Sunday, May 20, 2018

பெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்!


பெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்கள், தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வந்தனர். அங்கு பல நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்றைய தினம் கலவரத்தில் முடிந்தது. ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ரூசெலாரே (Roeselare) எனும் சிறு நகரத்தில் வாழ்ந்து வந்த, கினே நாட்டை சேர்ந்த குடியேறியான Moïse ‘Lamine’ Bangoura என்ற 27 வயது இளைஞர், நீண்ட காலம் வாடகை பாக்கி வைத்திருந்தார். மே 7 அன்று, கடன் அறவிடும் நிறுவனம் பொலிஸ் உதவியுடன் சம்பந்தப் பட்ட நபரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

வாடகை கட்டத் தவறியதை தவிர வேறெந்த குற்றமும் செய்திராத அந்த இளைஞன், தெருவில் பொலிஸ் விலங்கு மாட்டி வைத்திருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர் "திடீர் சுகயீனம்" காரணமாக இறந்ததாக பொலிஸ் கூறுகின்றது. ஆனால், கண்டபடி அடித்த பொலிஸ் அத்துமீறல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என உறவினர்களும், நண்பர்களும் நம்புகின்றனர். 

பிரேத பரிசோதனை செய்த அதிகாரிகள், "பொலிஸ் தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை" என்று தெரிவித்தனர். இருப்பினும், உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இறந்த இளைஞனின் உடலில் எலும்பு முறிவுகளும், இரத்தக் காயங்களும் காணப் பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த மரணத்தை துயரத்துடன் நினைவுகூர்ந்த ரூசலாரே நகர வாசிகள், அமைதியான முறையில் வீட்டு வாசலில் மலர் வளையம் சாத்தி மெழுகுதிரி கொளுத்தி வந்தனர். இந்த அமைதி வழிப் போராட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. நேற்றைய தினம் (மே 19), கினே இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டது. சுமார் 350 பேர் வந்திருந்த ஆர்ப்பாட்டத்தில், ஆப்பிரிக்க குடியேறிகள் மட்டுமல்லாது, வெள்ளையின பெல்ஜிய மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், ஒரு கட்டத்தில் கைமீறிப் போனது. சில ஆர்ப்பாட்டக்காரர்கள், வழியை மறித்து நின்ற பொலிஸ்காரர்கள் மீது கற்களை வீசினார்கள். அது கலவரத்தில் முடிந்தது. பொலிஸ் அருகில் நின்று கல் வீசிய காரணத்திற்காக ஒருவர் மீது "கொலை முயற்சி" குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், சாதாரண வீட்டு வாடகை சராசரி வருமானத்தில் அரைவாசியை பிடிக்கிறது. குறைந்த அளவு வருமானம் ஈட்டுவோருக்கு இது ஒரு பெரிய தொகை. மாதாந்த செலவை ஈடுகட்ட முடியாமல் வாடகை கட்டத் தவறுவோர் பலருண்டு.

இரண்டு, மூன்று மாதங்கள் வாடகை கட்டத் தவறினால், Incasso எனப்படும் கடன் அறவிடும் நிறுவனம் மொத்த வாடகைத் தொகையுடன், மேலதிகமாக வட்டி, குட்டி போட்டு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதற்கும் கட்டத் தவறினால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவார்கள்.

நீதிமன்றப் படி ஏறினாலும், நீதிபதி ஏழைகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை. மேலதிகமாக நீதிமன்ற செலவையும் சேர்த்துக் கட்டச் சொல்லி தீர்ப்பு வரும். நீதிமன்ற உத்தரவுடன், போலீசாரையும் கூட்டிக் கொண்டு வரும் incasso நிறுவனம், வாடகை கட்டத் தவறியவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, அவரது வீட்டில் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும். அதற்குப் பிறகு அவர் தெருவில் தான் படுக்க வேண்டும். இது மேற்கு ஐரோப்பாவில் பல இடங்களில் நடக்கிறது.

மேலதிக தகவல்களுக்கு: 
ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
Mars voor overleden Lamine lokt 350 deelnemers, heethoofden richten na afloop vernielingen aan

1 comment:

Murali said...

அனைத்து நாடுகளிலும் போலீஸ் என்ற மிருகங்கள் (மன்னிக்க) இப்படித்தான் கொடூரமாக நடக்கிறது.தூத்துக்குடியை மீண்டும் ஜாலியன்வாலாபாக்காக நடத்தியுள்ளது EPS,OPS அடிமை சர்க்கார்.இன்னமும் தூத்துக்குடியில் மனித வேட்டை தொடர்கிறது.காலனீயம் மறுபடியும் வளர்கிறது.வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, ஏகாதிபத்திய அரசுகள், நிறுவனங்கள் இருக்கும்வரை இந்த பாசிச பயங்கரவாதம் தொடர்ந்து நடக்கும்.உலக தழுவிய எதிர் போராட்டங்கள்தான் மாற்றத்தை உறுவாஉருவாம்....