Sunday, May 26, 2013

யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்



கடலூரில் நடந்த, நாம் தமிழர் கட்சிக் கூட்டத்திற்கு, காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து வந்திருந்தார்கள். அந்த சம்பவம், பல எதிர்வினைகளை தோற்றுவித்திருந்தது. காங்கிரஸ், மற்றும் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எதிர்மறையான எதிர்வினைகள் பிரிவினைவாதப் பீதியூட்டிக் கொண்டிருந்தன. அதே நேரம், மதிமுக போன்ற தமிழீழ ஆதரவு கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட பக்கப் பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தருணத்தில், பல கொள்கை முரண்பாடுகள் இருந்த போதிலும், நான் சீமானின் செயலை ஆதரித்து எழுதி இருந்தேன். அது குறித்து நான் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டிருந்தேன்:

  • //தமிழ் தேசியவாதிகள் யாருடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது, அவர்களது சொந்த அரசியல் தெரிவு. ஆனால், காஷ்மீர் தேசியவாத இயக்கமான JKLF, மற்றும் புலம்பெயர்ந்த சீக்கியரின் காலிஸ்தான் தேசியவாத இயக்கங்களுக்கும், CIA க்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு தான் நெருடலானது. இந்த அமைப்புகளுக்கு CIA நிதி கிடைப்பது, காஷ்மீரி, சீக்கிய சமூகங்களில் ஏற்கனவே தெரிந்த விடயம். ஆகவே, இந்த "CIA Connection" குறித்து தமிழர்கள் விழிப்புடன் இருப்பதும் அவசியம்.//  (Kalaiyarasan Kalai, May 19)
  • //நாம் தமிழர் கட்சி, JKLF உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டமை, தேசியவாத அரசியல் அடிப்படையின் படி சரியான நிலைப்பாடு தான். அதை நாங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், நாம் தமிழர் கட்சியின் கடந்த கால அரசியல் நடைமுறைகளை வைத்து பார்க்கும் பொழுது தான், இந்தப் புதிய கூட்டு குறித்து சந்தேகம் எழுகின்றது. எனது கணிப்பீட்டின் படி, சீமானுடைய அரசியல் பாதை மிகவும் தெளிவானது. அவர் ஒருவேளை "தமிழ் தேசியவாதியோ" என்று, மக்கள் தான் குழம்புகிறார்கள். பாசிசத்தின் குணங்குறிகள் ஆரம்பத்தில் அப்படித் தான் இருக்கும். தங்களது இனப் பெருமை பற்றி மட்டுமே பேசுவார்கள். தங்களது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மட்டுமே தமது கொள்கைகளை நடைமுறைப் படுத்துவார்கள். ஆனால், அவர்களுக்கென்று ஒரு "அயல் விவகார கொள்கை" உண்டு. மற்ற பிரதேசங்களில், தமக்கு நெருக்கமான சக்திகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். 

  • மகாராஷ்டிரத்தில் சிவசேனா தான் சீமானின் கூட்டாளிகள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். சிவசேனாவுக்கு இரண்டு முகங்கள். ஒன்று இந்துத்துவா, மற்றது மராட்டிய இனவாதம். அவர்கள் ஒரு காலத்தில், மும்பையில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை நடத்தியவர்கள் என்ற விடயம் சீமானுக்கு மறந்து விட்டது.தற்போது நாம் தமிழருக்கும், காஷ்மீர் விடுதலை இயக்கமான JKLF உடனும் உறவு ஏற்பட்டதற்கு, முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம். 

  • 1. JKLF சிஐஏ உடன் தொடர்பில் உள்ள விடயம் ஒன்றும் இரகசியமல்ல. நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் சிஐஏ க்கு மிகவும் உவப்பானது. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், தீவிரமான இடதுசாரி எதிர்ப்பாளர்கள் என்பதை அவர்களே பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். மேலும், அமெரிக்காவில் சிஐஏ யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும், "நாடுகடந்த தமிழீழ அரசுடன்" நெருங்கிய உறவு வைத்திருப்பதை, சீமானே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

  • 2. இன்றைய காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில், காஷ்மீரில் JKLF இன் பங்களிப்பு பலவீனமாக உள்ளது. வன்முறையில் இறங்காத, சாத்வீக வழியில் போராடும் JKLF இன் தலைமை, இன்று பல மாற்றங்களை கண்டுள்ளது. யாசின் மாலிக் இந்தியாவுக்குள் ஒரு பிரதேச சுயாட்சி கேட்குமளவிற்கு வந்துள்ளார். அவருக்கும், இந்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அண்மையில், ஜம்முவில் இருந்து விரட்டப்பட்ட இந்து பண்டித்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதிலே வேடிக்கை என்னவென்றால், யாசின் மாலிக் அல்லது JKLF இன் இன்றுள்ள நிலைப்பாட்டுக்கும், சீமான் ஆதரிக்கும் புலிகளின் அரசியலுக்கும் இடையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இந்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் யாசின் மாலிக், ஒரு "காஷ்மீர் டக்லஸ் தேவானந்தா" போன்று வர வாய்ப்புண்டு. 

  • சுருக்கமாக, சீமான் யாசின் மாலிக்கை அழைத்து வந்த விடயம், ஒரு வரவேற்கத் தக்க திருப்பம். ஆனால், அது சிலர் பயமுறுத்துவதைப் போல, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் அல்ல.// (Kalaiyarasan Kalai, May 21)
இதற்காக சந்தோஷப் பட வேண்டிய சீமானின் "நாம் தமிழர் தம்பிகள்", முகப்புத்தகத்தில் என் மீது அவதூறுகளை வாரியிறைத்து வருகின்றனர். (https://www.facebook.com/vallavan.udayaraj/posts/661451097204493)
அப்படி எழுதியவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழனாகப் பிறந்த எல்லோரும்,  "தமிழினவாதிகளின் செயல்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும், அல்லது முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும்," என்று எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையில் நின்று, பக்கச் சார்பற்ற விமர்சனம் வைப்பதை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  Vallavan Udayaraj என்ற "நாம் தமிழர் அனுதாபி" (?), முகநூலில் எனக்கெதிராக எழுதிய அவதூறை முதலில் பார்ப்போம். (கவனிக்கவும்: அவர் எந்த இடத்திலும், எனது பதிவில் எழுதியதை மேற்கோள் காட்டாமல், மேம்போக்காக எழுதிச் செல்கிறார்.)

  • Vallavan Udayaraj : //முகப்புத்தகத்தில் எங்கு திரும்பினாலும் யாசின் மாலிக் மயம், யாசின் மாலிக்கின் மறுபக்கம், அடுத்த பக்கம், அக்கம் பக்கம் என்று ஆளாளுக்கு பக்கம்பக்கமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், இதற்கிடையில் இடது 'சிந்தனையாளர்' ஒருவர் மற்றொரு தேசிய இனத்தோடு சேருவது பிரச்சணையில்லை யாசின் மாலிக்கின் JKLF அமெரிக்காவின் சி.ஐ.ஏ வோடு தொடர்பில் இருக்கிறது அதனை அழைத்து வருவதுதான் பிரச்சணை என்று தன் பங்கிற்கு எழுதியிருந்தார். இந்த புலனாய்வு செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை, எனினும் எழுதியவரின் தருக்க திறமை குறித்து எனக்கு ஓரளவு தெரியும்.//(May 21)
JKLF க்கும், CIA க்கும் தொடர்பிருக்கும் விடயத்தை, நான் மட்டும் முகநூலில் பகிர்ந்து கொள்ளவில்லை. வேறு சிலரும் எழுதியுள்ளனர். யாசின் மாலிக் ஒரு சிஐஏ கைக்கூலி என்று நான் இங்கே கூற வரவில்லை. சிஐஏ தொடர்பில் உள்ள எல்லோரும், கைக்கூலியாக வேண்டிய அவசியம் கிடையாது.

"1991 ம் ஆண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத முகவர் கேபி, சிஐஏ யுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த தொடர்பின் மூலம், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதங்கள்,  அமெரிக்காவிடம் இருந்தது கிடைக்கும் என்று, தேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியிருந்தார்."

இந்தத் தகவலை, அண்மையில் ராஜீவ் கொலை பற்றி புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பிய ஆவணப்படம் ஒன்றில் கூறியிருந்தனர். (பார்க்க: இராஜிவ்காந்தி கொலையும், விடை காணா வினாக்களும்... http://www.youtube.com/watch?v=VYvAK3q4nAw)  அதற்கு அவர்கள், ராஜிவ் சர்மா எழுதிய "Beyond the Tigers" என்ற நூலை ஆதாரமாக காட்டியிருந்தார்கள். இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், இந்த நூலை சவுக்கு பதிப்பகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது. சவுக்கு பதிப்பக உரிமையாளர்கள், மிகத் தீவிரமான புலி ஆதரவாளர்கள் என்பது, தமிழ் இன உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.    

"சிஐஏ க்கும், புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பிருந்ததாக" எழுதிய ராஜீவ் சர்மா, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட சவுக்கு பதிப்பகம், அதனை பலர் அறிய பகிரங்கப் படுத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆகியன, புலிகளை ஆதரிப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்க வேண்டும். இது குறித்து, "வல்லவன் உதயராஜ்" தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளாரா என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். ராஜீவ் சர்மா, சவுக்கு பதிப்பகம், புதிய தலைமுறை ஆகியவற்றின் "தர்க்க திறமை" குறித்தும் அவர் கேள்விக்குட்படுத்தி இருந்தால் அவரது நேர்மையை பாராட்டலாம்.  

புலிகளுக்கும், சிஐஏ க்கும் இடையில் கூட தொடர்பு ஏற்படலாமென்றால், JKLF க்கும், CIA க்கும் இடையில் தொடர்பிருக்க முடியாதா? அந்தப் பிராந்தியத்தில், சிஐஏ ஊடுருவல் அதிகமாக இருப்பதை, சம்பந்தபட்ட உளவு நிறுவனம் பல தடவைகள் உறுதிப் படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ க்கும், சிஐஏ க்கும் இடையிலான தொடர்பு உலகறிந்த இரகசியம். ஆரம்பத்தில், பாகிஸ்தானில் தளமமைத்திருந்த JKLF இயக்கம் விரும்பினால், சிஐஏ யுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் இலகுவான காரியம். சிஐஏ யுடனான உறவு குறித்து, காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அது குறித்தும், நான் ஏற்கனவே முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தேன்:

  • //யாசின் மாலிக் விடயம் தொடர்பாக, இன்று எனது காஷ்மீர் நண்பருடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவர் ஒரு JKLF ஆதரவாளர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார். நாங்கள் இருவரும், மூன்று வருடங்களாக ஒரே அகதிமுகாமில் வசித்துள்ளோம். ஐரோப்பிய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விட்ட படியால், தற்போது அரசியலில் அதிக நாட்டம் அற்றவராக வாழ்கிறார். இன்று அவரிடம், JKLF க்கும், சிஐஏ க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் விசாரித்தேன். அந்த தொடர்பு குறித்து, காஷ்மீர் மக்கள் யாரும் கவலைப்படவில்லை என்பதை, அவரின் பதிலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களைப் பொறுத்தவரையில், காஷ்மீர் சுதந்திர நாடாவதற்கு அமெரிக்கா உதவினால், அதையிட்டு மகிழ்ச்சி அடையும் நிலையில் உள்ளனர்.

  • யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற நிலைமை தான், காஷ்மீர் தேசியவாதிகள் மத்தியில் உள்ளது. இதனை நாங்கள், புலி ஆதரவாளர்களின் அரசியல் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா எப்படிப்பட்ட ஏகாதிபத்தியமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இலங்கையில் அமெரிக்கா தலையிட்டு, தமிழீழம் வாங்கிக் கொடுக்கும் என்றால், அதனை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தான், எமக்குத் தெரிந்த தமிழ் தேசியவாதிகள் யாரும் அமெரிக்காவை எதிர்ப்பதில்லை. அதே நிலைமை தான் காஷ்மீரிலும் காணப்படுகின்றது. பாகிஸ்தான், அமெரிக்காவின் உதவியை பெறுவதைப் போல, நாளை காஷ்மீர் சுதந்திர நாடான பிறகும், அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இந்தியா என்ற பலமான நாட்டை எதிர்த்து நிற்பதற்கு, அமெரிக்க ஆதரவு அவசியம் என்று நினைக்கிறார்கள். அதுவே காஷ்மீர் தேசியவாதிகளின் அரசியல் நிலைப்பாடு.// (Kalaiyarasan Kalai, May 24)
"JKLF க்கும், CIA க்கும் தொடர்பிருக்கும் விடயம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது" என்பதை, அவதூறை எழுதியவரே ஒப்புக் கொள்கிறார். ஆனால், "ஒருவரின் தர்க்கத் திறமை" என்ற, பகிரப்பட்ட தகவலுடன் எந்தவித தொடர்புமற்ற சங்கதியை கொண்டு வந்து, நான் எழுதியது உண்மை இல்லை என்று நிரூபிக்க முனைகிறார். (இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதுவது தான் அவரது தர்க்கத் திறமை.) அதாவது, அவர் ஒருக்காலும் அறிந்திராத, புதிரான விடயத்தை, அவரது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால், அதிலே தோல்வியடைந்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், "வல்லவன் உதயராஜ்" என்ற நண்பரின் புரிந்து கொள்ளும் தன்மை எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதை, அவரே குட்டிக் கதை ஒன்றின் மூலம் தெளிவு படுத்தி விடுகிறார். அந்த நண்பர் எனக்காக எழுதிய குட்டிக் கதை, முரண்நகையாக அவரது அறியாமையை படம்பிடித்துக் காட்ட உதவியுள்ளது:
  • //ஒருநாள் பார்வையற்ற‌ வழிப்போக்கன் ஒருவன் ஒரு கிராமத்தின் வழியாக சென்றுக் கொண்டிருந்தான், தொடர்ச்சியாக நடந்து களைப்படைந்திருந்த அவன், கொஞ்சம் இளைப்பாறலாம் என்று ஒரு வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்தான், அமைதியாக அமர்ந்திருந்த போது தான், வீட்டின் உள்ளிருந்து அழுகைச் சத்தம் வருவதை அவன் கவனித்தான். அப்போது திண்ணையில் அருகில் இருந்தவரிடம் வீட்டுக்குள் என்ன அழுகைச் சத்தம் என்று வினவினான்.அருகிலிருந்தவன், இந்த‌ வீட்டில் குழந்தை இறந்து விட்டது, அதனால் அக்குழந்தையின் தாய் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தான்."குழந்தை இறந்து விட்டதா? எப்படி இறந்தது" என்றான் பார்வையற்றவன். "அந்த பிள்ளையின் அம்மா பால் கொடுத்தாள், அப்போது இறந்து விட்டது" என்றான் இன்னொருவன். "பால் என்றால் எப்படியிருக்கும்" என்று கேட்டான் பார்வையற்றவன். எப்படி சொல்வது என்று யோசித்து "வெள்ளையாகயிருக்கும்" பதிலளித்தான் இன்னொருவன். "வெள்ளை என்றால் எப்படியிருக்கும்?" மீண்டும் கேட்டான் பார்வையற்றவன். மறுபடியும் நன்றாக யோசித்து "வெள்ளை என்றால் கொக்கு போல இருக்கும்" என்றான் இன்னொருவன். "கொக்கு என்றால் எப்படி இருக்கும்" என்று கேட்டான் குருடன். இப்போது கடுப்பாகிவிட்டது இன்னொருவனுக்கு, இருந்தாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு இப்படியிருக்கும் என்று கையை கொக்குபோல வளைத்துக் காண்பித்தான்.அதை தொட்டுப் பார்த்துவிட்டு அந்த குருடன் சொன்னானாம், "ஏன்யா இப்படியொரு வஸ்துவை குழந்தை வாய்க்குள் திணித்தால் குழந்தை இறக்காமல் என்ன செய்யுமாம்?"//

"வல்லவன் உதயராஜ்" என்ற நண்பரின் நிலைத் தகவலை வாசித்த நேரம், அவரது பிரச்சினை வேறு என்பது புரிந்தது. அதாவது, சிஐஏ க்கும் JKLF க்கும் இடையில் தொடர்பிருப்பது அவருக்கு நெருடலாகப் படவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பகிரங்கமாக ஆதரிக்கும் தமிழினவாதிகளுக்கு அது இனிப்பான செய்தி தான். ஆனால், அவரது கண்ணில் முள்ளாக துருத்திக் கொண்டிருந்த வேறொரு தகவலுக்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறார். இது தான் அந்தத் தகவல்:

  • //ஏனெனில் இவரேதான் சில நாட்களுக்கு முன்பு சிங்கள பெளத்த வெறியர்களான 'பெளத்த பல சேனா'வோடு சீமானுக்கு தொடர்பிருக்கிறது என்று சொல்லி அதனை தனது தருக்க திறமையில் வாயிலாக நிறுவியிருந்தார், அதாவது சிங்கள இனவெறியர்கள் 'பெளத்த பல சேனா' மராட்டியத்தின் 'சிவசேனா'வோடு தொடர்பில் இருக்கிறது, சீமான் சிவசேனாவோடு 'நெருங்கிய' தொடர்பில் இருக்கிறார், எனவே பெளத்த பல சேனாவுக்கு சீமானுக்கும் தொடர்பு இருக்கிறது, என்று எழுதியிருந்தார்.// (Vallavan Udayaraj, May  21)

இந்த தகவல் ஒரு திரிபு படுத்தல் என்பதை, முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். நான் முகநூலில் பகிர்ந்து கொண்ட பத்திரிகைச் செய்திகளை தான் அவர் குறிப்பிடுகின்றார். "இந்தியாவில் சிவ சேனா, நரேந்திர மோடி நடைமுறைப் படுத்திய கிராமிய அபிவிருத்திக் குழு போன்ற கட்டமைப்பை, இலங்கையில் உருவாக்கப் போவதாக பொதுபல சேனா ஒரு தடவை அறிவித்திருந்தது." இது ஒரு பத்திரிகைச் செய்தி. உண்மையில், வேறு ஒரு பத்திரிகைச் செய்தி, நண்பரை அதிகளவில் பதற்றமடைய வைத்துள்ளது. ஆனால், அதனை தனது வசதிக்கேற்ப திரிபுபடுத்தி, பதற்றத்தில் முற்றிலும் தவறான தகவலாக எழுதி உள்ளார். 

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் வலதுகரமாக திகழும் இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச, சிவ சேனாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக, பொதுபல சேனா செயலதிபர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த தகவலை நான் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அந்த செய்தி இது தான்:

  • //The Bodu Bala Sena (BBS) today claimed that Minister Wimal Weerawansa may have links with Shiva Sena in India. BBS general secretary the venerable Galagoda Aththe Gnanasara thero said that the Minister’s wife is working with a Buddhist monk in Padukka who is funded by the Shiva Sena.// (http://colombogazette.com/2013/05/13/bbs-suspects-wimal-shiv-sena-links/)

அந்த தகவலை பகிர்ந்து கொண்டதுடன் நில்லாது, சீமானுக்கும் சிவ சேனாவுக்கும் இடையிலான தொடர்பையும் நினைவுபடுத்தி இருந்தேன். என் மீது அவதூறு செய்யும் அவசரத்தில், "வல்லவன் உதயராஜ்" என்ற நண்பர், இவ்விரண்டு தகவல்களையும் மறுத்துரைக்க மறந்து விட்டார். அதுவே, அவர் ஆதரிக்கும் இனவாதிகளின் சுயரூபத்தை மீண்டும் உறுதிப் படுத்த உதவியுள்ளது.  ஏற்கனவே, அவருக்கு பதிலளிக்கும் வகையில், முகநூலில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தேன்:


  • //சிவ சேனாவுக்கும், இலங்கையில் சிங்கள இனவாத அமைச்சரான விமல் வீரவன்சவுக்கும் தொடர்பிருக்கும் தகவலை நான் வெளியிட்ட பின்னர், பதற்றமடைந்துள்ள "நாம் தமிழர் ஆதரவாளர்கள்", சிவசேனாவுக்கும் சீமானுக்கும் இடையிலான தொடர்பை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். மும்பையில் 13/02/2012 அன்று, சீமான் சிவ சேனாவின் தேர்தல் பிரச்சார மேடையில் தோன்றினார். தாராவியில் உள்ள 178 வார்டில், பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார். ஒரு காலத்தில் தமிழர்களை மும்பையிலிருந்து துரத்த வேண்டுமென இயக்கம் நடத்திய, சிவ சேனா இயக்கத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன் என, வெளிப்படையாக தமிழர் என்கிற பெயரில் இயக்கம் நடத்தும் சீமான் சொல்வதை என்னென்பது? சீமான் இலங்கை சென்று, சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இனம் இனத்தோடு தானே சேரும்?// (Kalaiyarasan Kalai, May 22)

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. இதற்கு எம் கண் முன்னாலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. சிங்கள இராணுவத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட புலிகளின் தலைவர்களான, கருணா, பிள்ளையான், கேபி, தயா மாஸ்டர், தமிழினி என்று ஒரு பெரிய பட்டாளமே, இன்று மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று, பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது சொல்லியிருந்தால், அது அன்று காமெடியாக தெரிந்திருக்கும். 






இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

1 comment:

Nellai Balaji said...

\\

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. இதற்கு எம் கண் முன்னாலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. சிங்கள இராணுவத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட புலிகளின் தலைவர்களான, கருணா, பிள்ளையான், கேபி, தயா மாஸ்டர், தமிழினி என்று ஒரு பெரிய பட்டாளமே, இன்று மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று, பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது சொல்லியிருந்தால், அது அன்று காமெடியாக தெரிந்திருக்கும்.
\\
இவர்களை சொல்லி குற்றமில்லை..அவர்களின் நடவடிக்கை அப்படி..ஒரு களத்தில் தலைவர் பிரபாவை துதி பாடிய இவர்கள் , இப்போது ராஜபக்ஷே துதி பாடிகள் ஆகி உள்ளார்கள்..ஈழம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இல்லை என்று கூறவியலாது .. இவர்களுக்கு ஈழத்தில் அவர்களின் , தனிப்பட்ட தேவை உள்ளது..அது அதிகாரம் , பதவி எதுவானாலும் இருக்கலாம் ..அது பிரபாவிடம் கிடைத்தால் என்ன ? மஹிந்தவாக இருந்தால் என்ன ??