Thursday, July 22, 2010

சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

(பகுதி : ஒன்று)

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் தமிழ் அகதிகள் இலங்கையில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் தப்பி வந்த அகதிகளையும் சந்தித்தேன். அவர்கள் தம்மை அணுகும் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். யாருடனும் மனம் விட்டு பேச அஞ்சுகிறார்கள். தாயகத்தின் கசப்பான அனுபவங்களை நேசில் சுமந்த வண்ணம் பிழைப்பதற்கு வழி தேடி அலைகின்றனர். அகதிகளுக்கான வேலை வாய்ப்பு இப்போதெல்லாம் முன்னரைப் போலல்ல. அங்கீகரிக்கப்படாத வரை சட்டப்படி வேலை செய்ய முடியாது. அதனால் தமிழ் முதலாளிகளின் கடைகளில் ஆயிரம் பிராங்குகளுக்கு வேலை செய்கிறார்கள். இது அந்நாட்டின் அடிப்படை சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதி.

இருபது வருடங்களுக்கு முன்னர் வந்த பல தமிழ் அகதிகள், இன்று பிரஜாவுரிமையும் பெற்று விட்டார்கள். தனி மரமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்று குடும்பத் தலைவனாக பொறுப்புகளை தலையில் சுமந்த படி திரிகின்றனர். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். அல்லது அப்படிக் காட்டிக் கொள்கின்றனர். காணி வாங்கி வீடு கட்டுகின்றனர். குடும்பத்திற்கு இரண்டு கார் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயரும் போதே செல்வந்த ஐரோப்பிய கனவுலகத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என கருதிக் கொண்டார்கள். "ஐரோப்பாவில் எல்லோரும் சொந்த வீட்டில் வாழ்கிறார்கள், எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள்." எல்லோரும் என்பது எந்தவொரு புள்ளிவிபரத்தினதும் அடிப்படையிலும் சொல்லப்படுவதல்ல.

தெற்காசிய நாடுகளில் பல தாழ்த்தப்பட்ட சாதியினரும் முதலாளித்துவ வளர்ச்சியினூடே வசதிகளைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். அதைக் காட்டியே மேலெழுந்தவாரியாக சாதியம் மறைந்து விட்டதாக கருதிக் கொள்வதைப் போன்றே, மேலை நாடுகளிலும் நிலைமை மாறியுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் மிக மோசமான இனவாதம் மறைபொருளாக உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. பொதுப் போக்குவரத்துகளில் கருப்பனுக்குப் பக்கத்தில் உட்கார மறுக்கும் வெள்ளையர்களைக் கொண்ட நாடு இது. இளம் சமுதாயத்தினர் மத்தியில் நிறவெறி வெளிப்படையாக காணப்படாத போதிலும், பல பொது இடங்களில் நான் கண்கூடாக கண்ட அனுபவம் அது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தமக்கென சொந்த வாகனத்தில் பயணம் செய்வது இனத் தூய்மையை பாதுகாக்க உதவுகின்றது.

ஈழத் தமிழர்கள் செய்யும் தொழில்களைப் பொறுத்த வரை, இருபது வருடங்களுக்குள் பெரிய மாற்றமெதையும் நான் காணவில்லை. முதலாம் தலைமுறை தமிழ் குடியேறிகள், தற்போதும் ரெஸ்டாரன்ட் சமையலறை உதவியாளர்களாக, அல்லது வெதுப்பக (பேக்கரி) தொழிலாளிகளாக பணி புரிகின்றனர். சுவிஸ் முதலாளிகள் கறுப்புத் தமிழரை ரெஸ்டாரன்ட் உள்ளேயும், வெள்ளையின ஐரோப்பியரை வரவேற்பாளர்களாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். பல்லினத்தவரும் வருகை தரும் பெரும் நகரங்கள் விதிவிலக்காக இருக்கலாம். நான் சுவிசில் இருந்த காலங்களில் நன்றாக மொழிபேசும் சிலர், வெயிட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினார்கள். அப்போது ரெஸ்டாரன்ட் முதலாளிகள் கூறியதாவது: "நான் தகுதியைப் பார்த்து உங்களை வேலைக்கு எடுக்கலாம். ஆனால் ஒரு கருப்பன் உணவு பரிமாறினால், சுவிஸ்காரர்கள் வரமாட்டார்கள்!"

இருபது வருடங்களுக்கு பின்னர் நான் பார்த்த சுவிட்சர்லாந்து நிறவாதமற்ற நாகரீகமடைந்த நாடாக மாறிவிடவில்லை. சுவிஸ் கல்வி கற்ற இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர் சிலர் அரசியலில் ஈடுபட்டு மாநில அவைக்கு கூட தெரிவாகியுள்ளனர். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒரு ஆப்பிரிக்கரின் கதையைக் கேட்டால், இனவாதம் எங்கே எல்லை வகுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளின் சமூகசேவையாளராக தன்னை வளர்த்துக் கொண்ட பின்னரே, அவர் பாராளுமன்ற உறுப்பினரானார். அவர் இன்று "கள்ள வாக்கு" போட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வாக்குச்சீட்டு வீடு தேடி வரும். வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும். அந்த சலுகையை பயன்படுத்தி அரசியல் பிரக்ஞை அற்ற வெளிநாட்டவரின் வாக்குகளை தனக்கே போடுமாறு செய்தார், என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. கனவான்களின் நாட்டில் வெள்ளையரின் ஊழல்களை கண்டுகொள்ளாத ஊடகங்கள், பூனையை யானையாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன.

சுவிட்சர்லாந்தில் பணம் சேர்த்த தமிழர்கள் சிலர், தாமே உணவுவிடுதிகளை சொந்தமாக நிர்வகிக்கின்றனர். தரநிர்ணயத்திற்கு பேர் போன சுவிட்சர்லாந்தில், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சோதனைகளில் அகப்பட்ட உணவுவிடுதிகள் பல மூடப்பட்டுள்ளன. முதல் நாள் பொரித்த சமையல் எண்ணையை கொட்டாமல் வைத்திருந்தால் கூட இமாலயத் தவறாகலாம். அதே நேரம் நான் முன்பு வேலை செய்த உணவுவிடுதி ஒன்றில், ஒரு வாரத்திற்கு முன்பே இறுதிப் பாவனைத் தேதி முடிவடைந்த இறைச்சியை குளிரூட்டியில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். உணவுண்ண வருபவர்களுக்கு சமையலறையில் நாட்பட்ட பதார்த்தங்கள் சமைக்கப்படுவது தெரியாது. வெள்ளையின சுவிஸ்காரரான அந்த ரெஸ்டாரன்ட் முதலாளிக்கு தெரிந்தவர்கள் உள்ளூராட்சி சபையில் இருப்பதால், எந்தவொரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியும் எட்டியும் பார்ப்பதில்லை.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்துக்கு நேரே வந்த ஈழத் தமிழர்கள் மிகக் குறைவு. அனேகமாக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அயல்நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியவர்களே பின்னர் சுவிட்சர்லாந்து நோக்கி படையெடுத்தார்கள். சுவிசில் கொடுக்கப்படும் ஊதியம் அதிகம் என்ற செய்தியே, அவர்களை கவர்ந்திழுத்த காந்தமாகும். அன்று முதல் இன்று வரை சுவிட்சர்லாந்தில் ஐரோப்பாவிலேயே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் அதே நேரம் ஐரோப்பாவிலேயே வாழ்க்கைச் செலவு கூடிய நாடும் அது தான். குப்பை கொட்டுவதென்றாலும் அதற்கென அதிக விலையில் விற்கப்படும் பைகளை வாங்கித் தான் வீச வேண்டும். வலது கையால் கொடுப்பதை, இடது கையால் வாங்கும் கண்கட்டி வித்தை தெரிந்தவர்கள் சுவிஸ் ஆட்சியாளர்கள்.

(தொடரும்)

5 comments:

kavinsandron said...

uk vanthu paarkkavum, niraiya panakkarar kalaiyum benz card 2-3num

summa kathai vidak koodathu

Anonymous said...

A good article. If you have time, try to write about each Tamil diaspora and their social & cultural changes/challanges

Anonymous said...

//summa kathai vidak koodathu//

Why can't you tell the fact rather than 'story'?

ராம்ஜி_யாஹூ said...

nice article, thanks for sharing

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு

என்பார்வையில்(சிபஎபா)
, இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.