Showing posts with label வீட்டுக்கடன். Show all posts
Showing posts with label வீட்டுக்கடன். Show all posts

Sunday, May 20, 2018

பெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்!


பெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்கள், தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வந்தனர். அங்கு பல நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்றைய தினம் கலவரத்தில் முடிந்தது. ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ரூசெலாரே (Roeselare) எனும் சிறு நகரத்தில் வாழ்ந்து வந்த, கினே நாட்டை சேர்ந்த குடியேறியான Moïse ‘Lamine’ Bangoura என்ற 27 வயது இளைஞர், நீண்ட காலம் வாடகை பாக்கி வைத்திருந்தார். மே 7 அன்று, கடன் அறவிடும் நிறுவனம் பொலிஸ் உதவியுடன் சம்பந்தப் பட்ட நபரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

வாடகை கட்டத் தவறியதை தவிர வேறெந்த குற்றமும் செய்திராத அந்த இளைஞன், தெருவில் பொலிஸ் விலங்கு மாட்டி வைத்திருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர் "திடீர் சுகயீனம்" காரணமாக இறந்ததாக பொலிஸ் கூறுகின்றது. ஆனால், கண்டபடி அடித்த பொலிஸ் அத்துமீறல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என உறவினர்களும், நண்பர்களும் நம்புகின்றனர். 

பிரேத பரிசோதனை செய்த அதிகாரிகள், "பொலிஸ் தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை" என்று தெரிவித்தனர். இருப்பினும், உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இறந்த இளைஞனின் உடலில் எலும்பு முறிவுகளும், இரத்தக் காயங்களும் காணப் பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த மரணத்தை துயரத்துடன் நினைவுகூர்ந்த ரூசலாரே நகர வாசிகள், அமைதியான முறையில் வீட்டு வாசலில் மலர் வளையம் சாத்தி மெழுகுதிரி கொளுத்தி வந்தனர். இந்த அமைதி வழிப் போராட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. நேற்றைய தினம் (மே 19), கினே இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டது. சுமார் 350 பேர் வந்திருந்த ஆர்ப்பாட்டத்தில், ஆப்பிரிக்க குடியேறிகள் மட்டுமல்லாது, வெள்ளையின பெல்ஜிய மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், ஒரு கட்டத்தில் கைமீறிப் போனது. சில ஆர்ப்பாட்டக்காரர்கள், வழியை மறித்து நின்ற பொலிஸ்காரர்கள் மீது கற்களை வீசினார்கள். அது கலவரத்தில் முடிந்தது. பொலிஸ் அருகில் நின்று கல் வீசிய காரணத்திற்காக ஒருவர் மீது "கொலை முயற்சி" குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், சாதாரண வீட்டு வாடகை சராசரி வருமானத்தில் அரைவாசியை பிடிக்கிறது. குறைந்த அளவு வருமானம் ஈட்டுவோருக்கு இது ஒரு பெரிய தொகை. மாதாந்த செலவை ஈடுகட்ட முடியாமல் வாடகை கட்டத் தவறுவோர் பலருண்டு.

இரண்டு, மூன்று மாதங்கள் வாடகை கட்டத் தவறினால், Incasso எனப்படும் கடன் அறவிடும் நிறுவனம் மொத்த வாடகைத் தொகையுடன், மேலதிகமாக வட்டி, குட்டி போட்டு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதற்கும் கட்டத் தவறினால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவார்கள்.

நீதிமன்றப் படி ஏறினாலும், நீதிபதி ஏழைகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை. மேலதிகமாக நீதிமன்ற செலவையும் சேர்த்துக் கட்டச் சொல்லி தீர்ப்பு வரும். நீதிமன்ற உத்தரவுடன், போலீசாரையும் கூட்டிக் கொண்டு வரும் incasso நிறுவனம், வாடகை கட்டத் தவறியவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, அவரது வீட்டில் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும். அதற்குப் பிறகு அவர் தெருவில் தான் படுக்க வேண்டும். இது மேற்கு ஐரோப்பாவில் பல இடங்களில் நடக்கிறது.

மேலதிக தகவல்களுக்கு: 
ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
Mars voor overleden Lamine lokt 350 deelnemers, heethoofden richten na afloop vernielingen aan

Saturday, October 04, 2008

வீடு வரை கனவு, காடு வரை கடன்

அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பாற்ற, சொந்த மக்களை பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்) தோற்றம் இது. "மெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொருங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில் எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் எழுந்துள்ள தேவையை ஒட்டி இந்த கட்டுரையை எழுதவேண்டியுள்ளது.

ஒரு வீடு வாங்குவது தொடர்பாக நமது நாடுகளுக்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். நமது நாடுகளில் (பணக்காரரை விட்டுவிட்டால்) ஓரளவு நல்ல மாத வருமானம் எடுக்கும் நடுத்தர மக்கள், சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு பணத்துடன், தமது சொத்துகள் எதையாவது அடமானம் வைத்து வங்கி கொடுக்கும் கடனையும் வைத்து வாங்குவார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் தகைமையற்ற தொழிலாளிக்கும் கிடைக்கும் சம்பளம் சராசரி ஆயிரம் டாலர் ஆகில், அவர் ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வீட்டை வாங்குவாராகில், அவர் அதற்காக பெற்றுக்கொள்ளும் கடனை 20 அல்லது 30 வருடஙகளில் கட்டி முடிப்பார் என்ற எதிர்பார்ப்பில், வங்கிகள் Mortgage(அடமானம்) பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கின்றன. அந்தக் கடனுக்கு தகுதி பெற நிரந்தர வேலை இருப்பது அவசியம் போன்ற பிற நிபந்தனைகள் உள்ளன. நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது, மேற்குலக நாட்டு பிரசை ஒருவர் தன்னை தானே அடமானம் வைத்துக் கொள்கிறார்.

ஐரோப்பாவில் விதிகள் கடுமையாக உள்ளன. ஒரு வீட்டை வாங்கியவர், சில வருடங்களுக்கு பின்னர் விற்றால், இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காரணம், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப்பணம் முழுமையாக தமக்கு வட்டியுடன் வரவேண்டுமென நினைக்கின்றன. ஒருவேளை நிரந்தர வேலை பறிபோனால், வாங்கிய வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். கடன் வாங்கியவர் காலக்கெடுவுக்குள் இறந்தால், வீட்டுக்கடனை வங்கிகள் திரும்பப்பெற ஆயுட்கால காப்புறுதி கட்டியிருக்க வேண்டும். அல்லது அந்த வீட்டில் வசிக்கும் மனைவி, பிள்ளைகள், தொடர்ந்து கட்ட வேண்டும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இந்த விதிகள் கடுமையாக இல்லை.

லண்டனில் எனக்குத் தெரிந்த சிலர், மாதம் 800 பவுன் வருமானம் எடுப்பவர்கள், வாங்கிய வீட்டிற்கு மாதம் 1000 பவுன் Mortgage கட்டுவதை பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்று கேட்டால், அங்கே சில வங்கி ஊழியர்கள் செய்யும் ஊழலால், அதாவது போலி பத்திரங்கள் தயாரித்து, வருமானத்தை கூட்டி காட்டி Mortgage எடுப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிலும் அது போன்ற நிலைமை எப்போதும் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் நிதி நெருக்கடி, அதன் காரணமாக எழவில்லை. மோசடியே வங்கிகளின் அலுவலக செயல்முறையாக மாறியதன் விளைவு இது. சில வங்கி முகவர்கள் வருமானம் பற்றி எதுவும் கேட்காமலே கடன் கொடுத்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதற்கு முன்னர் அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் பற்றி சிறிய அறிமுகம். முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டமாக, அமெரிக்காவில் வங்கிகள் அனைத்து நிறுவனங்களையும்(அது உற்பத்தி துறையாகட்டும், அல்லது சேவைத் துறையாகட்டும்) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. ஒரு கம்பெனி நடத்துவதற்காக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன்(Liquidity) மட்டும் இதற்கு காரணமல்ல. பல நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வங்கிகளே வாங்கி, பிரதிநிதிகளை கொண்டு பங்குதாரர் கூட்டத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன. அப்படித்தான் வீடு கட்டிக் கொடுக்கும் (ரியல் எஸ்டேட்) கம்பனிகளிலும் வங்கிகள் ஆளுமை கொண்டிருந்தன. அந்த அகங்காரமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானதை பின்னர் பார்ப்போம்.

அனேகமாக 2001 ம் ஆண்டிற்கு(செப்டம்பர் 11 ன் தாக்கம்?) பிறகாக, அமெரிக்க மக்கள் அதிகம் செலவளிக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பியது. பணம் ஓடித்திரிய வேண்டும் என்பது சந்தை பொருளாதார தாரக மந்திரம். நாம் செலவளிக்கும் ஒவ்வொரு சதமும், எங்கேயோ ஒருவருக்கு வருமானமாக போய்ச்சேருகின்றது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் படி, கடன் வழங்கும் விதிகளை தளர்த்த அரசாங்கமும், வங்கிகளும் முன்வந்தன. சந்தேகத்திற்கிடமின்றி இது பலரை கடன்வாங்க வைத்திருக்கும். ஆகவே வழமைக்கு மாறாக, வருமானம் குறைந்தோரும், அல்லது எந்த வருமானமும் இல்லாதவர்களும் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் யாருக்கு என்ன லாபம்? இப்போது தான் வங்கிகளை திவாலாக்கிய மாபெரும் பங்குச்சந்தை சூதாட்டம் ஆரம்பமாகின்றது.

(நமது நாடுகளில் "ரியல் எஸ்டேட் கம்பெனி" என்று அறியப்பட்ட) வீடு விற்கும் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வீடுகளை கட்டி விற்றுத்தள்ளின. Mortgage முறையின் கீழ், ஒருவர் அந்த வீட்டை வாங்கி வங்கியிடம் அடமானம் வைக்கின்றார். அதற்கு வீட்டின் மொத்த விலையை வங்கி ரியல் எஸ்டேட் கம்பெனி கையில் கொடுக்கின்றது. அடமானம் வைத்தவரோ, வீட்டின் விலையை மட்டுமல்ல, தரகர் கூலி, சட்டவாக்க கூலி, போன்றவற்றை ரொக்கமாக கடன் என்ற பெயரில் வீடு வாங்கியவரின் தலையில் கட்டிவிடுகின்றது. கடனுக்கு வரும் வட்டி தான் வங்கிகளின் மிகப்பெரிய வருமானம். வழக்கமாக வீட்டு அடமானப்(Mortgage) பங்குகளை வங்கிகள் சந்தையில் ஏலம் விடுகின்றன. அதேநேரம் சாதாரண "வீட்டு சொந்தக்காரர்" மாதாமாதம் கட்டிவரும் வட்டிப்பணத்தை ஆதாயப் பங்காக(dividend) லாபம் பார்க்கின்றன.

பங்குச்சந்தையில் ஒரு பக்கத்தில் சூதாடியே பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஊகவணிகத்தில் கில்லாடிகளான அவர்கள், வீட்டு அடமானப் பங்குகளை அதன் உண்மையான பெறுமதியை விட பலமடங்கு அதிகமாக உயர்த்தினார்கள். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது மகிழாதவர் யார் இருக்கமுடியும்? இந்த சூதாட்டத்தால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், முதலீட்டு வங்கிகள், பங்குசந்தை தரகர்கள், பங்குதாரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே பெரும் பணம் புரட்டியது. அமெரிக்காவில் இந்த "அற்புதம்" நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளும் அமெரிக்க அசையா சொத்துகளில்(இங்கே வீடுகள்) முதலிட்டன. அப்படி கடல்கடந்து முதலிட்டு லாபமீட்டிய பெல்ஜிய வங்கியான Fortis, நெதர்லாந்து வங்கியான ABN-Amro என்பன இன்று நெருக்கடிக்குள் சிக்கி, திவாலாகும் நிலையில் அவ்வவ் அரசாங்கங்களால் தேசியமயமாக்கப் பட்டுள்ளன.

நடந்தது என்ன? அமெரிக்க பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து, வீட்டு மனை வியாபாரம் பற்றி பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன. விதி தளர்த்தலால், எந்தவித முன்யோசனையுமின்றி சேர்க்கப்பட்ட மக்களின் தொகையை காட்டித் தான் பங்குகளின் பெறுமதி கூடியது. ஆனால் அது ஒரு கற்பனாவாத பெறுமதியாக இருந்தது. பல வருடங்களாக யாரும் அதனை பொருட்படுத்தவில்லை.(பங்குச்சந்தையில் இதெல்லாம் சகஜம்). ஆனால் கடந்த வருடம் தான் வங்கிகளை எதிர்காலம் பற்றிய பயம் கவ்விக்கொண்டது. எந்த யோசனையுமின்றி, இத்தனை கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோமே, அது மீண்டும் எமது கைக்கு வருமா? என்று எழுந்த சந்தேகம் வங்கிகளை திவாலாக்கியது. பொய், புரட்டு, மோசடி நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது. அதற்கு அவர்களே பலியாகிப் போனார்கள்.

இப்போது என்ன நடக்கிறது? குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமெரிக்க திறைசேரி அதிகாரி போல்சன் அறிவித்த 700 பில்லியன் டாலர் உதவி, தமக்கு வேண்டிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு(வீடு வாங்கி, நடுதெருவுக்கு வந்தவர்கள்) ஒரு சதம் உதவி கூட இல்லை. அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் உதவி. இறுதியில் வென்றது முதலாளித்துவம், தோற்றது மக்கள்.

பொருளாதார நெருக்கடி இப்போது தான் ஏற்படுவதல்ல. முன்னர் ஒருமுறை தென் கொரியா கார் உற்பத்தி பெருக்கத்தால், வாங்குவார் அற்று தேங்கிப்போய், அது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. அப்போது கார் கம்பெனிகளை தென்கொரிய அரசு தேசியமயமாக்குவதை தடுத்தது I.M.F. (அதுவும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனம்). இன்று ஒரு சோஷலிச அரசுக்கு நிகராக, அமெரிக்க அரசாங்கம் வங்கிகளை தேசியமயமாக்கி வருகின்றது.

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவி எதற்கு பயன்படுத்தப்படப் போகின்றது? நிச்சயமாக பங்குகளின் பெறுமதியை மீண்டும் அதிகரிக்க வைக்குமென்பதால், பங்குதாரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம்.(இல்லாவிட்டால் தெருவுக்கு வரவேண்டியிருக்கும்). இந்த அரச திறைசேரி நிதியை ஆதாயப்பங்கு வழங்கவும், அதைவிட மேல்மட்ட மானேஜர்களின் போனஸ் கொடுக்கவும் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?

அப்பாவித்தனமாக நெருக்கடியில் சிக்கி வீடுகளை இழந்து நிரந்தர கடனாளிகளாகிய மக்களின் கண்ணீரை துடைப்பதை விட, முதலாளிகளின் செல்வம் குறையக்கூடாது என்பதிலே தான் அமெரிக்க அரசுக்கு அக்கறை.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

முன்னைய பதிவு:
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
-
Burned Feeds for kalaiy