Showing posts with label லீகுவான்யூ. Show all posts
Showing posts with label லீகுவான்யூ. Show all posts

Monday, March 30, 2015

சிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவை விமர்சித்த சிறுவன் சிறையில்

(எச்சரிக்கை: இந்தப் பதிவும், இதிலுள்ள வீடியோவும் சிங்கப்பூரில் இருப்பவர்கள் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.)

சிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவை பற்றி வானளாவப் புகழும் தமிழர்கள் பலரைக் கண்டிருப்பீர்கள். கை நிறைய பணம் கிடைக்குமானால், அவர்கள் ராஜபக்சவை பற்றிக் கூட புகழ்ந்து பேசத் தயாராக இருக்கிறார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டத்தில், ஏராளமான (போலித்) தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றனர். 

உலகம் முழுவதும் சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில், மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததைப் போன்று தான், சிங்கப்பூர் பிரஜைகளும் வாழ்கின்றனர். தங்களது கல்வி, தொழில் வாய்ப்பு, குடும்ப நலன், வசதியான வாழ்க்கை இவற்றை மட்டுமே முக்கியமாகக் கருதும் ஆட்டு மந்தைக் கூட்டமாக சிங்கப்பூர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஷேக்குகளின் சர்வாதிகார ஆட்சி நடக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும், லீகுவான்யூவின் சிங்கப்பூருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.   

இந்த உண்மைகளை யாரும் இணையத்தில் கூடப் பரப்ப முடியாது. அரச அடக்குமுறையை எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறைவாசம் கிடைக்கும். லீகுவான்யூ மறைவுக்குப் பின்னர், சிங்கப்பூரில் இருந்து கேட்ட கலகக் குரல் ஒன்று மிக வேகமாக நசுக்கப் பட்டது. 

ஆமோஸ் யி (Amos Yee) எனும் 17 வயது சிங்கப்பூர் சிறுவன், லீகுவான்யூவை விமர்சித்து ஒரு யூடியூப் வீடியோவை வெளியிட்டிருந்தான். அதற்காக அவனைக் கைது செய்துள்ள பொலிஸ், அவன் மீது இருபது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவும் அழிக்கப் பட்டு விட்டது. 

"இறுதியில் லீகுவான்யூ இறந்து விட்டான்" என்று வீடியோவில் பேச ஆரம்பிக்கும் ஆமோஸ் யி, "லீ  கொடூரமானவன்" என்று சாடுகின்றார். அப்படி சொன்னதற்காகவே பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம் என்று எல்லோரும் பயந்திருந்தார்கள். லீ ஆதரவாளர்கள் அறியாமையிலும், மாயையிலும் வாழ்கிறார்கள்.  

லீகுவான்யூ ஒரு சர்வாதிகாரி. ஆனால், தான் ஒரு ஜனநாயகவாதி என்று உலகம் முழுவதையும் ஏமாற்றிக் கொண்டிருந்தார். மக்களிடம் இருந்து அதிக வரி அறவிடும் அரசு, சுகாதாரத் துறைக்கு மிகவும் குறைவாகவே செலவிடுவதாக ஆமோஸ் கூறுகின்றார். சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகமாக இருப்பது மட்டுமல்ல, உலகிலேயே அதிகமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது.

உலகில் உள்ள வழமையான சர்வாதிகாரிகளைக் காட்டிலும், லீகுவான்யூ வித்தியாசப் படுவதற்கு காரணமாக, அவரை இயேசு கிறிஸ்துவின் அரசியலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். ஒரு பக்கம் அதிகார மமதை கொண்டவராகவும், மறுபக்கம் கருணையுள்ளம் படைத்தவராகவும் காட்டிக் கொள்வதில், லீகுவான்யூ இயேசு கிறிஸ்துவை போன்றவர்.

ஆமோஸ் யி யை கைது செய்து தடுத்து வைத்துள்ள சிங்கப்பூர் காவல்துறையினர், மத நிந்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளனர். அதாவது, லீகுவான்யூவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் பேசியதற்காக, தாங்கள் ஒரு 17 வயது சிறுவனை கைது செய்யவில்லையாம். மதத்தை இழிவு படுத்தியதற்காக கைது செய்தார்களாம். "சிங்கப்பூரில் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடக்கிறது. லீகுவான்யூ ஒரு சிங்கப்பூர் ராஜபக்சே," என்ற உண்மையைக் கூறினால் பலருக்குப் பிடிப்பதில்லை.  ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர், தங்களது அடிமை விசுவாசத்தையும், அடிவருடித்தனத்தையும் காட்ட வேண்டாமா?

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. "சிங்கப்பூரின் ராஜபக்சே" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு
2. சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
3. லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்


சிங்கப்பூர் அரச அடக்குமுறையாளர்கள் அழித்த யூடியூப் வீடியோவை, ஆமோஸ் ஆதரவாளர்கள் மீள்பதிவேற்றம் செய்து வருகின்றனர். 
சிங்கப்பூர் அரச ஆதரவு The Straits Times பத்திரிகையில் வந்த செய்தி

Sunday, March 29, 2015

லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்

(எச்சரிக்கை: சிங்கப்பூரில் இருப்பவர்கள் இந்தப் பதிவையும், வீடியோவையும் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.) 

சிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவின் கொடுங்கோல் ஆட்சியை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் ஆவணப்படம். இது போன்ற எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும், ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடிவருடிப் பிழைக்கும், அடிமை விசுவாசிகளுக்கு உறைக்கப் போவதில்லை.

சிங்கப்பூர் அரசு நீண்ட காலமாக தனது பிரஜைகளுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் லீ அரசுக்கு எதிராக எதையும் கூற முடியாது என்பது தெரிந்ததே. ஆனால், வெளிநாட்டு ஊடகங்களை கட்டுப்படுத்துவது கடினமானது. அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், லீ அதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, பெருமளவு பணத்தை தண்டமாகக் கட்ட வைத்து, வாயை மூடப் பண்ணியுள்ளார்.

இலங்கையில் அரச எதிர்ப்பாளர்களையும், ஈழப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு PTA எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப் பட்டது. சிறிலங்கா அடக்குமுறை அரசு, அவசரகால சட்டத்தின் மூலம், விசாரணை இல்லாமல், காலவரையறையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்தது. சிங்கப்பூரில் லீயின் அரசு ISA எனும் அடக்குமுறை சட்டத்தை பிரயோகித்து, எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ISA சட்டம், பின்னர் லீ எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு பயன்பட்டது. அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டில், அடிக்கடி பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தேர்தலில் லீயின் PAP கட்சிக்கே அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வைக்கப் பட்டது எப்படி? சேரிகளில் வாழ்ந்த மக்களுக்கு பண முடிப்புகளும், அரச செலவில் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்கும் பணியாதவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறை ஏவி விடப் பட்டது.

இந்திய அரசியல் அலங்கோலங்களை விட மிகவும் மோசமாக சிங்கப்பூரில் நடந்துள்ளது. லீகுவான்யூ ஒரு "சிங்கப்பூர் ராஜபக்சே" மட்டுமல்ல, அதற்கும் மேலே...

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

One Nation Under Lee (complete video) 

Saturday, March 28, 2015

சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்


போலித் தமிழ்த் தேசியவாதிகள், மறைந்த சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூவுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொழுதே, பேரினவாத அரசுக்கு சார்பான அடிவருடித்தனம் அவர்களையும் மீறி வெளிப்படுகின்றது. 

தெருக்களில் எச்சில் துப்புவதை தடை செய்த தலைவர் என்று லீகுவான்யூவை புகழ்கின்றனர். இலங்கையில் ராஜபக்சே கூட, பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று தடை செய்திருந்தார். இத்தாலியில் முசோலினி, நேரத்திற்கு ரயில் விட்ட பெருமைக்குரியவர்.

உலகம் முழுவதும் பாசிஸ்டுகள், நாட்டை சுத்தமாக வைத்திருந்து நல்ல பெயர் சம்பாதித்துள்ளனர். இவற்றை மட்டும் குறிப்பிட்டுப் பேசி, அவர்கள் மக்கள் மீது பிரயோகித்த கொடுங்கோன்மையை மறைப்பதன் மூலம், போலித் தமிழ்த் தேசியவாதிகள் பேரினவாத சர்வாதிகார அரசுக்கு துணை போகின்றனர். அது சிங்கப்பூராக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் அவர்களது அரசியல் ஒன்று தான்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச, தனக்கு எதிரான சக்திகளை அரசியல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஊடகங்களின் மேல் கட்டுப்பாடுகளை விதித்தார். எதிர்த்துப் பேசியவர்களை சிறையில் அடைத்தார் அல்லது காணாமல் போகச் செய்தார். சிங்கப்பூரில் லீகுவான்யூவும் அதையே தான் செய்தார். இன்றைக்கும் அங்கே எந்த ஊடகமும் லீயை விமர்சித்து எழுத முடியாது. 

சிங்கப்பூர் அரசை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான அடக்குமுறைகளை சந்திக்க வேண்டும். குறைந்த பட்சம், அரச எதிர்ப்பாளர்களுக்கு தொழில் செய்யும் உரிமை, வசதியாக வாழும் உரிமை மறுக்கப் படும். இதனால் பல அரச எதிர்ப்பாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ராஜபக்சேயின் ஆட்சிக்கும், லீகுவான்யூ ஆட்சிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

சிங்கப்பூர், சிறிலங்காவுக்கு இடையில், வரலாற்று ரீதியாகவும் ஒற்றுமைகள் உள்ளன. பூகோள அடிப்படையில், இரண்டுமே தீவுகள் தான். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் இருந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான துறைமுக நகரங்கள் அமைந்துள்ளன. அது மட்டுமல்ல, இரண்டுமே பிரிட்டிஷாரால் தனித்தனி நிர்வாக அலகுகளாக ஆளப் பட்டு வந்தன. அறுபதுகளில் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் தலையீட்டினால் இரண்டாகப் பிரிக்கப் பட்டன.

சிங்கப்பூர் சனத்தொகையில், 75% சீனர்கள் (இலங்கையில் 75% சிங்களவர்கள்), 15% மலேயர்கள் (இலங்கையில் 15% தமிழர்கள்), 10% இந்தியர்கள் (இலங்கையில் 7% முஸ்லிம்கள்)

கலாச்சார ரீதியாகவும், சிங்கப்பூர், சிறிலங்காவுக்கு இடையில் ஒற்றுமைகள் காணப் படுகின்றன. இலங்கை எவ்வாறு இந்தியாவுடன் தொடர்பு பட்டிருந்ததோ, அதே மாதிரி சிங்கப்பூர் மலேசியாவுடன் நீண்ட கால கலாச்சார தொடர்புகளை பேணி வந்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள், இலங்கையில் சிறுபான்மையாக உள்ளனர். அதே மாதிரி, அயல் நாடான மலேசியாவில் பெரும்பான்மையாக வாழும் மலே மக்கள், சிங்கப்பூரில் சிறுபான்மையாக உள்ளனர். 

அது மட்டுமல்ல, இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக, சிங்களப் பேரினவாதிகளின்  இனக் கலவரம் தூண்டி விடப் பட்டு, அவர்கள் ஒடுக்கப் பட்டு வந்ததைப் போன்று, சிங்கப்பூரில் மலே மக்களுக்கு எதிராக நடந்தது. சிங்கப்பூரில் மலே மக்களுக்கு எதிராக, சீனப் பேரினவாதிகள் இனக்கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தை முன்நின்று நடத்திய முக்கியமான தலைவர் யார்? வேறு யாருமல்ல, நமது போலித் தமிழ்த் தேசியவாதிகளின் நன்மதிப்பை பெற்ற லீகுவான் யூ தான்! (1964 race riots in Singapore; http://en.wikipedia.org/wiki/1964_race_riots_in_Singapore )

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மை இனத்தவர்கள், "இந்தியர்களாக, அல்லது இந்திய விஸ்தரிப்புக்கு துணை போகும் ஐந்தாம் படையாக" கருதப் பட்டனர். சிங்கப்பூரில் மலே சிறுபான்மை இனத்தவர் மீதும் அதே மாதிரியான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டன.

லீகுவான்யூ மலே சிறுபான்மை இனத்தவர்களை மட்டும் ஒடுக்கவில்லை. கம்யூனிஸ்டுகளையும் ஒடுக்கி வந்தார். இன்று வரைக்கும் சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இலக்கியங்களுக்கும் தடை உள்ளது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான "தெருச் சண்டியன்" என்ற புகழும் லீகுவான்யூவை சேரும். இலங்கையிலும், "கம்யூனிஸ்ட் அபாயத்தை" ஒடுக்குவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. ஐம்பதுகளில் பொது வேலை நிறுத்த காலத்தில் நடந்த அரச அடக்குமுறைகளை அதற்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், "இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று யாருமில்லை. நாம் எல்லோரும் இலங்கையர்கள்..." என்று அறிவித்தார். லீகுவான்யூ சிந்தனையும், அதே மகிந்த சிந்தனை தான். "சிங்கப்பூரில் சீனர், மலே, இந்தியர் என்று யாரும் இல்லை. நாம் எல்லோரும் சிங்கப்பூரியர்கள்..." என்றார். இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

இலங்கையில் பெரும்பான்மை சிங்களவரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போன்று, சிங்கப்பூரில் பெரும்பான்மை சீனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு, தனது முதன்மை எதிரிகளாக கருதிய தமிழர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில், மூன்றாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

சிங்கப்பூரில் லீகுவான்யூ செய்ததும் அதே தான். முதன்மை எதிரிகளாக கருதிய மலேயர்களுடன் முரண்பாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழர்களுக்கு சலுகைகள் கொடுத்து அவர்களின் ஆதரவை சம்பாதித்திருந்தார். லீ அரசில் தமிழர்கள் அமைச்சராக இருந்ததைக் கூறி பெருமைப் படுகின்றனர். சிறிலங்கா அரசும் அதையே தான் செய்தது. பல முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தது. என்ன வித்தியாசம்?

லீகுவான்யூ "தமிழர்களுக்கு ஆதரவாக" பேசி விட்டாராம். மகிந்த ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசியதைப் போன்று தான் இதையும் பார்க்க வேண்டும். தங்களது நாடுகளில் மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் சர்வாதிகாரிகள், பிற நாட்டுப் பிரச்சினையில் நடுநிலையாளராக காட்டிக் கொள்வார்கள். இவர்கள் முன்வைக்கும் "தீர்வுகளும்" ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்ட தீர்வுகள் தான் என்பதை சொல்லத் தேவையில்லை.

லீகுவான்யூ தமிழர்களின் நண்பன் என்று சொல்லிப் பெருமைப்படும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், இதே லீகுவான்யூ தான் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தார் என்ற உண்மையை மறைப்பது ஏனோ? புலிகளை அழிப்பதற்கான இறுதிப்போர் நடந்த காலத்தில், புலிகளின் ஆயுதக் கடத்தல் கப்பல்களை காட்டிக் கொடுத்ததில் சிங்கப்பூர் கடற்படைக்கும் பங்கிருந்ததை மறந்து விட்டார்களா? புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்த சிங்கப்பூர் பிரஜையை அமெரிக்காவில் பிடித்துக் கொடுக்க உதவிய விடயம் தெரியாதா?

இவர்களை எதற்காக "போலித் தமிழ்த் தேசியவாதிகள்" என்று அழைக்கிறோம் என்பதை உணர வேண்டும். அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்கள் சார்பாகவும் பேசவில்லை, புலிகளையும் ஆதரிக்கவில்லை. ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதும், முதலாளிய சர்வாதிகாரத்திற்கு மக்களை அடிபணிய வைப்பது மட்டுமே அவர்களது குறிக்கோள்.


சிங்கப்பூரில் லீகுவான்யூவின் சர்வாதிகார ஆட்சி பற்றிய ஆவணப்படம்: