Tuesday, November 03, 2015

மேலைத்தேய முதலாளித்துவம் சிறந்தது என்பது ஒரு மாயை


மேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள்? ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.

சோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு? என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: "எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்..."

அதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, "அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்..."

அதெல்லாம் உண்மையா? ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது? போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும்.

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.

"சோம்பேறிகளை" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, "உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன." இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு?

நெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:

//அதிக வேலைப்பளு காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.

அதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் "சுகாதார நிர்வாகி" ஒருவர் நியமிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும்.

ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்? இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)

இந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.

சாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள். 

 ******

சோஷலிச நாடுகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்ற கதைகளை பற்றி அடிக்கடி கேள்விப் பட்டிருப்பீர்கள். சில அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நேரம், அரசு அவற்றை அனைத்து மக்களுக்கும் கிடைக்குமாறு பங்கிட்டுக் கொடுத்தது.

முதலாம், இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய காலங்களில், மேற்கத்திய நாடுகளிலும் அதே மாதிரியான நிலைமை இருந்தது. அந்த நாடுகளிலும் நீண்ட வரிசைகளை காண முடிந்தது. ஆனால், அது பற்றி யாரும் பேச மாட்டார்கள். பொதுவாக, மற்றவர்களுடன் பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலப் பிராணிகள், சோஷலிச நாடுகளில் பாவனையாளர்கள் வரிசையாக நின்ற கதைகளை அடிக்கடி நினைவு படுத்துவார்கள்.

ஒவ்வொரு வருடமும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், "கருப்பு வெள்ளி தினம்" (Black Friday) பிரபலமானது. அதில் அப்படி என்ன விசேஷம்? சென்னையில் வாழும் மக்களுக்கு, ஆடித் தள்ளுபடி, தீபாவளி மலிவு விற்பனை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அது தான் இதுவும். மேற்கத்திய நாட்டவருக்கு, டிசம்பர் மாதம் தான் கொண்டாட்டங்கள் நிறைந்தது. அதனால், வர்த்தக நிலையங்களும் அந்த மாதத்தில் தான், விசேட கழிவு விலையில் பொருட்களை விற்பார்கள்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வர்த்தகர்களின் நன்மை கருதி, கருப்பு வெள்ளி என்று ஒரு நாளை விடுமுறை நாளாக்கி விட்டார்கள். அன்றைக்கு அதிகாலை மூன்று மணிக்கே கடைகள் திறக்கப் படும். அன்று மட்டும் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதால், அதை வாங்குவதற்காக மக்கள், முதல் நாளே கடைகளுக்கு முன்னால் வந்து காத்திருப்பார்கள்.

கடைகள் திறக்கப் பட்ட உடனேயே, பட்டியில் இருந்து அவிழ்த்து விடப் பட்ட ஆடு,மாடுகளைப் போன்று முண்டியடித்துக் கொண்டு ஓடுவார்கள். முதல் ஆளாக சென்று தமக்கு பிடித்த பாவனைப் பொருட்களை வாங்குவதற்கு அடிபடுவார்கள். சிலர் இந்த நெரிசலுக்குள் சிக்கி, மிதி பட்டு, நசி பட்டு, மூச்சுத் திணறி இறப்பதுண்டு, அல்லது காயப் படுவதுண்டு.

இது தான், மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் மக்களை நடத்தும் லட்சணம். மக்களை நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைகளாக்கி, தன் உணர்வற்ற கால் நடைகளாக நடத்துகின்றது. மேற்கத்திய நாடுகளில், முதலாளித்துவம் மக்களை சுய மரியாதையுள்ள மனிதர்களாக மதிப்பதில்லை. அவர்களை நுகர்வதற்காக மட்டும் வாழும் நடைப் பிணங்களாக வைத்திருக்கிறது.

மேலைத்தேய முதலாளித்துவம் சிறந்ததென, இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சில ஜென்மங்களை என்ன செய்யலாம்?


No comments: