Monday, July 13, 2020

முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்

அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் முதலாளித்துவம் என்பது பல தடவை நிரூபிக்கப் பட்ட விடயம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சொந்த வீடு, கார் என்று வசதிகளை ஏற்படுத்தி தந்த சீரழிந்த முதலாளித்துவத்தின் நன்மைகளை அனுபவித்த படியே, அப்பாவி உழைக்கும் வர்க்க முஸ்லிம்களுக்கு மேற்குலக கலாச்சார சீரழிவு பற்றி வகுப்பு எடுப்பார்கள்.

ஒரு முகநூல் நண்பர், தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளர், (அல்லது தன்னைத்தானே அப்படி கருதிக் கொள்பவர்), நேற்று முதலாளித்துவத்தை புகழ்ந்து மூன்று நான்கு தரம் பதிவுகள் இட்டுள்ளார். "பங்குச் சந்தை வர்த்தகம் பற்றித் தெரியுமா...ஹா...ஹா...?" என்று தானே கேள்வி கேட்டு தானே சிரிக்கிறார். (அவரது நிலைத்தகவல் இணைக்கப்பட்டுள்ளது.)

இன்று பலருக்குத் தெரியாத தகவல், வரலாற்றில் இஸ்லாம் தான் முதலாளித்துவத்தை வளர்த்தது. உண்மையில் மத்திய கிழக்கில் இருந்து தான் ஐரோப்பியர்கள் முதலாளித்துவம் பற்றி அறிந்து கொண்டார்கள். உதாரணத்திற்கு, 'ஷெக்' (cheque) என்பது ஒரு அரபிச் சொல்.

இருப்பினும், இஸ்லாம் எனும் மதம் தோன்றிய காலத்தில் பங்குச் சந்தை வணிகம் இருக்கவில்லை. அது ஐரோப்பாவில் தோன்றிய பிற்கால முதலாளித்துவத்திற்கு உரியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கிய கிழக்கிந்திய கம்பனி தான் முதலாவது பங்குப் பரிமாற்ற வணிகத்தை தொடக்கி வைத்தது. எதற்காக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் பங்குச் சந்தை வணிகத்தை யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை? காரணம் மிக எளிது. இஸ்லாம் சூதாடுவது பாவம் என்று தடை செய்துள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம் என்பது அடிப்படையில் ஒரு சூதாட்டம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. The Big Short திரைப்படத்தில் இந்த உண்மையை அப்படியே தோலுரித்துக் காட்டுகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றுக்கும் உதவாத பங்குகளை ஊதிப் பெருக்கி கோடி கோடியாக பணம் சம்பாதித்த "டொட் கொம் மோசடி" காரணமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பாலும் தூர கிழக்காசிய நாடுகள் அதிகமாக பாதிக்கப் பட்டன. தென் கொரியாவில் நூற்றுக் கணக்கானவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்கள்.

இப்படியான பாவ காரியங்களில் முதலீடு செய்வதை பெருமையாகக் கருதும் ஒருவர், இஸ்லாமிய போர்வைக்குள் மறைந்து கொள்வது அந்த மதத்திற்கே இழுக்கானது. முஸ்லிம் நண்பர்கள் இதை கவனத்தில் எடுக்கவும். லண்டனில் வசிக்கும் இவர், "டெஸ்கோ பங்கு விலை அதிகரித்துள்ளது... புரிகிறதா?" என்று என்னிடம் கேள்வி கேட்கிறார். இப்படியான மாயைக்குள் வாழும் ஒருவருடன் உரையாடிப் பயனில்லை என்பதால், கனவு காணுங்கள் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். இந்த இடத்திலும் தான் நம்பும் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் கற்பிக்கும் அவரது செயற்பாடுகளை விமர்சிக்க வேண்டி உள்ளது.

இஸ்லாம் வட்டி வாங்குவது ஹராம்(பாவம்) என்று கூறி தடை செய்துள்ளது. அதனால் இஸ்லாமிய வங்கிகள் என சொல்லிக் கொள்ளும் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கு வட்டி அறவிடுவதில்லை. ஆனால் அதே வங்கிகள் பங்கு மார்க்கெட்டில் முதலிடுகின்றன. அதனால் கிடைக்கும் இலாபத்தை அனுபவிக்கின்றன. இதற்கு காரணம் கேட்டால் இஸ்லாத்தில் பங்குச் சந்தை பற்றி எதுவும் சொல்லப் படவில்லை என்று "புத்திசாலித்தானமாக" பதில் கூறுவார்கள்.

வட்டி வாங்குவது பாவம் என்று இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை. யூத, கிறிஸ்தவ மதங்களும் அதையே கூறுகின்றன. அதற்குக் காரணம் வட்டி என்பது ஒருவனின் திருடப்பட்ட உழைப்பு. கடன் கொடுத்தவர் அதற்கு உரித்துடையவர் அல்ல. ஆகவே இது ஒரு பகற்கொள்ளை. ஆனால், இந்த மூன்று மதங்களும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது கட்டியெழுப்ப பட்டன. அதனால் புனித நூல்கள் பாவம் என்று சொன்னதை, நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதில்லை.

ஐரோப்பாவில் பல யூதர்கள் வட்டிக் கடைக்காரர்களாக தொழில் செய்துள்ளனர். புனித நூலின் மதக் கட்டளைகளை மீறுகிறோமே என்று அவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லை. பல ஐரோப்பிய நாடுகளில் மன்னர்களே யூதர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஆட்சி நடத்தி உள்ளனர். பின்னர் கிறிஸ்தவ மதத்தின் பெயரால் வட்டிக்கு கடன் கொடுத்த பாவிகளை தண்டிப்பதாகக் கூறி யூத இனப்படுகொலை புரிந்தனர். இந்தக் கொடுமை இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. வேடிக்கை என்னவென்றால், கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ஐரோப்பிய கிறிஸ்தவ முதலாளிகள் தான் வட்டித் தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர். IMF, உலகவங்கி பெயரில் எல்லா உலக நாடுகளுக்கும் வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள்.

பங்குச்சந்தையில் எல்லோரும் முதலிடலாம் என்று முதலாளித்துவம் சொன்னாலும், பெருமளவு பங்குகளை வைத்திருப்பவர்கள் கைகளில் தான் அதிகாரம் இருக்கும். அவர்கள் தான் "சிங்கத்தின் பங்கு" என்று சொல்லத்தக்க பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கிறார்கள். பங்குகளில் கிடைக்கும் இலாபத்தை டிவிடன்ட் என்று வேறொரு பெயரால் அழைக்கிறார்கள். ஆனால் அதுவும் வட்டி தான்.

ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பகுதி பங்குதாரர்கள் முதலிட்ட பணத் தொகைக்கு ஏற்றவாறு வட்டியாக பகிர்ந்து கொடுக்கப் படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து திருடப்பட்ட உழைப்பு ஒரு புறம். சந்தையில் பொருளை அதிக விலைக்கு விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் திருடப்படும் உழைப்பு மறுபுறம். இவ்வாறு கிடைத்த திருட்டுப் பணத்தை, முதலீட்டாளர்கள் எனப்படும் பெரிய கொள்ளையர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தயவுசெய்து, பகற்கொள்ளை, திருட்டுக்கு துணை போகிறவர்களும், அதை ஆதரிக்கிறவர்களும் மதத்தை போர்வையாக போர்த்திக் கொள்ளாதீர்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படியான பேர்வழிகள் தான் மதப்பாற்றாளர் வேஷம் போடுகிறார்கள். "இஸ்லாம் பற்றி உனக்கென்ன தெரியும்?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள். பங்குச்சந்தையில் சூதாடி உழைப்பாளிகளின் வயிற்றில் அடித்து பாவத்தை தேடுவதை விட, எந்த மதத்தையும் பற்றி தெரியாமல் இருப்பது பெரிய குற்றம் அல்ல.

குர்ஆனில் இருந்து சில வசனங்கள்:

  • 2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். 
  • 2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்;  அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். 
  • 2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”.

1 comment:

Packirisamy N said...

உண்மை. பங்குச்சந்தை வட்டியைவிட மோசமானது. அருமையான ஒப்பு நோக்கல்.