Friday, August 22, 2008

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.

இது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.
வியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள "லாவோ புரட்சிகர மக்கள் கட்சி"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, "ஹ்மொங்" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான "Air America" வை பயன்படுத்தியது. "லொங் சென்" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.

லொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக! சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.

லாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் "கொம்யூனிச அபாயம்" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு? என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
லாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு "தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த "இரகசிய யுத்தம்" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.

லாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் "யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.

THE MOST SECRET PLACE ON EARTH - CIA'S COVERT WAR IN LAOS


Tell a Friend
________________________________________________

3 comments:

ஜெய் said...

அருமையான கட்டுரை. இன்று என் நண்பர்களுடன் கண்டிப்பாக இதைப்பற்றிய விவாதம் இருக்கும். உலக அரசியலில் என்னவெல்லாம் நடக்கிறது! கடவுளே... கடவுளே...

அரசியல்வாதி said...
This comment has been removed by the author.
Anonymous said...

நண்பரே உங்கள் கட்டுரைகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.