Monday, January 12, 2015

தமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பாரிஸ் பேரணி




சர்வதேச சமூகத்தின் இரட்டை வேடம்! 
முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்த நேரம், கண்களை மூடிக் கொண்டிருந்த உலக நாடுகளின் தலைவர்கள், பாரிஸ் படுகொலைக்காக அணிவகுத்துச் செல்கிறார்கள்.

Dear Mahinda Rajapakse, hope you were in Paris. 
We miss you in the march against Terrorism!

பாரிஸ் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணியில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகித்த கொடுங்கோலர்கள். இவர்களுடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் பிரகீத், லசந்த போன்றோரை கொலை செய்த மகிந்த ராஜபக்சவும் சேர்ந்திருந்தால், அந்தப் பேரணி முழுமை அடைந்திருக்கும்.


  • 1) இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு. கடந்த வருடம் காஸாவில் 7 ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர். 
  • 2) ஜோர்டான் மன்னர் அப்துல்லா. கடந்த வருடம் ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்தார். 
  • 3) துருக்கி பிரதமர் Davutoglu. உலகிலேயே பெருமளவு ஊடகவியலாளர்களை சிறைக்கு அனுப்பிய பெருமைக்குரியவர். 
  • 4) அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் Lamamra. அவரது நாட்டில், சில வருடங்களுக்கு முன்னர் கூட, ஊடகம் ஒன்றில் எழுதுவது தற்கொலைக்கு சமமானதாக இருந்தது. இப்போதும் சிலர் விசாரணை இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். 
  • 5) ஜோர்ஜியா, பல்கேரியா பிரதமர்கள். ஊடகவியலாளர்களை அடிப்பதற்கு பேர் போனவர்கள். 
  • 6) கிரேக்க பிரதமர் Samaras. அவரது நாட்டில், ஊர்வலங்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்களை, கலவரத் தடுப்பு பொலிஸ் அடித்து நொறுக்குவது வழமையான சம்பவங்கள். 
  •  7) பாஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர். குறைந்த சனத்தொகை கொண்ட சிறிய நாட்டிற்குள் அதிகளவு ஊடகவியலாளர்களை துன்புறுத்திய சாதனைக்குரியவர். 
  • 8) கட்டார் ஷேக் Mohamed Ben Hamad Ben Khalifa Al Thani. மல்லிகைப் பூவைப் பற்றி கவிதை எழுதிய குற்றத்திற்காக ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கிய புண்ணியவான்.
  • 9) பாலஸ்தீன அதிபர் அப்பாஸ். தன்னை அவமதித்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர்களை தடுத்து வைத்து துன்புறுத்தியவர். 
  • 10) பிரான்சுக்கான சவூதி தூதுவர். அவரது நாட்டில் ஒரு நாஸ்திக இளைஞர், தனது வலைப்பூவில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தினார் என்ற குற்றச் சாட்டில் பொது இடத்தில் கசையடித் தண்டனை வழங்கப் பட்டது.


இன்னும் பலர்... 

அநேகமாக பேரணியில் கலந்து கொண்ட 90% உலக நாடுகளின் தலைவர்கள், தமது நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஊடக சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர்கள். இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகத்திற்கு எதிரான தாக்குதலை கண்டிக்கிறார்கள். நம்புங்கள், இவர்கள் தானாம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் மனித உரிமைக் காவலர்கள்!


பாரிஸ் நகரில், 2013 ஜூன் 5 அன்று, கிளேமோ மேரிக் (Clément Méric) என்ற 19 வயது இளைஞன், பிரெஞ்சு இனவெறிக் காடையர்களினால் தெருவில் அடித்துக் கொலை செய்யப் பட்டான். பலியான இளைஞனும் ஒரு வெள்ளையின பிரெஞ்சுக்காரன் தான். அவன் செய்த குற்றம் என்ன? குண்டு வைத்தானா அல்லது சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டானா? இல்லை. பிரெஞ்சு நிறவெறிக்கு எதிராக, இடதுசாரி சிறு பத்திரிகை ஒன்றில் கட்டுரைகள் எழுதியது மட்டும் தான் அவன் செய்த குற்றம்!

சார்லி எப்டோ அலுவலகத்தில் 12 பத்திரிகையாளர்களை கொன்ற தாக்குதல் பயங்கரவாதம் என்றால், Clément Méric என்ற 19 வயது பத்திரிகையாளனை கொன்றதும் பயங்கரவாதம் தான். "Je suis Charlie" என்று கிளர்ந்தெழுந்தவர்கள், அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் ஆயிரக் கணக்கானோர், அன்று நிறவெறிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக "je suis Clément Méric" என்ற பதாகை தாங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை?

இதைத் தான் "Media Manipulation" என்று சொல்வார்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. அரசுக்கு ஆதரவான வெகுஜன ஊடகங்கள், குறிப்பிட்ட அரசியலுக்கு ஆதரவாக அல்லது எதிராக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்டுள்ளன.

அன்று பிரெஞ்சு ஊடகங்கள் நினைத்திருந்தால், Clément Méric கொலைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, ஆயிரக்கணக்கான மக்களை நிறவெறிப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வைத்திருக்க முடியும். ஒவ்வொருவரையும் "Je suis Clément Méric" என்று சொல்ல வைத்திருக்க முடியும். ஆனால், செய்ய மாட்டார்கள். குறைந்த பட்சம், அந்தக் கொலைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி கூட தெரிவிக்கவில்லை.

பிரெஞ்சு அரசும், வெகுஜன ஊடகங்களும், நிறவெறிப் பயங்கரவாதிகளும், ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் "முஸ்லிம் பயங்கரவாதிகள்" மட்டுமல்ல. பிரான்சில் வாழும் மூன்றமுலக நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுக் குடியேறிகளும் தான். அத்துடன், பிரெஞ்சு பேரினவாத வெறியை அல்லது நிறவெறியை எதிர்க்கும், வெள்ளையின இடதுசாரி ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிரிகள் தான்.

பிரெஞ்சு அரசு லிபியாவிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்களுக்கு ஏராளமான நிதி, ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்து வந்தது. இதனை பிரஞ்சு அரசு பகிரங்கமாகவே அறிவித்து இருந்தது. அப்போதெல்லாம், லிபியா, சிரியா தீவிரவாதிகளையும், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களையும் ஆதரித்து வந்தவர்கள் பலர்.

அப்படியான கபட வேடதாரிகள், பாரிஸ் பத்திரிகை அலுவக தாக்குதலை கண்டிக்கிறார்களாம். அதாவது, பிரெஞ்சு அரசு ஆதரித்த அதே பயங்கரவாதிகள், பிரான்ஸில் தாக்குதல் நடத்தினால் மட்டும் விழித்தெழுந்து, குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைப்பார்கள். தங்களது தகிடுதத்தங்களை, அயோக்கியத்தனத்தை மக்கள் அறிய மாட்டார்கள் என்ற தைரியத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக வீராவேச உரையாற்றுகின்றார்கள்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை விதைத்தவன், தனது நாட்டிலும் அதே பயங்கரவாதத்தை அறுவடை செய்வான். அது பிரெஞ்சு அரசுக்கு நன்றாகப் பொருந்தும்.

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்குப் பின்னர், ஐயோ... பயங்கரவாதம் என்று அலறுபவர்கள், அந்த நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக, பிரான்சில் தான் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நாடுகளில் பிரான்சும் ஒன்று.

எங்கேயாவது வேலை வாய்ப்பு தென்பட்டால், அதனை பூர்வீக வெள்ளையின பிரெஞ்சு மக்களுக்கே முதலில் கொடுப்பார்கள். இதனால், பன்னாட்டுக் குடியேறிகளின் சமூகங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, ஐந்து மில்லியன் இஸ்லாமிய அல்ஜீரியர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். ஏழைகள், வேலையில்லாதோர் எண்ணிக்கை, அந்த சமூகத்தில் அதிகம்.

இந்த உண்மைகளை ஏற்க மறுப்போர், பாரிஸ், மார்செய் புறநகர்ப் பகுதிகளை சென்று பார்வையிட வேண்டும். அவை இன்று மும்பை சேரிகள் போன்று மாறிக் கொண்டிருக்கின்றன. ஏழைகள் மத்தியில் இருந்து தான் திருடர்கள் தோன்றுவார்கள். அது உலக நியதி. ஒரு சில அல்ஜீரியர்கள் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிப் பரம்பரை ஆக்குவது இனவாத உள்நோக்கம் கொண்டது.

சாதாரண வழிப்பறித் திருடர்களை குறைகூறும் பலர், கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? பிரெஞ்சு அரசாங்கத்தில் ஊழல் வாதிகள் மலிந்து போயிருப்பதை, பிரெஞ்சு ஊடகங்களே வெளிப்படுத்தி உள்ளன. இலங்கை மாதிரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதிகள் பலர் அடித்த கொள்ளை ஊரறிந்த இரகசியம்.

காலஞ் சென்ற பிரான்சுவா மித்தரோன் அடித்த கொள்ளை எவ்வளவு? அவருக்கு பின்னர் வந்த ஜாக் சிராக், சார்கோசி தமது பதவிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்த கதைகள் அனைவருக்கும் தெரியும். இனவாதி லெ பென்னுக்கு எதிராக, ஜாக் சிராக் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நேரம், "இனவாதியை தோற்கடிப்பதற்கு, ஒரு திருடனை தேர்ந்தெடுப்போம்" என்று பிரெஞ்சு மக்கள் பகிரங்கமாகவே பேசிக் கொண்டனர். ஏன் இன்று அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

ஏனென்றால், இங்கே பயங்கரவாதத்திற்கு எதிராக கொடி பிடிக்கும் அநேகமானோர் கபட வேடதாரிகள். நேர்மையற்ற அயோக்கியர்கள்.

Nous sommes hypocrites! We are hypocrites!


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:
பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்

1 comment:

Packirisamy N said...

//சாதாரண வழிப்பறித் திருடர்களை குறைகூறும் பலர், கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்?//

அருமையான பதிவு.
அதிகமானோர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.
நன்றி.