Monday, November 11, 2013

தமிழ் தேசியவாதிகளும் இடதுசாரிகள் ஆகலாம்

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன.

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர், இடதுசாரி எதிர்ப்பை தமது நாளாந்த கடமையாக கொண்டுள்ளனர். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் அல்ல. அப்படிப் பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் யாருமே ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழர்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலர், ஒன்றில் அந்த நாடுகளின் குடியுரிமை, அல்லது வதிவிட உரிமை வைத்திருப்பதால், அந்த நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் ஓட்டுப் போடும் வாக்குரிமை பெற்றிருக்கின்றனர். 

அன்றும், இன்றும் பெரும்பான்மையான புலம்பெயர்ந்த தமிழ் வாக்காளர்கள், தேர்தல் வந்தால், எப்போதும் இடதுசாரிக் கட்சிகளுக்கே ஓட்டுப் போடுவது வழக்கம். "தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த", தமிழ் நகரசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட, இடதுசாரிக் கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வென்றவர்கள் தான். இன்னொருவிதமாக சொன்னால், தமிழ் இடதுசாரி அரசியல்வாதிகள் தான், தமிழினத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்கள்.

இணையத்தில் இடதுசாரி எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்பவர்கள் கூட, தனிப்பட்ட வாழ்வில் இடதுசாரிகளை ஆதரிக்கின்றனர். அதாவது, தேர்தல் காலங்களில், அவர்களும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதுடன், இடதுசாரிக் கட்சி சார்பாக போட்டியிடும் (தமிழ்) வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே, பல்லினக் கலாச்சாரத்தை ஆதரிக்கின்றன. வலதுசாரிக் கட்சிகள் எப்போதும் அதனை வெறுப்புடன் நோக்குகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையில் வலதுசாரிகளை ஆதரிக்காதவர்கள், இணையத்தில் மட்டும் இடதுசாரிகளை எதிர்த்துப் பேசுவது வேடிக்கையானது. அது அதிசயம் மட்டுமல்ல, ஆபத்தானது. அரசியலில் அதற்குப் பெயர் கருங்காலித்தனம்.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: http://www.youtube.com/watch?v=Cvf_YDTst_I) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

3 comments:

Nellai Balaji said...

\\பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள். \\\

மறுக்க முடியாத உண்மை...உண்மையான இடது சாரிகள், பல இன குழுக்களை ஆதரிப்பது, அவர்களின் வர்க கட்டமைப்புக்கு எதிரானது அல்லவே ? வர்க்க கட்டமைப்பா இல்லை இனக் குழுக்கள் அங்கீகரிப்பா ??

எதை கொம்முனிசம் ஆதரிக்கிறது?

Kalaiyarasan said...

முதலில் நீங்கள் இனம், இனக்குழு, வர்க்கம் போன்ற சொற்களுக்கு அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். இனம், இனக்குழு என்ற பேதம் கற்காலத்தில் இருந்து தொடர்கின்றது. இன்றைய முதலாளித்துவ நாகரீகம் , அவற்றை எல்லாம் கடந்து செல்கின்றது. இனங்களை, இனக்குழுக்களை ஒன்று சேர்க்கிறது. பிறகு, வர்க்கங்களாக பிரிக்கின்றது. ஆனால், சில நேரம் முதலாளித்துவம் தனது நலன் கருதி, இனங்களை, இனக் குழுக்களை மோதவைத்து வேடிக்கை பார்க்கிறது. இனக் குரோத யுத்தங்களினால் ஆதாயம் அடைகின்றது. அவற்றை இடதுசாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அதற்காக, இடதுசாரிகள் ஒரு குறிப்பிட்ட இனத்தை, இனக்குழுவை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.இடதுசாரிகள் பக்கச் சார்பற்றவர்களாக, நீதிபதி ஸ்தானத்தில் இருக்க வேண்டியவர்கள்.

Nellai Balaji said...

தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி