Monday, September 07, 2015

முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான வலதுசாரி முட்டாள்களின் பிரச்சாரங்கள்


சிரிய அகதிகளை பொறுப்பேற்கும் நாடுகள் தொடர்பாக, வலதுசாரிகள் ஒரு முக்கியமான நாட்டை மறைப்பதைக் கவனித்தீர்களா? எதற்காக "முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை?" என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை! அதிசயம்! அதிசயம்!! அதிசயம்!!! வலதுசாரிகளின் (போலி) "மனிதாபிமான உணர்ச்சி" மெய்சிலிர்க்க வைக்கிறது.

இத்தனைக்கும் இஸ்ரேல் சிரியாவின் எல்லையில் உள்ள அயல் நாடு. "மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு" என்று, அடிக்கடி தற்பெருமை அடிக்கும் நாடு. முன்பொருதடவை, போரில் காயமடைந்த, இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த நாடு. அது மட்டுமல்ல, ஏற்கனவே ஆயிரக் கணக்கான சிரிய பிரஜைகள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.

இத்தனை "பெருமைகளுக்குரிய" இஸ்ரேல், எதற்காக ஒரு சிரிய அகதியை கூட ஏற்றுக் கொள்ளவில்லை? "ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்" என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே? அது எப்படி?

"இலங்கையில் இருந்து ஐரோப்பா செல்லும் அகதிகள் எல்லோரும் சிங்களவர்கள்...!" என்று நினைத்துக் கொள்வது எத்தனை அபத்தமானது? அது போன்றது தான், "சிரிய அகதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்" என்ற கதையாடல்களும். அரசியல் விமர்சனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, வலதுசாரிகள் தமது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய அபத்தக் கதையாடல்களுக்குப் பின்னால், ஐரோப்பிய அரசுகள் சாதுரியமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியும். அகதிகள் பிரச்சினை இன்றைக்கோ, நாளைக்கோ முடியப் போவதில்லை. உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கும் வரையில், அகதிகளும் ஐரோப்பாவுக்கு வந்து கொண்டிருப்பார்கள்.

ஆகையினால், போர் நடக்கும் "பிராந்தியத்தில்" அகதிகளை ஏற்றுக் கொள்ளும் திட்டம் ஒன்றை கொண்டு வர விரும்புகிறார்கள். "சிரிய அகதிகளை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற விமர்சனங்களும் அதையொட்டியே பரப்பப் படுகின்றன. அதன் அர்த்தம், உதாரணத்திற்கு, ஈழப்போர் காரணமாக தமிழ் அகதிகள் வெளியேறினால், அயலில் உள்ள "இந்து நாடான" இந்தியா தான் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் "பிராந்தியத்தில்" அகதிகளைப் பொறுப்பேற்கும் திட்டம்.

எதிர்காலத்தில் அகதிகளை ஐரோப்பாவுக்கு வர விடாமல் தடுப்பதற்காக பல திட்டங்கள் தீட்டப் பட்டு வருகின்றன. உள்நாட்டுப் போர்களை தூண்டி விட்டு, ஆயுத விற்பனை மூலம் இலாபம் சம்பாதிக்கும் மேற்கு ஐரோப்பா, அதன் விளைவாக உருவாகும் அகதிகளை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஈழம் முதல் சிரியா வரையில், அது தான் உலக யதார்த்தம். அப்பாவிப் பொது மக்கள், வலதுசாரிகளின் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்களுக்கு பலியாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கடந்த இருபது வருடங்களாக ஐரோப்பாவில் வாழ்கிறேன். இங்கே ஷரியா சட்டம் வேண்டுமென்று கோரும் முஸ்லிம் அகதி யாரையும் நான் காணவில்லை! வலதுசாரி முட்டாள்களின், இனவெறியை தூண்டும் வதந்திகளை நம்பாதீர்கள்.

சிரிய அகதிகளின் வருகைக்கு எதிராக, வலதுசாரிகள் செய்யும் இனவெறிப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: "முஸ்லிம் அகதிகளை ஐரோப்பாவுக்குள் விட்டால், அவர்கள் அங்கேயும் ஷரியா சட்டம் கொண்டு வரச் சொல்லிக் கேட்பார்கள்...!" என்பது வலதுசாரிகளின் பொய்ப் பரப்புரைகளில் ஒன்று.

"தமிழ் அகதிகளை ஐரோப்பாவுக்குள் விட்டல், அவர்கள் அங்கேயும் ஈழம் கேட்பார்கள்...!" என்று சொல்வதைப் போன்ற அபத்தம் இது. (உண்மையிலேயே ஐரோப்பிய வலதுசாரிகள் அப்படியும் கதைக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு தெரியாது.)

நான் குறைந்தது ஐந்து வருடங்களாவது, பல்வேறு ஊர்களில் இருந்த அகதி முகாம்களில் வசித்திருக்கிறேன். பெரும்பான்மையான அகதிகள், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, சூடான், போன்ற "முஸ்லிம்" நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அகதிகள் தான்.

அந்த முஸ்லிம் அகதிகள் எல்லோருடைய நோக்கமும், தனிப்பட்ட வாழ்க்கை வசதிகள் பற்றியதாகவே இருக்கின்றன. - எப்போது எங்களுக்கு வதிவிட அனுமதி கிடைக்கும்? - எங்கே வேலை செய்யலாம்? - என்ன வேலை செய்யலாம்? - எவ்வளவு சம்பாதிக்கலாம்? - இந்த நாட்டு மொழியை எப்படி கற்றுக் கொள்ளலாம்? - பிள்ளைகளை எங்கே படிக்க வைக்கலாம்? - பிள்ளைகளின் எதிர்காலம் நல்ல படியாக அமையுமா? இவை மட்டும் தான் அவர்களது கவலைகள்.

பெரும்பாலான "முஸ்லிம் அகதிகளுக்கு" தங்களது நாட்டில் என்ன பிரச்சினை நடக்கிறது என்று கூட சொல்லத் தெரியாது. அரசியல் புரியாது. அரசியலில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை. இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன ஒன்று தான். தங்களதும், ஊரில் உள்ள உறவினர்களினதும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்த ஒரேயொரு "அரசியல்".

ஐரோப்பாவுக்கு வந்து அடைக்கலம் கோரிய முஸ்லிம் அகதிகளிடம் சென்று "ஷரியா சட்டம் வேண்டுமா?" என்று கேட்டால், செருப்பைக் கழற்றி அடிப்பார்கள். மனிதன் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப் படும் நேரத்தில்... "சரியா, பிழையா?" என்று கேட்டால் யாருக்குத் தான் எரிச்சல் வராது?

போங்கடா... நீங்களும் உங்கட ஷரியாவும்...!

2 comments:

யாஸிர் அசனப்பா. said...

ஐரோப்பாவுக்கு வந்து அடைக்கலம் கோரிய முஸ்லிம் அகதிகளிடம் சென்று "ஷரியா சட்டம் வேண்டுமா?" என்று கேட்டால், செருப்பைக் கழற்றி அடிப்பார்கள்.

செம்ம............

Mohamed Hijaz said...

Saudi's reply to the latest outcry on social media regarding refugees crisis is very clearly says as follows.
Saudi Arabia has received around 2.5 million Syrians since the start of the conflict in their country, an official source in the Saudi Ministry of Foreign Affairs (MoFA) has revealed, elaborating that the Kingdom has adopted a policy not to treat these Syrians as refugees, or place them in refugee camps “in order to ensure their dignity and safety.”
Saudi Arabia initially did not “intend to speak about its efforts to support Syrian brothers and sisters, during their distress, as it has, since the beginning of the problem,” adding that “Saudi Arabia dealt with the situation from a religious and humane perspective, and did not wish to boast about its efforts or attempt to gain media coverage.”
https://english.alarabiya.net/en/News/middle-east/2015/09/12/Saudi-official-we-received-2-5-mln-Syrians-since-conflict.html