Sunday, November 09, 2008

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்


"அமெரிக்கா ஒரு கனவு". அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தனது உழைப்பை/சேவையை விற்க தயாராகும் பல்லாயிரக்கணக்கான படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில்நுட்ப அறிவற்ற சாதாரண உழைப்பாளிக்கும் உள்ள கனவு. போதுமென்ற மனதை கொண்டிருக்க சொல்லும் பழமொழியை தற்போது யாரும் நம்புவதில்லை. பேராசை, பேரவா, சுயநலம், இவ்வாறு எவையெல்லாம் தப்பென்று நீதி நூல்கள் சொல்கின்றனவோ, அவையெல்லாம் அமெரிக்க கனவின் அடிப்படை தகுதிகள்.

"அமெரிக்க சுதந்திரம்"சாமானியர்களும் தினசரி உச்சரிக்கும் மந்திரம். ஆனால் அவர்களது சுதந்திரம் கடனுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் அண்மையில் தான் அறிந்து கொண்டார்கள். சுதந்திரம் இருந்தது! முதலாளிகளும், பெரிய நிறுவனங்களும், நிர்வாகிகளும், எல்லையற்ற சுதந்திரம் அனுபவித்தனர். அதிகம் சம்பாதித்தால், வரி குறையும். தாராளமாக செலவு பண்ண சுதந்திரம். லாபம் என்ற பெயரில் பெருகும் பணத்திற்கு எல்லை வகுக்கப்படவில்லை. அந்தப்பணத்தையும் எப்படியும் சேர்க்கலாம். சட்டப்படி திருடுவதற்கு கணக்காளர் வழிசொல்வார். பங்குச் சந்தையில் சூதாட முகவர்கள் இருக்கிறார்கள். பொய், புரட்டு, மோசடி, இவையில்லாமல் வியாபாரம் நடக்காது. இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க முடியாது. அரசாங்கம் தலையிட முடியாது. ஏனெனில் அது சந்தையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். அமெரிக்கர்கள் "சுதந்திரம்" என்ற சொல்லை சரியான அர்த்தத்துடன் தான் பயன்படுத்துகின்றனர். ஆந்நியர்கள் தான் அது எதோ தனிமனித சுதந்திரம் சார்ந்த விடயம் என்று நம்பி ஏமாந்து விட்டார்கள்.

பொருளாதாரம் சாமானிய மக்களுக்கு எளிதில் புரியாத ஒன்று. இருப்பினும் அனைவரும் இன்று சந்தைப் பொருளாதார விதிகளுக்கு அமைய பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். சந்தை என்பது இயற்கைப் பொருளாதாரத்தில் ஒரு பகுதி மட்டும் தான். ஆனால் லிபரலிச, (இன்னும் தீவிரமான) நியோ லிபரலிச சித்தாந்தங்கள் தான் சந்தையை பொருளாதார சக்கரத்தின் அச்சாணி ஆக்கின. பங்குச் சந்தை தேசிய பொருளாதாரத்தை தலைமை தாங்கும் வண்ணம், அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. அன்று பூரண தனியார்மயமாக்கலை ஆதரித்தவர்கள், இன்று நெருக்கடி காலத்தில் அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்கின்றனர்.

இப்போது தான் அரசு என்ற ஸ்தாபனத்தின் சுயரூபம் வெளித்தெரிகின்றது. அதன் அடிப்படை நோக்கம், அதாவது பலமான முதலாளிகளிடமிருந்து, பலவீனமான மக்களை பாதுகாப்பது என்ற வாக்குறுதி, இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவவசதியின்றி பிணியால் வாடிக்கொண்டிருக்கையில், 30 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்காக ஒரு சதமும் செலவழிக்காத அரசு, வங்கிகள் திவாலாகாமல் பாதுகாக்க பில்லியன் டாலர்களை தயங்காமல் அள்ளிக்கொடுத்தது. ஐரோப்பிய அரசுகளும் மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுத்து சந்தைப் பொருளாதாரம் அழிய விடாமல் காப்பாற்றின. தமது உதாரணத்தை பிற நாட்டு அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்றனர்.

அனைவரது கவலையும் வெகுவாக குறைந்துள்ள பங்குகளின் பெறுமதியை உயர்த்தவேண்டும் என்பதே. ஒரு நிறுவனத்தின் ஐந்து சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை அரசாங்கம் வாங்க கூடாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் பாராளுமன்ற அனுமதி வேண்டும் என்று சில நாடுகளில் சட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் காத்திராமல், ஒரே இரவுக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது அரசாங்கம் பங்குகளை வாங்கி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தை நன்றாக இயங்க வைத்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு கொண்டுவருவோம் என்று பகிரங்கமாகவே சொல்கின்றனர். சுருக்கமாக சொன்னால், முதலாளிகள், அவர்களது மூலதனம் காப்பாற்றப்பட வேண்டும்.

நிதி நெருக்கடியை இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாக பார்த்தனர். அது தவறு. முதலாளித்துவம்(அதிலும் குறிப்பாக வங்கித்துறை, சந்தை என்பன) அடி வாங்கியுள்ளது. அரசுகள் தலையிட்டு காப்பாற்றி விட்டன. அதே நேரம், இது தற்காலிக பின்னடைவு மட்டுமே, மீண்டும் எல்லாம் பழையபடி வந்து விடும் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர். அதுவும் தவறு. முதலாளித்துவ பொருளாதாரம் குறிப்பிட்ட காலம் வளருவதும், பின்னர் அளவுகடந்த உற்பத்தி காரணமாக நெருக்கடிக்குள் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து மீள்வதும் அடிக்கடி நடப்பது தான். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி, இமாலய பலத்துடன் இருந்த வங்கிகளை பாதித்திருப்பதால், அதன் விளைவு பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

இந்த நெருக்கடியால் அமெரிக்கா வல்லரசு தகரும் என்ற எண்ணமும் தவறானது. ஜெர்மனியின் அதிகம் விற்பனையாகும் வலதுசாரி சஞ்சிகையான "டெர் ஸ்பீகல்" கூட அப்படி ஒரு கருத்தை முன்வைத்தது. உலகப் பொருளாதரத்தில் அமெரிக்காவின் ஆலோசனைகளை, மாதிரிகளை, கொள்கைகளை இனிமேல் யாரும் பின்பற்றபோவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்கா தான் தற்போதும் உலகில் மிகப்பெரிய இராணுவ வல்லரசு என்ற நிலையில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில், அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு, ரஷ்யா அல்லது சீனா அமெரிக்காவை விட இராணுவ வளர்ச்சி கண்டால் ஒரு வேளை நிலைமை மாறலாம். அமெரிக்கா தனது பாதுகாப்பு படைகளுக்கு, அதிக பட்ஜெட் ஒதுக்கி வருகின்றது. பல நிறுவனங்கள் இராணுவத்துக்கு தேவையான ஆயுத தளபாடங்களையும், பிற கருவிகளையும் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வாங்குவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. மேலும் சினிமா, இசை, போன்ற கலாச்சார ஏற்றுமதியிலும் அமெரிக்கா முன்னணி வகிக்கின்றது. சமீபத்திய நிதி நெருக்கடியானது, இத்தகைய நிறுவனங்களில் இதுவரை முதலிட்ட வங்கிகளை ஓரங்கட்டி விட்டு, அரசே எடுத்து நடத்தும் நிலையை உருவாக்கலாம். அப்படியானால் அது ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை கூட உருவாக்கலாம்.

முதலாளித்தை ஆதரிப்பவர்களுக்கு நிரந்தர கொள்கை எதுவும் இல்லை. லிபரலிசம், நியோ லிபரிலிசம், Laissez Faire முதலாளித்துவம், சமூக ஜனநாயகம், அல்லது பாசிசம் இவ்வாறு எதை அடிப்படையாக வைத்தாவது முதலாளித்துவத்தை, அல்லது அதனால் பலனடையும் தமது இருப்பை காப்பாற்றவே விரும்புவர். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்கா மீண்டு விட்டது தானே, என்று முதலாளித்துவத்திற்காக வாதாடுபவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கலாம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்கா, ஜெர்மனிக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடனை உடனே திருப்பி செலுத்துமாறு கோரியதும், அதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாசிசத்தின் எழுச்சிக்கும், ஹிட்லர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்ததும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட வல்லரசுப் போரில்(2 வது உலகயுத்தம்) அமெரிக்காவும் குதித்து ஆயுதங்கள் விற்று தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டதும் வரலாறு. சரித்திரம் மீண்டும் திரும்பாது என்பது நிச்சயமில்லை.

நிதி நெருக்கடியின் விளைவுகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் "பொருளாதார தேக்கம்" என்ற பின்னடைவை ஏற்படுத்தப் போவது மட்டும் உறுதி. அதன்படி இயற்கையான பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் செலவைக் குறைத்தல் என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகமான தொழிலாளரை வேலையை விட்டு நீக்குதல், ஒரு பக்கத்தில் உதவிப் பணத்தில் அல்லது வறுமையில் வாழும் மக்களை உருவாக்கும். மக்கள் தமது பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீட்டிலே சேமிக்க தொடங்குவர். நமது நாட்டு மக்களுக்கு (அமெரிக்க-ஐரோப்பிய) "சீரழிவு கலாச்சாரம்" பற்றிய புரிதல் மிகக் குறைவு. உண்மையில் இந்த "சீரழிவு கலாச்சாரம்" தான் இந்த நாடுகளை பணக்கார நாடுகளாக தொடர்ந்து வைத்திருந்த ஊக்கியாகும். அதாவது மக்கள் பணத்தை தாராளமாக செலவழிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளோடு நிறுத்திக் கொள்ளாது ஆடம்பர தேவைகளுக்கும் செலவழிக்க வேண்டும். அப்போது தான் புதிய புதிய (ஆடம்பர பண்டங்கள் உற்பத்தி செய்யும்) நிறுவனங்கள் உருவாவதுடன், அதனால் தேசிய பொருளாதாரமும் வளர்ச்சியடையும். சாமானியருக்கும் புரியும்படி சொன்னால், "குடி" மக்கள் அதிகளவில் மதுபான சாலைகளை நாடினால், அந்த துறை வளர்ச்சியடைவதுடன், அரசாங்கத்திற்கும் நிறைய வரி கிடைக்கும். "பணம் ஓடித்திரிய வேண்டும்" என்பது சந்தையின் பொன்மொழி. இதற்கு மாறாக இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் ஓரளவேனும் வசதிபடைத்த மக்கள், பணத்தை தங்க நகைகளாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதால், ஏற்கனவே அங்கே பொருளாதார தேக்கம் நிலவுகின்றது.

உலகமயமாக்கல் அமெரிக்க பாணி கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதற்கு இந்தியா போன்ற "பழமை, பாரம்பரியம்" மிக்க நாடு கூட தப்பவில்லை. காரணம், தனி இனம் போல காட்சியளிக்கும்,அந்நாட்டின் ஆளும் வர்க்கம். அன்று தமது பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்களாக இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்து பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டினார்கள். அண்மைக்காலத்தில் கணிப்பொறி வல்லுனர்களை அனுப்பி அந்த தேவையை நிறைவேற்றிக் கொண்டனர். இவ்வாறு ஒருபக்கம் "தங்கப்பசி" கொண்ட இந்தியர்கள் உலகிலேயே அதிகளவு தங்கத்தை நுகர்வோராக இருப்பதாலும், மறுபக்கம் NRI என்றழைக்கப்படும் வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் டாலர்கள் அரச கஜானாவை நிறைப்பதாலும், உலக பொருளாதாரம் இந்தியாவை நெருக்கமாக கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலைமை, 90 களுக்கு பின்னர் ஏற்பட்ட சந்தைப் பொருளாதார சீர்திருத்தால் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்து நேருவின் சோஷலிசம் இருந்த காலத்தில் கூட எதோ ஒருவகையில் நிதி நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும். விரிவாக சொன்னால், தங்கமும், டாலரும் உலக வர்த்தகத்திற்கு இன்றியமையாதவை. இவ்விரண்டும் கையிருப்பில் குறைந்தால், அல்லது உலக சந்தையில் பெறுமதி குறைந்தால் அந்த நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும்.

உலகின் அரைவாசி நாடுகளை தனது காலனிகளாக வைத்திருந்த இங்கிலாந்து தான் தங்கத்தை உலக வர்த்தகத்திற்கான பொது நாணயமாக கொண்டு வந்தது. (இங்கிலாந்து நாணயமான பவுன் என்ற பெயர் அதன் காரணமாக வந்தது தான்) அதன் காரணமாக எல்லா நாட்டு நாணயமும் தங்கத்துடன் ஒப்பிட்டு பெறுமதி பார்க்கப்பட்டது. 2 ம் உலகயுத்தத்தின் பிறகு அமெரிக்கா உலக ஏகபோக வல்லரசாகியதால், டாலரை சர்வதேச வர்த்தகத்திற்கான பொது நாணயமாக்கியத்துடன், டாலரின் பெறுமதியை தங்கத்துடன் ஒப்பிடுவதில் இருந்து கழற்றி விட்டது. இதனால் அனைத்து உலக நாடுகளும், (சீனா உட்பட) தமது திறைசேரியில் டாலர்களை நிரப்பி வைத்துள்ளன. அனேகமாக அமெரிக்கா தேசத்தில் பாவனையில் உள்ள டாலர் அளவேனும், வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளதால், அதேயளவு டாலர் தாள்களை அச்சடித்து உள்நாட்டில் புழக்கத்திற்கு விட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக உலக நாடுகள் தமது டாலர்களை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதனது கேள்வி குறைந்து, பெருமளவு டாலர்கள் அமெரிக்காவுக்கே திரும்புமாயின், அமெரிக்காவில் இன்னொரு நிதி நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும் உருவாகும்.ஏற்கனவே எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் மத்தியில் ஈரானும், வெனிசுவேலாவும் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக யூரோவை கொண்டு வரவிருந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கம் தான் அப்படி ஒரு முயற்சியை தடுத்த சக்தி. அமெரிக்காவின் செல்வத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 2 ம் உலகயுத்ததிற்கு பின்னர், அழிவில் இருந்து ஐரோப்பாவை மீட்டு பணக்கார நாடுகளாக மாற்றிய அமெரிக்கா, அதற்கு பிரதிபலனாக அமெரிக்காவில் முதலீடு செய்ய தூண்டியது. அதே போன்றே எண்ணை ஏற்றுமதியால் பெரும்பணம் ஈட்டிய வளைகுடா ஷேக்குகளும், தமது லாபத்தில் பெரும்பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இதனாலேயே அந்த நாடுகளும் அமெரிக்க நிதி நெருக்கடிக்குள் சிக்கி பாதிக்கப்பட்டன.

இன்றைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அண்மைக்காலமாக பொருளாதார வளர்ச்சி கண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளை வந்து முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கேட்டு வருகின்றது. இந்தியா அதனை செய்யும் சாத்தியம் உண்டு. அணுசக்தி உடன்படிக்கை மூலம் அமெரிக்கா, இந்தியாவை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனா தயக்கம் காட்டுகின்றது. அது தனது பொருளாதார பழுதுகளை திருத்திக் கொள்வதிலும், உள்நாட்டில் முதலீடு செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறது. அப்படியே அமெரிக்காவில் முதலீடு செய்ய முன்வந்தாலும், நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை வாங்க விரும்பலாம். அதனை (நாட்டை விற்பதற்கு சமம் என்பதால்) அமெரிக்கா விரும்பப் போவதில்லை. மேலும் இனிமேல் (சீனாவின் ஒரு பகுதியான) ஹோங்ஹோங் தான் இனிமேல் (நியூ யார்க் போல) சர்வதேச வர்த்தக மையமாக வரப்போவதாக வதந்திகள் அடிபடுகின்றன.

இன்று காணும் மாற்றங்கள் யாவும் சீனா உலக வல்லரசாக மேலாண்மை பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளதை கோடிட்டுக்காட்டுகின்றன. அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான எதிர்கால அச்சுறுத்தலுமாகும். இந்த ஒப்பந்தமானது, இந்தியா முற்றுமுழுதாக அமெரிக்க முகாமுக்குள் போய்விட்டதை காட்டுகின்றது. அதே நேரம், சீனா இலங்கையில் காலூன்றி வருகின்றது. இவ்வளவு காலமும், இலங்கைக்கு அதிக நிதியுதவி வழங்கி வந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டது சீனா. இலங்கையின் தென்பகுதியில், எதிர்காலத்தில் வரப்போகும்(அல்லது அப்படி ஊகிக்கப்படும்) சீன கடற்படை முகாமானது, இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கான ஏற்பாடு ஆகும். இலங்கை சீனாவின் ஆதிக்கத்திற்கும் முழுவதுமாக போக முன்னர், இந்தியா தனது முதலீடுகளை பெருக்குவதன் மூலம் தடுக்கப்பார்க்கின்றது. அமெரிக்கா இராணுவ உதவி செய்வதன் மூலம், ஈரானின் தலையீட்டை தடுக்கப்பார்க்கின்றது. இன்றைய நிதி நெருக்கடி இந்த வல்லரசுப் போட்டியை தீவிரமாக்கலாம், அல்லது விரைவு படுத்தலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய முதலீடுகள் மிகக் குறைவு. ஐரோப்பாவில் இருந்து வரும் நிதியில் பெருமளவு பகுதி, "NGO பொருளாதாரத்திற்கே" செலவிடப்படுகின்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற திட்டங்களை ஐரோப்பிய பணத்தில் நடைமுறைப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள் இனிமேல் இயங்க முடியாத நிலை வரலாம். அதற்கு காரணம், நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தமது வங்கிகளை காப்பாற்ற பெரும்பணம் செலவிடும் ஐரோப்பிய அரசுகள், அபிவிருந்தியடையும் நாடுகளுக்கு இதுவரை வழங்கி வந்த நிதியை குறைக்கவிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, சர்வதேச சந்தையில் ஏறிய உணவுப்பொருட்களின் விலை இறங்கவில்லை. உள்நாட்டில் கூட உணவுப்பொருட்களை வாங்குவதும் விற்பதும் (லாபத்தை மட்டுமே முக்கியமாக கருதும் வியாபாரிகளின்) கையில் இருப்பதால், மக்கள் பட்டினியால் செத்தாலும் விலை குறையப் போவதில்லை. இது போன்ற காரணங்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள், வறுமைக்குள்ளும், இன்னும் மோசமாக பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுவர். இவற்றைப் பற்றி உலக அக்கறை மிக மிக குறைவாக இருக்கும். இந்த நெருக்கடியான காலத்தில், பணமிருப்பவர்கள் தமது நலன்களை மட்டுமே பார்க்கப்போகின்றனர். இதைப்பற்றி கேட்கபோனால், "தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்" என்று தத்துவ முத்துகள் உதிரப்போகின்றன. உலக உணவுத்திட்டமும், ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து ஏற்கனவே எச்சரித்து விட்டன.
_________________________________________________
-இந்தக் கட்டுரை நோர்வேயில் இருந்து வெளிவரும் "பறை" இதழில்(ஒக்டோபர் 2008) பிரசுரமாகியது. http://www.frimedianorway.com
____________________________________________________________

6 comments:

Vetirmagal said...

உங்கள் பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். பல செயதிகள் தெரிந்து கொள்ள முடிகிறது. வருத்தமும் கொள்ள வைக்கிறது. உங்கள் ஆழ்ந்த அறிவு அசத்துகிறது.

நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

மிகவும் சிறப்பாகவும் விளக்கமாகவும் உள்ளது,,,

ஆட்காட்டி said...

அப்ப நாமெல்லாம் அமெரிக்கனுக்கு வேலை செய்யிறதை விட்டுடலாமா?

Kalaiyarasan said...

வெற்றிமகள்,விக்னேஸ்வரன், ஆட்காட்டி,

உங்கள் அனைவரது ஊக்குவிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் என்னுள் இருக்கும் அரிய தகவல்கள் பல வெளியில் வராமலே இருந்திருக்கும். ஆகவே உங்களைப் போன்ற வாசகர்களுக்கு தான் நான் கடமைப் பட்டுள்ளேன்.

சதுக்க பூதம் said...

உங்கள் பதிவுகளை தற்போது தான் பார்க்கிறேன். நன்றாக உள்ளது

//தற்போது எழுந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக உலக நாடுகள் தமது டாலர்களை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதனது கேள்வி குறைந்து, பெருமளவு டாலர்கள் அமெரிக்காவுக்கே திரும்புமாயின், அமெரிக்காவில் இன்னொரு நிதி நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும் உருவாகும்.//


டாலரை அமெரிக்காவிற்கு விற்க முடியாது. அதை அமெரிக்கவிற்கு கொடுக்க ஒரே வழி, அமெரிக்க பொருட்களை வாங்குவதன் மூலம் தான். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இவ்வாறு டாலரை அமெரிக்காவிற்கு கொடுத்து பொருட்களை அமெரிக்கவிடமிருந்து வாங்கினால், அமெரிக்காவின் உற்பத்தி பெருகி பொருளாதாரம் செழிப்படையும். ஏன் டாலரை அமெரிக்கவிற்கு கொடுக்க முடியாது என்பது பற்றி இந்த பதிவில் விளக்கி உள்ளேன்

Kalaiyarasan said...

உங்கள் வருகைக்கு, கருத்து தெரிவித்தமைக்கு நன்றி, சதுக்கபூதம்.