Thursday, July 16, 2009

லால்கரில் நடந்தது என்ன? - நேரடி அறிக்கை

லால்கரில் நடப்பது என்ன?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் உண்மையறியும் குழுவின் அறிக்கை

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் சமீபத்தில் லால்கர் பகுதிக்கு அப்பகுதியில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்ய சென்று வந்தோம். அங்கு நாங்கள் நேரில் கண்டவற்றை ஒரு முன்வரைவு அறிக்கையாக இங்கு முன்வைத்துள்ளோம். அங்குள்ள மக்கள் இயக்கத்தை குறித்து வெளியில் வராத சில செய்திகளை நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம். தாங்கள் அதனை தங்களது தினசரியிலோ, செய்தியிலோ மின்னணு தொடர்பு சாதனத்திலோ வெளியிடுமாறும் அதனை தனிச்சிறப்பு செய்தியாக அளிக்குமாறும் கோருகிறோம்.

நவம்பர் 2008ஆம் ஆண்டு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பாதுகாப்பு வண்டிகளின் மீது கண்ணிவெடி தாக்குதல் நடந்த பின்பு லால்கரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரிய அளவிலான அரசு ஒடுக்குமுறை இருப்பதாக நாங்கள் செய்தி ஊடகங்கள் மூலமும் பிற ஆதாரங்களில் இருந்தும் அறிய வந்தோம். குறிப்பாக சோட்டோபேலியா மற்றும் கட்டாபஹாரி போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் கடுமையான போலீசு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை கேட்டறிந்தோம். அந்த காவல்துறையினரின் வெறியாட்டத்திற்கு பின்பு, காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்கள் அப்பகுதிகளில் (லால்கர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்) காவல்துறை மற்றும் பிற நிர்வாக துறையினரின் ஆளுமையிலிருந்து விடுவித்து, தடையரண் எழுப்பியுள்ளனர் என்பதையும் கேட்டறிந்தோம். இத்தகைய முன்னறிந்த செய்திகளுடன் நாங்கள் லால்கர் பகுதிக்கு சென்றோம்.

நாங்கள் அங்கு ஜூன் 7 முதல் ஜூன் 10ம் தேதி வரை தங்கியிருந்தோம். சோட்டாபேலியா, கட்டாபஹாரி, போஹர் டங்கா, சிஜூவா, டைன் டிக்ரி, சிந்தூர்பூர், மதுபுர், பபூய் பாஷா, ஷாலுகா, மோல்டோலா கட்டாசோல், பஸ்பான், பாப்புரியா, கோம்லாடாங்கா, புக்ரியா, கேஎதென்கா புரா, கோபால்நகர், காஷ் ஜொன்கோல், ஷால்போனி, ஷால்டாங்கா, அந்தர்மாரி, டரிகேரா, புலாடென்கா, சிடாராம் டஹி, டேஷா பந்த், புலா டங்கா கிராமங்களை சென்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களுடன் விரிவாக பேசினோம். லோதாஷ{ல்லி என்ற பகுதியில் அக்குழுவினரால் கூட்டப்பட்ட பெரும் கூட்டத்தைப் பார்வையிட்டோம். மேலும் கிராமங்களில் நடந்த வேறு சிறு கூட்டங்களிலும் பங்கு பற்றினோம். தற்போதைய சமீபத்தில் தரம்புறா மற்றும் மதுபுர், ஷிஜீவா பகுதிகளில் அரசுடனும், சிபிஎம் கட்சியுடனும் மக்கள் நேரடியாக போராட்ட களத்தில் இறங்கியதும், அதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடும் நாங்கள் அப்பகுதியை சென்று பார்வையிட்ட நேரத்தில் துவங்கியதாகும். எனவே, இந்த மக்கள் இயக்கத்தின் பன்முகங்களை மிக அருகாமையில் இருந்து நாங்கள் கண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

லால்கருக்கு சென்று அந்த மக்களை நேரில் சந்தித்ததானது நாங்கள் செல்வதற்கு முன்பு அது குறித்து எங்களிடமிருந்த பிரமைகளை உடைத்து எறிந்தது. அப்பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடுமைகளை வரலாற்று ரீதியாக வரிசைக்கிரமமாக மக்களிடம் கேட்டறிந்த பின்பு, நவம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒரு தனித்துவமானதாக எங்களால் கருத இயலவில்லை. இது, 2000ம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான அரசு பயங்கரவாதம் மற்றும் காவல்துறை கொடுமைகளின் தொடர்ச்சியேயாகும். மக்களிடம் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வே தற்போது காணப்படும் தனித்துவம் ஆகும்.

காவல்துறையினர் மக்களை எவ்வாறு சித்ரவதை செய்தனர் என்பதையும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரவு நேரம் வீட்டை உடைத்து நுழைந்தனர் என்பதையும் எவ்வாறு மக்களை அடித்து உதைத்தனர் என்பதையும் தனது கால்நடையை தேடுவதற்காக வேண்டி இரவு நேரத்தில் வெளியே உலவுவது தடைசெய்யப்பட்டிருப்பதையும், ஒவ்வோர் குடும்பத்தில் இருந்தும் ஏதோ ஒரு நபர் “மாவோயிஸ்ட்’’ என்று குறிப்பிடப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதையும், 90 வயதான மைக்கூ முல்மு என்ற தேஷபந்த் பகுதியை சேர்ந்த வயது மூத்தவர் 2006ஆம் ஆண்டில் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதையும் குறித்து மக்கள் எங்களுக்கு நடைமுறை காட்சியாக சித்திரித்து காட்டினர்.

‘உடல் பரிசோதனை’ என்ற காரணம் காட்டி இளம் சிறுமிகள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இரவு நேரத்தில் ‘’தேடுதல் வேட்டை’’யின் போது பாலினத்தை நிரூபணம் செய்ய உள் உறுப்புகளை காண்பிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டனர். எதிர்கட்சியினரை வலுவிழக்க செய்ய வேண்டி, தேர்தல் நேரத்தில் கிராமத்தை சேர்ந்த 30-40 பேர் “மாவோயிஸ்ட்’’ என்ற பெயரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். சோட்டாபேலியாவில் பல பெண்களை மிருகத்தனமாக அடித்து உதைக்கப்பட்டதும், அதில் ஒருவரான சித்தாமோனி என்பவர் தனது கண்களை இழக்க நேரிட்டதும் மக்களின் பொறுமையை பெரிதும் சோதித்தது. இந்த நீண்ட காவல்துறையினரின் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் தற்போது திரண்டு எழுந்துள்ளனர்.

காவல்துறையினரின் பயங்கரவாதத்தை தொடர்ந்து சிறிவி ன் பயங்கரவாதம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். சிறிவி ன் கீழ்மட்ட உறுப்பினர்களும்இ தலைவர்களும் காவல் துறைக்கு உளவாளிகளாக செயல்பட்டுள்ளனர் என்று மக்கள் எங்களிடம் குறிப்பிட்டனர். அனுஜ் பாண்டேயின் வீட்டை இடித்த பின்பு மக்களிடம் பெரும் ஆர்ப்பரிப்பு இருப்பதை நாங்கள் கண்டபோது, அவர்களின் உணர்ச்சியை எங்களால் உணர முடிந்தது. ஏனெனில்இ சிறிவி மீது மக்கள் அந்த அளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தனர்.

ஹர்மத் வாஹினி என்ற குண்டர் படையின் முகாமாக வட்டார பஞ்சாயத்து அலுவலகம் மாறியிருப்பதை மதுபுர் பகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கு சுட்டிக் காட்டினர். இந்த குண்டர் படையினர் எவ்வாறு கிராமம் முழுவதும் “மோட்டார் சைக்கிள் படையினராக’’ உலவி திரிந்தனர் என்றும், மக்களை பயமுறுத்தி வந்தனர் என்றும், மக்களின் வீட்டை மிருகத்தனமாக உடைத்து எறிந்தனர் என்றும், வானத்தில் துப்பாக்கி சூடு நடத்தியபடியும், மக்களை உதைத்தும் திரிந்தனர் என்றும் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த ஹர்மத் வாஹினி குழுவினர் ஒரு கிராமவாசியின் வீட்டை உடைத்த போது அவர் காவல்துறையினரை அழைத்தும் பயனின்றி, அவரது வீடு இடிக்கப்பட்டது குறித்தும் விரிவாக எங்களிடம் குறிப்பிட்டார். ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்பே ஹர்மத் குண்டர் படையினர் மெமுல் மற்றும் ஷிஜீவா பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதுபோலவே, காஷ் ஜொன்கோல் பகுதியில் ஆயுத தயாரிப்புடன் கிராமக்குழுவினர் இல்லாத காரணத்தால் ஹர்மத் குண்டர் படையினர் கிராமத்தில் காவல்துறையுடன் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் (கிராம மக்கள்) உயிரிழந்ததும், மூவர் காயமுற்றதும் கிராம மக்களால் நினைவுகூரப்பட்டது.

காவல்துறையினரும், சிறிவி கட்சியினரும் கூட்டணியாக செயல்படுவதாக கருதத் தேவையில்லை. இருவரும் ஒரே முகம் தான். ஹர்மத் என்ற சிறிவி ன் குண்டர் படையினர் வெறியாட்டம் நடத்தும் போது காவல்துறையினர் எவ்வாறு கைகட்டி வேடிக்கை பார்த்தனர் என்று கிராம மக்கள் எங்களிடம் குறிப்பிட்டனர். இவர்கள் காவல்துறையினரின் ஜீப் வண்டிகளை கூட சில சமயங்களில் பயன்படுத்தினர். கிராமத்தில் உள்ள மக்கள் குறித்த விபரங்களை சி.பி.எம். அடிமட்ட உறுப்பினர்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.

கிராம மக்களின் குழு காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக உருவாக்கப்பட்டது. எங்களை பெரிதும் கவர்ந்தது என்னவெனில் இக்குழுவினரும், கிராம மக்களும் கடந்த 7 மாதமாக லால்கரில் நடைமுறைப்படுத்தி வரும் மாற்று வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடே ஆகும். இப்பகுதி முழுவதும் பெரிதும் ஏழ்மையாலும், பிற்போக்கு நிலைமையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவு இப்பகுதியில் மிகவும் குறைவு. மக்கள் இப்பகுதியில் விவசாயத்திற்கு வானத்தையே நம்பி உள்ளனர். செயல்பாடற்ற அரசு கால்வாய், வற்றி கிடப்பதை நாங்கள் நேரில் கண்டோம். அரசு நீர்தேக்கங்கள் யாவும் பாழ்பட்டுக் கிடப்பதையும் இதன் காரணமாக இயற்கை மழையளவு பாதிக்கப்படுவது குறித்தும் அவர்கள் எங்களுக்கு விவரித்துக் கூறினர். மழைக்காலங்களில் சாலைகள் பயன்பட ஏற்றவாறு இல்லாமல் போவதும் அதன் மோசமான நிலைமை குறித்தும் அவர்கள் எங்களுக்குக் காண்பித்தனர்.

இந்தக் கிராமக்குழுவினர் தமது சொந்த முயற்சியில் 20km நீளத்தில் சாலை விதித்தனர். இந்த சாலைகளை உருவாக்க மக்கள் தமது சொந்த உழைப்பைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சாலையை உருவாக்க 20கி.மீ நீளத்திற்கு; 47000 ரூபாய் மட்டுமே செலவிட்டனர் என்றும், ஆனால், பஞ்சாயத்தினர் 1கி.மீ. நீள சாலை அமைக்க 15000 ரூபாய் செலவு ஆவதாகக் காண்பிப்பதையும் மக்கள் சுட்டிக் காட்டினர். அவர்கள் பல குழாய்க் கிணறுகளைப் பழுதுபார்த்துள்ளனர். பஞ்சாயத்தினரின் செலவை காட்டிலும் 50வீத அளவு செலவில் புதிய குழாய்கிணறைத் தோண்டியுள்ளனர். பஹார்டங்கா பகுதியில் நீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ஒரு தடுப்பு நீர்தேக்கத்தை அவர்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.

மேலும் இரு முக்கிய செயல்பாடுகள் என்னவெனில் இக்குழுவினர் கட்டாபஹாரி பகுதியில் நிலப்பகிர்வு செய்தனர். மற்றும் தனியான உடல் ஆரோக்கிய மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேற்கு வங்க அரசாங்கத்தின் ஒரு சட்ட மசோதாவின்படி காட்டு நிலங்கள் அம்மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆயின், அது இந்நாள்வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, பனஸ்பரி மற்றும் பிற கிராமங்களில் நிலத்தை பகிர்ந்தளிக்க இக்குழுவினர் முன்முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் பட்டா பகிர்ந்து அளிக்கப்படுவதை நாங்கள் நேரில் கண்டோம். கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்கான வசதிகள் இன்றி இருப்பதையும், அங்கு கிராம உடல் ஆரோக்கிய மையம் ஏதும் இல்லாதிருப்பதையும் எங்களால் அறிய முடிந்தது. லால்கரிலும், ராம்கரிலும் இருக்கும் உடல் ஆரோக்கிய மையமே மிக அருகாமையில் இருந்ததாகும். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நோயாளிகள் உயிரிழப்பது என்பது சாதாரண நிகழ்வாக இருந்துள்ளது.

மழைக்காலத்தில், பாம்புக்கடிக்காக சிகிச்சை பெற கிராம மக்கள் மருத்துவமனை வருவது அதிகம். கட்டாபஹாரியில் உள்ள உடல் ஆரோக்கிய மையம் செயலற்று கிடந்தது. அதனை காவல்துறையினருக்கான முகாமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்திருந்தது. காவல்துறையினருக்கு எதிரான சமூக தடை விதிக்கப்பட்ட பின்பு அது மீண்டும் உடல் ஆரோக்கிய மையமாக மாற்றப்பட்டிருந்தது. கல்கொத்தா மற்றும் பிற பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் வாரம் மூன்று முறை இம்மருத்துவமனைக்கு வந்து சென்றனர். தினமும் 150 நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள லோதாஷல்லியின் அழுந்தும் எஃகு தொழிற்சாலைக்கு எதிராக அக்குழுவினர் அழைத்த கூட்டத்திற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். நாங்கள் அந்த தொழிற்சாலைக்குச் சென்று அதனால் ஏற்படும் மாசு எவ்வாறு மரம் மற்றும் வட்டாரத்தை பாதிக்கிறது என்பதை நேரில் கண்டோம். அங்குள்ள நெல் வயல் முழுமையும் கறுத்துப் போயிருப்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினர். பஞ்சாயத்தினர் நெல் சாகுபடி கறுத்து இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த சம்பவமும் உண்டு. இந்தத் தொழிற்சாலையின் அருகாமையில் மருத்துவமனையும் பள்ளிகளும் அமைந்துள்ளன. சி.பி.எம். கட்சியினரால் பஸ் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்தக் கூட்டத்திற்கு, பெருமளவிலான மக்கள் திரள் அணி திரண்டு வந்திருந்தனர். இதில் பங்கேற்ற மக்கள் அனைவரும் இத்தொழிற்சாலைக்கு எதிராக போராடி, தொழிற்சாலையை நிறுத்தச் செய்வது என முடிவு எடுத்தனர்.

லால்கரில் மாவோயிஸ்டுகள் காணப்படுகின்றனர் என்பது அனைவராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் மாவோயிஸ்டுகள் அங்கே இருப்பதையும் அதனை மக்கள் ஏற்றுக் கொண்டதையும் வெளிப்படையாகக் கண்டோம். அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவதும் பத்தாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதையும் கண்டோம். மாவோயிஸ்டுகள் ஜார்கண்டிலிருந்து வந்த வெளிமாநிலத்தவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக மாவோயிஸ்ட் படையினரை சூழ்ந்து அவ்வட்டார மக்கள் இருப்பதை நாங்கள் கண்டோம். சி.பி.எம். மற்றும் அரசினால் நடத்தப்பட்டு வரும் தொடர்ந்த தாக்குதலுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மரபு ரீதியான ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு அரசு தடைவிதித்துள்ளது என்பதே இயக்கத்தை செயலிழக்க செய்வதாக உள்ள ஒரு அடையாளமாக காணமுடிந்தது.

லால்கரைவிட்டு வரும்போது இந்த போராட்டம் ஏற்கனவே தீவிரமடைந்திருந்தது தற்போது மக்கள் தனது உடனடி எதிரியான சி.பி.எம் மற்றம் காவல்துறையினர் தப்பி ஓடும் அளவு வெற்றிகரமாக முன்னேறியுள்ளனர். மக்களிடம் நாங்கள் கண்ட ஆர்வம் மிக அபரிதமாக இருந்தது. முதன் முறையாக அவர்கள் ஓட்டுக்களை குவித்து செல்லும் அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவாக இல்லாமல் தமக்கே சொந்தமான ஒரு குழுவின் பங்காக இருந்தனர். அரசு பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர். தமக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை தாமே கட்டி எழுப்பினர். பல்வேறு கிராமங்களில் தங்கியிருந்த பலர் ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்தினர். “தமக்கு முதன்முறையாக இப்போதுதான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது’’- என்பது தான் அது. அவர்களுடைய போராட்டம் பல ஆண்டுகளாக அவர்கள் சுரண்டபடுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் அவர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும், அவர்கள் உரிமை மறுக்கப்படுவதற்கும் எதிராக இருந்தது. இவ்வகையில் இது ஒரு வரலாற்று பூர்வமான போராட்டமாகும். “அராஜகம்’’ என்று கருதப்படுவது யாவும் உண்மையில் விடுதலைக்கான போராட்டம் தான் என்று நாங்கள் உறுதியாக உணருகிறோம்.

ஊடகங்கள் யாவும் லால்கருக்கு மீண்டும் சென்று திரும்ப வேண்டும் என நாங்கள் அழுத்தமளிக்க விரும்புகிறோம். இந்த இயக்கம் அரசின் செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள மக்களின் மிகவும் ஏழ்மையான சமூக பொருளாதார நிலைமையை ஆதாரமாக கொண்டுள்ளது. மக்களின் இந்தப் போராட்டத்திற்கு எதிராக அரசு திருப்பித் தாக்கவே செய்யும். உறுதியாக இருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையைப் பெற்று மத்திய ரிசர்வ் காவல் படை மீண்டும் திரும்பக்கூடும். மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு கொடூரமான கேவலமான கோப்ரா படையினரும், கிரே வேட்டை நாய்களும் தேவை என மாநில அரசாங்கம் வெட்கமின்றி கோரிக்கை வைத்துள்ளது. அது மிக துரதிஸ்டமானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். பெருமளவிலான அரசு பயங்கரவாதம் குறைவளர்ச்சி, ஊழல் ஆகியவற்றிற்கு. எதிரான மக்களின் கோபம் மிகவும் சரியானதே. அதுபோன்றே அதற்கு எதிரான நீண்ட காலமாக எதிர்பார்த்த தாக்குதலும் சரியானதே. இது குறித்த விரிவான அறிக்கை எங்களால் பின்னர் சமர்ப்பிக்கப்படும். வங்காளத்தின் வட்டார ஊடகங்கள் நந்திகிராம் இயக்கத்தின் போது மிகச்சரியான முற்போக்கான பங்கை ஆற்றியது என்பதை நாங்கள் நினைவு கூர்கிறோம். எனவே அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலை நிகழ்த்துவதற்கு முன்பு லால்கரில் உள்ள மக்களுக்கும் உண்மையான போராட்டத்திற்கும் ஆதரவாக துணை நிற்க கோருகிறோம்.

நன்றி

-ப்ரியரஞ்சன்
-பனோஜ்யோத்சனா
-அளீர்பான் ர கொகோல்
-குசூம்
-ரியாஸ்
-ஏதுவின்தர்
-வீர்சிங்
-சுமதி

தொடர்புஎண் : 09711826861


இது தொடர்பான முன்னைய பதிவு:
இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

8 comments:

பதி said...

பகிர்வுக்கு நன்றி....

kalagam said...

மிகத்தேவையான அறிக்கை, கண்டிப்பாக எந்த ஊடகமமும் இதை வெளியிடாது, முடிந்த அளவுக்கு அனைத்து வலைகளிலும் மறு பிரசுரம் செய்யப்படவேண்டிய வரலாற்றின் அறிக்கை.ஒன்பதாண்டாக அரச ஓநாய்கள் தின்று வந்த பயங்கரவாதம் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை துரத்தினால் அது பயங்கரவாதமாம்.


போலிகளை துரத்தியடிப்போம்
லால்கர் மக்களின் போராட்டம் வெல்க

kalagam.wordpress.com

Anonymous said...

இதை எங்கள் ஈழத்திலே செய்ய ஒருவரும் முன் வரவில்லையே.

Babu Kumararasamy said...

இன்னும் சட்ரு தெளிவாக

http://www.vinavu.com/2009/07/08/lalgarh1/

பகத். said...

மிக முக்கியமான பதிவு தோழரே... போலிகளின் முகத்திரையை கிழித்து எரியும் பதிவு...
உண்மை நிலையை கண்டறிந்து அதை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய அந்த மாணவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்..

Anonymous said...

எதனை நோக்கிய பயணமிது?
எதனை அடைவதற்கான பாதை இது?
மேற்கு வங்க அரசு ஒன்றும் கம்யூனிசமே புரியாதவர்களும் அல்ல பிடிக்காதவர்களும் அல்ல. நிலமில்லா விவசாயிகளுக்கு நிலம் கொடுத்தது போன்ற ஏராளமான கம்யூனிச கொள்கைகளை அமல்படுத்தத்தான் செய்கிறார்கள். நாட்டையே வேறு பாதைக்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிற மோடியைப்போன்றோரை பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாடீர்கள் நீங்க. ஏன் என்றால் மேற்கு வங்கத்தில் நமக்கு இருக்கும் போராடும் உரிமை குஜராத்திலோ அல்லது கர்நாடகத்திலோ கிடையாது.
குஜராத்தில் லட்சோப லட்சம் இஸ்லாமிய காணாமல் போனார்களே, அப்போது நாம் எங்கே போனோம்?
நமக்குத்தான் மேற்கு வங்க அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கிறது. முடிந்தால் அங்கே எதையாவது செய்து காட்டுங்கள்?
பொது மக்களுக்கு இந்த கம்யூனிச சண்டையெல்லாம் புரியாது. அவர்களைப்பொறுத்த வரை நீங்களும் ஒன்றுதான் சி.பி.எம்மும் ஒன்றுதான். 110 கோடி மக்களை திரட்டுவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
உங்களுடைய மொழியில் புரட்சி என்றால் என்ன?
எதனை நோக்கிய பயணமிது?
எதனை அடைவதற்கான பாதை இது?
தங்களது பதில் வெறும் விதண்டாவாதமாக இல்லாமல், தெளிவான பாதையை சொல்வதாக இருக்குமென நம்புகிறேன்

anandh said...

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.ஒரு வேலை இங்கு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அங்கு நடை பெறாமல் இருக்குமாயின் அது தான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்."தேசியம்" என்ற ஒரே ஒரு வார்த்தையைக்கொண்டு எல்லா போக்கிரித்தனமும் நடந்துகொண்டிகின்றது.

anandh said...

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.ஒரு வேலை இங்கு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அங்கு நடை பெறாமல் இருக்குமாயின் அது தான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்."தேசியம்" என்ற ஒரே ஒரு வார்த்தையைக்கொண்டு எல்லா போக்கிரித்தனமும் நடந்துகொண்டிகின்றது.