Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Friday, September 27, 2019

அரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் "இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்"?

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.


இபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். "ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், "அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே முற்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.

யேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், "படித்தவர்கள்" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

"மனிதன் ஒரு அரசியல் மிருகம்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாகக் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வாதிடுகிறார்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த "முதலாளிகள்", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

"அசாபியா" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் "தேசியம்" அல்லது "தேசிய இனம்" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

இபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.

மனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.

Wednesday, April 11, 2018

பொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை

அரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். 

இது நாங்கள் எந்தளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மலட்டு சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றது. மார்க்சியம் அடைய விரும்பும் இலக்கான கம்யூனிச சமுதாயம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், பண்டைய அரசியல் அமைப்பை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானது.

எமக்கு தெரிந்த ஆங்கிலச் சொல்லான "Politics" என்பது உண்மையில் ஒரு கிரேக்கச் சொல். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டத்தில் நாகரீகமடைந்த சமுதாயமான கிரேக்கர்களின் நாடுகள் "Polis" என்று அழைக்கப் பட்டன. போலிஸ் என்றால், தமிழில் ஊர் அல்லது நகரம் என்று அர்த்தம் வரும்.

ஒரு கோயில் அதை சுற்றிய குடியிருப்புகள், அதை சுற்றிய வயல்கள், எல்லையோர காடுகள், மலைகள் என்பனவற்றை உள்ளடக்கியது தான் கிரேக்கர்களின் போலிஸ். ஒரு நகரமயமாக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவுகளை எடுக்கும் செயலுக்குப் பெயர் பொலிட்டிக்ஸ். அதாவது அரசியல் என்ற சொல்லை, நாம் "நகரியல்" என்று இன்னொரு பெயரில் அழைக்கலாம்.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுஸ்தலத்தை, தமிழில் "தேவாலயம்" என்று மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது ஆங்கிலத்தில் "Church" என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ஆங்கில சொல்லான சர்ச், ஜெர்மன் சொல்லான Kirche என்பதில் இருந்து வந்தது. அதன் மூலம் "Kuriake" என்ற கிரேக்க சொல். அதன் அர்த்தம் ஆண்டவரின் இருப்பிடம். (தமிழில்: ஆலயம் அல்லது கோயில்) ஆனால், ஆதி கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை! அவர்கள் "Ekklesia" என்ற சொல்லை பாவித்தார்கள். இன்றைக்கும் கிரேக்க கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பாவிக்கிறார்கள்.

எக்லேசியா என்றால் சபை என்று அர்த்தம் வரும். அதாவது முன்னர் குறிப்பிட்ட போலிஸ் சமூக உறுப்பினர்கள், பொலிட்டிக்ஸ் செய்யுமிடத்தின் பெயர் தான் எக்லேசியா. "பொது மக்கள் கூடுமிடம்" என்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த சொல், ஆண்டவனின் சந்நிதானமாகி, இன்று அரசு என்ற கட்டமைப்பாகி உள்ளது.

அரசு என்ற ஸ்தாபனத்திடம் இருந்து அரசியலை மீட்டெடுப்பதே, இன்றுள்ள மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மேட்டுக்குடி அரசியலை, மக்கள் அரசியலாக்க வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் எந்த அர்த்தத்தில் அரசியலை பயன்படுத்தி வந்தார்கள் என்பதை இன்றுள்ள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிச நாடு ஒன்றை உருவாக்குவதற்கான கோட்பாடு, கார்ல் மார்க்ஸ், லெனினிடம் இருந்து தொடங்கியதாக, இன்றைக்கும் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, 1516 ம் ஆண்டு, Sir Thomas More என்ற ஆங்கிலேயர், "Utopia" என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த நூல், நவீன கம்யூனிச சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல மனிதநேயவாதிகள் அந்த நூலில் வர்ணிக்கப் பட்டதைப் போன்ற நாடொன்றை உருவாக்க வேண்டுமென கனவு கண்டனர்.

கிரேக்க மொழியில் "இல்லாத ஓர் இடம்" என்ற அர்த்தம் வரும் உத்தொபியா என்ற கனவு தேசமான ஒரு தீவு, எல்லோருக்கும் நீதி, சமத்துவம், செல்வச் செழிப்பு என்பனவற்றைக் கொண்டிருக்கும். அனைவருக்கும் தேவையான அளவு உணவு, உறையுள் கிடைக்கும். எவருக்கும் தனிப்பட்ட சலுகையோ, அல்லது அந்தஸ்தோ வழங்கப் பட மாட்டாது.

தனி உடைமை இருக்காது. ஆண்களும், பெண்களும் சமமாக வேலை செய்வார்கள். ஏதாவது தொழிலில் பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள். தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களை சேர்த்து வைக்க வேண்டிய அவசியமிராது. ஒவ்வொருவரும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு சுதந்திரம் இருக்கும். மக்கள் சமாதானமாக வாழ்வார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிடுவதற்கு யாரும் கிடையாது.

தாமஸ் மூர் வாழ்ந்த காலத்தில், இவ்வாறான சிந்தனை வெறும் கனவு மட்டுமே. அத்தோடு, அவர் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர் என்பதால், சில கிறிஸ்தவ நற்பண்புகளையும் குறிப்பிட்டிருந்தார். 19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்கள் சிலர், உத்தொப்பியா போன்றொதொரு நீதியான, சமத்துவமான சமுதாயத்தை, நிஜ உலகில் உருவாக்கும் சாத்தியம் பற்றி சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் அந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 


கம்யூனிசம் என்பது "கார்ல் மார்க்ஸ், லெனினுக்கு பிறகு உருவான கொள்கை" என்று சில "படித்தவர்கள்" கூட தவறாக நினைக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்றப் புரட்சிக் காலத்திலேயே பொதுவுடைமை சிந்தனை, ஒரு அரசியல் இயக்கமாக பரிணமித்திருந்தது.

இங்கிலாந்து மன்னராட்சிக்கு எதிராக, குரொம்வெல் தலைமையில் பாராளுமன்றம் புரட்சி செய்தது. அது இங்கிலாந்து குடியரசாவதற்கான பாராளுமன்றவாதிகளின் புரட்சி மட்டுமல்ல. கத்தோலிக்க மத மேலாதிக்கத்திற்கு எதிரான, புரட்டஸ்தாந்து அடிப்படைவாதிகளின் புரட்சியாகவும் இருந்தது.

அந்தப் புரட்சிகர காலகட்டத்தில், Diggers என்று அறியப்பட்ட அமைப்பினர், நிலங்களை பொதுவுடமையாக்கி, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர். அதனால் விவிலிய நூலில் உள்ள சமநீதிப் போதனைகளை மேற்கோள் காட்டி, துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர்.

*******

//கேள்வி: கம்யூனிச முறையிலான சமுதாய அமைப்பு, குடும்பத்தின் மீது என்ன செல்வாக்குச் செலுத்தும்?

பதில்: ஆடவர், மகளிர் இருபாலினருக்கும் இடையிலான உறவு, அதிலே ஈடுபட்ட இரு நபர்கள் சம்பந்தப் பட்டதும், சமுதாயத்தின் தலையீடுக்கு அவசியமில்லாத, முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக ஆக்கும்.

அவ்வாறு செய்ய முடிந்ததற்கு காரணம், அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. குழந்தைகளுக்கு சமுதாய முறையில் கல்வி போதிக்கிறது. தனியார் சொத்துடைமையால் நெறியாக்கம் செய்யப்பட்டு வந்த, மனைவி அவளது கணவனை சார்ந்திருப்பது, குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருப்பது எனும் அடிக்கல்களை தகர்த்தழிக்கிறது.

கம்யூனிசத்தின் கீழ் மனைவிகள் பொதுவாக்கிக் கொள்ளப் படுவதாக, ஒழுக்க நெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்பும் கூக்குரலுக்கு அளிக்கப்படும் பதிலாகும் இது. மனைவிகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் உறவு முற்றிலும் முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு உரியது. அது இன்றும் விபச்சாரம் என்ற வடிவில் நிலவி வருகின்றது.

விபச்சாரம் தனியார் சொத்துடமையுடன் சம்பந்தப்பட்டது. கம்யூனிச முறையிலான அமைப்பு, மகளிரை பொதுவாக்கிக் கொள்வதை நிலைநாட்டுவதற்கு மாறாக, அதற்கு முடிவு கட்டுகிறது.//

- பி. எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)