Showing posts with label பாலஸ்தீனியர்கள். Show all posts
Showing posts with label பாலஸ்தீனியர்கள். Show all posts

Thursday, October 04, 2012

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்

"The Holocaust Industry" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry )  என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)

உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது. 
கேள்வி: நீங்கள், இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம் என்று அழைக்கின்றீர்கள். ஏன்?

பதில்: அப்படிக் கூறுவது எனக்குப் பிடித்திருப்பதால் என்றல்ல, ஆனால் அது தான் உண்மை. அண்மைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இரண்டு, அல்லது மூன்று வருடங்களில், இஸ்ரேல் ஒரு அயல்நாட்டுடன் யுத்தத்தை தொடங்குகின்றது. இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை யார் முதலில் தாக்குவார்கள் என்று ஊடகங்கள் ஆராய்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வீடியோ கேம் விளையாட்டு போல நடந்து கொள்கின்றனர். இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக யுத்ததிற்குள்ளேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமானதல்ல.

2008  டிசம்பர், 2009 ஜனவரி, இரண்டு மாதங்களும் இஸ்ரேல் காசா பகுதியை தாக்கியது. 1400 பேரைக் கொன்றார்கள், அதிலே 1200 பேர் பொது மக்கள், 350 பிள்ளைகள். இஸ்ரேல் பக்கம், 13 இழப்புகள், அதிலே 3 பேர் மட்டுமே பொது மக்கள். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப் பட்டது. ஆனால், சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் காசாவை தாக்குவது பற்றி பேசத் தொடங்கினார்கள்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர், ஜூலை, ஆகஸ்ட் 2006 ல், லெபனான் மீது படையெடுத்தார்கள். 1200 பேரைக் கொன்றார்கள், அதிலே 1000 பேர் பொது மக்கள். பாலங்கள், கட்டுமான அமைப்புகளை அழித்தார்கள். இஸ்ரேலிய ஊடகங்களை வாசித்தீர்கள் என்றால், மீண்டும் லெபனானை தாக்குவது பற்றி யோசிக்கிறார்கள் என்பது புரியும்.
தற்பொழுது இடைவிடாமல் ஈரான் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதம் இரண்டு கேள்விகளாக பிரிந்துள்ளது: இஸ்ரேல் தாக்குமா? அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா? முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா? சர்வதேச சட்டம் அது பற்றி விளக்கமாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் இரண்டாவது ஷரத்து, இன்னொரு நாட்டின் மீது தாக்குவதை தடை செய்கின்றது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. 51 வது ஷரத்தின் படி, மற்ற நாட்டு எம்மை ஆயுதங்களுடன் தாக்கினால், பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் ஈரான் தாக்காது. முல்லாக்கள்  அந்தளவு பைத்தியக்காரர்கள் அல்லர்.  அதனால், இஸ்ரேல் ஒரு முன்கூட்டியே தடுக்கும் யுத்தம் ஒன்றை பற்றிப் பேசுகின்றது. அது நூற்றுக்குநூறு வீதம் சட்டவிரோதம்.

இஸ்ரேல் தான்தோன்றித்தனமாக நடக்கின்றது. சர்வதேச சமூகம் தனது கடமையை செய்யாத படியால் தான் இஸ்ரேல் அந்தளவு தூரம் வந்தது. ஐ.நா. சாசனத்தை மதிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் கட்டாயப் படுத்த வேண்டும். அவர்கள் கூற வேண்டும்: "சட்டத்தை மீறினால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." ஆனால், அதனை யாரும் சொல்வதில்லை. நெதர்லாந்தும் ஒன்றும் சொல்வதில்லை. ஐ.நா. விவாதங்களிலும், சர்வதேச நீதிமன்றத்திலும், நெதர்லாந்து இஸ்ரேல் சார்பாக நடந்து கொள்கின்றது. இது மிலேச்சத் தனம். இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதுடன், தண்டனையில் இருந்தும் தப்பிக் கொள்கிறது.

கேள்வி: ஆனால், இஸ்ரேலை சுற்றி வர எதிரி நாடுகள் உள்ளன. ஈரானிய அதிபர் அஹ்மதினஜாத் இஸ்ரேல் ஒரு புற்றுநோய், அதனால் அழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புக்காக அப்படி நடந்து கொள்ளக் கூடாதா?

பதில்: அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.  2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.

கேள்வி: காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இஸ்ரேல் அதனை ஒரு "தாக்குதல்" என்று அழைத்துக் கொள்கின்றது.  உண்மையில், அவை 98 சத வீதம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகள்.  அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு, இஸ்ரேல், ஹமாஸ் க்கு இடையிலான யுத்த நிறுத்த மீறலாகவே, இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றது. இஸ்ரேல் தான் முதலில் போர் நிறுத்தத்தை மீறியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை வாசியுங்கள். ஏன்? ஏனென்றால், இஸ்ரேல், தான் ஒரு பயங்கரமான இராணுவ சக்தி என்பதை காட்ட விரும்பியது.

2006 ம் ஆண்டு, லெபனானுடன் நடந்த யுத்தத்தில், இஸ்ரேல் அவமானகரமான பின்னடைவை சந்தித்திருந்தது. தான் இழந்த மேலாண்மையை மீளப் பெற விரும்பியது. இதற்கிடையில், இரண்டு தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேலையும் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக, ஹமாஸ் அறிவித்திருந்தது. லெபனானில் ஹிஸ்புல்லா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலும், ஹமாசும் அத்தகைய உடன்படிக்கைக்கு உரித்துடையவர்கள். நாம் அதில் தலையிட  மாட்டோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது.  
கேள்வி: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு அரபு வசந்தம் ஒரு தீர்வைக் கொண்டு வருமா?

பதில்: ஒப்பீட்டளவில் அரபு வசந்தம் ஒரு நேர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேலின் இராணுவ பலத்தைப் பொறுத்த வரையில், அதன் எல்லைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. அன்றைய எகிப்திய அதிபர் முபாரக் எல்லையை மூடி விட்டதால் தான், 2008 காஸா  படுகொலை சாத்தியமானது. பாலஸ்தீனியர்கள், வளைகளுக்குள் அகப்பட்ட எலிகள் போலாகி விட்டனர். இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த புதிய எகிப்திய ஜனாதிபதி மொர்சி, அது போன்ற செயலில் இறங்க மாட்டார்.  அது ஒரு இலாபம். ஆனால், பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அதற்கு ஒரு முடிவு வரும். சட்டத்தின் படி, மேற்கு ஜோர்டான் நதிக்கரை, கிழக்கு ஜெருசலேம், காசா போன்ற பகுதிகளுக்கு பாலஸ்தீனியர்கள் உரித்துடையவர்கள்.

அமெரிக்கா இஸ்ரேலை விழ விடாது பிடித்து வைத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கிக்  கொள்ள வேண்டுமென்று ஒபாமா விரும்பலாம். ஆனால், அவர் அமெரிக்காவின் யூத ஆதரவாளர்களில் தங்கியிருக்கிறார். ஒபாமா இஸ்ரேலின் கையை விட்டாரானால், பணக்கார யூத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமல்ல, தேர்தல் செலவுக்கான நிதியையும் இழக்க வேண்டியிருக்கும். இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதி கட்டப் பட்டு விட்டதா?
பதில்: எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருக்காலும் சமாதான நடவடிக்கை இருக்கவில்லை. அங்கே, நில அபகரிப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டிருந்தது. அதனை மூடி மறைப்பதற்கு, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகமாடியது.   அதை ஒருக்கால் திருப்பிப் பாருங்கள். சமாதான பேச்சுவார்த்தையின் இறுதிக் காலகட்டமான செப்டம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, மேற்கு ஜோர்டான் நதிக்கரையில் 250.000  யூத குடியேற்றக் காரர்கள் மாத்திரமே இருந்தனர்.  இன்று, 20 வருடங்களுக்குப் பிறகு, அங்கே 525.000 குடியேற்றக்காரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும், இது பற்றி இஸ்ரேலிடம் கேட்டால், "அதெல்லாம் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பட வேண்டும்"  என்று கூறுகின்றனர். உண்மையில் இஸ்ரேல் என்றுமே சமாதானத்தை விரும்பியதில்லை. அவர்கள் மேலும் பல நிலங்களை அபகரிக்க விரும்புகின்றனர். யூத குடியேற்றங்கள் மூலம், 10 வீதமான மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்து விட்டார்கள். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த செலவும் இருக்கவில்லை. பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை  அடக்குவதற்காக, அவர்களை சித்திரவதை செய்யும் போலிஸ் வேலையை செய்வதற்காக, கொஞ்சம் காசு கொடுத்து பாலஸ்தீன அதிகார சபையை நியமித்துள்ளது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளுக்கான நிதியுதவி, உதவித் திட்டம் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து வருகின்றது. மேலும் அரசியல் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா பாதுகாப்பளிக்கிறது. உலக வரலாற்றில் முதல் தடவையாக, இங்கே தான் எந்த செலவும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கின்றது.  இந்த நிலைமை மாற்றுவதற்கு இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.  
கேள்வி: இஸ்ரேலும், அமெரிக்காவும் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்றால், தீர்வு எங்கிருந்து வர வேண்டும்?
பதில்: பாலஸ்தீனர்களிடம் இருந்து.
அரபு வசந்தம் அவர்களை கடந்து போகும் வரையில் வாளாவிருப்பதையிட்டு, நாங்கள் புரிந்து கொள்ளலாம். 1967 இலிருந்து, ஐம்பது வருட ஆக்கிரமிப்பு காரணமாக, மக்கள் முடமாக்கப்  பட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மனோவியல் ரீதியாக ஒரு வெறுமையை உணர்கின்றனர். மேற்கு ஜோர்டான் நதிக்கரையில், இஸ்ரேல், அமெரிக்காவின் பணத்தில் இயங்கும் ஒரு நிர்வாகத்தினால், அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அத்துடன் பாலஸ்தீனர்களை அடக்கி வைப்பதே அதன் தலையாய கடமையாக இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள், அவர்களது  தளர்நிலையில்  இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் காந்தி வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.  எப்படி? தடை செய்யப்பட்ட தடுப்புச் சுவரை நோக்கிய நடைப்பயணம் ஒன்றை நான் முன்வைக்கிறேன். இஸ்ரேல் கட்டியுள்ள தடுப்புச் சுவர் சட்டவிரோதமானது என்றும், சர்வதேச சமூகம் அதனை உடைத்து விழுத்த வேண்டும் என்றும்,  2004 ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒரு கையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையை வைத்திருக்க வேண்டும். மற்றக் கையில் சுத்தியலை வைத்திருக்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு பின்வாங்காமல் போராட வேண்டும். இஸ்ரேல் 100.000 பேரை அடக்கலாம். சிலநேரம் 200.000. ஆனால், அந்தப் படங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவும். சர்வதேச சமூகம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஏற்படும். அது இஸ்ரேலுக்கு பதில் கூற முடியாத நிலைமையை உருவாக்கும். அப்படியே ஆக்கிரப்புச் செலவு அதன் தலை மேல் இறங்கும். அதற்குப் பிறகு இஸ்ரேல் தானாகவே வழிக்கு வரும். 

(நன்றி: Trouw, 2-10-2012)

(தமிழ் மொழிபெயர்ப்பு: கலையரசன்)

(மூலப்பிரதி:  'Israël heeft geen enkel recht om aan te vallen',   http://www.trouw.nl/tr/nl/4496/Buitenland/article/detail/3325343/2012/10/02/Israel-heeft-geen-enkel-recht-om-aan-te-vallen.dhtml, )

Wednesday, March 18, 2009

மக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடியோ ஆதாரம்]

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி ஒன்றில், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர், இரு சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

In a military operation taking place in balata refugee camp (nablus, occupied palestine), israeli occupation troops forced two youngsters to serve as human shields.