Saturday, January 05, 2013

சர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய உரிமை


ஐ.நா. சபையும், சர்வதேச சமூகமும், கடந்த காலங்களில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய, எத்தனையோ தேசிய இனங்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. பாலஸ்தீனம், காஷ்மீர், மேற்கு சஹாரா .... இவ்வாறு பல உதாரணங்களை குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் தனி நாட்டுக்காக ஆயுதமெடுத்து போராடி விட்டு, சர்வதேச அங்கீகாரத்திற்காக மேற்கத்திய நாடுகளின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கவில்லை. தொடக்கத்திலேயே ஐ.நா. தலையிட்டு, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து விட்டிருந்தது. அதற்காக பொதுசன வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், பல தசாப்தங்கள் கடந்து விட்ட பொழுதும், ஆக்கிரமிப்புப் படைகள் அகலவுமில்லை, சர்வதேச சமூகம் தலையிடவுமில்லை. 

மேற்கு சஹாரா,  ஸ்பெயினின் காலனியாக இருந்தது. மேற்கு சகாராவில், "சஹ்ராவி" இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அரபி மொழி போன்ற ஒரு பிராந்திய மொழி பேசுகின்றனர். மொரோக்கோவின் அரேபியரை விட தோற்றத்தால் மாறுபட்டவர்கள். 1975 ம் ஆண்டு, ஸ்பானிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, மேற்கு சஹாராவுக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. உடனே, அயல் நாடுகளான மொரோக்கோவும், மொரிட்டானியாவும் படையெடுத்து பல இடங்களை ஆக்கிரமித்தன. பொலிசாரியொ (POLISARIO) என்ற மேற்கு சஹாரா மக்களின் விடுதலைப் படை, 1979 ம் ஆண்டு மொரிட்டானிய படைகளை விரட்டியடித்து, அந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், மொரோக்கோ படைகள் ஆக்கிரமித்த இடங்களில் நிரந்தரமாக தங்கி விட்டன. அந்தப் பிரதேசங்கள் மொரோக்கோவுடன் இணைக்கப் பட்டன. 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு சஹாரா பகுதிகளில் குடியேற வருமாறு, மொரோக்கோ பிரஜைகளுக்கு அழைப்பு விடப்பட்டது. இலட்சக் கணக்கான மொரோக்கோ பிரஜைகள், அரசு வழங்கிய சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக அங்கே சென்று குடியேறினார்கள். அவர்களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியது. பொலிசாரியொ விடுதலைப் படைக்கும், மொரோக்கோ அரச படைகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. மொரிட்டானியாவிடமிருந்து விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் தளம் அமைத்து, போராளிகள் தாக்குதல் தொடுத்தார்கள். 

மொரோக்கொவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின்  எல்லையில், நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டது. பெர்லின் மதில் பற்றி உலகம் அறிந்த அளவுக்கு, "மேற்கு சஹாரா மதில்" பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. (Moroccan Wall) பொலிசாரியொவின்  தனிநாடு விடுதலைப் போராட்டத்தை தனிமைப் படுத்துவதற்கு மதில் உதவியது போல, ஐ.நா. தலையீடும் உதவியது. "நாங்கள் சர்வதேச சமூகத்திடம், ஐ.நா. விடம் முறையிட்டால், அவர்கள் வந்து காப்பாற்றி தமிழினத்திற்கு விடுதலை வாங்கித் தருவார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் பேசும் பலரை பார்த்திருப்போம். ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட, மேற்கு சஹாரா பிரச்சினையில் இருந்து, நாம் படிப்பதற்கு நிறைய உள்ளன. 

1991 ம் ஆண்டு, ஐ.நா. மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், போர் நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில், ஒரு மேற்கு சஹாரா மக்கள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டது. ஆனால், மாதங்கள், வருடங்களாகி, இன்று 2013 வரையில், எந்த வாக்கெடுப்பும் நடக்கவில்லை. மொரோக்கோ அரசு அது குறித்து அலட்டிக் கொள்ளாமல், தன பாட்டில் ஆக்கிரமிப்பை தொடர்கின்றது. மேற்கு சகாராவில் பொஸ்பேட் (phosphate) வளம் நிறைய உண்டு. மொரோக்கோ அரசு, மேற்கு சகாராவில் கொள்ளையடிக்கப்படும் பொஸ்பேட், மற்றும் மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.  அங்கே வாழும் ஐந்து இலட்சம் மக்களுக்கு, ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். ஐ.நா. சபையும் அது குறித்து கவலைப் படவில்லை. குறைந்த பட்சம், அங்கே நடக்கும் மனித உரிமைகள் மீறலை விசாரிக்கக் கூட, ஐ.நா. அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கவில்லை! 

மேற்கு சஹாரா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாகும். அதனால் அங்கு நடப்பது எதுவும் வெளியுலகை சென்றடைவதில்லை. சஹ்ராவி மக்களின் உரிமைகளுக்காக பாடுபடும் அமைப்புகள் தடை செய்யப் பட்டுள்ளன. பாடசாலைகள் கூட பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன. அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் கடுமையாக அடக்கப் படுகின்றன. போலிஸ் தாக்குதலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் காயமடைவதும், மரணமடைவதும் நடக்கின்றது. 2010 ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் ஒருவரும் பொலிசாரால் தாக்கப் பட்டார். அந்த தாக்குதல் சம்பவம் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டும், குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை.

2010 ம் ஆண்டு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய பதிவைப் பார்க்கவும்: "மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்றது  

1 comment:

தமிழ் செல்வா said...

வாழ்த்துக்கள் கலையரசன் அடிமைப்படுத்தப்படும் மக்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களின் போராட்டம் பற்றிய உங்களின் தேடல் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. என்னை போன்ற இது பற்றி தெரியாத மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். மேலும் இத்தகைய போராட்டங்களை தமிழில் பதிவு செய்து நிகழ் கால வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். மாபெரும் உங்கள் பங்களிப்பு தொடரட்டும். மீண்டும் வாழ்த்துக்கள். நட்புடன் செல்வராஜ்