Showing posts with label முஸ்லிம் நாடுகள். Show all posts
Showing posts with label முஸ்லிம் நாடுகள். Show all posts

Tuesday, September 08, 2015

சிரிய அகதிகள் பற்றி வலதுசாரி அறிவிலிகளுக்கு இலகுவான விளக்கம்

மேற்கு ஐரோப்பாவில் என்ன நடந்தாலும், அது உலகச் செய்தியாகி விடும். அந்த வகையில், தற்போது சிரியாவில் இருந்து பெருந்தொகையில் வந்து கொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐரோப்பாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் விவாதிக்கப் படும் பேசு பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, அகதிகள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் தீவிர வலதுசாரிகளின் பதிவுகளையும் ஆங்காங்கே காணக் கூடியதாக உள்ளது. வலதுசாரிகளான சில தமிழர்களும், ஐரோப்பிய நிறவெறியர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், இந்த விளக்கக் குறிப்புகளை எழுத வேண்டியுள்ளது. 


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு செல்லவில்லை?


அகதிகள் தாமாகவே ஒரு நாட்டிற்கு சென்று அடைக்கலம் கோருவதற்கும், குறிப்பிட்ட ஒரு நாடு தானாகவே முன்வந்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அகதிகளை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கு, செல்வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவாதிப்பது போன்று, சவூதி அரேபியா போன்ற செல்வந்த வளைகுடா நாடுகளும் முன்வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது உலக நாடுகளின் அரசுக்கள், தமக்குள் தீர்மானத்துக் கொள்ள வேண்டிய விடயம். அதை அகதிகள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் தாம் விரும்பிய நாட்டிற்குத் தான் செல்வார்கள். 

சவூதி அரேபியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஓர் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்காமல், "சிரிய அகதிகள் ஏன் அந்த நாட்டிற்கு செல்லவில்லை?" என்று அகதிகளை நோக்கிக் கேட்பது முட்டாள்தனமானது. சிரிய அகதிகள், ஐரோப்பாவுக்கு செல்லாமல், முஸ்லிம் நாடுகளில் தஞ்சம் கோர வேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிக் கட்சிகள், நவ நாஸி குழுக்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களை, சில தமிழ் வலதுசாரிகளும் வாந்தியெடுப்பது அருவருக்கத் தக்கது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எழுந்த அகதிகள் நெருக்கடி முஸ்லிம் நாடுகளைத் தான் முதலில் பாதித்திருந்தது. துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய மூன்று அயல்நாடுகளும், இன்றைக்கும் இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை வைத்திருக்கின்றன. அநேகமாக, துருக்கி அகதி முகாம்களில் தங்கி இருந்த அகதிகள் தான், கிரீஸ், மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்றனர். 

அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகளே அவ்வாறு சென்றனர். ஏனென்றால், சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வரையில், பயண முகவர்கள் அல்லது கடத்தல்காரர்களின் உதவி தேவைப் பட்டது. அதற்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே அந்தளவு செலவளிக்கும் தகுதியை கொண்டிருந்தனர்.


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம்களின் புனித பூமியான சவூதி அரேபியாவுக்கு செல்லவில்லை?


ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின்
இனவாதப் பிரச்சாரம் 
அகதிகள் என்ன காரணத்திற்காக தாயகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகளால் தான், இது போன்ற மடத் தனமான கேள்விகளை கேட்க முடியும். முதலில் சிரிய உள்நாட்டுப் போர் பற்றி ஓரளவேனும் அறிந்து கொண்டு பேச வேண்டும். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர், போர் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்த சிரியாவின் நிலைமை என்ன? பெண்கள் கூட மிகவும் சுதந்திரமாக திரிந்த, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றிய நாடாக இருந்தது. அனைத்து பிரஜைகளும் அரபு மொழி பேசினாலும், பல்வேறு பட்ட சமூகங்களாக பிரிந்திருந்தனர். பல்வேறுபட்ட மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை பின்பற்றினார்கள். சிரியா ஒரு சர்வாதிகாரியால் ஆளப்பட்ட மதச்சார்பற்ற நாடாக இருந்தது.

உள்நாட்டுப் போரின் பின்னர், கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் கடும்போக்கு வஹாபிஸ்டுகளின் கை ஓங்கியது. அவர்கள் சவூதி அரேபியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வஹாபிச- இஸ்லாம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள், பெண்கள் அடக்கப் பட்டனர். 

மேற்கத்திய பாணியில் நவ நாகரிக உடை உடுத்திப் பழகிய பெண்களை, முகத்தில் இருந்து கால் வரை மூடும் கருநிற அங்கி அணிய வைத்தார்கள். கல்வியில் சிறந்த, விமானிகளாக கூட பணியாற்றிய பெண்களை, பாடசாலைக்கு செல்ல விடாமல், வீட்டுக்குள் முடங்க வைத்தார்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள் ஆண்களையும் அடக்கி வைத்தார்கள். மதுபானம் தாராளமாக கிடைத்து வந்த நாட்டில், அதைத் தடை செய்தார்கள். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். சினிமா அல்லது காதல் பாட்டுக்கள் கேட்க முடியாது. தாடி வளர்க்க வேண்டும், இப்படிப் பல கட்டுப்பாடுகள். 

மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் ஒரு நாளேனும் பள்ளிவாசலுக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஐந்து வேளையும் தொழுகைக்கு வர வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர்.

இதிலே கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. சிரியாவில் பெரும்பான்மை சமூகமாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கு மட்டும் தான் அத்தகைய கட்டுப்பாடுகள். வேறுவிதமாக சொன்னால், அவர்கள் மட்டும் தான் இஸ்லாமிய தேசத்தில் வாழும் தகைமை கொண்டவர்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கி, இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஷியா இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அலாவித்துகள் ஒன்றில் படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வெளியேற்றப் பட்டனர்.

அன்பான வலதுசாரிகளே! இப்போது சொல்லுங்கள். மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை கண்டு அனுபவித்த பின்னரும், எந்த மடையனாவது சவூதி அரேபியாவுக்கு சென்று அகதித் தஞ்சம் கோருவானா? அடுப்பில் இருந்து நெருப்புக்குள் விழுந்தது போல இருக்காதா? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்தில், சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற, சிலநேரம் அதைவிட மோசமான, அடக்குமுறை ஆட்சி தான் நடக்கிறது என்பது இப்போது தெரிந்திருக்கும். 

அது மட்டுமல்ல, இயற்கை வளம் நிறைந்த, சிரியா நாட்டின் மேற்குப் பகுதியில் தான் மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். கிழக்குப் பகுதியில் யாரும் வசிப்பதில்லை. ஏனென்றால், அது வெறும் பாலைவனம். எப்படியாவது "முஸ்லிம்களின் புனித பூமியான" சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டுமென்ற குறிக்கோளுடன், அகதிகள் பாலைவன சுடுமணலில் பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்கள் முதலில் ஈராக்கிற்கு சென்று, அங்கிருந்து தான் சவூதி அரேபிய செல்ல முடியும். ஆனால், இந்த இடத்தில் அன்பிற்குரிய முட்டாள் வலதுசாரிகள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். அந்தப் பிரதேசம் முழுவதும், ISIS என்ற இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள "இஸ்லாமிய தேசம்" ஆகும்.

யார் இந்த ISIS? சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற வஹாபிச சர்வாதிகார ஆட்சியை சிரியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் எளிது. அதன் தலைமையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர் சவூதி அரேபியர்கள்! குறிப்பிட்ட அளவு ஈராக்கியர்களும் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அந்த ஈராக்கியர்கள் ஏற்கனவே ஈராக்கில் சவூதி அரேபிய நிதியுதவி பெற்று அல்கைதா என்ற பெயரில் இயங்கியவர்கள். 

சவூதி அரேபியர்களையும், ஈராக்கியர்களையும் தலைவர்களாக கொண்ட ISIS இயக்கம், சிரியர்களை அகதிகளாக சவூதி அரேபியா செல்ல விட்டு விடுமா? "நீங்கள் எதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும்? நாங்கள் உங்களுக்காக ஒரு குட்டி சவூதி அரேபியாவை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்பார்கள்.
ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அகதிகளின் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பிரச்சார சுவரொட்டிகள். குறிப்பாக, மருத்துவர்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தினரை நோக்கி எழுதப் பட்டுள்ளது. 

"குட்டி சவூதி அரேபியாவில்" இருந்து வெளியேறும் சன்னி முஸ்லிம் பிரிவினர், ஆசாத் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிரிய அரசு அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது. 

ஈழப்போர் நடந்த காலங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செல்லும் தமிழர்கள், சிறிலங்கா அரசினால் எந்தளவு துன்புறுத்தப் பட்டார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை. அதே பிரச்சினை தான், சன்னி முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.

முஸ்லிம் அகதிகள், "குட்டி சவூதி அரேபியாவான" இஸ்லாமிய தேசத்தில் இருந்து வெளியேற விரும்பினால், அதற்கு வசதியான வழி, லெபனானும், துருக்கியும் தான். குறைந்தது ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாட்டிற்கு செல்லாமல், ஆயிரம் கிலோமீட்டர் பாலைவனத்திற்குள் பயணம் செய்து, எந்த மடையனும் சவூதி அரேபியாவுக்கு போக மாட்டான். 

"துரதிர்ஷ்ட வசமாக", லெபனான், துருக்கி ஆகிய "முஸ்லிம்" நாடுகள், ஐரோப்பாக் கண்டத்திற்கு அருகாமையில் உள்ளன. அகதிகள் ஐரோப்பா செல்வது வலதுசாரிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முடியுமா? டியர் வலதுசாரீஸ்! துருக்கி இருக்குமிடத்தில் சவூதி அரேபியாவை வைக்கச் சொல்லி, கடவுளிடம் மனுக் கொடுத்துப் பாருங்கள்!

அது சரி, வலதுசாரிகளே! உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதச் சிறுபான்மையினரான, கிறிஸ்தவர்கள், அலாவித்துகள், டுரூசியர்கள், யூதர்கள், இவர்களும் முஸ்லிம் நாடுகளுக்குத் தான் அகதிகளாக செல்ல வேண்டுமா? 

என்னது? சிரியாவில் வேற்று மதங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? முதலில் ஓர் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். விவிலிய கதைகள் நடந்த நாடுகளில் சிரியாவும் ஒன்று. அங்கே இப்போதும் பண்டைய கால கிறிஸ்தவ மதப் பிரிவுகள் உள்ளன. அது மட்டுமல்ல, ஏசு கிறிஸ்துவின் தாய்மொழி என கருதப்படும் அரமைக் மொழி பேசும் மக்களும் சிரியாவில் தான் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது மாதிரி, இஸ்லாமிய மதமும் பிரிந்துள்ளது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் மாதிரி இஸ்லாத்தில் சன்னி மார்க்கம் உள்ளது. அதிலிருந்து பிரிந்தது ஷியா மார்க்கம். 

கத்தோலிக்கத்தில் இருந்து புரடஸ்தாந்துகாரர்கள் பிரிந்து சென்றதும், பின்னர் அதிலிருந்து பெந்தெகொஸ்தே, யெகோவா என்றேல்லாம் பிரிவுகள் உண்டானதும் தெரிந்திருக்கும். அதே மாதிரி, ஷியாவில் இருந்து பிரிந்து, அலாவி, டுரூசி போன்ற பல பிரிவுகள் உண்டாகின. அந்தப் பிரிவுகள் எல்லாம் சிரியாவில் உள்ளன.

அமெரிக்காவில் சில பெந்தெகொஸ்தே - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், தம்மை தனியான மதமாக ஸ்தாபித்துக் கொண்டனர். குறிப்பாக, யெகோவா, மொர்மன் சபைகளை சொல்லலாம். அதே மாதிரி, சிரியாவில் அலாவிகள், டுரூசியர்கள் பெரும்பான்மை மதங்களினால் வேற்று மதத்தவராக நடத்தப் பட்டனர். 

குறிப்பாக அலாவி பிரிவினர், இந்தியாவில் இருப்பது மாதிரி தாழ்த்தப் பட்ட சாதியினரின் நிலையில் இருந்தனர். அவர்கள் பல நூறாண்டுகளாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட்டனர். இன்றைய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவித்துக்கள் ஷியா மதப் பிரிவினராக உயர்த்தப் பட்டனர். ஈரானுடன் ஏற்பட்ட நெருக்கமான அரசியல் - இராஜதந்திர உறவுகள் அதற்கு உதவின.

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான கோலான் குன்றுப் பகுதியில் டுரூசியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தம்மை தனியான மதமாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென தனியான மதச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உள்ளதால், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. கோலான் குன்றுகளில் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதனால், கணிசமான அளவு டுரூசியர்கள் இஸ்ரேலுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அவர்கள் இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்று, இஸ்ரேலிய இராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். 

ஸோ... வலதுசாரீஸ்... சிரிய டுரூசிய அகதிகளை, இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கலாமே? இஸ்லாத்துடன் எந்த சம்பந்தமுமில்லாத சிரிய கிறிஸ்தவர்கள், சிரிய டுரூசியர்கள் கூட முஸ்லிம் நாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு அகதிகளாக செல்ல வேண்டுமா? திஸ் இஸ் டூ மச். வாட்ஸ் த ப்ராப்ளம் வலதுசாரீஸ்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, May 09, 2012

அரேபியருக்கு ஜனநாயகம் தெரியாது!

உலகில் எதுவுமே நிலைத்து நின்றதில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை ஒரு சில மாதங்களுக்குள் மாற்றி விட்டது. எந்த நாட்டில் இந்த புரட்சி அலை கரை சேரும், என்று ஆளாளுக்கு ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், அரபுலகை அடக்கியாள, அல்கைதா பயங்கரவாதம் தேவைப்பட்டது. இல்லை, அது அரபுகளை பயமுறுத்தவல்ல. அரபுக்களை காட்டி, ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் பயமுறுத்தி வைப்பதற்காக, மேற்கத்திய அரசுகளால் பேணி வளர்க்கப் பட்டது. 

எட்வர்ட் சையித் போன்ற பிரபல அறிவுஜீவிகள், கீழைத்தேய "ஓரியண்டலிசம்" குறித்து ஐரோப்பியர் கொண்டுள்ள அச்சத்தை ஆவணப் படுத்தியுள்ளனர். உலக நாகரீகங்களின் வரலாற்றில், ஐரோப்பியரின் நாகரீகம் காலத்தால் பிந்தியது. பெரும்பாலும் அரேபிய நாகரீகம் ஐரோப்பாவுக்கு வழங்கிய கொடைகள் ஏராளம். அறிவியலுக்கும், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், ஐரோப்பியர் அரேபியருக்கு கடமைப் பட்டுள்ளனர். உலக வரலாற்றில், கொலை பாதகச் செயல்களுக்கு அஞ்சாத தேசங்கள், தம்மை விட நாகரீகத்தில் முன்னேறிய நாடுகளை அடிமை கொண்டுள்ளன. அதன் பின்னர், தாமே நாகரீகத்தில் சிறந்தவர்களாக பிரகடனம் செய்து கொள்ளும். அரபுலகிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவும் அப்படிப் பட்டதே.

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் இருந்து, இன்று வரை அரேபிய நாடுகளில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடப்பது சர்வசாதாரணம். பல சர்வாதிகாரிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருந்ததால், "ஜனநாயகம் பேசும் கனவான்கள்" மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர்கள், "அரேபியர்கள் இன்னும் ஜனநாயக அரசியலுக்கு பக்குவப் படவில்லை." என்று கூறி வந்தார்கள். ஆப்பிரிக்கர்கள் குறித்தும் அதே போன்ற நிலைப்பாட்டை வைத்திருந்தார்கள்.

துனிசியாவில் புரட்சி செய்த மக்கள், மேலைத்தேய கற்பிதங்களை பொய்யாக்கியுள்ளனர். "ஜனநாயகம் என்பது மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியப்படும்." என்ற கருதுகோளை தவறென நிரூபித்துள்ளனர். "துனிசியாவில் நடந்தது புரட்சி இல்லை!" என்று, வலதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அறிவுஜீவிகளும் பல்வேறு காரணங்களுடன் விளக்கி வருகின்றனர். மேற்கத்திய சார்பு சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் எழுச்சி, வலதுசாரிகள் எதிர்பாராத ஒன்று. இடதுசாரிகளோ வரட்டுத்தனமான மார்க்சிய விளக்கங்களை கொடுக்கின்றனர். இவ்விரு தரப்பினரும், அரபுலகின் கடந்த கால வரலாற்று உண்மைகளை கணக்கில் எடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நினைவூட்டவே, அரபுலகை காலனிப்படுத்திய ஐரோப்பியரின் வருகையுடன் இந்தக் கட்டுரையை தொடங்கினேன்.

மேற்குலக நாடுகள், எப்போதும் தமக்கு சார்பான ஆட்சி மாற்றம் இடம்பெறும் பட்சத்தில் தான், அதனை "புரட்சி" என்று அழைப்பார்கள். மற்றவை எல்லாம், "சதிப்புரட்சி", "இராணுவ சதி", "ஆட்சிக் கவிழ்ப்பு", "காடையர் கும்பலின் வன்முறை" என்று அழைக்கபப்டும். இன்றைக்கும் மேற்குலக பாடநூல்கள், "லெனின் தலைமையில் 1917 ல் ரஷ்யாவில் இடம்பெற்ற சதிப்புரட்சி" என்று தான் எழுதி வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் புரட்சி நடக்கவில்லை. அவையெல்லாம் "ஆயுதமேந்திய சிறு குழுவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு" மாத்திரமே.

பெர்லின் மதில் உடைப்பையும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் தான், அவர்கள் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள். அடுத்தடுத்து செர்பியாவில், ஜோர்ஜியாவில், உக்ரைனில் எல்லாம் "புரட்சி" இடம்பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில், "சிரிய இராணுவ ஆக்கிரமிப்பை" எதிர்த்து லெபனாலில் புரட்சி நடந்தது. அதே லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலை எதிர்த்த போராட்டம், "ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதம்" என்று அழைக்கிறார்கள். இடதுசாரி சிந்தனை கொண்டோர், இது போன்ற "பிரச்சார யுக்திகளை" அவதானிப்பதில்லை. மாறாக, பாமர மக்களை கவரும் முதல் கட்ட அரசியலிலேயே பலவீனமாகவுள்ளனர். இந்த வெற்றிடத்தை, தீவிர வலதுசாரிகள் இலகுவாக நிரப்பிக் கொள்கின்றனர்.


வட ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சிகள் இல்லை. ஆனால் புரட்சிக்கேற்ற சூழ்நிலை நிலவியது. ஆண்டாண்டுகால வறுமை, வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைக்குள் வாழ்ந்த மக்களின் எழுச்சி, என்ன சொல்ல வருகின்றது? மார்க்சியமோ, வேறெந்த சித்தாந்தமோ அறிந்திராத மக்கள் தலைவர்கள் தான் அவர்களை வழிநடாத்தினார்கள். அவற்றை அறிந்தவர்களின் பங்களிப்பு இருந்த போதிலும், எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தனர். மூன்று தசாப்த கால வலதுசாரி சர்வாதிகார ஆட்சிக்குள் வார்ந்த இளந்தலைமுறையிடம், அவற்றை எல்லாம் எதிர்பார்ப்பது அறிவீனம். இன்று ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில், மார்க்ஸியம் போன்ற மாற்றுக் கருத்துகளை ஆர்வமாகக் கேட்கும் அறிவுத் தேடல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவியுள்ள அல்ஜீரியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்தமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. "முஸ்லிம் நாடுகள் என்றாலே பழமைவாதிகள், அல்லது மதவெறியர்களைக் கொண்டுள்ளன." அரேபியர் என்றாலே, அத்தகைய தவறான முத்திரை குத்தப் பட்டு விடும்.


இருபதாம் நூற்றாண்டில் உலகை வலம் வந்த "கம்யூனிச அலை", அரபு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஈராக் முதல் மொரோக்கோ வரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத நாடுகளைக் காண்பதரிது. தென் யேமனை, ஒரு மார்க்சிய லெனினிசக் கட்சி ஆட்சி செய்தது. தென் ஓமானில் ஆயுதமேந்திப் போராடிய கம்யூனிசப் புரட்சியாளர்களை ஒடுக்க பிரிட்டிஷ் SAS படையினர் களமிறங்கினார்கள். பனிப்போர் உச்சத்தில் இருந்த நாட்களில், மேலதிக அரபு நாடுகளும் சோவியத் அணியில் சேருவதை, மேற்குலகம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கம்யூனிசப் பேயை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவெறியர்களை ஆதரித்தது. "உனக்கு இறை நம்பிக்கை இருந்தால், நாஸ்திக கம்யூனிஸ்டுகளுடன் சேராதே!" என்று அவர்களே மக்களை அடக்கி வைத்தார்கள். வேறு சில நாடுகளில், மேற்குலகின் சொற்கேட்டு நடக்கும் சர்வாதிகாரிகள், அந்தப் பணியை திறம்படச் செய்தனர்.


சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் , அமெரிக்கா தன்னிகரற்ற ஏகாதிபத்திய வல்லரசாகியது. குறிப்பாக 11 செப். 2001 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், அமெரிக்கா லிபியா மீது படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் கடாபி மேற்குலகின் உத்தரவுகளுக்கு அடிபணிந்தார். பேரழிவு விளைவிக்கும் ஆயுத உற்பத்தியை தானாகவே நிறுத்திக் கொண்டார். புன்முறுவல் பூக்கும் மேற்கத்திய தலைவர்களின் அன்புக்கு மயங்கினார். "இஸ்லாமிய சோஷலிச அரசு" அமைப்பது குறித்து, அவர் எழுதிய "பசுமை நூல்" இன், கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டார். எந்த அளவு நல்ல பிள்ளையாக நடந்தாலும், ஐரோப்பியர்கள் பழசை மறப்பதில்லை. "ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் தலைவர்", காலனிய அடிமை நாட்டை ஆளுவதை அவர்கள் மன்னிக்கப் போவதில்லை. ஈரானில் மொசாடேக், ஈராக்கில் சதாம் ஹுசைன், எல்லோரும் குறிப்பிட்ட காலத்தில் மேற்குலக நலன்களுக்கு எதிராக ஆள விரும்பியவர்கள். அதற்காகவே பதவியிறக்கி தண்டிக்கப்பட்டார்கள்.  கடாபிக்கு நடந்ததும் அது தான். ஆக்கவும், அழிக்கவும் வல்ல இறைவன் இந்தப் பூமியில் தான் வாழ்கிறான்.


வட ஆப்பிரிக்க அரபு நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சி அல்ல. துனிசியாவிலும், எகிப்திலும் பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்து போராடிய மக்களுடன், லிபிய கிளர்ச்சியாளர்களை ஒப்பிட முடியாது. அவர்களில் யாரும் லிபியர்கள் போல, மன்னர் கால கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. இன,மத, குல வேறுபாடுகளை மறந்து அனைவரும் தேசியக் கொடியை முத்தமிட்டனர். எகிப்திலும், துனிசியாவிலும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும், இராணுவத்துடன் மோதும் எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. லிபியாவில், ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. வெகு விரைவிலேயே, போர்கோலம் பூண்டு, இராணுவத்துடன் மோதினார்கள். லிபிய இராணுவத்தின் தாக்குதல்களை, "கடாபியின் ஆப்பிரிக்க கூலிப்படை" தாக்குகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். லிபியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றனர். லிபியாவில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர், அவர்கள் அரசு இராணுவத்திலும் இருந்தார்கள். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பேசியதால்,  "லிபிய மக்கள் எழுச்சி" பற்றிய விம்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இவர்கள் லிபியாவின் எந்த மக்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்?


உலகில் ஐரோப்பிய காலனியாதிக்கம் முழுமையாக மறைந்து விட்டதா? இன்றைக்கும் முன்னாள் காலனிகள் மீதான ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடர்கின்றது. தமக்குப் பிடிக்கும், தமது நலன் காக்கும் ஆட்சியாளர் பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக தம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். இராஜதந்திர அழுத்தங்கள் கொடுப்பதற்கு, ஊடகங்கள், மனித உரிமை நிறுவனங்கள், ஐ.நா. சபை என்பன உள்ளன. இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ என்ற அமைப்பு உள்ளது. முன்பெல்லாம் காலனிகளை பங்கு போடுவதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் மோதிக் கொண்டன. இன்று அவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்படுகின்றார்கள். "ஆண்டவரின் சூழ்ச்சிக்கு" பலியான, அடிமை நாடுகளின் மக்களோ, வேள்விக்கு வளர்க்கப் படுவதை உணராத மந்தைகளாக வாழ்கின்றனர்.