாயகனை காண்பதற்காக மக்கள் வெள்ளம் கூடி இருந்தது. நகர மத்தியில் இருந்த பெருந் தெரு ஒன்றில், கனரக வாகனம் ஒன்றின் பின்பகுதி பெட்டி மேடை போன்று மாற்றப் பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய மனிதர் "புதிய ஜெர்மனி உருவாகி விட்டது" என்று முழங்கினார். அவர் பெயர் கார்ல் லீப்னெக்ட். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர். "சோஷலிசம் வாழ்க, சர்வதேச பாட்டாளிவர்க்கம் வாழ்க!" கார்ல் லீப்னெக்ட் முழக்கமிட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

கார்ல் லீப்னெக்ட், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அன்று அவர் உறுப்பினராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. லீப்னெக்ட் மட்டுமல்ல, ரோசா லக்சம்பேர்க், இன்னும் பல கட்சி உறுப்பினர்களும் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளாக இருந்த காலத்தில், "சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி"(USPD) பெயரில் இயங்கினார்கள்.

9 நவம்பர் 1918 ம் ஆண்டு, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கார்ல் லீப்னெக்ட், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையிலேயே அன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசு இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பகரமான சூழ்நிலையில் இரண்டு அறிவிப்புகள் வந்தன. ஒன்று, கம்யூனிஸ்டுகளின் "சோஷலிச ஜெர்மன் குடியரசு". மற்றது, சமூக ஜனநாயகவாதிகளின் "சுதந்திர ஜெர்மன் குடியரசு".

சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரீட்ரிஷ் எபேர்ட்(Friedrich Ebert), பிலிப் ஷைடேமன்(Philipp Scheidemann) இருவரும் சேர்ந்து இடைக்கால அரசை பொறுப்பேற்பதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் அறிவித்தனர். ஜெர்மனியில் "போல்ஷெவிக் தீவிரவாதம்" வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். அந்த நேரம், கார்ல் லீப்னெக்ட் போன்ற கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் "ஸ்பார்ட்டசிஸ்ட் குழு" என்ற பெயரில் இயங்கி வந்தனர். அவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து லெனினின் போல்ஷெவிக் கட்சியினர் ஆதரவளித்து வந்தனர்.

அடுத்து வந்த இரண்டு மாதங்களும் பெர்லின் நகரில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. வன்முறையும், கலவரமும் நாளாந்த நிகழ்வுகளாகின. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டன. வீதிகளில் தடையரண்கள் போட்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாக்கப் பட்டன. அங்கு ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் காவல் கடமையில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்நாட்டுப் போர், அதாவது வர்க்கப் போர் நிதர்சனமானது.

புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஸ்பார்ட்டசிஸ்ட் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடைமுறையில் உள்ள அரசை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளிவர்க்க அரசை கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால், அது ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இருக்காது என்றனர். (அதாவது, இடைக்கால அரசை ஆயுதமுனையில் தூக்கியெறிய விரும்பவில்லை.) அவர்களுடன் முரண்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் இருந்தனர். அனேகமாக, போரை முடிவுக்கு கொண்டு வருதல், பஞ்சத்தை போக்குதல் போன்ற உடனடி கோரிக்கைகளின் அடிப்படையில் தான் அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.

இதே நேரத்தில், பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்தன. சமூக ஜனநாயகக் கட்சியினர் "போல்ஷெவிக் தீவிரவாதத்தை" ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடாப்பிடியாக நின்றனர். டிசம்பர் மாதக் கடைசியில், பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேறிய கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் போன்றோர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) ஸ்தாபித்தனர். அவர்கள் அடி மட்ட மக்கள் திரளில் இருந்து சோஷலிசப் புரட்சி முன்னெடுக்கப் பட வேண்டும் என்று அறிவித்தனர். "சோஷலிசத்திற்கான போராட்டம் மக்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாளிக்கு எதிரான பாட்டாளிவர்க்கத்தின் போராட்டமாக நடக்க வேண்டும்." என்ற அறைகூவலுக்கு மக்கள் அணிதிரண்டனர். நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. பெர்லின் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சமர்கள் நடந்தன.

1919 ம் ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியிலும் புரட்சி வெடித்து அது விரைவில் சோஷலிச நாடாகும் வாய்ப்புகள் தென்பட்டன. சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற அரசாங்கத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக ஜனநாயகத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்த தீவிர தேசியவாதிகளான இராணுவ அதிகாரிகள் தமது இருப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். புரட்சி வென்றால் அவர்களது தலைகளும் உருளும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

பிரைகொர்ப்ஸ் (Freikorps) எனப்படும் தேசியவெறி கொண்ட கூலிப்படை இராணுவம் பெர்லினுக்கு வரவழைக்கப் பட்டது. அவர்கள் ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் மோதினார்கள். கடுமையான துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் தொழிற்சாலைகள், அரச கட்டிடங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். செங்கொடிகள் கிழித்தெறியப் பட்டன. இருப்பினும், பல கட்டிடங்களில் மறைந்திருந்த புரட்சியாளர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், பெர்லின் நகரம் முழுவதும் யுத்தகளமாக காட்சியளித்தது.

10-13 மார்ச், புரட்சியாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட கிழக்கு பெர்லின் பகுதியை பிரைகொர்ப்ஸ் படையினர் சுற்றி வளைத்தனர். சில அற்பக் காரணங்களுக்காகக் கூட பொது மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் மாதக் கணக்காக கிடைக்காத சம்பளப் பணத்தை கேட்டு தகராறு செய்த முப்பது மாலுமிகள், சுவரில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப் பட்டனர். பெர்லின் நகரில் மட்டும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது பத்தாயிரம் பேரளவில் படுகொலை செய்யப் பட்டனர். புரட்சியாளர்கள் மட்டுமல்லாது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், ஆதரவு தெரிவித்த மக்களும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

ஏற்கனவே, 15 ஜனவரி 1919 அன்று, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் பிரைகொர்ப்ஸ் படையினரால் கடத்தப் பட்டு, சில மணிநேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டதும் கம்யூனிஸ்ட் கட்சி சிதறிப் போனது. தொழிலாளர்களின் புரட்சிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்த சக்தி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. இதனால், பெர்லினில் மட்டுமல்லாது ஜெர்மனி முழுவதும் புரட்சி நசுக்கப் பட்டு விட்டதாக அரசாங்கம் பெருமூச்சு விட்டது. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் ஓயவில்லை. அவர்கள் தோற்கடிக்கப் படவுமில்லை. தலைநகரை தவிர்த்து, ஜெர்மனியின் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.

மிக விரைவில், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் தனது முட்டாள்தனமான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 1920 ம் ஆண்டு, பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரின் ஆயுதங்களை களையப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரைகொர்ப்ஸ் படையினர் பெர்லின் நகரில் ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்கள். இதனால், ஜெர்மன் அரசாங்கம் தெற்கே உள்ள ஸ்டுட்கார்ட் நகருக்கு இடம்பெயர்ந்தது.

சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுத்தனர். அவர்களது அறைகூவலை ஏற்று, பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுமளவிற்கு, அப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது. அதே நேரம், ரோசா லக்சம்பேர்க் போன்ற லெனினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வேறுவழியின்றி ரஷ்ய போல்ஷெவிக் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் வந்தது. லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தோற்கடிக்கப் படவில்லை என்ற உண்மை வலதுசாரி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்னும் சில வருடங்களில் ரஷ்ய போல்ஷேவிக்குகளின் உதவியுடன், ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அன்று கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவர் தான் அடோல்ப் ஹிட்லர். இராணுவத்திற்குள் இருந்த வலதுசாரிகளும், முன்பு புரட்சியை நசுக்கிய பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரும் ஹிட்லரை ஆதரித்தார்கள்.

இதற்குப் பிறகு நடந்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மர்மமான முறையில் பாராளுமன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அந்த சம்பவத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று பழிபோடப் பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆதரவாளர்களும் வேட்டையாடப் பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் பிற்காலத்தில் தடுப்பு முகாம்களில் நச்சுப் புகை அடித்துக் கொல்லப் பட்டனர்.

நாஸி சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சோவியத் யூனியன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா,அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். குறிப்பாக, சோவியத் யூனியனுக்கு அகதிகளாக சென்றவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் திரும்பி வந்தனர். பலர் ஏற்கனவே சோவியத் செம்படையில் சேர்ந்து நாஸிப் படையினருக்கு எதிராக போரிட்டிருந்தனர். அந்த ஜெர்மன் அகதிகள் தான் சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு (DDR) அடித்தளம் இட்டனர்.


1 comment:

Nizhalya said...

Hi bro.. unga blog la epdi Adsense approval vangunenga..