Friday, February 19, 2016

தன்மானமில்லாத "தமிழன்டா"! அமெரிக்காவின் அடிமைடா!!



இலங்கைத் தமிழ் பத்திரிகைகளில், இடதுசாரிகளை, கம்யூனிஸ்டுகளை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதும் தற்போது ஃபேஷனாகி விட்டது. வீரகேசரி, தினக்குரல், உதயன் என்று, பெரும் முதலாளிகளால் தமிழில் வெளியிடப் படும் இந்தப் பத்திரிகைகளின் வர்க்க சார்புத் தன்மை ஏற்கனவே தெரிந்த விடயம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

ஒரு காலத்தில், முதலாளித்துவ பத்திரிகைகள் யாவும், "தமிழர்கள் மத்தியில் இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் எவரும் இல்லை" என்பது போல காட்டிக் கொண்டன. வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. இது ஒரு வகையில், "சிறுபான்மையினத்தின் இருப்பை மறைக்கும் பேரினவாத உத்தி" போன்றது. ஒரு சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்பதை மறுப்பதும், ஜனநாயகப் பண்புகளை நசுக்குவதும் பாசிஸத்தின் கூறுகள் தாம். 

அந்த அடிப்படையில், "கம்யூனிஸ்டுகள் என்றால், ரஷ்யா, சீனாவில் இருப்பார்கள்..." என்று அம்புலிமாமாக் கதைகளை பரப்பி வந்தனர். ஈழப் போரின் இறுதிக் காலத்திலும், அதற்குப் பிறகும், எடுத்ததற்கு எல்லாம் "கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா...." என்று போட்டுத் தாக்குவது வழமையாக இருந்தது. தனக்குத் தானே "அரசியல் ஆய்வாளர்" பட்டம் சூட்டிக் கொண்ட யாராவது, வார இதழில் கட்டுரை எழுதி இருப்பார்கள். 

அறுந்த அரசியல் ஆய்வாளர்கள், தமது கட்டுரையில் என்ன எழுதி இருந்தாலும் பரவாயில்லை. தலைப்பு மட்டும் "கம்யூனிச" சீனாவை, ரஷ்யாவை திட்டுவதாக இருக்கும். இந்த நாடுகள் எல்லாம், கடந்த முப்பது வருட காலமாகவே, முதலாளித்துவ நாடுகளாக இருந்து வருகின்றன என்ற உண்மை, அறுந்த ஆய்வாளர்களுக்கு தெரிவதில்லை. முப்பது வருடமாக கோமாவில் படுத்திருந்து விட்டு எழுந்தவன் போல, "ஏய்... ரஷ்யாவே! ஏய்... சீனாவே! இதுவா உன் கம்யூனிசம்!" என்று திட்டி திட்டி எழுதுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த அலப்பறைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அது மட்டுமல்ல, தமிழ் இளையோர் மத்தியில் இடதுசாரிக் கருத்துக்கள், மற்றும் கம்யூனிசம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது. அம்புலிமாமா ஆய்வாளர்கள் எதிர்பார்த்த மாதிரி, அது ஒன்றும் ரஷ்யா, சீனாவில் இருந்து இறக்குமதியாகவில்லை. இன்றைய உலகமயமாக்கல் தான் இளைஞர்கள் மத்தியில் மாற்று சிந்தனை குறித்த தேடலை உருவாக்கியது. உலகமயமாக்கல் என்றால் அமெரிக்கா இல்லாமலா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அமெரிக்கா அனுப்பி வைத்த நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லி இருந்தார். "ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம். தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால், அது திரும்பி வராது."

2006 ம் ஆண்டு, புலிகளை கடுமையான தொனியில் எச்சரித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Jeffrey Lunstead, "இனப்படுகொலை" நடத்தவும் தயங்க மாட்டோம் என்பதை சூசகமாக குறிப்பிட்டார். "புலிகள் சமாதானத்தை கைவிட்டு விட்டு போருக்கு திரும்பினால், பெரியதொரு விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். மிகவும் பலமான, தீர்க்கமான சிறிலங்கா இராணுவத்தை சந்திக்க வேண்டி இருக்கும்...." என்று தெரிவித்தார். 
  US Ambassador Jeffrey Lunstead made it clear that Washington wanted the “cost of return to war to be high” to the Liberation Tigers of Tamil Eelam (LTTE). If the LTTE “abandon peace”, they would face a “stronger, more capable and more determined” Sri Lankan military, TamilNet quoted Lunstead as saying. 

அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை, வாய்ச் சொல்லில் மாத்திரம் இருக்கவில்லை. இறுதி யுத்தத்திற்கு தேவையான ஆயுதங்களை கொண்டு வந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அதனால், சிறிலங்கா கடற்படை அவற்றை சர்வதேச கடற்பரப்பிலேயே தாக்கி அழித்தன. அது மட்டுமல்லாது, அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கச் சென்றவர்கள் பிடிபட்டனர். ஆயுதத் தரகர்களாக நடித்த FBI உளவாளிகள், அவர்களை பொறிக்குள் மாட்டி விட்டனர்.

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், அமெரிக்காவை நோக்கி சுண்டுவிரலை கூட நீட்ட முடியாத நிலையில் தமிழ் வலதுசாரிகள் உள்ளனர். அவர்களால் மேற்படி உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவும் இல்லை.

அதற்கு மாறாக, நடந்த பிரச்சினைகளுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத கம்யூனிஸ்டுகளை வம்புக்கிழுக்கும் பணியை, தமிழ் முதலாளித்துவ பத்திரிகைகள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. பலசாலியான எதிராளியுடன் மோத முடியாத ஒருவன், வீட்டில் இருக்கும் அப்பாவி மனைவிக்கு அடித்து, தனது  ஆத்திரத்தை தீர்த்த கதை தான் இதுவும். (தமிழன்டா!)

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சி முதலாளி, தற்போது யாழ் குடாநாட்டில் "தீபம்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு வருகின்றார். இதுவும் வழமையான முதலாளித்துவ ஆதரவு பத்திரிகை தான். அதிலே நாடியா என்பவர் "தமிழன்டா" என்ற பெயரில் கட்டுரை எழுதி இருக்கிறார். தமிழ் சமூகத்தை கிண்டலடித்து நகைச்சுவையாக எழுதப்பட்ட கட்டுரை தான். ஆனால், நகைச்சுவை என்ற பெயரில் அது திணிக்கும் அரசியல் ஆபத்தானது. வலதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் பற்றி பரப்பி வரும் அவதூறான நச்சுக் கருத்துகளை, நகைச்சுவை என்ற தேன் தடவி உண்ணக் கொடுக்கிறது.

13.12.2015 தீபம் பத்திரிகையில் பிரசுரமான தமிழன்டா கட்டுரையின் கடைசிப் பந்தி இது:

//கோக்குமாக்கு கொம்மியூனிஸ்ற்

கொஞ்சம் வயது போனவர்கள் இருப்பார்கள். எப்போதும் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு, ஆளையாள் அடித்துவிடுபவர்களை போல விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததென ஒரு தரப்பு சொல்லும். சர்வதேச விசாரணையா, கூடவே கூடாதென இன்னொரு தரப்பு அடம்பிடிக்கும். இவர்களை விட இன்னொரு குறூப் கிளம்பும். போர்க்குற்ற விசாரணையின் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் ஏகாதிபத்திய நலன்கள் என்றொரு மீற்றிங் போடுவார்கள். நாலுபேர் கூடி நாள் முழுக்க அடிபடுவார்கள். அவர்கள் தான் கொம்யூனிஸ்ற் தோழர்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததா இல்லையா? சர்வதேச விசாரணையா, உள்ளக விசாரணையா என உள்நாட்டுக்குள் எல்லோரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்க, அதற்குள் அமெரிக்காவை கொண்டு வந்து கோக்குமாக்கு பண்ணுவது அவர்களின் இயல்பு.// 
(எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி: nadiyanice@yahoo.com)

"தமிழன்டா", "சிங்கலே" போன்ற இனவாதக் கோஷங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மறைப்பதற்கு நன்றாகவே உதவுகின்றன. இதனை கட்டுரை எழுதியவரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 


சிங்கள - பௌத்த பேரினவாத இயந்திரம், எவ்வாறு தமிழினவாதிகளையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். தற்போது இலங்கையில், சிங்கள இனவாத சக்திகள், "சின்ஹலே" என்ற பெயரில் ஸ்டிக்கர் பரப்புரை செய்து வருகின்றன.

"சின்ஹலே" என்பது ஒரு வெற்றுக் கோஷம் அல்ல. அது "சிங்கள இரத்தம்" என்ற இனவாதத் தொனி கொண்டது. இனவாதத்தை வெறுக்கும் முற்போக்கான சிங்களவர்கள், இதற்கெதிராக தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதனால், "சின்ஹலே" பிரச்சாரத்தை நடத்தும் அதே அமைப்பு, தற்போது "தமிழன்டா" என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளது.

எமது நினைவுக்கு எட்டிய வரையில், தமிழகத்தில் இயங்கும் தமிழினவாத அமைப்புகளான நாம்தமிழர் வகையறாக்கள் தான், "தமிழன்டா" பரப்புரை செய்து வந்தன. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

"ஏகாதிபத்தியமா? அது எங்கே இருக்கிறது?" என்று பாமரத் தனமாகக் கேட்கும் அப்பாவியா நீங்கள்? 

ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர், இலங்கையில் எவ்வாறு ஏகாதிபத்தியம் கால் பதித்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை கீழே தந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் "அமெரிக்காவுக்கும், ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்பீர்கள் என்றால்.... தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் பற்றி எத்தனை தடவை எடுத்துக் கூறினாலும், அதையெல்லாம் புறக்கணித்து விட்டு, "அமெரிக்கா ஈழத் தமிழர்களின் நண்பன் (?)" என்று கூறி மக்களை ஏமாற்றுவோர் பலருண்டு. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியதைக் காட்டி, "இப்போது உலக நாடுகள் எல்லாம் எம்மை திரும்பிப் பார்க்கப் போகின்றன" என்றார்கள்.

அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், முதலமைச்சர் விக்னேஸ்வரனை அமெரிக்காவுக்கு அனுப்பி, தமது எஜமான்களை சந்தித்துப் பேச வைத்தனர். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாகவே அமெரிக்க எஜமானின் நடத்தை அமைந்திருந்தது.

"இனப்படுகொலை பற்றிய பேச்சுக்களை குறைத்துக் கொண்டு, மைத்திரி- ரணில் அரசுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்யுமாறு" விக்னேஸ்வரன் அறிவுறுத்தப் பட்டார்.

ஈழப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மூடி மறைப்பதற்காக, "ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை..." என்று, எமக்கு அரசியல் போதிக்கும் தமிழ் வலதுசாரிகள், இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள். வழமை போல இதைக் கண்டும் காணாதது போல, தமது கண்களை இறுக்க மூடிக் கொண்டு கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணில், அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர் செலவில், இரண்டு நவீன மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்தது. கிளிநொச்சியிலும், ஓட்டிசுட்டானிலும், அவை அமெரிக்க நிதியுதவியில் கட்டப் பட்டுள்ளன. 

2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த போருக்குள் அகப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஷெல் வீச்சுகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் காயமடைந்து, மருத்துவ வசதி இன்றி மரணமடைந்தனர். அப்போது அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத, உயிர் காக்கும் மருந்துகளை கூட அனுப்ப மறுத்த அமெரிக்கா, நாற்பதாயிரம் தமிழ் மக்களின் பிணங்களின் மேல் இரண்டு மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதனை அமெரிக்க தூதரக அதிகாரி William Weinstein, நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்து  திற‌ந்து வைத்தார். (தகவலுக்கு நன்றி: அமெரிக்க தூதுவராலயம்; http://srilanka.usembassy.gov/pr-13feb2013.html)

தமிழ் மக்கள் மனதில் அமெரிக்க விசுவாசத்தை பரப்பி வரும், தமிழ் (முதலாளித்துவ) தேசிய ஊடகங்கள், இந்த செய்தியை பிரசுரிக்காது இருட்டடிப்பு செய்துள்ளன. ஒருவேளை, இந்த மருத்துவமனைகளை சீனா கட்டிக் கொடுத்திருந்தால், "தமிழருக்கு துரோகமிழைத்த கம்யூனிச சீனா ஒழிக!" என்ற கோஷம், அனைத்து ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாக வந்திருக்கும். 

சிங்களப் பகுதிகள் சீனாவுக்கும், வட-கிழக்கு தமிழ்ப் பகுதிகள் அமெரிக்காவுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டுள்ளன. யாரை எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதை, வல்லரசு நாடுகள் தெரிந்து வைத்துள்ளன. ஆனால், அந்த உண்மையை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது தான், தமிழ்-முதலாளித்துவ தேசிய ஊடகங்களின் பணியாக உள்ளது. 

"எதிரி எமக்குள்ளே இருக்கிறான்." என்று ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் லீப்னெக்ட் கூறியது, ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கப் பட்டு வருகின்றது.  முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முதலாளித்துவ தமிழ் ஊடகங்களும் தமிழ் மக்களின் எதிரிகள் தான்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய பிரதிநிதியான அவுஸ்திரேலியா, ஈழப் போரின் முடிவுக்குப் பின்னர், சிறிலங்கா அரசுடன் நெருங்கி உறவாடி வருகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாமல், தமிழீழம் அமைக்கலாம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.

ராஜபக்சேக்களுடன் Scott Morrison 
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் தமிழ் அகதிகளை, சிறிலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்து வரும், அவுஸ்திரேலியா குடிவரவுத் துறை அமைச்சர் Scott Morrison இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தனது உற்ற நண்பர்களான ராஜபக்சேக்களை சந்தித்துப் பேசியதுடன், சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை பரிசளித்திருந்தார். 

அதே நேரம், யாழ்ப்பாணத்திற்கு சென்று ஆளுநர் சந்திரஸ்ரீ யையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்கவில்லை. (http://www.theaustralian.com.au/news/scott-morrison-visits-jaffna-snubs-chief-minister-cv-wigneswaran/news-story/0424779b74b2016b070fdbb2a85c44d2?sv=adb7efb136baa3a8541420dd6bc106d3

பில்கேட்சின் Microsoft நிறுவனம், ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் முதலீடு செய்துள்ளது. அதிலும், மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் பிரியமான அம்பாந்தோட்டையில், தெற்காசியாவுக்கான புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டியுள்ளது. 

இலங்கையில் கட்டப்பட்டுள்ள முதலாவது கணணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இதுவாகும். தமிழினப் படுகொலையாளிகளுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம், பில் கேட்சும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளனர்.

அம்பாந்தோட்ட தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கணனிகள், Laptop, Tablet ஆகியன, இலங்கையில் மட்டுமல்லாது, பிற ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்யப் படவுள்ளன. பில் கேட்சின் மைக்ரோசொப்ட் நிறுவனம், EWIS என்ற இன்னொரு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. (Microsoft, EWIS set up country’s first PC manufacturing plant at H’tota; http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84917)

தமிழ் இன உணர்வாளர்கள், மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராட முன்வருவார்களா? மைக்ரோசொப்ட் நிறுவனம், இலங்கையில் போட்டுள்ள முதலீட்டை வாபஸ் வாங்கி, அம்பாந்தோட்ட தொழிற்சாலையை மூடும் வரையில், மைக்ரோசொப்ட் தயாரிப்புப் பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப் படுமா?

தென் தமிழீழக் (கிழக்கிலங்கை) கடற்கரையோரத்தில், எண்ணை, எரிவாயு வளங்களை ஆய்வு செய்யும் உரிமையை, பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான Total S.A. பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், இலங்கை பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திமா வீரக்கொடியும், இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் Jean-Marin Schuh வும் கைச்சாத்திட்டுள்ளனர். (Govt. inks agreement with France's Total for oil exploration in East Coast; http://www.news.lk/news/business/item/12289-govt-inks-agreement-with-france-s-total-for-oil-exploration-in-east-coast)

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுடன் கைகோர்த்த, பிரெஞ்சு அரசுக்கு எதிராக, தமிழ் இன உணர்வாளர்கள் கிளர்ந்து எழுவார்களா? சார்லி ஹெப்டோ படுகொலைகள் நடந்தநேரம் "Je suis Charlie" என்று சொல்லி அழுதவர்கள், தற்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார்களா?

அரச அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகளிடம் தன்மானத்தை எதிர்பார்க்க முடியுமா? இல்லை, தமிழ் இன உணர்வை விட, யூரோ பண உணர்வு முக்கியம் என்று வாயை மூடிக் கொள்வார்களா? இவர்கள் தான், மேற்கத்திய அரசுக்களின் ஆதரவுடன், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு, தமிழீழமும் வாங்கித் தருவார்களாம். நம்புங்க மக்களே!

ஏகாதிபத்தியத்தின் நிழலின் கீழ் இருந்து கொண்டு தமிழீழம் பற்றிப் பேசலாம். ஆனால், தமிழர்கள் தன்மானத்துடன் வாழ முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமின்றி, ஈழம் விடுதலை அடைய முடியாது.

3 comments:

Unknown said...

கொன்னுட்டீங்க...

SaraK said...

நாம் தமிழர் கட்சி சீமான் இந்த முறை மிக தெளிவாக பேசியிருக்கிறார். ஏகாதியபத்தியத்திற்கு எதிராகவும் பேசி இருக்கிறார். உண்மையான தமிழ் உணர்வு உள்ள எவரையும் தமிழராக ஏற்போம் என தெளிவாக கூறுகிறார்... ஆனால ஆள்பவன் மட்டும் தமிழனாக இருக்க வேண்டும் என்கிறார். அனைத்து சாதியினரும் ஒன்று பட வேண்டும் என்று சொல்கிறார். இதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளலாம்... உண்மையாக இருக்குமா அல்லது ஆட்சியை பிடிக்கவா...

Naam Tamilar Seeman Introduce 234 Candidates And Gives Ferocious Public Speech - Must Watch
https://www.youtube.com/watch?v=k87Bn_MCGO8

Seeman introduces 234 Candidates | 2016 Elections
https://www.youtube.com/watch?v=nDiYKAaTTXM&t=1305s


ஜூனியர் விகடன் நேர்காணல் 2016 - முழுகாணொளி | Naam Tamilar Seeman Full Interview - Junior Vikatan
https://www.youtube.com/watch?v=uiDJ1eFyA8o

SaraK said...

பிறகு, ஈழ துரோணர்னு, ஒருத்தர் பல கட்டுரைகள் எழுதுகிறார். அவரை பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா...