Sunday, August 17, 2008

அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?

ஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு "பனிப்போர்" காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு திரும்புகின்றதா, என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

போலந்தில் நிறுவப்படும் ஏவுகணைகள், ஈரான் போன்ற "முரட்டு நாடுகளில்" இருந்து வரும் அச்சுறுத்தலை தடுக்கவே, என்று அமெரிக்க அரசு கூறுகின்றது. ஆனால் இந்தக் கதையாடல்களை ரஷ்யா ஏற்கத்தயாராக இல்லை. போலந்து நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுத்தி வைக்கப் போவதாக ரஷ்ய பிரதி இராணுவ தளபதி கூறியுள்ளார். மேலும் போலந்து வடக்கு எல்லையோரமாக உள்ள, இன்னும் ஜெர்மனிக்கும் அருகில் உள்ள, "காலினின் கிராத்" என்ற ரஷ்யாவின் பகுதியில், அணுவாயுத ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜோர்ஜிய போரானது, "பழைய ஐரோப்பா", "புதிய ஐரோப்பா" என்று இரு கருத்து வேறுபாடுகள் கொண்ட முகாம்களை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் மோத விரும்பாமல், நல்ல உறவைப் பேண விரும்புகின்றன. அதற்கு மாறாக போலந்து போன்ற புதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று கூறி வருகின்றன. 20 ம் நூற்றாண்டில், சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ், சோஷலிச முகாமாக இருந்த காலகட்டத்தை, அவை தற்போது நினைவு கூறுகின்றன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றிய கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள், தீவிர அமெரிக்க(அல்லது மேற்குலக) ஆதரவாளர்கள்.
அரசன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே அமெரிக்க பக்தர்களாக காட்சிதருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்குலக சார்பு குணாம்சம், 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வரும் அரசியல் தொடர்ச்சி தான். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற கையோடு, லெனின் போலந்திற்கும் செம்படையை அனுப்பி வைத்தார், அங்கேயும் புரட்சிக்கு மக்கள் ஆதரவு கிட்டும் என்ற நினைப்பில். ஆனால் போலந்து தேசிய படைகளின் மூர்க்கமான எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க மாட்டாமல், செம்படை திரும்பி வந்தது. அப்போது ஸ்டாலின் கூறியதானது, "போலந்தை விட்டுவிடுங்கள், அவர்கள் கத்தோலிக்கர்கள், தேசியவாதிகள், நம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள்." போலந்து குறித்த லெனினின் கணிப்பீடு பிழைத்த போது, ஸ்டாலினின் கூற்று நிதர்சனமானது.

போலந்து போலவே இன்று ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் சேர்ந்துள்ள, முன்னாள் சோவியத் பால்ட்டிக் குடியரசுகளான, எஸ்தோனியா, லத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளும், தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர்கள் தான். எந்த அளவுக்கு என்றால், 2 ம் உலக யுத்த காலத்தில் ஹிட்லரின் நாஸிப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட முன்னாள் இராணுவவீரர்களுக்கு இன்றுவரை அரச மரியாதை செலுத்தப்படுகின்றது.

இந்த புதிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், அமெரிக்கா ரஷ்யாவுடன் இராணுவ மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதனாலேயே ஜோர்ஜியாவில் ரஷ்யா படையெடுத்த காரணத்தை காட்டி, நேட்டோவின் விரிவாக்கம், அமெரிக்க (அணுவாயுத)ஏவுகணைகள் நிறுத்துதல் போன்றவற்றை நியாயப்படுத்த பார்க்கின்றன. மேற்கு ஐரோப்பாவோ அதே காரணத்தை காட்டி, இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம், என்று கூறுகின்றன.

இதற்கிடையே ஜோர்ஜிய போரின் போது, "கோரி" நகரில் இருந்த ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்கிய போது, சில அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் பலியாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அங்கு ஏற்கனவே 172 அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள், ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயிற்சியளித்து வந்தனர். ஜோர்ஜியாவில் ரஷ்ய படையெடுப்பை காட்டி, ரஷ்யாவுடன் புதிய பனிப்போரை ஆரம்பிப்பது, அமெரிக்க கடும்போக்காளரின் அரசியல் திட்டமாக உள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், புஷ்ஷின் குடியரசு கட்சி வேட்பாளர் மக் கெயினை வெற்றி பெற செய்வதற்கு, ரஷ்யாவுடனான முறுகல் நிலை பயன்படலாம்.


இது தொடர்பான கடந்தகால பதிவுகள் :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

____________________________________________________

Saturday, August 16, 2008

அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

அமெரிக்க FOX தொலைக்காட்சி, தென் ஒசேத்திய யுத்தத்தில் இருந்து தப்பிய அமெரிக்க சிறுமியின் நேரடி ஒளிபரப்பில், இடையூறு செய்து நிறுத்தியது. காரணம், ஜோர்ஜிய ஜனாதிபதியை ஆக்கிரமிப்பாளர் என்று குற்றம் சுமத்தியதும், ரஷ்ய ராணுவத்திற்கு நன்றி சொன்னதும் தான்.


தெற்கு ஒசெத்தியாவை பூர்வீகமாக கொண்ட அந்த அமெரிக்க சிறுமியும், அவளது மாமியும், போர் தொடங்கி, ஜோர்ஜிய படைகள் குண்டு வீசிக் கொண்டிருந்த வேளை, ஒசெத்தியாவில் உறவினர்களுடன் ஒரு மாத விடுமுறையில் தங்கி இருந்திருக்கின்றனர். குண்டு வீச்சுகளில் இருந்து ஒருவழியாக தப்பி, அமெரிக்கா வந்து சேர்ந்த அவர்களிடம் இருந்து, ஒசேத்திய நிலைமை குறித்து, நேரடி தகவல்களை பெரும் பொருட்டு, அமெரிக்காவின் பிரபலமான "FOX தொலைக்காட்சி" பேட்டி எடுத்தது. நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், ஜோர்ஜிய குண்டுவீச்சில் தமது வீடுகள் சேதமடைந்ததாகவும், ஒரே நாளில் 2000 ஒசேத்திய மக்கள் இறந்ததாகவும், தாம் ஜோர்ஜிய படைகளுக்கு பயந்து ஓடியதாகவும் தெரிவித்தனர். மேலும் தாம் ஜோர்ஜிய மக்களையல்ல, ஜோர்ஜிய அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகவும், ஜனாதிபதி சாகஷ்விலி ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் கூறிக் கொண்டிருந்த போது; இடையூறு செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர், "வர்த்தக இடைவேளை" என்றும், "நேரமில்லை" என்றும் கூறி அவர்களை தொடர்ந்து பேசவிடாது தடுத்து, நிகழ்ச்சியை இடைநிறுத்தினார். இவற்றை நீங்கள், இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நேரடியாக பார்க்கலாம்.
12 year old ossetian girl tells the truth about Georgia.

நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் யாவும், தமது செய்திகளை ஆங்கிலோ-அமெரிக்க நிறுவனங்களான CNN, BBC, REUTERS, AP போன்றவற்றிலிருந்தே பெறுகின்றன. இந்த மேற்குலக ஊடகங்கள், அரச கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்குவதாகவும் பலர் இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமற்ற, தனியார் நிறுவனங்கள் தான். சில நேரம் தாம் சார்ந்த அரசாங்கங்களை விமர்சிக்கும் செய்திகளும் வருவது உண்மை தான். இருப்பினும் "தேசிய நலன்" கருதி முக்கியமான தருணங்களில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கின்றன. இவ்வாறு தான், அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த போது, அமெரிக்காவின் பெரிய வெகுஜன ஊடகங்கள் யாவும் அரசாங்கத்தின் பின்னால் நின்றன.

அதே போன்றே தற்போதும், ஜோர்ஜிய பிரச்சினையில், ரஷ்யாவை கொடூரமான ஆக்கிரமிப்பாளராக காட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன. ஆமாம், அவை வழங்குவது செய்தியல்ல, பக்கச்சார்பான பிரச்சாரம். போர் நடந்த ஜோர்ஜியாவிற்கு இந்த ஊடகங்கள் அனுப்பிய செய்தியாளர்கள் எல்லோரும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் ஜோர்ஜிய மக்கள் பாதிக்கப்பட்டதை காட்டுவதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அப்போது கூட எவராவது ஒரு ஜோர்ஜிய குடிமகன், "ஜனாதிபதி சாகஷ்விலியின் முட்டாள்தனமே எமது அவலத்திற்கு காரணம்", என்று கூறி விட்டால், விழித்துக்கொள்ளும் செய்தியாளர் உடனேயே வேறு ஆட்களை தேடிப்போய் விடுவார். அப்படித்தான் மேற்குலக ஊடகங்கள் யாவும், "ஜோர்ஜிய மக்கள் அனைவரும் தமது அரசாங்கத்தின் பின்னால் நிற்பதாகவும், ரஷ்யாவை வெறுப்பதாகவும்", ஒருபக்க சார்பான தகவல்களை எம்மீது திணிக்கின்றன.

மக்களை மூளைச்சலவை செய்வதில் செய்தி ஊடகங்களின் பங்கு பெரிது. அவர்கள் யாரை நல்லவன் என்கிறார்களோ, யாரை கெட்டவன் என்கிறார்களோ, சொல்வதை நாமும் நம்ப வேண்டும். அது கூட நிரந்தரமன்று, சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜப்பானை எதிரி என்றார்கள், ரஷ்யாவை நண்பன் என்றார்கள். மக்கள் நம்பினர். யுத்தம் முடிந்த பின்னர், ரஷ்யாவை எதிரி என்றும், ஜப்பானை நண்பன் என்றும் கூறினார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல், மக்கள் அதையும் நம்பினர்.

இது சம்பந்தமான கடந்தகால பதிவுகளையும் வாசிக்க :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
___________________________________________________



Tell a Friend

Thursday, August 14, 2008

விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"

"ரஷ்யர்கள் வந்துவிட்டார்கள்!", என்ற வதந்தி கிளப்பிய பீதியினால், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற காலம் ஒன்றுண்டு. 2 ம் உலக யுத்த முடிவில், ஐரோப்பாவை சித்தாந்தரீதியாக பிளவுபடுத்த, "ஜனநாயக தலைவர்களால்" உருவாக்கப்பட்ட வதந்தி அது. ரஷ்யா(அன்று சோவியத் யூனியன்) நேச நாடுகளுக்கிடையில் போடப்பட்ட "யால்ட்டா ஒப்பந்தத்தை" நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்த நேரம் தான்; மேற்குலக வல்லரசுகளின் சதியினால், "பெர்லின் பிரச்சினை" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் "பனிப்போர்" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. "பனிப்போர்" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.

நீடித்த பனிப்போர் ஆயுத போட்டியை அதிகரித்து நாடு திவாலாகியதால், எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஜனாதிபதியான கோர்பசேவ், அமெரிக்காவுடன் சமாதானமாகப் போனால் நாடு முன்னேறும் என்று அப்பாவித்தனமாக நம்பி, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். இரு நாடுகளுக்கிடையிலும் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சோவியத் படைகளை மீளப்பெற்றதுடன், வர்ஷோ (இராணுவ) ஒப்பந்த கூட்டமைப்பை கலைத்து, பேரழிவு தரும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சிதறி, சோஷலிச நாடுகள் யாவும் முதலாளித்துவ நாடுகளாகவும் மாறி விட்டன. அன்று பலர், உலக அழிவு காப்பாற்றப்பட்டு விட்டது என்றும், இராணுவமயமாக்கல், ஆயுதக்குவிப்பு போன்றன இனி இருக்காது என்றும், பல்வேறு கனவுகளில் மிதந்தனர்.

சமாதான விரும்பிகளின் பகற்கனவு பலகாலம் நீடிக்கவில்லை. வர்ஷோ ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு கலைக்கப்பட்டாலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு (நேட்டோ) அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளையும் புதிய அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. புதிய அங்கத்தவர்களுக்கு ஆயுதங்கள் விற்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆயுதக்குவிப்பை தொடர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு தான் மட்டுமே என்ற மமதையில், ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காமல், உலக போலீஸ்காரனாக மாறியது.

மறுபக்கத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, மேற்குலக சார்பு ஜனாதிபதி யெல்ட்சின் தலைமையில் சீர்குலைந்து போய்க்கொண்டிருந்தது. நாட்டு பொருளாதாரம் வங்குறோத்தாகி, பணக்கார நாடுகளின் பிச்சையை எதிர்பார்த்து நின்றது. தேசிய நாணயமான ரூபிளின் மதிப்பிறங்கி, சாதாரண மக்கள் கூட அமெரிக்க டொலர்களை பயன்படுத்த விரும்பினர். ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மட்டுமல்ல, இராணுவ வீரர்களும் மாதக்கணக்காக சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டனர். இதே நேரம் புதிதாக கோடீஸ்வரர்களான சிலர், அநியாயமாக சேர்த்த செல்வத்தை கொண்டு போய், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.


ரஷ்யா 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போது நிலைமைகள் மாற ஆரம்பித்தன. முன்னாள் கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அவரும் "யெல்ட்சின் வழி"யில் செல்ல வேண்டும் என்று மேற்குலக நாடுகள் விரும்பின. ஆட்சிக்கு வந்தவுடன் புட்டின் செய்த முதல் வேலை, ரஷ்யாவின் செல்வத்தை சூறையாடி, வெளிநாடுகளுக்கு கப்பலேற்றிக் கொண்டிருந்த கோடிஸ்வரர்களை தனது எதிரிகளாக்கியது தான். வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளை காரணமாக காட்டி, சில கோடிஸ்வரர்களை சிறையிலிட, மற்றவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள்.

அந்த இடத்தில், வர்த்தக நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை ரஷ்யாவிலேயே முதலீடு செய்யும், தேசிய முதலாளிகள் வந்தார்கள். தொழிலாளர்களின் சம்பளப்பணம், ஓய்வூதியம் என்பன கிரமமாக வழங்கப்பட்டன. பொருளாதார சீர்குலைவு தடுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போனது. இவையெல்லாம் நல்லது தானே, என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு நல்லதாகப் படுவது, மேற்குலகிற்கு கெட்டதாகப் படுகின்றது. புட்டின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் பற்றி, மேற்குலக ஊடகங்கள் விலாவாரியாக எடுத்தியம்பி, மக்கள் மனதில் ரஷ்ய எதிர்ப்பு(அல்லது புட்டின் எதிர்ப்பு) உணர்வுகளை தூண்டி விட்டன.

2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.

நேட்டோ இராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் என்பது, ரஷ்யாவை சுற்றி வளைத்து முன்னரங்க காவல்நிலைகளை கட்டும் நோக்கம் கொண்டது என்பதை ரஷ்ய அரசாங்கம் உணராமல் இல்லை. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கியது கூட, முன்னாள் யூகோஸ்லேவியாவில் ரஷ்ய செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் கூட, நேட்டோ அங்கத்துவராவதை ரஷ்யா எப்போதும் எதிர்த்து வந்தது. மேற்குலகமோ ரஷ்ய எதிர்ப்பை கணக்கெடுக்காமல், தம் பாட்டில் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம், ரஷ்யாவை குஷிப்படுத்தும் நோக்கில், உலக வர்ததக நிறுவனம், பணக்கார நாடுகளின் G7 அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக்கின.

அண்மைக்காலமாக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட "புரட்சிகள்", ரஷ்யாவின் கடுமையான கண்டனத்தை சம்பாதித்தன. ஏனெனில் உண்மையில், அமெரிக்க கோடீஸ்வரனின் "சோரோஸ் பவுன்டேஷன்" போன்ற NGO க்களின் உதவியினால், பெருமளவு பணத்தை கொட்டி தயார்படுத்தப்பட்ட சதிப்புரட்சிகள் தான், மேற்குறிப்பிட்ட "மக்கள் புரட்சிகள்" யாவும். இவற்றின் முக்கிய நோக்கம், ரஷ்ய சார்பு அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதும், மேற்குலக சார்பு தலைவர்களை பதவியில் அமர்த்துவதும் தான். அப்போதெல்லாம் ரஷ்யா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளும்.

தகுந்த தருணம் பார்த்து காத்திருந்த ரஷ்யாவிற்கு, ஜோர்ஜிய ஜனாதிபதி சகாஷ்விலியின் பின்விளைவுகளை உணராத, விவேகமற்ற இராணுவ சாகசம் வழிசமைத்துக் கொடுத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஜோர்ஜிய இராணுத்தின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்த காரணமாகவோ, அல்லது அமெரிக்க படைகள் வரும் என்று நம்பியோ, சகாஷ்விலி "தெற்கு ஒசெத்திய" மீதான இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் ரஷ்ய இராணுவத்தின் மின்னல் வேக பதிலடியை கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. ஜோர்ஜிய அரசு மட்டுமல்ல, மேற்குலக அரசுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஜோர்ஜிய படைகள் புறமுதுகு காட்டி ஓடவும், ரஷ்ய படைகள் ஜோர்ஜிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும்; ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஜோர்ஜியாவிற்கு ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டாலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.தடை சாத்தியமில்லை. அமெரிக்கா செய்யக் கூடியது, உலகப் பொருளாதார நிறுவனம், G 7 ஆகியவற்றில் ரஷ்யாவின் உறுப்புரிமையை பறிப்பது தான். ஆனால் இவை அதிக பலன் தரப்போவதில்லை. ரஷ்யா ஏற்கனவே சீனா, ஈரான், போன்ற பொருளாதாரக் கூட்டாளிகளை சேர்த்துள்ளது. பனிப்போர் காலத்தை போலவே, கியூபா போன்ற நாடுகளின் நட்புறவை புதுப்பித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.

தெற்கு ஒசெத்தியாவில் ஜோர்ஜியா கைவைக்கப் போய் வந்த போரின் விளைவாக, அந்நாட்டில் திட்டமிடப்பட்ட அசர்பைஜானிலிருந்து துருக்கி வரையான எண்ணை குழாய் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக, அதனை நிர்மாணித்துக் கொண்டிருந்த BP தெரிவித்துள்ளது. இது போன்றே பல வெளிநாட்டு முதலீடுகளை இழக்க வேண்டி வரலாம். இது ஜோர்ஜிய அபிவிருத்தியை பின்னோக்கி தள்ளும். மேலும் (கடுமையான ரஷ்ய எதிர்ப்பு காரணமாக) நேட்டோ உறுப்புரிமை நிறைவேறாத கனவாகவே போகலாம். இதை விட தற்போதைய ஜனாதிபதி சாகஷ்விலியே, எல்லாவற்றிக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கணிசமான ஜோர்ஜிய மக்கள் நம்புவதால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. தெற்கு ஒசெத்தியாவை காரணமாக வைத்து தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ பதிலடி, ஜோர்ஜியாவில் தனக்கு சார்பான மாற்று அரசாங்கம் அமைப்பதையே இறுதி லட்சியமாக கொண்டுள்ளது.



ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
______________________________________________________

Saturday, August 09, 2008

ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்

ஒசேத்தியா, லக்சம்பேர்க் அளவே ஆன, ஜோர்ஜியாவில் ஒரு சிறுபான்மைமொழி பேசும் மக்களின் மாநிலம். சோவியத் யூனியன் உடைந்த போது உருவான ஜோர்ஜிய குடியரசில் இருக்க விரும்பாமல், 1991- 1992 யுத்தம் மூலம் பிரிந்து தனியாட்சி நடத்துகின்றது. அன்று முதல் இன்று வரை அண்டை நாடும், வல்லரசுமான ரஷ்யா பாதுகாப்பு வழங்கியதால், 15 வருடங்களுக்கு மேலாக, சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத "தெற்கு-ஒசேத்தியா" என்ற தனி நாட்டை, ஜோர்ஜியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் கொசோவோ சுதந்திர நாடாக முடியுமானால், தெற்கு-ஒசெத்தியாவால் ஏன் முடியாது, என்ற ஆராய்ச்சியை ஒரு பக்கம் வைத்து விட்டு, தற்போது நடக்கும் "ஜோர்ஜிய-ரஷ்ய யுத்தத்தின்" பின்னணியையும், விளைவுகளையும் பார்ப்போம்.

2003 ம் ஆண்டு, மேற்குலக ஊடகங்களால் பெருதும் சிலாகிக்கப்பட்ட, "மாபெரும் ஒரேஞ்சுப் புரட்சி", அந்நாட்டில் ஊழல்மய ஆட்சிக்கொரு முடிவு கட்டும் என்று ஜோஸ்யம் கூறப்பட்டது. அன்றைய புரட்சியின் கதாநாயகன், அமெரிக்க கல்வி கற்ற, நெதர்லாந்து மனைவியை கொண்ட, "சாகாஷ்வில்லி" நாட்டில் தேனும் பாலும் ஓட வைப்பார், என்று மக்களும் கனவுகண்டனர். அந்தோ பரிதாபம், புதிய ஜனாதிபதி சகாஷ்வில்லியின் நண்பர்கள் வட்டத்தை தவிர, வேறு யாரும் ஒரேஞ்சுப் புரட்சியினால் பயனடையவில்லை. விளைவு? மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடினர். இம்முறை புரட்சியின் நாயகனுக்கு எதிரான மக்கள் புரட்சி, கடுமையான போலிஸ் அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது. மேற்குலக நாடுகள் இந்த இரண்டாவது புரட்சியை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் மனதிற்கினிய நண்பன், சகாஷ்வில்லி ஆட்சியதிகாரத்தில் இருப்பது தான். "நம்ம ஆள்" சகாஷ்வில்லியும் ஏமாற்றவில்லை. 2000 ஜோர்ஜிய படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பிவைத்தார். அமெரிக்க தேசம்கடந்த நிறுவனங்களுக்கு நாட்டை திறந்து விட்டார். இதெல்லாம் போதாதென்று, பக்கத்திலிருந்த ரஷ்ய வல்லரசை பகைத்துக் கொண்டு, "நேட்டோ" இராணுவ கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டார்.

மேற்குலக எஜமானர்களின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாக காட்டிக்கொண்ட ஜோர்ஜியா, தனது இழந்த நிலப்பகுதிகளான, ஒசெத்திய மற்றும் அப்காசியா, ஆகிய "தனி நாடுகள்" மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தருணம் பார்த்து இருந்தது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவும், ஜோர்ஜிய இராணுவம் ஒசேத்திய தலைநகர் "ஷின்வலி" மீது படையெடுக்கவும் சரியாக இருந்தது. ரஷ்யா கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. ஒசெத்தியாவில் "சமாதானப்படை"(இந்தப்படையில் ஜோர்ஜியரும் உள்ளனர்) என்ற பெயரில் நிலை நிறுத்தப்பட்டிருந்த பத்து வீரர்கள் மரணித்ததை காரணமாக காட்டி, ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது விமானத்தாக்குதல் நடத்தியது. ஷின்வலி மீதான ஜோர்ஜிய இராணுவ ஷெல் வீச்சில் மற்றும் சண்டையில் அகப்பட்டு 14000 ஒசேத்திய பொதுமக்கள் மரணமடைந்தனர். குறிப்பிட்ட அளவு ஒசெத்தியர்களுக்கு ஏற்கனவே ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. தனது குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், என்று ரஷ்யா கூறுவதற்கு இதுவும் காரணமானது.

தற்போது போரின் முடிவு தெரியாவிட்டாலும், அதன் விளைவுகள் தெரிகின்றன. ஜோர்ஜிய தனது மேற்குலக நண்பர்கள் உதவிக்கு வருவார்கள், என்ற அதீத நம்பிக்கையுடன், ரஷ்ய வல்லரசுடன் மோதலுக்கு தயாராகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை காவு கொள்ளும் போர், அவர்களின் அரசியல் சூதாட்டப் பொருளாகி உள்ளது. தன்னை மீள் கட்டமைத்துக் கொண்ட ரஷ்ய வல்லரசுக்கும், நிலைத்து நிற்கும் அமெரிக்க வல்லரசிற்கும் இடையில் திரைமறைவில் இருந்த புதிய பனிப்போர், தற்போது நிஜபோராக மாற ஜோர்ஜியா வழிசமைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் எதிர்பார்ப்பது போல, "ரஷ்ய ஆக்கிரமிப்பு" ஆபத்தில் உள்ள ஜோர்ஜிய நண்பனுக்கு உதவ, அமெரிக்க படைகள் வரப்போவதில்லை. இப்போதும் அமெரிக்காவும், மேற்கு-ஐரோப்பாவும் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு போகுமாறு தான் கூறுகின்றனர்.

21 ம் நூற்றாண்டின் பனிப்போர் பிரச்சாரங்கள் அன்றுபோலவே இன்றும் ஒரேமாதிரியாக உள்ளன. மேற்குலக சார்பு ஊடகங்கள், "ஜோர்ஜியா மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு" பற்றி அலறுகின்றன. அதற்கு மாறாக ரஷ்ய ஊடகங்கள், "ஒசேத்தியா மீது ஜோர்ஜிய ஆக்கிரமிப்பு" என்று பதறுகின்றன. பிரச்சினைக்குரிய ஒசேத்தியா தவிர்ந்த பிற ஜோர்ஜிய நகரங்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு போடுவதாக, ஜோர்ஜிய அரசு கூறுகின்றது. அதை ரஷ்யா மறுக்கிறது. இருப்பினும் கொசோவோ பிரச்சினையின் போது, நேட்டோ விமானங்கள் செர்பியா மீது குண்டு போட்ட கடந்தகால நினைவுகளை, ரஷ்யா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க பயன்படுத்தலாம். ரஷ்ய தொலைக்காட்சிகளில் ஜோர்ஜிய அரசு, அந்நாட்டு மக்களால் வெறுக்கப்படுவதாக காட்டும் விவரணப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அதே நேரம் எதற்காக மேற்குலக ஊடகவியலாளர் யாரும் ஒசெத்தியாவினுள் இல்லை? தனியான ஒசேத்திய இராணுவம் பற்றி கூறுவதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றன. மேலும் ரஷ்யாவில், ஒசேத்திய எல்லையோர பிரதேசத்தில் வாழும் வடக்கு ஒசெத்தியர்கள், மற்றும் பிற மொழி பேசும், ஆனால் "கொசாக்குகள்" என்ற பொது இனத்தை சேர்ந்த, தொண்டர் படைகள் ஜோர்ஜிய இராணுவத்தை எதிர்த்து சண்டையிட ஒசேத்தியா செல்வதாக, ரஷ்ய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கேயோ இருக்கும் மேற்குலக ஆதரவை மட்டும் நம்பி போர் அன்ற சூதாட்டத்தில் இறங்கியிருக்கும் ஜோர்ஜியா, ரஷ்ய வல்லரசை எதிர்த்து வெல்லப் போவதில்லை. ஆனால் அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இடையிலான பனிப் போரை, ஆரம்பித்து வைத்த பெருமையை மட்டும், சரித்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பான பிற பதிவுகள் :
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

__________________________________________

Friday, August 08, 2008

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்


லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இலங்கை பெண்களை பணிக்கமர்த்தும் குடும்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று: சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள். இரண்டு: வயோதிப ஆண்கள்,பெண்கள். எப்படியான குடும்பமாக இருப்பினும், இவர்களின் பணி தினசரி அதிகாலையே ஆரம்பமாகி, இரவில் முடிகின்றது. சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பமாயின், அந்தப் பிள்ளைகளை பராமரித்தல், அல்லது வயோதிபர்களை பராமரித்தல் போன்றன இவர்களின் கடமை. பிள்ளைகளை பராமரிக்கும் பணிப்பெண்கள் குடும்பத்தலைவிக்கு சமையலில் உதவி செய்தல் வேண்டும், வயோதிபர்களை பராமரிப்போர் அவர்களுக்கு சமைத்தும் கொடுக்க வேண்டும். சைப்ரஸ் உணவையே சமைப்பதால், அதையே அன்றாடம் சாப்பிடும் பணிபெண்கள், தமக்கு விடுமுறை கிடைக்கும் ஞாயிற்று கிழமை மட்டும், இலங்கை உணவை ருசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட அளவு நேரம் தாய்மார்கள் பொறுப்பு எடுப்பதால், சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பெண்களின் நிலை பரவாயில்லை. ஆனால் வயோதிபர்களை பராமரிப்பவர்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபகரமானது. தமக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது என்றும், அப்படியே கிடைத்தாலும், பொழுதுபோக்காக தொலைக்காட்சி பார்க்க கூட அனுமதிக்காது, தங்களை கவனிக்கும் படி வயோதிபர்கள் நச்சரிப்பதாக சில பெண்கள் தெரிவித்தனர். உண்மையில் அதிக கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை பராமரிப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், பல சைப்ரஸ்காரர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர்.

சைப்ரசில் வயோதிபமடங்கள் உள்ள போதிலும், சம்பிரதாயப்படி பல பிள்ளைகள் வீட்டில் வைத்து பார்க்கவே விரும்புகின்றனர். இருப்பினும் பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு இடங்களில் வாழ்ந்து வருவதால், அல்லது அதே வீட்டில் இருப்பினும் செல்வச்செழிப்பு காரணமாக, தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள பணிபெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். “வயோதிபர் பராமரிப்பு” என்ற பொதுப்பணித்துறையை அரசாங்கம் தனியார்மயமாக்கியுள்ளதால், வசதி குறைந்த சைப்ரஸ் குடும்பமாகவிருந்தாலும், பிள்ளைகள் பணம் சேர்த்து பணிப்பெண்களின் மாதசம்பளத்தை கொடுக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய தரத்துக்கு வளர்ச்சியடைந்த சைப்ரஸ் பொருளாதாரம், சாதாரண தொழிலாளியையும், வீட்டில் வேலைக்காரி வைத்துக் கொள்ளுமளவிற்கு பணவசதி படைத்துள்ளவர்களாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு பின்னான அறுபதுகளில், பொருளாதார பின்னடைவு காரணமாக, பெருமளவு வசதியற்ற சைப்ரஸ் மக்கள் வேலை தேடி இங்கிலாந்து சென்றனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

ஏற்கனவே ஒரு முகவர் மூலம் இந்தப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் சைப்ரஸ் குடும்பம், அந்தப் பெண்களுக்கு தமது வீட்டிலேயே உணவும், இருப்பிடமும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த கடமை குறிப்பிடப்பட்டிருப்பினும், பெரும்பாலான தொழில் வழங்குனர்கள் தனியான அறை ஒதுக்கிய போதும், சில வீடுகளில் வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுக்கும் நிர்ப்பந்தம் நிலவுகிறது. பெரும்பாலும் வேலைக்கு வைத்திருக்கும் எசமானர்களே ஒப்பந்தத்தை மீறுவது வழமை. பல தொழில் வழங்குனர்கள், சட்டத்திற்கு மாறாக, பணிப்பெண்களின் கடவுச்சீட்டு, மற்றும் வதிவிட அனுமதிப்பத்திரம், வெளிநாட்டவர் பதிவுக் கையேடு போன்ற மிக முக்கியமான பத்திரங்களை கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் அதிக நேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காதது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தல் என்பன தாராளமாக நடக்கும் சட்ட மீறல்கள். பணிப்பெண்களுக்கான வதிவிட அனுமதி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் என்று இருப்பதால், நீடிக்கப்படும் ஆண்டுகளுக்கு விசாவை புதிப்பிக்காமல் வைத்திருப்பதும், அது பின்னர் சம்பத்தப்பட்ட பணிப்பெண்களுக்கே பாதகமாக அமைவதும் உண்டு. தொழில் வழங்குனர்களின் மீது புகார் கூற துணியும் பெண்கள் மீது, “நடத்தை சரியில்லை” என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்தால், “துரதிர்ஷ்டவசமாக” கர்ப்பமடைந்தால், அது கூட “தகாத நடத்தையாக” கணிக்கப்பட்டு, சில நேரம் ஒப்பந்தத்தை முறித்து, நாடு கடத்தலில் கொண்டு போய் விடும்.

செல்வச்செழிப்பு அகம்பாவத்தையும் கூடவே கொண்டுவரும். சைப்ரஸ் சமூகத்தில் அடிமட்டத் தொழிலாக கருதப்படும் துப்பரவாக்கும் பணியை, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோர் செய்வதால், இலங்கையரை தரக்குறைவாக கருதும் பழக்கம் உள்ளது. மேலும் சிறு பிள்ளைகள் கூட, “மவ்று”(கிரேக்க மொழியில், கருப்பு) என்று இகழும் அளவிற்கு இனவாதம் வளர்ந்துள்ளது. இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு பொருளாகும். உதாரணத்திற்கு “ரகசிய உறவின்” மூலம் குழந்தை பெறும் இலங்கைப்பெண்கள் அந்தக் குழந்தையை கைவிடும் சம்பவங்கள், சைப்ரஸ் ஊடகங்கள் மூலம் பூதாகரமாக காட்டப்படும். அது போன்ற செய்திகளை பார்க்கும் சைப்ரஸ் மக்கள், இலங்கையரை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் தரக்குறைவாக கதைக்க பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அரசியல் சக்திகள் இந்த உதாரணங்களை காட்டி, “வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் புற்றுநோய் கிருமிகள்” நாட்டை பாழ்படுத்தும் அபாயம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். இலங்கையருக்கும் சைப்ரஸ் மக்களுக்குமிடையிலான தொடர்பு வெறும் தொழில்முறை சார்ந்தது என்பதால், இனவாத தப்பபிப்பிராயங்கள் மிக அதிகம்.

வழக்கம் போலவே இலங்கைப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் சைப்ரசை செல்வந்த நாடாக வைத்திருக்கும் உண்மை பற்றி பேசுவோர் மிகக்குறைவு. அதற்கு காரணம் தொழில் ஒப்பந்தம் பெற்று வரும் பணிப்பெண்கள், சைப்ரஸ் சமூகத்துடன் தாமரை இல்லை தண்ணீர் போல ஒட்டாமல் வாழ்வது தான். இந்த அரசியல் அறிவு, பாதிக்கப்படும் இலங்கைப் பணிப்பெண்களிடமும் இல்லை என்பது பெரிய குறை தான். முடிந்த அளவு பணம் சம்பாதித்துக் கொண்டு, இலங்கை திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்கும் இவர்கள், மனதளவில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களது சமூக தொடர்பு பிற இலங்கையருடன் மட்டுமே உள்ளது. கிரேக்க மொழி தெரிந்த பெண்கள் கூட, தமது தொழில், மற்றும் தனிப்பட்ட பிரச்சினை குறித்து மட்டுமே சம்பாஷனைகளை குறுக்கிக் கொள்வதால், தாம் வாழும் நாட்டைப் பற்றி எதுவும் அறியாது வாழ்கின்றனர்.

சைப்ரசிற்கு இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெருமளவு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் கல்லூரிகளில் படிக்க என்று வந்து, பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று தங்கி விட்டவர்கள். இலங்கையில் ஏழ்மையான பின்னணியில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வரும் பணிப்பெண்களைப் போலன்றி, இந்த வாலிபர்கள் ஓரளவு வசதியான (கீழ்) மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்கள். கல்லூரி மாணவர்களாக வந்த இலங்கை வாலிபர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களாக வந்த இலங்கை யுவதிகளுக்கும் இடையே ஆன உறவு, சில நேரம் வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. சைப்ரசில் பொதுப் போக்குவரத்து சேவை அரிதாகவே கிடைப்பதால், சில இளைஞர்கள் சட்டவிரோத “டாக்ஸி” ஓடுகின்றனர். இவர்களின் ஜீவனம், பெரும்பாலும் பணிப்பெண்களை நம்பியே உள்ளது. பணிப்பெண்களின் (சட்டபூர்வ) மாத வருமானம் 300 யூரோவை தாண்டாத போது, இந்த டாக்ஸி சாரதிகளின் (சட்டவிரோத) வருமானம் மாதம் 1000 யூரோவை தாண்டுவது முரண்நகை.

இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பணிப்பெண்களின் சமூக பின்னணி, ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்கத்தை(குட்டி பூர்ஷுவா) சேர்ந்த இளைஞர்களிடம் தங்கியிருக்க வைப்பதால்; காதலித்து நடித்து ஏமாற்றும் ஆண்களும், நம்பி ஏமாறும் பெண்களுமாக இலங்கையர் சமூகம் உள்ளது. சில பெண்களின் மோசமான நடத்தையை சுட்டிக்காடும் ஆண்கள், “எல்லா பெண்களும் அப்படி” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கூட சிலர் ஆணாதிக்க பார்வையுடன் அணுகுகின்றனர். சில “நடத்தை தவறும்”(லாப நோக்கோடு செயற்படும்) பெண்கள், பல காதலர்களுடன் தொடர்பு கொண்டு பணம் கறப்பதை சுட்டிக்காட்டும் அதே வேளை, பல அப்பாவி யுவதிகள் தம்மால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை பல ஆண்கள் நியாயப் படுத்துகின்றனர். சில சம்பவங்கள் பாலியல் சுதந்திரம் சம்பத்தப் பட்டதாயினும், வறுமையான சமூகப் பின்னணியும் இத்தகைய பெண்கள் தடம் மாறும் காரணங்களாகும். அதேவேளை நன்னடத்தையுள்ள பெண்களை கூட தனது வாழ்க்கைத்துணையாக சில ஆண்கள் ஏற்க மறுப்பதற்கு, இலங்கையில் அவர்களது வேறுபட்ட சமூகப் பின்னணி தான் காரணமாக இருக்க முடியும். வெளிப்பார்வைக்கு ஆண்-பெண் முரண்பாடாகவோ, இன, மத முரண்பாடுகளாகவோ புரிந்து கொள்ளப்படும் பல சம்பவங்கள், வர்க்க அடிப்படையை கொண்டதாக உள்ளன. இலங்கை திரும்பியதும், “நல்ல பிள்ளையாக” தமது பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணை மணக்க நினைக்கும் ஆண்கள், தமது தற்காலிக சுகத்திற்காக மட்டுமே சைப்ரஸ் காதலிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். “காதல்” என்ற முகமூடி மட்டும் இல்லையென்றால், வர்க்க வேறுபாடு அம்பலமாகி இருக்கும். விதிவிலக்காக சில காதல்கள் திருமணங்களில் முடிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய யூனியனில் சைப்ரஸ் சேர்ந்த பின்னர் இலங்கையில் இருந்து பணிப்பெண்களை தருவிப்பது குறைந்து வருகின்றது. தொழில்கள் யாவும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாட்டு பிரசைகளுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தற்போது பல்கேரிய, ருமேனிய பணிப்பெண்கள் வேலைக்கு வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் முன்பு போல பணிப்பெண்களை ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் நடந்த, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட, இலங்கைப்பெண்கள் மீதான வன்முறைகள், பிற மோசமான ஒப்பந்த மீறல்கள் என்பன, இலங்கை அரசு இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

முன்னைய பதிவு :


ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்
_____________________________________________