Wednesday, October 28, 2015

நெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப் போராட்டம்


மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகள் தான். இருப்பினும், முன்னாள் சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை, நலன்புரி அரசு என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகின்றன. அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் "சோஷலிசப் பாதையில் பயணிக்கின்றன..." என்று சொல்ல வரவில்லை.

ஆனால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் வைத்த பல கோரிக்கைகளை, முதலாளித்துவ அரசே ஏற்றுக் கொண்டு செயற்படுத்தி வருகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள் சிலர், "மேற்கத்திய பாணி முதலாளித்துவ - ஜனநாயகத்தை" ஆதரிக்கும் அதே நேரம், அங்கு நடந்த வர்க்கப் போராட்டத்தை வசதியாக மறந்து விடுகின்றனர்.

இப்படியான தகவல்களை, மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். தங்களது நாட்டில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், தங்களைப் போன்று வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம்.

நெதர்லாந்தில் இருப்பதைப் போன்று, குப்பை அள்ளும் தொழிலாளியின் சம்பளம், அலுவலகப் பணியாளரின் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால்...? சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்களும், வசதியாக வாழத் தொடங்கினால்...? ஐயகோ... அந்த நிலைமையை நினைக்க நெஞ்சு பதறுகின்றதே! இது தான் மத்தியதர வர்க்கத்தினரின் கெட்ட கனவு. அதற்காகத் தான் சோஷலிசத்தை வெறுக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடக்காத ஐரோப்பிய நாடு எதுவும் கிடையாது. நீங்கள் எந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டாலும், அந்த நாட்டில் எந்தக் கட்சி, எப்படியான போராட்டங்களை நடத்தியது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன். சோஷலிசத்திற்கான மக்கள் போராட்டத்திற்கு எந்த ஐரோப்பிய நாடும் தப்பவில்லை.

இன்றைக்கு ஐரோப்பிய மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு அங்கு நடந்த வர்க்கப் போராட்டம் தான் காரணம். நெதர்லாந்து நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பற்றி அதிகமாக அறிந்திருப்பதால், அதைப் பற்றி தொடர்ந்து விரிவாக எழுத விரும்புகிறேன். இந்தியா, இலங்கையில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தகவல்கள் பிரயோசனமாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் காலம் வரையில், தொழிலாளர்கள் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். பதினாறு சதுர அடி கொண்ட சிறிய வீட்டுக்குள், ஒரு பெரிய குடும்பம் வசித்தது. படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, எல்லாம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அதற்குள், தந்தை, தாய், ஐந்து பிள்ளைகள் வாழ்வது சர்வ சாதாரணம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் அந்தக் காலங்களில் சர்வ சாதாரணம். நெசவாலைகளில் தரையில் கொட்டும் நூல்களை பொறுக்குவது போன்ற வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், இயந்திரங்களுக்கு நடுவில் சிக்கி பல சிறுவர்கள் கைகளை இழந்துள்ளனர்.  

சிறார் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமும் மிகக் குறைவு என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. ஏன் அவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை என்று கேட்கலாம். வறுமையில் வாழ்ந்த பெற்றோருக்கு வேறு வழி இருக்கவில்லை. தமது பிள்ளைகளும் சேர்ந்து சம்பாதித்தால் தான் அன்றாட உணவு கிடைக்கும் என்ற நிலைமை.

தொழிலாளர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். சிறுவர்களும் தான். மதிய உணவு இடைவேளைக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஓய்வு கிடைக்கும். அதற்குப் பின்னர், இரவு ஏழு மணி வரையில் வேலை செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பதினான்கு அல்லது பதினாறு மணி நேர வேலை சர்வ சாதாரணம். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஓய்வு நாள்.

தொழிலாளர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப் பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களில் சேர்ந்து கொண்டார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. வேலைக்குப் போனால் மட்டும் தான் சம்பளம் கிடைக்கும் என்றிருந்த காலத்தில், ஒரு நாள் வேலை நிறுத்தம் கூட, அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆயினும், உரிமைகளை பெறுவதற்காக மனம் தளராமல் போராடினார்கள். 

நெதர்லாந்தின் வர்க்கப் போராட்டம், 1906 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட NVV (Nederlands Verbond van Vakverenigingen - நெதர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) சோஷலிச தொழிற்சங்கத்துடன் தொடங்கியது. 

அதற்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில் இருந்து அங்கே இயங்கிக் கொண்டிருந்த SDAP (Sociaal-Democratische Arbeiderspartij - சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) அரசியல் போராட்டங்களை நடத்தியது. SDAP ஒரு மார்க்சிய சமூக - ஜனநாயகக் கட்சியாகும். நெதர்லாந்தில் சோஷலிசத்தை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப் பட்டது.

NVV தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பியது. சோஷலிசம் என்றால், குறிப்பாக மத்தியதர வர்க்க  இளைஞர்கள் பலருக்கு என்னவென்ற தெளிவில்லை என்பது தெரிகின்றது. ஓய்வூதியம், விடுமுறை, எட்டு மணி நேர வேலை, பல்வேறு காப்புறுதிகள், இவையெல்லாம் சோஷலிசம் தான்.


அது மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வாக்குரிமை இவை கூட சோஷலிசத்திற்கான போராட்டம் மூலம் தான் சாத்தியமானது. அவை எதையும் அரசு சும்மா தூக்கிக் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.

உலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் முதலாளிகள் தமக்கு சார்பான கருங்காலி தொழிற்சங்கத்தை உருவாக்கி இருந்தனர். CNV என்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கம், முதலாளிகளுடன் சமரசமாகப் போவதை விரும்பியது. (முதலாளியும் கிறிஸ்தவர். ஆகவே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.)

1906 ம் ஆண்டு, NVV ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. Het Volk (மக்கள்) என்ற சோஷலிச மாற்றத்திற்கான சஞ்சிகையின் அட்டைப் படத்தை இங்கே பார்க்கிறீர்கள். "வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பின் கீழான கருத்துப் படம் வரையப் பட்டுள்ளது. கீழே, கிறிஸ்தவ தொழிலாளர் சொல்கிறார்: "நான் போராட்டத்தை விரும்பவில்லை. ஒத்துழைப்பதை விரும்புகிறேன்." அதற்கு முதலாளி கூறுகிறார்:"சரியாகச் சொன்னாய்... அது தான் எனது நோக்கமும்...பட்...பட்..."




மேலதிக தகவல்களுக்கு:
Naar groter eenheid, De geschiedenis van het Nederlands Verbond van Vakvereningen 1906 -1981

No comments: