Wednesday, August 06, 2008

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை


குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.

உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.

அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பாகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.

கடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.

குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.

குவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.
சர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற "பேஜ் அல் அரப்" என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.


மக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.

___________________________________________________

Saturday, August 02, 2008

ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்

பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனியான சைப்ரசில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினால், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராக, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதற்கு உல்லாசப்பிரயானதுறை, கட்டட நிர்மாணத்துறை, மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை அதீத வளர்ச்சி அடைந்தமை முக்கிய காரணங்கள். குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள், தமது நாட்டின் குளிரான காலநிலையில் இருந்து தப்பி, வெயில் காய வருவதற்கு ஏற்ற நாடாக சைப்ரசை கண்டுபிடித்தனர். வெப்ப மண்டல நாடொன்று ஐரோப்பிய கண்டத்திற்கு அருகில் இருப்பதும், ஆங்கிலம் பேசுவதும் அவர்களை கவர்ந்தன. அதே நேரம் ஓய்வூதியம் பெறும் ஆங்கிலேய வயோதிபர்கள் அமைதியான நாட்டுப்புறங்களில் வீடுகளை வாங்கி குடியேறியதும், "ரியல் எஸ்டேட்" துறை புதிய சந்தையை கண்டு கொண்டது. தற்போதும் கடற்கரையோர நகரங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


பொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. நமது நாடுகளில் இருப்பது போலவே, சைப்ரஸ் பெண்களும் குடும்பத்தை பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளையுமே காலங்காலமாக செய்து வந்தவர்கள். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் உழைப்பும் தேவையாக இருந்ததால், பெண்கள் வேலைக்கு போவதும், உயர்கல்வி கற்று பதவிகளை பெறுவதும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. வருமான உயர்வு, வசதிகளை பெருக்கினாலும், வீட்டை பராமரிக்கவும், குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் பெண்களால் நேரம் ஒடுக்குவது கஷ்டமான போது, அரசாங்கம் அதற்கொரு தீர்வை காட்டியது. வீட்டுப் பணிப்பெண்களை, குறைந்த கூலிக்கு, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவித்துக் கொடுத்தது.

பிற்காலத்தில் பணிப்பெண்களின் இறக்குமதி, பிறிதொரு பிரச்சினையை தீர்க்கவும் உதவியது. வாழ்க்கைத்தரம் உயர்வதென்பது, அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைகின்றன என்பதும் அர்த்தமாகும். இதனால் மக்கள் நீண்ட காலம் வாழ்வதால், வயோதிபர்களின் எண்ணிக்கை நாட்டில் பெருகியது. அறுபதுகளில் ஓய்வு பெறும் வயோதிபர்கள், தேசிய பொருளாதார உற்பத்தியில் ஈடுபடாமல், ஓய்வூதியம் என்ற செலவினத்தையே வைக்கின்றனர். இதனால் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, ஏற்கனவே கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரம்பரிய முறையான பிள்ளைகள் பராமரிக்கும் நிலை மாறி, அரசாங்கமே வயோதிபரை பராமரிக்கும் பொறுப்பை கையில் எடுத்துள்ளதால், அதற்கு ஏற்படும் செலவினங்களை ஈடுகட்டுவதும் பெரும்பாடாக இருந்தது. தாராளவாத முதலாளித்துவ சட்டங்களின் கீழ், அரச பொறுப்பு தனியார்மயமாகியது. அதன் படி வயோதிபர்கள், அவர்களின் வீடுகளில் வைத்து, பணிப் பெண்களால் பராமரிக்கப்படும் நிலை தோன்றியது. இதற்கெனவே இருக்கும் முகவர்கள் இலங்கை, பிலிபைன்ஸ் பணிப் பெண்களை குறைந்த கூலிக்கு தருவிக்கின்றனர். உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டு அரசாங்கங்களுடன் ஒரு மாத சம்பளம் எவ்வளவு என்று முன்கூட்டியே பேசி தீர்மாணிக்கப் படுகிறது. இந்தப் பேரம் பேசலில் ஒரு பணிப்பெண்ணின் ஊதியம் அண்ணளவாக மாதம் 300 யூரோ என்று உள்ளது. தற்போது இலங்கை அரசு தொகையை அதிகரிக்குமாறு கேட்டு வருவதால், முகவர்கள் வேறு வறிய நாடுகளில் வலைவீசுகின்றனர். சைபிரசில் சட்டப்படி குறைந்த சம்பளம் 700 யூரோ என்றிருந்த போதும், அந்நாட்டு பிரசைகளுக்கே அது பொருந்தும். அங்கே பாகுபாடான சம்பளம் வழங்குவது சர்வசாதாரணம். ஒரே வேலைக்கு சைப்ரஸ் பிரசைக்கு கொடுப்பதை விட மிக குறைவாக வெளிநாட்டு தொழிலாளருக்கு வழங்கபடுகின்றது.


சைப்ரஸ் வந்த பின்பு இலங்கை பணிப்பெண்களின் அடிமைவாழ்வு ஆரம்பமாகின்றது. பணியில் அமர்த்தும் சைப்ரஸ் குடும்பம் (தொழில் வழங்குனர்) அவர்களது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். வாரம் 40 தொடக்கம் 44 மணித்தியாலம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று இருந்த போதும், பல பெண்கள் குறிப்பாக வயோதிபரை பராமரிக்கும் பெண்கள் 24 மணிநேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இரவில் குறைந்தளவு நேரம் மட்டுமே உறங்கும் வயோதிபர்கள் விழித்திருக்கும் நேரம் முழுவதும் கவனித்துக் கொள்ளுமாறு பிள்ளைகளால் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் இந்தப் பணிப்பெண்கள் ஒரு நாளைக்கு சராசரி 12-17 மணிநேரம் வேலைசெய்தாலும், ஒப்பந்தப்படி வேலைசெய்த அதிக நேரத்திற்கு ஊதியம் வழங்குவது அரிதாகவே நடக்கும் விஷயம். அதேநேரம் தமது 8 மணி வேலை நேரம் தவிர்ந்த பிற நேரங்களில், இந்த இளம்பெண்கள் வெளியில் சென்று வரவோ, அல்லது பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.


ஞாயிற்றுகிழமைகள் அல்லது பிற விடுமுறை தினங்கள் சுதந்திரமாக வெளியில் போக அனுமதி கிடைத்தாலும், மாலைநேரம் வீடு திரும்ப வேண்டும். இதனால் பகல் நேரம் மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கிறது. நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஞாயிற்றுகிழமைகளில் இலங்கையர் கூடும் இடங்களில் முக்கியமானது. இந்த தேவலாயம் அவர்களது ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமல்லாது, பிறரை சந்திக்க வாய்ப்பளிக்கும் சமூக பரிவர்த்தனை மையமாகவும் செயற்படுகின்றது. சைப்ரஸ் மக்கள் கிரேக்க கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால், கத்தோலிக்க தேவாலயங்கள் முழுக்கமுழுக்க வெளிநாட்டு தொழிலாளரை நம்பியே இயங்குகின்றன. இருப்பினும் எந்தவொரு மத நிறுவனமும், தன்னை நம்பி வரும் தொழிலாளரின் அடிமைநிலையை போக்க முயற்சி செய்வதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் மீது பிறிதொரு வடிவில் சமூக கட்டுபாடுகளை திணித்து, அடங்கிப் போக வழி செய்வனவாகவே உள்ளன.


சில சைப்ரஸ் தொழில் வழங்குனர்கள் தந்திரமாக ஒப்பந்தத்தில் இல்லாத வேலை வாங்குவதில் கில்லாடிகள். தமது குடும்ப பண்டிகைகளில் பணிப்பெண்களையும் கலந்து கொள்ள அழைப்பர். இவ்வாறு "குடும்பத்தில் ஒருவர்" என்ற மாயையை தோற்றுவித்து விட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடாத வேறு வேலைகளை செய்ய சொல்வர். அப்பாவி பணிப்பெண்களும் எஜமானர்களின் "தாராள குணத்தை" மெச்சி முணுமுணுக்காமல் வேலை செய்து முடிப்பர். இத்தகைய "புத்திசாலி" எஜமானர்கள் எதாவது வியாபாரநிலையம் வைத்திருந்தால், அவற்றையும் துப்பரவாக்கும் படி பணிக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தமது உறவினர் வீடுகளுக்கு சென்று வேலை செய்யுமாறு உத்தரவிடுகின்றனர். இவ்வாறு பெருமளவு இலங்கை தொழிலாளரின் இலவச உழைப்பு, உபரிமதிப்பாக சைப்ரஸ் மக்களை இன்னும் இன்னும் பணக்காரர் ஆக்குகின்றது. நிலைமை இவ்வாறு இருக்க அப்பாவி இலங்கை பணிப்பெண்கள் இலங்கையில் இருக்கும் தொழிலாளியை விட நான்கு மடங்கு அதிகம் சம்பாதிப்பதற்காக திருப்திப்படுகின்றனர். அவர்கள் தமது தாய் நாட்டிற்கு அனுப்பும் பணத்தால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைத்தாலும், இலங்கை அரசும் தனது பிரசைகள் நலன் குறித்து அதிக அக்கறை எடுப்பதில்லை.

பெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவு குறைவால், அல்லது அக்கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று கவனிப்பதில்லை. இதனால் ஒப்பந்தத்தை அடிக்கடி மீறும் எஜமானர்கள், பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றனர். இளம்பெண்களின் பாலியல் சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்படுகின்றது. பல பணிப்பெண்கள் ஆண்-நண்பர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒப்பந்தமும் ஒரு பெண், ஆண் நண்பர் வைத்திருக்க கூடாது என்று கூறவில்லை. இருப்பினும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற விடயம் கூட அவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த "பாலியல் நன்னடத்தை" குறித்த எதிர்பார்ப்பு, பணிப்பெண்களை அடக்கி அதிக வேலை வாங்கவும், அதே நேரம் எஜமான் தரப்பு பிழைகளை மறைக்கவும் பயன்படுகின்றது.

தற்போது ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ள சைப்ரஸ் அரசாங்கமோ, தனது பிரசைகள் நலன் குறித்தே அதிக அக்கறை படுகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலசட்டங்களை வைத்து, ஒப்பந்தத்தை மீறும் தொழில் வழங்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்போனால், அது அதிக காலம் எடுக்கும், அதிக பணம் விரயமாகும் செயலாகும். இதனால் நீதியை எதிர்பார்க்காத தொழிலாளர்கள், தமது தாய் நாட்டிற்கே திரும்பி செல்கின்றனர். மேலும் பொதுவாக சைப்ரசில் நிலவும் வெள்ளை இனவாத மேலாண்மை, தொழிற்சங்கம் அமைக்க அனுமதியின்மை, வாக்குரிமை உட்பட பிற அரசியல் உரிமைகளின்மை என்பன, சைப்பிரசில் இலங்கை தொழிலாளரை, அடிமைகளாக அடக்கி வைக்க சாத்தியமாக்கும் பிற காரணிகள்.
(இந்த ஆய்வுக்கட்டுரை நேரே பார்த்த சம்பவங்களையும், சாட்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது .)
_____________________________________________________
மேலதிக விபரங்களுக்கு இதையும் வாசிக்கவும்:
சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்

Tuesday, July 22, 2008

சைப்பிரசில் ஓர் ஈழம்

ஒரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள்(கிறிஸ்தவம்,இஸ்லாம்), ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்ததன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது?  
 
ஐரோப்பாக் கண்டத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தையும் பிரிக்கும் மத்தியதரைகடலில் உள்ள குட்டித்தீவு சைப்பிரஸ். அதன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக அன்னிய படையெடுப்புகளுக்கு அடிக்கடி ஆளானது. எகிப்து, சிரியா, பெர்சியா ஆகிய பண்டைய சாம்ராஜ்யங்கள் அதற்கு உரிமை கோரியுள்ளன. இருப்பினும் இன்றைய கிரீஸ் மட்டுமல்ல, துருக்கி, சைப்பிரஸ் என்பனவும் ஒரு காலத்தில் கிரேக்க இனங்களால் நிறைந்திருந்தன. 
 
மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கி நாடோடிக் குழுக்களின் படையெடுப்புகள், அந்த பிரதேச மொழியியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. துருக்கிய பிரதேசத்தில் வாழ்ந்த (கிரேக்க) மக்கள் மெல்ல, மெல்ல துருக்கி மொழியை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாக்தாத் நகரையே முற்றாக அழித்த துருக்கிய நாடோடிகள், பின்னர் அங்கு வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரீகம் கண்டு வியந்து, தாமும் முஸ்லீம்களாக மாறினர். இதன் பின்னர் தான் துருக்கிய சுல்தான்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். அவ்வாறு சென்றவிடமெல்லாம் வெற்றி கண்ட ஒஸ்மான் அலியின், ஓட்டோமான் அரச பரம்பரையினர், இன்றைய கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். 
 
சைப்பிரஸ் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில்(250 வருடங்கள்) , துருக்கி பெருநிலப்பரப்பில் இருந்து, துருக்கி மொழி பேசும் மக்கள் சென்று குடியேறியதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் கணிசமான கிரேக்க மொழி பேசும் மக்களும், அரசாங்கத்திடம் சலுகைகள் பெறுவதற்காக, அல்லது தமது குடும்ப நலன் கருதி, அரச மதமான இஸ்லாத்திற்கு மாறி, அரச கரும மொழியான துருக்கியை தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு, துருக்கியராகவே மாறியிருக்க வாய்ப்புண்டு. அல்லது துருக்கியராகியிருக்கலாம். 
 
இந்த சரித்திர உண்மையை இன்றைய கிரேக்கசைப்பிரஸ் வலதுசாரிகள் நம்ப மறுப்பார்கள். ஆனால் ஒரு சில கல்விமான்கள் சொல்வதைப்போல, மரபணு சோதனை செய்து பார்த்தால், சிப்ரியோட்(சைப்பிரஸ் மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் "கிரேக்க சிப்ரியோட்", "துருக்கி சிப்ரியோட்" என பெயரிட்டழைத்தது.) என்று அழைக்கப்படும், கிரேக்கர்களுக்கும், துருக்கியருக்குமிடையில் ஒற்றுமை இருப்பதை நிரூபிக்கலாம். வெறும் மொழி அடிப்படையில் மட்டுமே, சைப்பிரஸ்- துருக்கியர் தம்மை துருக்கி- துருக்கியருடனும், அதே போல சைப்பிரஸ்- கிரேக்கர்கள் தம்மை கிரீஸ்- கிரேக்கர்களுடனும் இனம்காண்கின்றனர். இத்தகைய இனவாத சிந்தனை இன்றுவரை சைப்பிரசை பிரிக்கும் முக்கிய காரணியாகும்.  
 
19 ம் நூற்றாண்டில் உலகிலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மத்திய தரைக் கடலிலும் ஆதிக்கம் செலுத்த வந்தது. ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டர், இத்தாலிக்கு கீழே உள்ள மால்ட்டா, ஆகியனவற்றை கைப்பற்றி தனது காலனியாக்கியத்துடன் நில்லாது, சைப்பிரசை அபகரிக்கும் நோக்கில் ஓட்டோமான் அரசுடன் பேரம் பேசியது. அந்தக்காலத்தில் நலிவடைந்து "ஐரோப்பாவின் நோயாளி" என்றழைக்கப்பட்ட ஓட்டோமான் சாம்ராஜ்யம், சைப்பிரசை பிரிட்டனுக்கு விற்றுவிட்டது. 
 
1878 ல் நிர்வாக பொறுப்பை மட்டுமே ஏற்பதாக கூறிய பிரித்தானியா, முதலாம் உலகப்போரில் துருக்கி தோல்வி அடைந்த தருணத்தை பயன்படுத்தி, சைப்பிரஸ் தனது காலனி என்று அறிவித்தது. இருந்தாலும் துருக்கியர்களை தனது நண்பர்களாக பார்த்த பிரிட்டன், சைப்பிரசிலும் தனது காலனிய நிர்வாகத்தில் துருக்கி மொழி பேசுவோருக்கு பதவிகளை வழங்கியது. இதனால் அனைத்து கீழ்மட்ட நிர்வாகிகளும், அரச எழுதுவினைஞர்களும், மட்டுமல்ல காவல்துறையை சேர்ந்தோரும் துருக்கியராகவே இருந்தனர். மொத்த சனத்தொகையில் 18 வீதமேயான, துருக்கியருக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகைகள், அதே இனங்களை பிரித்தாளும் சூழ்ச்சி தான்.

நவீன கால வரலாற்றில் கிறிஸ்தவ மதம் அரசியலில் ஈடுபடவில்லை என்று, மேற்கு-ஐரோப்பிய உதாரணத்தை மட்டுமே எல்லோரும் கவனிக்கின்றனர். கிரீசிலும், சைப்பிரசிலும் அரசியலே கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தான் பிறந்தது. தனித்துவமான கிரேக்க கிறிஸ்தவ நிறுவனம், சைப்பிரசிற்கு என சுயாதீனமான தலைமை மதகுருவை கொண்டிருந்தது. அவ்வப்போது நடந்த ஓட்டோமான் அரசுக்கெதிரான, அல்லது இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகளுக்கு மதகுருக்களே தலைமை தாங்கினர். 
 
சைப்பிரஸ் பிரிட்டிஷ் காலனியாகிய போது, கிறிஸ்தவ சபைகள் அதை வரவேற்கவே செய்தன. ஆயினும் கிரீசுடன் ஒரு பகுதியாக இணையும் அபிலாசை, பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது. முதலாம் உலகயுத்த முடிவில், துருக்கியிடம் இருந்து கிரீஸ் பரிபூரண சுதந்திரம் பெற்றிருந்தது. பல தீவுகள் புதிய கிரீஸ் தேசிய அரசின் வசமான போது, சைப்பிரசில் உள்ள கிரேக்க மொழி பேசும் மக்கள் கிரீசுடன் இணைய விருப்பம் தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால் பிரிட்டன் அந்த விருப்பத்திற்கு தடையாக இருந்தது. இதனால் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்த போது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. கிறிஸ்தவ மதகுருக்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இருப்பினும் கிரீஸ் தான் தமது தாய் நாடு என்று கருதும் கிரேக்க-சிப்ரியோட்கள் "எநோசிஸ்" என்றழைக்கப்படும் இணைப்பிற்கான கொள்கையை கைவிடவில்லை. "எயோகஸ்"(EOKAS) என்ற கிரேக்க தேசியவாத இயக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது. சந்தேகத்திற்கிடமில்லாமல் துருக்கி-சிப்ரியோத்கள் கிரீசுடன் இணைவதை எதிர்த்தனர். ஓட்டோமான் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஒரு காலத்தில் பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், சைப்பிரஸ் துருக்கிக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாக வாதிட்டனர். சைப்பிரஸ் தனியான சுதந்திர நாடாக வர வேண்டும் என்று எதிர்பார்த்த பிரித்தானியா, துருக்கியர் பக்கம் சாய்ந்தது. எயோகஸ் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு, துருக்கி துணை இராணுவக்குழுவை உருவாக்கியது.

ஆரம்பத்தில் எயோகஸ் ஆங்கிலேய அதிகாரிகளையும், கிரேக்க பொலிஸாரையும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் கிரேக்கர்கள் அரச தொழில்களை கைவிட்டு ஓட, துருக்கி துணைப்படை தாக்குதல் இலக்கானது. இதனால் ஏற்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதற்றம் ஒருபக்கம், கிரேக்க பேரினவாத கனவு மறுப்பக்கம், எல்லாம் சேர்ந்து துருக்கியரை பிரிவினை நோக்கி தள்ளியது. முரண்பாடுகள் கூர்மையடையும் வேளை, மிதவாத கிரேக்கர்கள் 1960 ல் சைப்பிரசை தனியான குடியரசாக்க ஒப்புக்கொண்டனர். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ தலைமை மதகுரு மகாரியோஸ் பிரதமராக வந்தார்.


சுதந்திரம் வழங்கப்பட்ட போதும், பிரிட்டன் தனது இரண்டு படைத்தளங்களை தொடர்ந்து வைத்திருக்க அனுமதி வாங்கியது. இன்றும் கூட பிரிட்டனுக்கு "சொந்தமான" அந்த நிலங்களில், பிரிட்டிஷ் இராணுவம் முகாமிட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான சைப்பிரசில் இனப்பிரச்சினை பற்றி கிரேக்க-துருக்கி பிரதிநிதிகளுக்கிடையில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 
 
தற்போது ஆட்சியதிகாரத்தை தம் கையில் வைத்துக்கொண்ட கிரேக்க சிப்ரியோட்கள், 78 % பெரும்பான்மையை கொண்டிருந்ததால், சிறுபான்மை துருக்கி சிப்ரியோட்கள் வைத்த அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினர். துருக்கியர் தமக்கென தனியான தன்னாட்சிப்பிரதேசத்தை கோரினர். கிரேக்க அரசியல் தலைவர்களோ அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை. தொடர்ந்து பலவருடங்கள் இப்படியே, பேச்சுவார்த்தைகள், சில அதிகார அலகுகளுக்கான இணக்கப்பாடுகள், நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள், என்று காலம் கழிந்ததே தவிர இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

1974 ல் அதற்கொரு முடிவு வந்தது. கிரேக்க-சிப்ரியோட் இனவாத இராணுவ அதிகாரிகள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதை காரணமாக காட்டி, துருக்கி சைப்ரஸ் மீது படையெடுத்தது. நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு பக்கமும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டன. கிரேக்க சிப்ரியோட்கள் வடக்கிலிருந்தும் (துருக்கி பெரும்பான்மை மாகாணங்கள்), துருக்கி சிப்ரியோட்கள் தெற்கிலிருந்தும் (கிரேக்க பெரும்பான்மை மாகாணங்கள்) விரட்டப்பட்டனர். விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டு நாடு இரண்டாகப்பிரிக்கப்பட்டது. ஐ.நா. தலையீட்டால் "பச்சைக்கோடு எல்லை" வகுக்கப்பட்டு, எல்லைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. 
 
தீவின் மத்தியில் அமைந்திருக்கும் தலைநகரம் நிக்கோசியா கூட இரண்டாகப்பிரிக்கப்படது. வடக்கு சைப்பிரஸ் துருக்கியின் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் வந்த போதும், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தன. சைப்பிரஸ் ஒரு சமஷ்டி குடியரசு ஆகும் வரை தான் வெளியேறப் போவதில்லை என்று துருக்கி அடம்பிடித்தது. 
 
அதேநேரம் துருக்கி நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான துருக்கி இனத்தவரை வடக்கு சைப்பிரசில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். இது சைப்பிரசின் சனத்தொகையில், இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட, பிரச்சினை தீர்ந்தால் குறைந்தது 50000 குடியேறிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக, கிரேக்க-சிப்ரியோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ல் ஒருதலைப்பட்சமாக "வடக்கு சைப்பிரஸ் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டாலும், அந்த புதிய தேசத்தை துருக்கியை தவிர, உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்த சைப்பிரசை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது. கிரேக்க-சைப்பிரஸ் பகுதி ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடாகிய பிறகு, துருக்கி-சைப்பிரஸ் மக்களுக்கு துருக்கிய இராணுவம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தடை அந்தப்பகுதியை வெகுவாகப் பாதித்துள்ளது. 
 
இதனால் ஒப்பீட்டளவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் விரக்தியுற்ற இளம்தலைமுறை, மீண்டும் சைப்பிரஸ் ஒரே நாடாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் இரண்டு பக்கமும் இருந்த வலதுசாரி கடும்போக்காளர்கலால் அண்மைக்காலம் வரை ஒற்றுமைக்கான முயற்சி எதுவும் கைகூடி வரவில்லை. கிரேக்க பகுதியில் கடந்த வருடம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு தான் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே தினத்தன்று, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரேக்க-துருக்கி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். இன்றைய நிலைமை இது.

துருக்கி-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, அல்லது அதிக அதிகாரம் கூடிய சமஷ்டி ஆட்சிக்கு குறையாத தீர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். துருக்கி அரசாங்கம், வேண்டுமென்றே பொருளாதார தடை போட்டு, தம்மோடு சேர்க்கப் பார்ப்பதாக கிரேக்க-சிப்ரியோட் பக்கம் குற்றம்சாட்டுகின்றது. அதே நேரம் துருக்கி எதிரிநாடாக இருப்பதால் (கிரேக்க)சைப்பிரஸ் சில பொருளாதார (கப்பல், விமான போக்குவரத்து) பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது கிரேக்க-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சமஷ்டிக்கு மறுத்து, ஒற்றையாட்சியே நீடிக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். அதே நேரம் பெருமளவு துருக்கி சிப்ரியோட் மக்கள் பொருளாதார நலன் கருதி இணைப்பிற்கு ஆதரவாகவும், கிரேக்க-சிப்ரியோட் மக்கள் பேரினவாத எண்ணத்தால், சமஷ்டிக்கு எதிராகவும் உள்ளனர். துருக்கி தான் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு சைப்பிரஸ் பிரச்சினையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகின்றது.

ஐரோப்பிய யூனியனோ, ஐரோப்பா என்ற எதிர்கால ஏகாதிபத்தியக்கனவுகளுடன் இந்தப்பிரச்சினையை பார்க்கின்றது. ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரங்களால், சைப்பிரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரலாம். எதிர்பாராதவிதமாக இயற்கை ஒன்றிணைவுக்கு துணை செய்கின்றது. உல்லாசப்பிரயான, ரியல் எஸ்டேட் தொழிற்துறைகள், அதிக வருமானத்தை ஈட்டித்தரும் அதேநேரம், பாவனையாளர் அதிகரித்து, வரட்சியும் சேர்ந்து கொள்ள, தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கிரீசில் இருந்து கப்பல்களில் தண்ணீர் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை. இதற்கு அதிக செலவாகின்றது. அதேநேரம் 83 கி.மி. தூரத்தில் இருக்கும் துருக்கியில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் வாங்குவது செலவு குறைந்த வழி. ஏற்கனவே துருக்கி, குழாய் மூலம் இஸ்ரேலுக்கு தண்ணீர் விற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
சைப்பிரஸ் துருக்கியிடம் போக தடுப்பது அரசியல் மட்டும் தான். பொதுநலன் கருதி, பழைய பகையை மறந்து செய்யற்படும் காலம் நெருங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அரசியல் அல்லது இன முரண்பாடுகளால், பிரிந்துள்ள இரண்டு சைப்பிரஸ்களும், பொருளாதார காரணங்களால் ஒன்று சேர்கின்றன. ஒரு காலத்தில், பிரிட்டிஷ் காலனியாதிக்கநிர்வாகம், தனக்கெதிரான விடுதலைபோரட்டத்தை, இனங்களுக்கு இடையேயான போராக மாற்றிவிட்டது. இனவாதிகள் அதனை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தினர். இறுதியில் பொருளாதார நலன்கள் எல்லாவற்றையும் மேவி நிற்பது வெள்ளிடைமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
(படம் 2 : நிகோசியா ஐ.நா. எல்லைக்கோடு )

 

 

 

 

 

(உயிர்நிழல் Januari-March/April -June 2008 ல் பிரசுரிக்கப்பட்டது)

_____________________________________________________________________________________ ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் _____________________________________________________________________________________

Thursday, June 19, 2008

"இனம்" காணப்பட்ட தேசியம்


"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா?

"Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய", "கருப்பு-ஆப்பிரிக்க", "மஞ்சள்-சீன" வகை மனிதப்பிரிவுகளை குறிக்கவே பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தியதுடன் நில்லாது, கூடவே "Racism" என்ற ஒன்றையும் கற்பித்து விட்டு சென்றுள்ளனர். சிங்களவர்கள் ஆரியரின் வழித்தோன்றல்கள், தமிழர் திராவிடரின் வழிதோன்றல்கள் என்பது கூட சில ஆங்கிலேய அறிஞர்களின் கண்டுபிடிப்பு தான். அதற்கு முன்பு தாம் சார்ந்த மன்னனுடனும், அல்லது மதத்துடனும் அடையாளம் காணப் பழகிய மக்கள் மத்தியில் ஆரிய, திராவிட கருத்தியல்கள் தூவப்பட்டதும் அந்தக்காலகட்டத்தில் தான்.

இன்று இலங்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களிடமும் மரபணு(DNA) சோதனை செய்யப்பட்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். மரபணு அடிப்படையில் இலங்கைத்தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையில் அதிக ஒற்றுமை இருக்கும். அதேநேரம் இலங்கைத்தமிழருக்கும், இந்தியத்தமிழருக்கும் இடையில் வேற்றுமையும் இருக்கும். அதே போல கணிசமான சிங்களவர்கள், இந்திய தமிழருடன் ஒத்த மரபணுக்களை கொண்டிருப்பர். உலகின் பலபாகங்களிலும் இனங்களின் கலப்பு நடந்ததும், பின்னர் மொழியடிப்படையில் பிரிந்ததற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஏற்கனவே இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள அயர்லாந்தில் மரபணு சோதனை செய்த விஞ்ஞானிகள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்தனர்.

மொழி அடிப்படையிலான தேசியம் கூட ஒரு ஐரோப்பிய கண்டுபிடிப்பு தான். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இராசதானிக்குள் பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்க மதம் உதவியது போல; மன்னனின், மதத்தின் ஏகபோக அதிகாரத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மத்தியதர வர்க்கம், புதிதாக "பிரசைகள்" என்று அழைக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க மொழியை பயன்படுத்தியது. அது பின்னர் ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கும் தனது பங்களிப்பை செய்தது. இலங்கையில் ஏகாதிபத்திய மொழியில் கல்விகற்ற உள்ளூர் மத்தியதர வர்க்கம் பின்னர் உள்ளூர் மொழிகளை தமது நன்மைகளுக்காக வளர்க்க வேண்டிய தேவை உருவாகியது. தன்னை போலவே சிந்திக்க வைப்பதற்காக கல்வியூட்டும் ஏகாதிபத்திய நிர்வாக முறை பண்டைய எகிப்திலும் நிலவியது. ஆங்கிலேயரும் அதையே செய்தனர். எல்லாவற்றிலும் அனுகூலங்களும், பிரதிகூலங்களும் உள்ளது போலவே, இந்த கல்விமுறையும் அமைந்தது. ஒருபக்கம் ஏகாதியபத்திய நலன்களை பாதுகாக்கும் அதேநேரம், பூர்வீக மொழிகள், கலாச்சாரம் என்பன மறுமலர்ச்சி காண்கின்றன. எகிப்தில் தோன்றிய அரபு-இஸ்லாமிய மறுமலர்ச்சி, இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி, இலங்கையில் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி என்பன பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழே தான் தோன்றின.

எல்லாவற்றையும் கற்றுகொடுத்த ஐரோப்பியர்கள், தேசியம் என்ற சொல்லை தமது தாயகங்களை குறிக்கவே நீண்ட காலமாக பயன்படுத்தினர். பிற்காலத்தில் காலனிய காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட நிர்வாக அலகுகள் சுதந்திர நாடுகளாக மாறியபோது, அவற்றிற்கும் தேசியம் பொருத்தப்பட்டது. அன்றிருந்த ஐரோப்பிய மையவாத கண்ணோட்டம், ஆப்பிரிக்க, ஆசியாவில் இருந்த பல்வேறுபட்ட மக்கட்குழுக்களை "இனங்கள்" என்ற வரையறைக்குள் பார்த்தது. அதனால் தான் மேற்கத்தைய ஊடகங்கள், அரசாங்கங்கள் இன்றும் இலங்கையில் நடப்பதை "இனப்பிரச்சினை" என்று குறிப்பிடும் அதே சமயம், அயர்லாந்தில், யூகோஸ்லேவியாவில் நடந்ததை "மதப்பிரச்சினை" என்றனர். ருவண்டாவில் "இனப்"படுகொலைகளில் இறங்கிய ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை சேர்ந்த ஹூட்டு, துட்சி பிரிவுகள் எந்த அடிப்படையில் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன? ஒரே மாதிரி(கருப்பினத்தை சேர்ந்த) தோற்றமளிக்கும், சூடான் அரபு மொழி பேசுவோருக்கும், டார்பூர் பிராந்திய மொழி பேசும் மக்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம், எதற்கு இனவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது? ஒரே மொழியை பேசுபவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் "செர்போ-குரவசிய" மொழி பேசும் செர்பியரும், குரவசியர்களும் எப்படி வேறு இனங்களாகும்?

பல கேள்விகள் இவ்வாறு கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். விடை தான் கிடைக்காது. மிகவும் பொருந்தக்கூடிய பதில் ஒன்று மட்டுமே உள்ளது. 19 ம் நூற்றாண்டில் தோன்றிய புதிய அரசியல் தத்துவமான "தேசியம்" என்ற சொற்பதம் இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு காரணமாக உள்ளது. குறிப்பிட்ட பிரதேசத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும், தமக்குள் இலகுவாக தொடர்பு ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மொழி பேசும் மக்கள் குழுக்கள் தாம் ஒரு தேசியமாக பரிணாம வளர்ச்சி அடைவதை விரும்புகின்றனர். ஒரு சில வேளைகளில் அது மதம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியாவில் (கத்தோலிக்கரான) குறோவசியர்கள், (கிரேக்க-கிறிஸ்தவ) செர்பியரிடம் இருந்து தம்மை வேறுபடுத்தி பார்த்தனர். வேறு சில நேரம் அது பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு அரபு மொழி பேசும், அதேநேரம் மதத்தால் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களுமான பாலஸ்தீனியர்கள், தமக்கென "பாலஸ்தீன தேசியம்" ஒன்றை உருவாக்கினர். அதற்கு மாறாக இஸ்ரேலியர்கள் யூத மதத்தால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுள்ளனர். அவர்களுக்கிடையில் இருந்த பல்வேறு மொழி பேசுவோர், மறைந்த ஹீப்ரு மொழியை புதிதாக கற்றுக்கொண்டு புதிய தேசியம் படைத்தனர். யூதர்களிடையே காணப்படும் இன/நிற வேறுபாடுகள், அந்த தேசியம் வலிந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றது.

இனம் தொடர்பான சிக்கல்கள் இத்துடன் முடியவில்லை. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விதமாக இனங்காணப்படுகின்றன. ஒருபக்கம் தமது "வேர்களை தேடும்" இனங்கள் தேசியங்களை உருவாக்கி நிலைநிறுத்த பட்டுபட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்; மறுபக்கம் இனப்பிரச்சினையின் வேர்களை தேடும் ஆய்வுகளும் தொடரட்டும்.

_____________________________________________________

Friday, June 06, 2008

ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி


கத்தோலிக்க பல்கலைக்கழகம், "கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகம்" என்று மறுபெயர் சூட்டப்பட்டது. மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரது படங்கள் மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை அலங்கரித்தன. அவை நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சி தந்த விளைவுகள் பற்றி திரும்பி பார்க்கும் வேளை, அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டே, வரலாற்றை பார்க்க மறுக்கும் பலர் எம்மிடையே உள்ளதையும் கவனிக்க வேண்டும். இன்று "ஐரோப்பிய கலாச்சாரம்" என்றும், "ஐரோப்பிய ஜனநாயகம்" என்றும் நாம் காணும் பல மேற்கு ஐரோப்பிய மாணவர் போராட்டங்களின் பலன்கள் என்பதை பலர் அறிவதில்லை. தற்போதும் சில திரைப்பட தயாரிப்பாளர்களும், இடதுசாரி எழுத்தாளர்களும் 1968 புரட்சியை பற்றி, மக்களுக்கு தவறாக காட்ட விளைகின்றனர். அன்றைய இளைஞர்கள் கட்டற்ற பாலியல் உறவு வேண்டினர் என்று கொச்சைப்படுத்தும் "ட்ரீமர்ஸ்" படம், மக்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கின்றது. "கனவு காண்பவர்கள்" என்ற தலைப்பே, புரட்சி என்பது வெறும் கனவு மட்டுமே என்று எடுத்தியம்புகின்றது.

உண்மையில் 1968 மே மாதம் பாரிஸ் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற மாணவர் புரட்சி, சூனியத்தில் இருந்து தோன்றவில்லை. அதற்கு முன்னரே ஜேர்மனிய மாணவர்களும், அமெரிக்க மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். "ஹிட்லரின் பிள்ளைகள் நாம், நாசிச கடந்த காலத்துடன் கணக்கு தீர்க்க வந்திருக்கிறோம்." என்ற முழக்கத்துடன் பெர்லின் மாணவர் போராட்டம், மேற்கு ஜெர்மனியில் பதவிகளில் இருந்த முன்னாள் நாசிச அனுதாபிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஆரம்பத்தில் முன்வைத்தது. பின்னர் "செம்படை பிரிவு"(RAF) என்ற ஆயுதகலச்சாரத்தை நம்பும் தீவிரவாத குழுவாகியது வேறு கதை. அதே போல தசாப்த காலம் நீடித்த வியட்நாம் போரை நிறுத்திய அமெரிக்க மாணவர் போராட்டம், பின்னர் ஹிப்பி கலாச்சாரமாக சீரழிந்தது தனிக்கதை.
பிரான்ஸ் மட்டுமே புரட்சியின் விளிம்பிற்கு சென்று மீண்டது. பாரிஸ் நகர பல்கலைக்கழக நிர்வாகத்தை கைப்பற்றிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர் மத்தியிலும் புரட்சியை முன்னெடுப்பது குறித்து வகுப்புகள் எடுத்து, இயக்கமாக்கினர். தொழிற்சாலைகளை கைப்பற்றிய தொழிலாளர்கள், அவற்றை தாமே நிர்வகித்தனர். இருப்பினும் வன்முறை பிரயோகிக்க தயாராக இருந்த அரச இயந்திரம், அதனோடு ஒத்துழைத்த கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற காரணங்களால் புரட்சி வெற்றியடையவில்லை. அன்று மாணவர் தலைவர்களாக இருந்தவர்கள், தற்போது நிர்வாகிகளாகவும், முதலாளிகளாகவும் மாறியுள்ளனர். உண்மையில் மேற்கு ஐரோப்பா அன்றும் புரட்சிக்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் கேட்ட சீர்திருத்தங்களை வழங்கி விட்டு, தமது இருப்பை காப்பாற்றிக் கொண்டன அரசாங்கங்கள்.

அப்போது ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி (அரச ஆசீர்வாதத்துடன்) மக்களின் வாழ்க்கையை, சிந்தனையோட்டங்களை மாற்றியது. மதங்கள் நிர்ணயித்த பழமைவாத கட்டுப்பாடுகள் தளர்ந்தன. பாலியல் சுதந்திரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஓரங்கமாகியது. மேலும் மார்க்சையும், மாவோவையும் படித்து விட்டு மாணவர்கள் கோரிய "அதிகபட்ச ஜனநாயகம்", வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கு, தொழிலாளர் நலன் குறித்து தீர்மானிப்பதில் தொழிற்சங்கத்தின் பங்கு என்பன அதன் பின்னரே ஏற்பட்டன. பலர் நினைப்பது போல, இத்தகைய அம்சங்கள் "ஐரோப்பாவின் மூலவளங்கள்" அல்ல. அவை யாவும் அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பலன்கள்.

அன்று இருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் யாவும் புரட்சிக்கு விரோதமாக இருந்ததால், மாணவர்கள் வெறுப்படைந்திருந்தனர். அதனால் தான் ஆங்காங்கே பல ஆயுதபோரட்டத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. பிரான்சில் Action Directe, ஜெர்மனியில் Rotte Armee Fraktion, இத்தாலியில் Red brigade, பெல்ஜியத்தில் CCC, என்பன குண்டுவெடிப்புகள், அரசியல் தலைவர்கள், முதலாளிகளை கொலைசெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டன. ஜனநாயக வழியில் போராட நினைத்த மாணவர்கள் மாவோயிச கட்சிகளை நிறுவினர். இன்று தீவிரவாத இயக்கங்கள் மறைந்து விட்டன. மாவோயிச கட்சிகள் ஓரளவிற்கு நிலைத்து நிற்கின்றன.

அன்றிருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள், "ஸ்டாலினிச விரோத" அரசியலால் பாதிக்கப்பட்டு, மிதவாத நிலைஎடுத்ததும், புரட்சி ஏன் வெல்லவில்லை என்பதற்கான காரணம். ஸ்டாலினுக்கு பின்னர் வந்த குருஷேவ், ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நிராகரித்து, "சமாதான சகவாழ்வு" என்ற புது சித்தாந்தம் வகுத்தால்; கருத்து வேறுபாடுகளை கொண்ட சீன, அல்பேனிய கொம்யூனிஸ்டுகள் மூன்றாம் கொம்யூனிச அகிலத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ரஷ்ய வழியை பின்பற்றிய பிற கொம்யூனிஸ்ட் கட்சிகளை "திரிபுவாதிகள்" என்றழைத்தனர். தாம் மட்டுமே புரட்சிகர பாதையில் செல்வதாக கூறினர். இதனாலேயே அறுபதுகளில் மேற்கு ஐரோப்பாவில் எழுச்சியுற்ற மாணவர்கள், மாவோவை பின்பற்றினர். இந்த வரலாற்று தொடர்ச்சியை காண மறுக்கும் சில இடதுசாரி எழுத்தாளர்கள், "1968 புரட்சியின் தோல்விக்கு" வேறு காரணங்களை தேடுகின்றனர்.

உண்மையில் அன்றைய புரட்சி வெற்றியடையாவிட்டாலும், நிச்சயமாக தோல்வியடையவில்லை. காலம்காலமாக ஐரோப்பிய மக்களின் வாழ்க்கையை தீர்மானித்த பழமைவாதிகள் செல்வாக்கற்ற சிறுபான்மயினராகினர். அந்த இடத்தை தனி மனித சுதந்திரம் பிடித்துக்கொண்டது. உண்மையில் லிபரல்களுக்கும் பிடித்த விடயம் அது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை, பல ஜனநாயக உரிமைகள் கிடைத்தமை என்பன, அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பெறுபேறுகள். மேற்கு ஐரோப்பிய அரசுகள் அவ்வப்போது வெடிக்கும் மக்கள் போராட்டங்களை அங்கீகரித்து, சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் தனது இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வளைந்து கொடுக்கும் தன்மை, ஆண்டாண்டு காலமாக மக்கள் போராடி பெற்ற உரிமைகளை, தான் "மனவுந்து கொடுத்த" சலுகைகள் போல காட்டிக்கொள்ள உதவுகின்றது. அதனாலே தான் இன்று உலகில் பலர், 1968 பிரெஞ்சு புரட்சியை போன்ற பல விடயங்களைப் பற்றி கேள்விப்படாதவர்களாக உள்ளனர்.

______________________________________________