Sunday, August 15, 2010

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

போலந்து நாட்டின் தலைநகரம் வார்சொவிற்கு, நான் சென்று வந்தது சில நாட்கள் ஆயினும், எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இது ஒரு பயணக்கட்டுரை மட்டுமல்ல, என்னைப் போன்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகப் பின்னணியையும் ஆராய்கின்றது. ஐரோப்பாவில் போலந்து என்ற நாடு குறித்து தமிழ் உலகில் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததது. பாடசாலை பாடங்களில் ஓரிரு தடவைகள் போலந்து பற்றிய குறிப்புகள் வருகின்றன. வரலாற்றுப் பாடத்தில் வரும் வார்சோ ஒப்பந்த நாடுகள், விஞ்ஞானப் பாடத்தில் வரும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த மேரி கியூரி, இதற்கப்பால் போலந்து பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது. எண்பதுகளில் தெரிவான பாப்பரசர் ஜான் பால் கத்தோலிக்கர்கள் மத்தியில் போலந்து குறித்த ஆர்வத்தை தூண்டவில்லை. அதற்கு காரணம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல, போலந்து பற்றிய செய்திகளும் மேற்குலகில் பட்டு எதிரொலித்தே எமக்கு கிடைக்கின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புபவர்களும் போலந்தை தவிர்த்தார்கள். அதற்குக் காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை என்பது தான். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கூற்றில் நியாயம் இருந்தது. வேலையில்லாப் பிரச்சினையால் போலந்து உழைப்பாளிகள் மேற்குலகிற்கு படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பியக் கண்டத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ள பெரிய நாடுகளில் போலந்தும் ஒன்று. அதன் இன்றைய எல்லைகள் இரண்டாம் உலகப்போரின் பின்னர் நிர்ணயிக்கப்பட்டன. போலந்தின் கிழக்குப் பகுதியில் ஒரு துண்டு அன்றைய சோவியத் யூனியன் வசமாகியது. இன்று அது பெலாரஸ் குடியரசின் பகுதி. அந்த நாட்டில் பெலாரஸ் (வெள்ளை ரஷ்யா) என்ற மக்கள் பேசும் மொழி, போலிஷ் மொழி போன்றிருக்கும். போலந்தில் பேசப்படும் போல்ஸ்கி மொழி, ரஷ்ய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. போலந்துக் காரருக்கு ரஷ்யருடன் உள்ள ஜென்மப் பகை காரணமாக இரண்டாம் மொழியாக ரஷ்ய மொழி கற்பதை வெறுக்கிறார்கள். போலந்து சோஷலிச முகாமில் இருந்த காலங்களிலும் பெரும்பான்மை மக்கள் ரஷ்ய மொழி கற்கவில்லை. சரித்திர ரீதியாக போலந்து கத்தோலிக்க நாடு என்பதால், நீண்ட காலமாக மேற்கைரோப்பாவுடன் தொடர்புளை பேணி வந்தனர். சோஷலிச ஆட்சியிலும் கத்தோலிக்க தேவாலயத்தின் அதிகாரங்கள் ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டாலும், செல்வாக்கு குறையாமல் இருந்தது.

சோஷலிச போலந்தை வீழ்த்துவதற்கு பாப்பரசர் ஜோன் போலும், கத்தோலிக்க மத நிறுவனமும் உதவினார்கள். "கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்த" போலந்து மீண்டும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருமென்று கணக்குப் போட்டார்கள். அது தப்புக்கணக்கு என்று பின்னர் தெளிவானது. முதலாளித்துவம் நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதிய மதத்திற்குள் மக்களை தள்ளி விட்டது. எங்கெங்கு காணிலும் பாரிய விளம்பரத் தட்டிகளின் ஆதிக்கம். வார்சோ நகரின் மத்திய பகுதியில் உயரமான கட்டிடங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. ஜன்னல்களை திறக்கத் தடையாக இருக்குமென்பதால் மேற்கைரோப்பிய நகரங்களில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். வங்கிகள், சூப்பர் மார்க்கட்கள் என்று பெரிய வணிகக் கழகங்கள் யாவும் மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களுடையவை. எங்காவது ஒன்றிரண்டு போலந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் சோஷலிச முகாம் நாடாக இருந்த போலந்து ஒரு சில வருடங்களிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்று விட்டது. கம்யூனிச காலகட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் யாவரும் அதனை நோக்கமாக கொண்டே செயற்பட்டனர். மேற்குலக சார்பு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள். பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, போலந்தின் பொருளாதாரம் வளர்முக நிலையடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததன் பலன்களை அறுவடை செய்வதாகவே தெரிந்தது. நடுத்தர வர்க்க படித்த இளைஞர்கள் மேற்கு-ஐரோப்பிய தரத்திற்கு நிகராக சம்பளம் பெறுகின்றனர். கோடை காலத்தில் தென் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு உல்லாசப் பயணம் செய்கின்றனர். வசதிபடைத்த குடும்பங்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு என்று சகல வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கென பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.

வார்சோ நகரம் விரைவாக மாறி வருகின்றது. அது சராசரி ஐரோப்பிய நகரம் போல தோற்றமளிக்கின்றது. புதிதாக எழும்பும் கட்டிடங்கள், செப்பனிடப்படும் வீதிகள், இவற்றில் கட்டுமானப் பணிகள் செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். போலந்து தொழிலாளர்கள், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதால், உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனால் வெளிநாட்டுத் தொழிலாளரை தருவிக்க வேண்டிய நிலை. போலந்தில் ஒரு தகமையற்ற தொழிலாளியின் சராசரி சம்பளம் 300 - 500 யூரோக்கள். வார்சோ நகரில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுப்பதென்றாலும் அவ்வளவு பணம் தேவை! இதனால் இரண்டுக்கு மேற்பட்டோர் வாடகைப் பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர். போலந்து நாட்டினரைப் பொறுத்த வரை பலர் சொந்த வீடுகளில் வாழ்வதால், அவர்களுக்கு அந்த செலவில்லை.

போலந்து மக்கள் சொந்த வீட்டில் வாழ்வது, கம்யூனிச அரசு கொடுத்த சீதனம். கம்யூனிஸ்ட்கள் அனைத்து பிரஜைகளுக்கும் கட்டிக் கொடுத்த (பரம்பரையாக கிடைத்த வீடுகள் வேறு) வீடுகளை இப்போதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். போலிஷ் மக்கள் சொந்த வீடிருப்பதால் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடிகின்றது. போலந்தில் வாழ்க்கைச் செலவு ஐரோப்பியத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கட்களில் பிராண்ட் பொருட்கள் யாவும் மேற்கில் விற்கும் அதே விலைக்கு விற்கப்படுகின்றன. ஆங்காங்கே உள்ளூர் தயாரிப்புகள் சீண்டுவாரின்றி கிடக்கின்றன. குறைவாக சம்பாதிக்கும் அடித்தட்டு மக்களுக்கென்றே சில சூப்பர் மார்கட்கள் இருக்கின்றன. போலந்து முதலாளிகளால் நிறுவப்பட்ட சூப்பர் மார்க்கட்களில், முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

வார்சோ நகரில் பிரமாண்டமான ஸ்டேடியம் ஒன்று கட்டப்படுகின்றது. அடுத்த ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்காக அதனைத் தயார் செய்கின்றனர். இதற்கென சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. ஸ்டேடியம் கட்டப்படும் இடத்திற்கருகில் ஒரு சந்தை இயங்கி வந்தது. அங்கே கடை விரித்தவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டு குடியேறிகள். ஒரு சில போலிஷ்காரரை தவிர, வியட்நாமிய, நைஜீரிய, இலங்கைத்தமிழ் சிறு வியாபாரிகள் தமது சிறு தொகை வருமானத்தை அங்கே தான் தேடிக் கொள்கின்றனர். பல வியாபாரிகள் நியாயமாக வாங்கிய சரக்குகளை விற்றாலும், போலிப் பாவனைப் பொருட்களை விற்பவர்களுக்கும் அது தான் புகலிடம்.

குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்போர் போலியான பிராண்ட் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வார்சோ காவல்துறைக்கு இந்த விடயம் தெரியும் என்ற போதிலும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் நிலைமையை தலைகீழாக மாற்றியது. போலிகளை சோதனையிட போலிஸ் வருவதும், பொருட்களைத் தூக்கிக் கொண்டு வியாபாரிகள் ஓடுவதும் அவ்வப்போது நடந்து வந்தது. ஒரு நாள் அப்படியான நடவடிக்கையின் போது, நைஜீரிய வியாபாரி போலிசை எதிர்த்து நின்று வாதாடியுள்ளார். திடீரென ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கி முழங்கியதில், ஸ்தலத்திலேயே பலியானார். வார்சோவில் ஒரு இனக்கலவரம் உருவாக சிறு பொறி போதுமானதாக இருந்தது. ஆத்திரமடைந்த நைஜீரிய வியாபாரிகள் போலிஸ் வாகனங்களைத் தாக்கி தீயிட்டனர். கலகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போலிஸ் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களால் அனுப்பபட்ட விசாரணைக்குழு வந்து பார்த்து விட்டு போலிஸ் மீது குற்றஞ்சாட்டியது. இருப்பினும் போலந்து போலிசின் நோக்கமும் நிறைவேறியது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சந்தை கலைக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு விமான நிலையம் செல்லும் வழியில் புதிய இடம் ஒதுக்கப்பட்டது. "அமைதியான" போலந்தில் இடம்பெற்ற கலவரம் குறித்து எந்தவொரு சர்வதேச ஊடகமும் அக்கறை கொள்ளவில்லை. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிக்காட்டிய தமிழ் நண்பர், செய்தியை வெளியிடாத ஊடக மௌனம் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினார். தமிழ் ஊடகங்களில் கலையகம் மட்டுமே இணையத்தில் அந்த செய்தியை (பார்க்க :போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை) வெளியிட்டதை சுட்டிக் காட்டினேன். வியப்புடன் என்னை நோக்கினார். கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன, போலந்தில் அகதிகளின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

(போலந்தில் ஒரு அகதி அனுபவிக்கும் இன்னல்களும், சலுகைகளும். அடுத்த பதிவில் தொடரும்)

8 comments:

Anonymous said...

very nice article...

Mohamed Faaique said...

பிரயோசனமான விடயம் எழுதும் ஒரு சிலரில் உங்களுக்கு தனயிடம் உண்டு.. தொடருங்கள் ..
முடிந்தால்.. உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்...

வடுவூர் குமார் said...

போலந்து பற்றி விவரங்கள் அதுவும் வெளிவராத தகவலுடன்...அருமை.

ttpian said...

have u visited keezhamanai?
pl.do:
pathiplans@sify.com

Kalaiyarasan said...

Thank you... Anony, வடுவூர் குமார் & Mohamed Faaique

You can call me in this number: 0031642344458

Vetirmagal said...

Thanks for all the information about Europe.

Greed , violence and economic slavery seems to rule the world now. The European scenery is not better in anyway. The poor are under so much sufferings. How long I wonder?

மருதன் said...

பயனுள்ள நல்ல கட்டுரை கலையரசன். சமீபத்தில்தான Anna Louise Strong எழுதிய I Saw The New Poland பழைய புத்தகக்கடையில் வாங்கினேன். உங்கள் பதிவு அந்தப் புத்தகத்தை உடனே வாசிக்கத் தூண்டுகிறது. நீங்கள் படித்திருக்கிறீர்களா?

Kalaiyarasan said...

நன்றி மருதன். நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை இப்போது தான் கேள்விப்படுகிறேன். கிடைத்தால் நானும் வாசித்துப் பார்க்க வேண்டும். நான் போலந்தில் வார்சோ வரை மட்டுமே போயிருக்கிறேன்.