Saturday, August 16, 2008

அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

அமெரிக்க FOX தொலைக்காட்சி, தென் ஒசேத்திய யுத்தத்தில் இருந்து தப்பிய அமெரிக்க சிறுமியின் நேரடி ஒளிபரப்பில், இடையூறு செய்து நிறுத்தியது. காரணம், ஜோர்ஜிய ஜனாதிபதியை ஆக்கிரமிப்பாளர் என்று குற்றம் சுமத்தியதும், ரஷ்ய ராணுவத்திற்கு நன்றி சொன்னதும் தான்.


தெற்கு ஒசெத்தியாவை பூர்வீகமாக கொண்ட அந்த அமெரிக்க சிறுமியும், அவளது மாமியும், போர் தொடங்கி, ஜோர்ஜிய படைகள் குண்டு வீசிக் கொண்டிருந்த வேளை, ஒசெத்தியாவில் உறவினர்களுடன் ஒரு மாத விடுமுறையில் தங்கி இருந்திருக்கின்றனர். குண்டு வீச்சுகளில் இருந்து ஒருவழியாக தப்பி, அமெரிக்கா வந்து சேர்ந்த அவர்களிடம் இருந்து, ஒசேத்திய நிலைமை குறித்து, நேரடி தகவல்களை பெரும் பொருட்டு, அமெரிக்காவின் பிரபலமான "FOX தொலைக்காட்சி" பேட்டி எடுத்தது. நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், ஜோர்ஜிய குண்டுவீச்சில் தமது வீடுகள் சேதமடைந்ததாகவும், ஒரே நாளில் 2000 ஒசேத்திய மக்கள் இறந்ததாகவும், தாம் ஜோர்ஜிய படைகளுக்கு பயந்து ஓடியதாகவும் தெரிவித்தனர். மேலும் தாம் ஜோர்ஜிய மக்களையல்ல, ஜோர்ஜிய அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகவும், ஜனாதிபதி சாகஷ்விலி ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் கூறிக் கொண்டிருந்த போது; இடையூறு செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர், "வர்த்தக இடைவேளை" என்றும், "நேரமில்லை" என்றும் கூறி அவர்களை தொடர்ந்து பேசவிடாது தடுத்து, நிகழ்ச்சியை இடைநிறுத்தினார். இவற்றை நீங்கள், இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நேரடியாக பார்க்கலாம்.
12 year old ossetian girl tells the truth about Georgia.

நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் யாவும், தமது செய்திகளை ஆங்கிலோ-அமெரிக்க நிறுவனங்களான CNN, BBC, REUTERS, AP போன்றவற்றிலிருந்தே பெறுகின்றன. இந்த மேற்குலக ஊடகங்கள், அரச கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்குவதாகவும் பலர் இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமற்ற, தனியார் நிறுவனங்கள் தான். சில நேரம் தாம் சார்ந்த அரசாங்கங்களை விமர்சிக்கும் செய்திகளும் வருவது உண்மை தான். இருப்பினும் "தேசிய நலன்" கருதி முக்கியமான தருணங்களில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கின்றன. இவ்வாறு தான், அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த போது, அமெரிக்காவின் பெரிய வெகுஜன ஊடகங்கள் யாவும் அரசாங்கத்தின் பின்னால் நின்றன.

அதே போன்றே தற்போதும், ஜோர்ஜிய பிரச்சினையில், ரஷ்யாவை கொடூரமான ஆக்கிரமிப்பாளராக காட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன. ஆமாம், அவை வழங்குவது செய்தியல்ல, பக்கச்சார்பான பிரச்சாரம். போர் நடந்த ஜோர்ஜியாவிற்கு இந்த ஊடகங்கள் அனுப்பிய செய்தியாளர்கள் எல்லோரும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் ஜோர்ஜிய மக்கள் பாதிக்கப்பட்டதை காட்டுவதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அப்போது கூட எவராவது ஒரு ஜோர்ஜிய குடிமகன், "ஜனாதிபதி சாகஷ்விலியின் முட்டாள்தனமே எமது அவலத்திற்கு காரணம்", என்று கூறி விட்டால், விழித்துக்கொள்ளும் செய்தியாளர் உடனேயே வேறு ஆட்களை தேடிப்போய் விடுவார். அப்படித்தான் மேற்குலக ஊடகங்கள் யாவும், "ஜோர்ஜிய மக்கள் அனைவரும் தமது அரசாங்கத்தின் பின்னால் நிற்பதாகவும், ரஷ்யாவை வெறுப்பதாகவும்", ஒருபக்க சார்பான தகவல்களை எம்மீது திணிக்கின்றன.

மக்களை மூளைச்சலவை செய்வதில் செய்தி ஊடகங்களின் பங்கு பெரிது. அவர்கள் யாரை நல்லவன் என்கிறார்களோ, யாரை கெட்டவன் என்கிறார்களோ, சொல்வதை நாமும் நம்ப வேண்டும். அது கூட நிரந்தரமன்று, சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜப்பானை எதிரி என்றார்கள், ரஷ்யாவை நண்பன் என்றார்கள். மக்கள் நம்பினர். யுத்தம் முடிந்த பின்னர், ரஷ்யாவை எதிரி என்றும், ஜப்பானை நண்பன் என்றும் கூறினார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல், மக்கள் அதையும் நம்பினர்.

இது சம்பந்தமான கடந்தகால பதிவுகளையும் வாசிக்க :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
___________________________________________________



Tell a Friend

9 comments:

ISR Selvakumar said...

சி.என்.என். மற்றும் பி.பி.சி செய்திகள் உண்மையின் உரைகல் என்ற எண்ணம் இன்னமும் இந்தியர்கள் பலரிடம் உள்ளது.

கலைஞர் டிவியும், ஜெயா டிவியும் தமது கட்சித் தலைமைகளின் சார்பாக செய்தி வெளியிடுவது போல, இந்த ஆங்கிலச் செய்திகளும், சில அதிகார வர்க்கங்களின் பொய் பிரச்சாரக் கருவிகள்தான்.

Anonymous said...

ஐயா கலையரசனாரே, நீங்க மட்டும் இப்ப உங்க பதிவை படிக்கிறவங்க மூளைய உடான்சு விட்டு சலவை செய்யவில்லையா? ஜார்ஜியா‍-ரஷ்யா போரின் உண்மையான (குழாய்வழி எரிபொருள் விநியோக) பின்னனி புரியாமல் இப்படி உலறி கொட்டுறீங்களே! அமெரிக்க ஒரு பெரிய ஜனநாயக நாடு. உங்க ரஷ்யா ஒரு அராஜக அடாவடி நாடுங்க. ஸ்டாலின் போன்ற பூதங்களை உருவாக்கி கொடுத்த நாடுங்க. அவங்களுக்கு போய் நீங்க இப்படி வரிந்து கட்டிக்கொண்டு உதார் விடறது சரியில்லைங்க. அமெரிக்கான்னா ஒட்டு மொத்தமா அனைவரும் கெட்டவர்கள் அப்படீன்னு அறியா மக்கள் மனதை கெடுத்து உங்க பங்குக்கு நீங்களும் அவங்க மூளைய சலவை செய்யாம விட்டுங்க.

மணிக்கழுதை

Kalaiyarasan said...

ஐயா மணிக்கழுதை,

மக்களை மூளைச்சலவை செய்யுமளவிற்கு என்னிடம் அதிகார பலமோ, பண பலமோ இல்லை ஐயா. நான் சொல்வதை நம்புபவர்களை விட, அமெரிக்க சொல்வதை நம்புபவர்களே அதிகம் என்பது உங்களுக்கே தெரிந்த உண்மை. ரஷ்ய-அமெரிக்காவுக்கிடையில் எரிபொருளுக்கு போட்டி இருப்பதை மறைக்கவில்லை. ஆனால் தற்போதைய ஜோர்ஜிய போர், ஒசெத்தியர்கள் என்ற சிறுபான்மை இனத்தின் பிரச்சினையை வைத்தே ஆரம்பமானது. தனது நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் கொசொவோவுக்காக, அமெரிக்கா செர்பியா மீது குண்டு போட்டது, ஜனநாயக நடவடிக்கையா? அல்லது அராஜக அடாவடித்தனமா? தனது எல்லையில் மனித அவலத்தை(ஒசெத்திய அகதிகள் பிரச்சினை), இனங்களின் சமநிலையை பாதுகாக்கவும், சிறுபான்மை ஒசெத்திய மக்களை ஜோர்ஜியர்கள் படுகொலை செய்வதிலிருந்து காப்பாற்றவும், இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக ரஷ்யாவின் நடவடிக்கை நியாயப்படுத்தப் படலாம். கொசோவோ பிரச்சினை பற்றி அறிந்த அளவிற்கு, ஒசெத்திய பிரச்சினை பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மிக மிக குறைவு. உங்களுக்கு தெரியாது என்ற காரணத்தாலேயே, ஒரு பிரச்சினை இல்லை என்று ஆகி விடுமா? ரஷ்யாவிடம் CNN, BBC போன்ற உலக மக்களின் மனங்களை ஆக்கிரமிக்கும் ஊடகங்கள் இல்லை என்ற காரணத்தாலேயே, மணிக்கழுதை போன்ற "அப்பாவிகள்" அமெரிக்கா சொல்வதை மட்டும் நம்புகின்றனர்.

மதிபாலா said...

ஐயா கலையரசனாரே, நீங்க மட்டும் இப்ப உங்க பதிவை படிக்கிறவங்க மூளைய உடான்சு விட்டு சலவை செய்யவில்லையா? ஜார்ஜியா‍-ரஷ்யா போரின் உண்மையான (குழாய்வழி எரிபொருள் விநியோக) பின்னனி புரியாமல் இப்படி உலறி கொட்டுறீங்களே! அமெரிக்க ஒரு பெரிய ஜனநாயக நாடு. உங்க ரஷ்யா ஒரு அராஜக அடாவடி நாடுங்க. ஸ்டாலின் போன்ற பூதங்களை உருவாக்கி கொடுத்த நாடுங்க. அவங்களுக்கு போய் நீங்க இப்படி வரிந்து கட்டிக்கொண்டு உதார் விடறது சரியில்லைங்க. அமெரிக்கான்னா ஒட்டு மொத்தமா அனைவரும் கெட்டவர்கள் அப்படீன்னு அறியா மக்கள் மனதை கெடுத்து உங்க பங்குக்கு நீங்களும் அவங்க மூளைய சலவை செய்யாம விட்டுங்க.

மணிக்கழுதை/////////


யார் மூளைச்சலவை செய்கிறார்கள் மணிக்கழுதை????

அமெரிக்காவில் , எங்கோ தொலை தேசத்தில் சண்டைக்கு சற்றும் சம்பந்தமில்லாத , தம் குடிமக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத முறையில் எங்கேயோ ஈராக் மேல் எப்படி குண்டு போடுவது என்ற கவலையின்றி அமர்ந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுமானால் அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு பலியாகும் ஈராக்கியர்கள் பற்றிய கவலை இல்லாமலிருக்கலாம்........
அதை என்ன சொல்லலாம் ??? அமெரிக்காவின் ரவுடித்தனம் என்று சொல்லலாமா??

பேரழிவு ஆயுத்ம , பேரழிவு ஆயுதம் என்று கூப்பாடு போட்ட அமெரிக்கா இன்று பேரழிவு ஆயுதத்தை கண்டு பிடித்ததா???

இல்லையெனில் ஆயிரக்கணக்கில் பலியான ஈராக்கியர்களின் உயிரையும் ,சதாம் உசேனின் உயிரையையும் சர்வ வல்லான்மை பொருந்திய அமெரிக்காவால் திருப்பித்தர முடியுமா???

இல்லையெனில் அமெரிக்காவை தண்டிப்பது யார்??? அமெரிக்கா தண்டனைக்கு அப்பாற்பட்டதா?

உங்களை மற்ற எல்லாரையும் போலத்தான் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள்...புரிந்துகொள்ளுங்கள்!

Kalaiyarasan said...

நன்றி மதிபாலா,

தக்க சமயத்தில் வந்து நல்ல பதிலை கொடுத்திருக்கிறீர்கள். இவ்வளவு காலமும் அவர்கள்(மணிக்கழுதை போன்றவர்கள்) விரும்பியது போலத் தான் உலகம் போய்க் கொண்டிருந்தது. ஆனால் தாங்கள் விரும்பாத உண்மைத்தகவல்கள், அதுவும் தாங்கள் கடவுளாக மதிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக, வரும்போது மட்டும், இவர்களுக்கு எதிர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷம் பிறக்கிறது. எதிர்க்கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்காத, குறைந்த பட்சம் கேட்க விரும்பாத, இவர்கள் தான் ஜனநாயகம் பற்றி ஊளையிடுகின்றனர். இது அவர்களது "ஜனநாயக அடாவடித்தனம்".

manikandan said...

கொடுமையான தணிக்கை.

ரஷ்ய தொலைக்காட்சிகளும் இதற்கு சளைத்தவர்கள் இல்லை.

ஆனால் அவைகள் நம்மை வந்து சேருவதில்லை. நானும் இது சம்பந்தமாக ஒரு பதிவை எழுதினேன். படித்து கருத்து சொல்லவும்.

http://saavu.blogspot.com/2008/08/blog-post_08.html

moon said...
This comment has been removed by a blog administrator.
Pragash said...

வணக்கம் கலையரசன். இப்பொழுதும் கூட இலங்கை இந்தியசெய்திகளுக்கு பிபிசி வானொலியை தான் நாடுகின்றோம். அதன் நம்பகத்தன்மை பற்றி சிறிது விளக்கமுடியுமா? அண்மையில் கூட ஹெய்ட்டி தொடர்பான செய்திகளில் அமெரிக்க சார்பு சர்வாதிகார ஆட்சி பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை செவிமடுக்க நேர்ந்தது. அப்படி இருக்கையில் அதன் இலங்கை இந்திய செய்திகளும் எப்படி நம்பகத்தன்மையானது ஆக இருக்கமுடியும்?.

Kalaiyarasan said...

வணக்கம் பிரகாஷ், நல்ல கேள்வி. பி.பி.சி. எப்போதும் பிரிட்டிஷ் அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு மாறாக நடப்பதில்லை. இலங்கை, இந்தியா பற்றிய நிலைப்பாடும் அது சார்ந்த அரசினுடையதாக தான் இருக்கும்.