Showing posts with label பூர்வீக அமெரிக்கர்கள். Show all posts
Showing posts with label பூர்வீக அமெரிக்கர்கள். Show all posts

Wednesday, June 04, 2014

கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. 

கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர்.


கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்:
1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்.
2) Métis : கலப்பின வம்சாவளியினர்.
3) Inuït :  முன்பு எஸ்கிமோக்கள் என்று அழைக்கப் பட்ட துருவப் பகுதி மக்கள். 

மேற்குறிப்பிட்ட பூர்வகுடி மக்களைப் பாதுகாப்பதற்காக தனியான பிரதேசங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், இன்றைய கனடிய அரசு, அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, மெல்ல மெல்ல ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வேலையற்றோர் எண்ணிக்கை பூர்வ குடியினர் மத்தியில் அதிகமாக காணப் படுகின்றது. அரச கொடுப்பனவுகளில் பெரும் பகுதி, மது பாவனைக்கு செலவாகின்றது. அவர்களது ஆயுட்காலமும் குறைவு. பருவ வயது இளைஞர்களில், பாடசாலைக்கு சென்று படிப்பவர்கள் குறைவு. ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்குள் இருப்பவர்கள் தான் அதிகம். இது ஒரு வகையில், மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டிருக்கும்  இனப்படுகொலை.

கனடிய பூர்வகுடிகளின் இனவழிப்பு, 1844 ம் ஆண்டே ஆரம்பமாகி விட்டது. அன்றிருந்த கனடிய அரசு ஆணைக்குழு, சிறு குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து, விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது.  நாடு முழுவதும், 139 விடுதிப் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. பூர்வ குடிகளின் வாழிடங்களில் இருந்து, தொலைதூரத்தில் அமைந்திருந்த படியால், அவற்றை தடுப்பு முகாம்களாகவே கருத வேண்டும். 

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வகுடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப் பட்டனர். அவர்களை தங்க வைத்த விடுதிப் பாடசாலைகளை, கத்தோலிக்க அல்லது புரட்டஸ்தாந்து திருச்சபைகள் நிர்வகித்து வந்தன என்பது தான் விசேஷம். கிறிஸ்தவ மதப் பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் பாடசாலை ஆசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்தனர். 



கிறிஸ்தவ பாதிரிகள் நடத்திய பாடசாலைகள் என்பதால், அன்பாக கவனித்து இருப்பார்கள், என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். விடுதிப் பாடசாலைகளுக்கு கொண்டு வரப் படும் குழந்தைகளை முதலில் குளிக்க வார்ப்பார்கள். அதற்குப் பிறகு பேன் தடுப்பு மருந்து போடுவார்கள். குழந்தைகளுக்கு புதிய ஆங்கில- கிறிஸ்தவ பெயர் சூட்டப் படும். அவர்கள் அங்கே ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். பூர்வகுடிகளின் தாய்மொழியை பேசிய பிள்ளைகள் தண்டிக்கப் பட்டார்கள். "தாழ்வான" பூர்வக்குடிப் பிறப்பு குறித்த குற்றவுணர்வு, அவர்கள் மனதில் புகுத்தப் பட்டது. 

விடுதிப் பாடசாலைகளில் தங்கிப் படித்த பூர்வக்குடிப் பிள்ளைகளை, நிவாகிகளும், ஆசிரியர்களும், "குட்டிப் பிசாசுகள்" என்று ஏளனம் செய்தனர். அனாதரவான பிள்ளைகளை அடிப்பது, துன்புறுத்துவது மட்டுமல்ல, அவர்கள் மீதான பாலியல் பலாத்காரமும் தாராளமாக இடம்பெற்றது. பல குழந்தைகள், அங்கு நடந்த கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓட முயன்றன. தப்பியோடும் முயற்சியில் ஆபத்திற்குள் மாட்டிக் கொண்டதால் பல குழந்தைகள் மரணத்தை தழுவியுள்ளன. பாலியல் அத்துமீறல்கள், சித்திரவதைகள் தாங்க முடியாமல் பல சிறுவர்கள் இறந்தனர், அல்லது கொலை செய்யப் பட்டனர்.  அந்தக் கணக்குகளில் சேர்க்கப் படாத, "வெளிப்படுத்த முடியாத" காரணங்களினால் இறந்து போன பிள்ளைகள், ஆயிரக் கணக்கில் இருக்கும். மொத்தமாக, திட்டமிட்ட வகையில் கொல்லப் பட்டவர்களையும் சேர்த்தால், எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை தாண்டும். 

கடந்த நூற்றாண்டில், எண்பதுகளின் இறுதிக் காலத்திலும், இன ஒதுக்கல் கொள்கை கொண்ட விடுதிப் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. கடைசிப் பாடசாலை 1996 ம் ஆண்டு மூடப் பட்டது. அந்தக் காலகட்டத்தில், கனடிய அரசும், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து திருச்சபைகளும் நடந்த தவறை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரின. ஆயினும், அவர்கள் நடைமுறைப் படுத்திய இனவழிப்புத் திட்டங்கள், இன்று வரையும் ஆறாத வடுக்களாக காணப் படுகின்றன. 

விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கப் பட்ட பிள்ளைகள், தாய், தந்தை பாசத்தை அறியாமலே வளர்ந்து விட்டன. அவர்களது தாய், தந்தையர் யார்? எங்கே வசிக்கிறார்கள்? என்ற விபரம் எதுவுமே தெரியாது. அவர்களுக்கு "உயர்ந்த ஐரோப்பிய நாகரிகத்தை" கற்றுக் கொடுத்தாக, கனடிய அரசு நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அன்று பாதிக்கப்பட்ட பல பிள்ளைகளின் மனதில், அது வெறுப்பைத் தான் விதைத்து விட்டிருந்தது.    


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Sunday, November 29, 2009

11/26 அமெரிக்க இன அழிப்பு நினைவு தினம்

ஐரோப்பாவில் இருந்து சென்ற வெள்ளையின வந்தேறுகுடிகள் பூர்வீக அமெரிக்க மக்களை படுகொலை செய்து நிலங்களை ஆக்கிரமித்தனர். இன அழிப்பின் பின்னர் ஐரோப்பியமயமாக்கப்பட்ட அமெரிக்காவில் "நன்றி கூறும் தினம்" வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஐரோப்பிய வந்தேறுகுடிகளை தங்க அனுமதித்ததற்காக பூர்வீக அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்களாம். இனவழிப்பு செய்த கொலையாளிகள் வரலாற்றை திரிபுபடுத்திய அயோக்கியத்தனம் தான் "Thanksgiving day".


1970 லிருந்து நிறுவனமயப்பட்ட பூர்வீக அமெரிக்கர்கள், "நன்றி கூறும்" தினப் பண்டிகை நாளை, தேசிய இனவழிப்பு நினைவு தினமாக அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இனப்படுகொலை செய்யப்பட்ட தமது முன்னோரை நினைவுகூருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்ட சுட்டிகளையும், புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கவும்.

United American Indians


40th Native American Day Of Mourning 11-26-09