Tuesday, January 22, 2013

தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 17



(பதினேழாம் பாகம்)


வெள்ளையின மக்களின் பூர்வீகம் என்ன? அவர்கள் தான் ஆரியர்களா? இது போன்ற "இனவாத அறிவியலை" நான் ஆராயவில்லை. மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்றுக் காலகட்டத்திலே இந்தியா நோக்கிய வெள்ளையின குடிப்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான வரலாற்று, கலாச்சார சான்றுகளை மட்டுமே ஆராய்கின்றேன். பிரதேச மேலாதிக்கத்திற்காக, இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக அன்றும், இன்றும் பல போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தப் போர்கள் எல்லாமே, கருப்பினத்திற்கும், வெள்ளை இனத்திற்கும் இடையிலான இன ஆதிக்க போட்டியாக இருந்ததில்லை. கருப்பு நிற இனங்களும், வெள்ளை நிற இனங்களும் தமக்குள்ளேயே போர் புரிந்த கதைகள் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கின்றன. அதே நேரம், சில நாகரீகங்கள் கருப்பரும், வெள்ளையரும் கலந்து உருவாகி இருந்தன. இது ஒரு முக்கியமான விடயம் ஆகும். 

உலகில் எந்தவொரு இனமும், இன்னொரு இனத்துடன் கலக்காமல் நாகரீகம் அடைந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இனக்கலப்பு செய்யாமல், இனத் தூய்மை பேணிய இனங்கள் எல்லாம் ஒன்றில் அழிந்து விட்டன, அல்லது காட்டுவாசிகளாக வாழ்கின்றன. உதாரணத்திற்கு, அவுஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவில் வாழ்ந்த இனம், தனிமைப் படுத்தப் பட்ட புவியியல் அமைப்பு காரணமாக, உலகில் வேறெந்த இனத்துடனும் தொடர்பற்று வாழ்ந்து வந்தது. அதனால் அவர்கள் பல தொழில்நுட்ப நிபுணத்துவங்களை  மறந்து விட்டார்கள். புதிய கருவிகளை உருவாக்கவோ, அல்லது வள்ளம் கட்டவோ அவர்களால் முடியவில்லை. இதன் விளைவாக, 19 ம் நூற்றாண்டில் குடியேறிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் அந்த மக்களை இலகுவாக இனவழிப்பு செய்ய முடிந்தது. 

நமது காலத்திற்கு முன் (கி.மு.) பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், சைபீரியா, வட ஐரோப்பிய பகுதிகளில் காலநிலை மாறியது. உறைநிலையும், பனி மூடிய நிலங்களும், இரத்தத்தை உறைய வைக்கும் குளிரும், மனிதர்கள் வாழ முடியாத சூழலை தோற்றுவித்தது.  அங்கு வாழ்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் நாடோடி மக்களாக இருந்ததால், குதிரை வளர்ப்பு அவர்கள் வாழ்வில் முக்கிய இடம்பிடித்தது. சமஸ்கிருதத்தில் குதிரைக்கு அஸ்வம் என்று பெயர். லிதுவேனியாவிலும் குதிரைக்கு அதே பெயர் என்பது, இவ்விரு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது அல்லவா?  மாட்டைக் குறிக்க, சமஸ்கிருதத்தில் "கோ", ஜெர்மன் மொழியில் "கூ" (Kuh). இவ்வாறு நிறைய உதாரணங்களை காட்டலாம். மேலும், இன்றைக்கும் மத்திய ஆசிய துருக்கி இன மக்கள், தமது கூடார வீடுகளை இடத்திற்கு இடம் நகர்த்துவது வழக்கம். அங்கே நீங்கள் ஒரு வீட்டின் முகவரியை தேடிச் சென்று, அந்த இடத்தில் வீடு இருந்த தடயமே இல்லை என்றால் ஆச்சரியப் படாதீர்கள். 

அது மட்டுமல்ல, பெண்களின் கற்பு நெறி "இந்திய-இந்து" சமூகத்தில் எந்தளவு முக்கியமாக கருதப்பட்டதோ, பண்டைய கிரேக்க சமுதாயத்தில் அதேயளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. இன்று துருக்கி மொழி பேசும் மத்திய ஆசிய நாடுகளில், பெண்களின் கற்பு நெறி, "இஸ்லாமிய நெறி" என்ற போர்வையின் கீழ் பின்பற்றப் பட்டு வருகின்றது. இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தோற்றத்தில் வேறு விதமாக இருந்தாலும், வெவ்வேறு மொழிகளை பேசினாலும்; இவர்கள் அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், அல்லது ஒரே மரபை பின்பற்றி வருகின்றனர். இன்றைக்கும் நம் மத்தியில் வாழும் எத்தனையோ பேர், "கலாச்சாரம், பாரம்பரியம்," என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையா? 

ஈரானுக்கு மேலே இருக்கும், ஆர்மேனியா என்ற சிறிய தேசத்தை "ஐரோப்பிய நாடு" என்று வரையறுக்கிறார்கள். அது ஒரு காலத்தில்,  ஈரானிய சாம்ராஜ்யத்திற்குட்பட்ட  ஒரு மாகாணமாக இருந்தது. இன்று எல்லோரும், ஆர்மேனியாவை ஐரோப்பா என்றும், ஈரானை ஆசியா என்றும் கூறுகிறார்கள். 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஆர்மேனிய தேசத்தின் அரைவாசிப் பகுதியை துருக்கி விழுங்கி விட்டது. ஆனால், துருக்கி ஒரு ஆசிய நாடு என்று சொல்கிறார்கள். இந்த முரண்நகை எப்படி தோன்றியது? எந்த நாடு ஐரோப்பாவுக்குள் அடங்குகின்றது? எந்த நாடு ஆசியாவுக்குள் அடங்குகின்றது? இதிலே நிறைய குழப்பம் இருப்பது தெரிகின்றது அல்லவா? ஏனென்றால், இவை எல்லாம் தற்கால அரசியல்வாதிளால் ஏற்படுத்தப் பட்ட பிரிவுகள். ஒரு காலத்தில் ஆர்மேனியர்களின் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரையில் விரிந்திருந்தது. அதை நிரூபிக்கும் வகையில், இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் ஆர்மேனியர்களின் பகுதி ஒன்றுண்டு.  மேலும், லெபனான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலும் ஆர்மேனியர்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர்.இன்றைக்கும், அந்த நாடுகளில் எல்லாம், ஆர்மேனியருகென  தனியான தேவாலயங்கள் உள்ளன.

சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆர்மேனியர் என்ற வெள்ளை இனம் பாபிலோனியர்களின் சாம்ராஜ்யத்திற்குள் பல சிறுபான்மை இனங்களுள் ஒன்றாக வாழ்ந்தனர். அனேகமாக பாபிலோனிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து வீழ்ந்த காலத்தில், வடக்கே ஆர்மேனியர்களின் அரசு தோன்றியது. அப்போது தோன்றிய மித்தானி (இது பற்றி கீழே விரிவாக எழுதப் பட்டுள்ளது.) என்ற ராஜ்யத்தில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளை இனம், ஆர்மேனியரின்  மூதாதையராக இருக்கலாம். அன்றைய காலத்தில், தெற்கில் இருந்த கறுப்பர்களின் நாடான எகிப்து, உலகில் பலமான வல்லரசாக திகழ்ந்தது.மித்தானியர்கள், பிராந்திய மேலாதிக்கத்திற்காக எகிப்தியர்களுடன் போரிட்டு வந்தாலும், பல தடவை அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தனர். எகிப்திய அரச பரம்பரையினர், ஆர்மேனிய- மித்தானி அரச வம்சத்து மணமக்களை மணந்து கொண்டனர். எகிப்தின் பிரபலமான பாரோ மன்னர் அகநாதன், மற்றும் இராணி நெபெர்தித்தி ஆகியோர் ஆர்மேனிய- ஆப்பிரிக்க கலப்பினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 

அரச குடும்பங்களின் மண உறவுகள் என்பதால், அந்தத் தகவல்கள் வரலாற்றில் பதியப் பட்டுள்ளன. அப்படியானால், சாதாரண பொது மக்களும் ஒன்று கலந்திருக்க வாய்ப்புண்டல்லவா? நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, இனக்கலப்பு காரணமாக எகிப்திய, ஆர்மேனிய நாகரீகங்கள் வளர்ந்தனவே ஒழிய, யாருக்கும் எந்த தீங்கும் நேரவில்லை. நான் சொல்வது சரியானால், எதற்காக ஐரோப்பாவில் எங்கேயும் கறுப்பின மக்களை காணவில்லை என்று யாராவது எதிர்க்கேள்வி கேட்கலாம். அன்றைய காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று ஆயிரக்கணக்கான தெற்காசிய மக்கள், அமெரிக்காவிலோ,மேற்கு ஐரோப்பாவிலோ வேலை வாய்ப்பு, வசதியை பெருக்கிக் கொள்வதற்காக  குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, அமெரிக்க, மேற்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசிய நாடுகளில் குடியேறியோர் எத்தனை பேர்? அப்படி நடக்காததற்கு என்ன காரணம்? பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வாழும் மக்கள், வளர்ச்சி அடைந்த பொருளாதார மையங்களை நோக்கி இடம்பெயர்வது புராதன நாகரீகங்களின் காலத்திலும் நடந்தது. 

முதலில் மத்திய கிழக்கில் குடியேறிய வெள்ளையின மக்கள், வட ஆப்பிரிக்காவில் மொரோக்கோ வரை சென்றனர். அவர்கள் எங்கெங்கு குடியேறினார்களோ, அங்கு பேசப்பட்ட மொழிகளையும், கலாச்சாரங்களையும் பின்பற்றினார்கள். இன்று மேற்கத்திய நாடுகளில், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், சொந்த இனத்தின் பிறப்புவீதம் குறைவாக இருப்பதாலும், பொருளாதார அபிவிருத்திக்காக மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். அது போன்ற சூழ்நிலை, அன்றிருந்த எகிப்திய, பாபிலோனிய நாகரீகங்களிலும் ஏற்பட்டிருக்கலாம். "பிலிஸ்தீன்" என்ற கிரேக்க பழங்குடி இன மக்கள் இஸ்ரேலில் குடியேறி, நாகரிக சமுதாயமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. (பிலிஸ்தீன் என்ற சொல்லில் இருந்து தான் பாலஸ்தீனம் பிறந்தது.) வட ஆப்பிரிக்காவில் வாழும், பெர்பர் மக்களும் வெள்ளையினத்தவர்கள் ஆவர். 15 ம் நூற்றாண்டு வரையில் கூட, வெள்ளையின பெர்பர் மக்கள் செறிவாக வாழ்ந்த நகரங்கள், கானா சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளன.

இன்று துருக்கி என்று அறியப்படும் நாட்டின் மத்தியில், ஹித்தித் நாகரீகம் தோன்றியிருந்தது. (Hittites, http://en.wikipedia.org/wiki/History_of_the_Hittites) ஐரோப்பிய கண்டத்தில் முன்தோன்றிய வெள்ளையின நாகரீகம், அல்லது முழுவதும் வெள்ளையின மக்களைக் கொண்ட  இராஜ்ஜியம், அதுவாகத் தான் இருக்க வேண்டும். ஹித்தித் இன மக்களின் அரசு போர்வெறி கொண்டது. அதனால், தனது பிரஜைகளை சிறந்த இராணுவவீரர்களாக மாற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டது. (கிரேக்கத்தில் இருந்த இன்னொரு ஆதிகால ஐரோப்பிய நாகரீகமான ஸ்பார்ட்டா வும், ஒரு இராணுவ சமுதாயமாகவே திகழ்ந்தது.)  ஹித்தித் தலைநகரமான "ஹதுசா" வில், கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள், எவ்வாறு அந்நாட்டு பிரஜைகளின் அன்றாட வாழ்வை பாதித்தன, என்பன போன்ற  விபரங்கள் களிமண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அழிந்து போன ஹித்தித் தலைநகர இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டன. 

ஹித்தித் நாட்டவர்கள், சுமேரியர்கள், அல்லது பாபிலோனியரிடம் இருந்து எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். அதாவது இன்று ஐரோப்பிய மொழிகள், லத்தீன் எழுத்துக்களில் எழுதப் படுவதைப் போல, அன்று பல இனங்கள் சுமேரியரின் எழுத்து வடிவங்களை கடன்வாங்கி பயன்படுத்தினார்கள். சுமேரிய மொழி தெரிந்த ஒருவர் அதனை வாசிக்கலாம், ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது. ஹித்தித் மக்களுக்கு அருகாமையில், ஹூரியன் (அல்லது கூரியன்) என்ற இன்னொரு வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். ஹூரியன் நாகரீகமும் அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியது.

குர்து மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், இன்றைய ஈராக்கின் வட பகுதியில், துருக்கி எல்லையோரம் "இசுவா" என்றொரு நாடு இருந்தது. (Isuwa, http://en.wikipedia.org/wiki/Isuwa) இசுவா என்றால் "குதிரைகளின் நாடு" என்று அர்த்தம். சம்ஸ்கிருத சொல்லான அஸ்வம் என்ற குதிரையை குறிக்கும் சொல்லின் மூலமும், இசுவா நாடாக இருக்கலாம். கூரியன், ஹித்தித் இன மக்கள், குதிரைகளை போருக்கு பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். அந்தத் திறமை, பிற்கால உலக சரித்திரத்தை மாற்றி அமைத்தது. கூரியன், ஹித்தித் மக்களின் வரலாற்றை பார்க்கும் பொழுது, "வேத கால ஆரியர்கள் குதிரைகளில் படையெடுத்து வந்த கதையை" பெருமளவு ஒத்துள்ளது.  மகாபாரதக் கதையில் குறிப்பிடப் படுவது போன்ற குதிரை வண்டிகளையும், போருக்கு பயன்படுத்தி வந்தனர்.

டேவிட் மன்னனின் ராஜ்ஜியம் தோன்றுவதற்கு முன்னர், ஜெருசலேமில் "யெபுசீத், அல்லது ஹொரித்" என்ற இன மக்கள் வாழ்ந்ததாக, யூதர்களின் பைபிளில் (பழைய ஏற்பாடு) எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின் டேவிட் மன்னனும், இஸ்ரேலின் பிரஜைகளும் கறுப்பர்களாக இருந்திருக்க வேண்டும். பெரும்பான்மை கறுப்பர்களைக் கொண்ட மத்திய கிழக்கில், சிறுபான்மை வெள்ளையின மக்கள் குடியேறி வாழ்ந்தார்கள் என்ற எனது கூற்றை, விவிலிய நூல் நிரூபிக்கின்றது. இன்றைய நவீன துருக்கி நாட்டில், "ஹூரியத்" என்றால் குடியரசு என்று அர்த்தமாகும். அந்தச் சொல்லின் மூலம், ஹூரியன் இன மக்கள் என்பதில் சந்தேகமில்லை. ஹூரியன் இன மக்கள், ஒரு காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கிய "மித்தானி" என்ற நாட்டின் நாகரீகத்தை உருவாக்கி இருக்கலாம்.(Mitanni, http://en.wikipedia.org/wiki/Mitanni) 

மித்தானி ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும். மேலும், அந்நாட்டு மக்கள் இந்திரன், மித்ரா, வர்ண பகவான், போன்ற பல "இந்துக்" கடவுளரை வழிபட்டு வந்துள்ளனர். ஆனால், மித்தானி நாட்டின் பிரஜைகள் அனைவரும் வெள்ளையின மக்கள் என்று உறுதியாக கூற முடியாது. சில ஐரோப்பிய மையவாத சரித்திர ஆசிரியர்கள், வெறும் பத்து அல்லது இருபது சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்த முடிவுக்கு வருகின்றனர். ஏனெனில், அந்த சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மூலத்தை கொண்டிருக்கின்றன. மித்தானி ராஜ்யத்தின் சனத்தொகை வெள்ளையர், கறுப்பர், அல்லது இரண்டும் கலந்த கலப்பினத்தவரைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், ஆட்சியாளர்களான மேட்டுக்குடி சமூகம், முழுக்க முழுக்க வெள்ளையராக இருந்திருக்கலாம். அதுவே வர்ணாச்சிரம நால்வர்ண சாதி அமைப்பின் தோற்றுவாயாக இருக்க வேண்டும். பண்டைய இந்தியாவில் மட்டுமல்லாது ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் நால்வர்ண சாதியமைப்பு இருந்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

கூரியன், ஹூரியன் என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்ட வெள்ளையின மக்களின் பூர்வீகம் எது? அவர்களின் ஹூரிய மொழி, இன்றைய குர்து மொழியுடனும், ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் வாழும், செச்செனியர் போன்ற கொகேசிய இனங்களின் மொழியையும் ஒத்துள்ளது. (இன்றைக்கும் உத்தியோகபூர்வ படிவங்களில், வெள்ளையின மக்களை "கொகேசியன்" என்று வகைப் படுத்துகின்றனர்.) அவர்களுக்கு ஹூரியன் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது? பல இன மக்களின் பெயர்கள், காரணப் பெயராக இருந்து புழக்கத்தில் வந்தவை தான். ஆகவே, ஹூரிய மக்களின் பெயரும் ஏதாவது காரணத்தை அடியொற்றி வந்திருக்கலாம். அந்தப் பிரதேசத்தில் இன்றைக்கும் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழியான பார்சி (ஈரான்) மொழியில், "ஹரா" என்றால் மலை என்று அர்த்தம். அதே மொழிக் குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருதத்தில், ஹரா அல்லது ஹரி  (ஹிரான்) என்றால் தங்கம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. 

துருக்கியில் குடியேறிய, ஐரோப்பியரின் மூதாதையரான, ஹூரிய மக்களின் பூர்வீகம் பற்றிய கதைகளில், அவர்கள் "ஹரியின் மக்கள்" என்று குறிப்பிடப் படுகின்றனர்.  ஹூரியர்களின் முன்னோர்கள், "வடக்குத் திசையில் உள்ள தங்க மலையில் இருந்து" வந்து குடியேறியதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. வேதங்களில் சில இடங்களில், இந்திரன் தங்கமலையை காக்கும் கடவுளாக குறிப்பிடப் படுகின்றார். பிற்காலத்தில் மகாத்மா காந்தி கண்டுபிடித்த "ஹரிஜன்" என்ற சொற்பதம், வேத கால ஆரியர்களின் மூலத்தைக் குறித்தது என்பது ஒரு முரண்நகை.  இந்த "தங்கமலை இரகசியம்" வெறும் புராணக் கட்டுக்கதை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஹூரிய புராணக் கதைகளை ஆழமாக ஆராய்ந்தால், அவர்களின் பூர்வீகம் தெளிவாகத் தெரிகின்றது. அந்த இன மக்கள் உயரமான மலைகளை கடந்து வந்திருக்கிறார்கள். அந்த மலைகள், தெற்கு ரஷ்யாவில் உள்ள யூரல் மலைகளாக இருக்கலாம். அப்படியானால், அந்த மக்களின் தாயகம் அதற்குமப்பால் வடக்குத் திசையில் இருக்க வேண்டும். தமது முன்னோரின் பூமியில், நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதால், அதனை தங்கம் என்ற அடைமொழியில் அழைத்து வந்தனர். வட துருவத்தை அண்டிய, ரஷ்யாவின் வட பகுதியில், கோடை காலத்தில் சூரியன் மறைவதில்லை. பகல் போன்று, இரவிலும், 24 மணிநேரமும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். ஆகவே, ஹூரிய இன மக்கள், ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது இத்தால் உறுதியாகின்றது.  மேலும், "சூரியன்", "ஹரி " போன்ற, எமக்கு நன்கு தெரிந்த சம்ஸ்கிருத சொற்களுக்கும், ஹூரியன் என்ற ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லுக்கும் இடையிலான  ஒற்றுமையை கவனிக்கவும். 

(தொடரும்)  

************************************

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber