Monday, May 02, 2016

சாதிவெறி- வர்க்கத் துவேஷிகள் அரசுடன் கைகோர்க்கும் இடதுசாரி எதிர்ப்பரசியல்


இலங்கையில் நடந்த மேதினப் பேரணிகளின் படங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டு வந்தேன். அப்போது, அதற்குள் முன்னிலை சோஷலிசக் கட்சியின் மேதினப் படங்களும் இருந்தன. அதைக் கண்டு கொதித்துப் போன, "தமிழ் இன உணர்வாளர்"(?) ஒருவர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்:

//இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?//

ஒரு காலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இருந்தால், நாங்கள் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவியாக தேர்தலை பகிஷ்கரித்தார்கள். அதற்காக, மகிந்த புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக, மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

"ஒருகாலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள்" என்பது குற்றம், குறை கண்டுபிடிப்பவர்களின் தொழில். அது ஆரோக்கியமான அரசியல் அல்ல. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், கூட்டணி, கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் குறிப்பிட்ட சில காலங்கள் சிங்கள அரசை ஆதரித்து வந்துள்ளன.

இந்திய இராணுவத்துடன் யுத்தம் நடந்த காலத்தில், புலிகள் பிரேமதாச அரசுடன் ஒத்துழைத்து, தென்னிலங்கையில் புகலிடம் பெற்றனர். சிங்கள இராணுவத்திடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர்.

புலிகளின் சரி, பிழைகளுக்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே மாதிரியான கோணத்தில் இருந்து தான் முன்னிலை சோஷலிசக் கட்சியை நாங்கள் பார்க்கவேண்டும். புலிகள் அல்ல, அவர்களை ஆதரித்த மக்கள் தான் முக்கியம். அதே மாதிரி மு.சோ.கட்சிக்கு பின்னால் உள்ள மக்கள் தான் முக்கியம். 

மு.சோ.க., ஜேவிபி இல் இருந்து பிரிந்த கட்சி என்ற உண்மையை மறைத்துக் கொண்டு பேசுவது ஒரு திரிபுபடுத்தல். அவர்கள் ஜேவிபி இல் இருந்த காலத்தில், அது வலதுசாரிக் கட்சியாக தான் இருந்தது. அதிருப்தியடைந்து, விமர்சனங்களை வைத்து பிரிந்து சென்றவர்களின் இது புதிய கட்சி என்பதால் இப்போதும் இடதுசாரிகளாக இருக்கிறார்கள்.

ஒரு வலதுசாரிக் கட்சியானது, மகிந்த அரசை மட்டுமல்ல, ஒபாமா அரசையும் ஆதரிக்கும். ஜேவிபி வலதுசாரிப் பாதையில் சென்று மகிந்த அரசை ஆதரித்த நேரம், அதை எதிர்த்து பிரிந்து சென்றவர்கள் தான், பின்னர் முன்னிலை சோஷலிசக் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கினார்கள். அது குறித்த சுயவிமர்சனங்களையும் வைத்துள்ளனர்.

போர் முடிந்த சில வருடங்களிலேயே, கூட்டமைப்பு சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதும், தற்போது மைத்திரி அரசை ஆதரிக்கும் போதும் கண்டுகொள்ளாதவர்கள், மு.சோ.கட்சியை விமர்சிப்பதற்கு அருகதை அற்றவர்கள்.

"இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?" என்று முன்னிலை சோஷலிசக் கட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகை வாசிப்பது, சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமைவாகவே நடக்கிறது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் எந்தக் காலத்திலும் சேர விடாமல் தடுத்து, அவர்களுக்கு இடையில் பகைமையை வளர்க்கும் உள்நோக்கம் கொண்டது.

இதுவும் அதே "தமிழ் இன உணர்வாளரின்" கேள்வி தான்: 
//இனவாதம் பேசி மகிந்தவை ஆட்சியில் அமர்த்தி மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியவர்கள் கட்சி மாறியதும் புனிதர்களாகி விட்டார்களா?//

ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சி மீது, இது போன்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துவோர், உண்மையிலேயே தமிழர் நலனில் இருந்து தான் பேசுகின்றார்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. 

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது கடந்த எழுபது வருட கால வரலாற்றில், இனவாதம் பேசி ஆட்சி நடத்தியதுடன், தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள், இனப்படுகொலைகள் நடத்தி வந்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன், மனோகணேசன் ஆகியோர் மைத்திரி அரசில் மந்திரிகளாக இருக்கிறார்கள்.

அல்லும் பகலும் தமிழர்களின் நலன்களுக்காகவே சிந்திக்கும் தமிழ் இன உணர்வாளர்கள், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் மர்மம் என்னவோ? "இனக்கலவரம், இனப்படுகொலை நடத்திய யு.என்.பி கட்சி புனிதமாகி விட்டதா?" என்று விஜயகலா, மனோ கணேசனிடம் கேட்காத காரணம் என்னவோ?

தமிழ் பேசும் மேட்டுக்குடியினரின் ஆதரவைப் பெற்ற UNP போன்ற வலதுசாரிக் கட்சிகள், எத்தனை தமிழர்களை கொன்று குவித்திருந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஜேவிபி தேர்தலில் இனவாதம் பேசி பிரச்சாரம் செய்தது என்று துள்ளிக் குதிக்கிறார்கள். இது அவர்களது மனதில் உள்ள வர்க்க துவேஷத்தை எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாது சாதிவெறியும் இன்னொரு காரணம்.

தென்னிலங்கையில் உள்ள UNP, SLFP போன்ற வலதுசாரி அரசியல் கட்சிகள், கொவிகம (வெள்ளாளர்) ஆதிக்க சாதியினரால் தலைமை தாங்கப் படுகின்றன. அது மட்டுமல்லாது சிங்கள மேட்டுக்குடியினர், சிங்கள முதலாளிகளின் நிபந்தனையற்ற ஆதரவையும் கொண்டுள்ளன. அதனால் தமிழ் வலதுசாரிகள் அந்தக் கட்சிகளுடன் கூட்டு வைப்பதற்கு பின் நிற்பதில்லை.

இதற்கு மாறாக, ஜேவிபி, மு.சோ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில், இடைத்தர, தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்ளனர். மேலும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பெரும்பாலும் சிங்கள சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் ஆவார்கள். எந்தவொரு சிங்களப் பெரு முதலாளியும் அந்தக்  கட்சிகளை  ஆதரிப்பதில்லை. 

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிவெறியர்களும், வர்க்கத் துவேஷிகளும், ஜேவிபி, மு.சோ.க. ஆகிய அடித்தட்டு மக்களின் கட்சிகளுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் புரிந்து கொள்ளத் தக்கது. அதே "நியாயவான்கள்", UNP போன்ற மேட்டுக்குடி சிங்களவர்களின் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும் கண்கூடு. அவர்கள் தமது ஆதரவை என்றைக்குமே மறைக்கவில்லை.

இனம் இனத்தோடு தான் சேரும். தமிழ் வெள்ளாளர்கள், சிங்கள கொவிகமவுடன் தான் கூட்டுச் சேர்வார்கள். தமிழ் மேட்டுக்குடி வர்க்கம் சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தோடு தான் ஒன்று சேரும். அது தான் வர்க்க அரசியல். 

No comments: