ஜெர்மனியில் பிரான்க்பூர்ட் (ஆங்கிலத்தில்: பிராங்க்பெர்ட்) நகரம். வானத்தை தொட்டு விடத் துடிக்கும் கட்டிடங்களை இங்கே மட்டும் தான் அதிகம் காணலாம். அமெரிக்காவின் நவீன நகரமான மான்ஹாட்டனுடன் ஒப்பிட்டு பேசுவதில் பிரான்க்பூர்ட் வாசிகளுக்கு அலாதிப் பிரியம். பணம் ஆகாயத்தை நோக்கி பாய்கின்றது. ஜெர்மனி ஒரு பணக்கார நாடு என்பதற்கு நாம் வேறு சாட்சியம் தேடத் தேவையில்லை. அதே பிரான்க்பூர்ட் என்ற பணம் கொழிக்கும் சொர்க்கபுரியின் அடியில் இன்னொரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒஸ்ட்பார்க் எனுமிடத்தில் மிகப் பெரிய "கெண்டேய்னர் முகாம்" உள்ளது. அங்கே வசிப்பவர்களும் ஜேர்மனிய குடிமக்கள் தாம். ஆனால் அவர்கள் எல்லோரும் "வசதியற்ற ஏழை எளியவர்கள்"."வீடிழந்தவர்கள்" என்று சமூகம் அவர்களை அழைக்கின்றது.
ஜெர்மன் நிர்வாக கட்டுப்பாடுகள் "வீடற்றவர்கள்", "கூரை அற்றவர்கள்" என இரண்டாகப் பிரித்து வைத்துள்ளன. வீடற்றவர்களுக்கு இரவு ஒதுங்குவதற்கு என்றாலும் முகாம்கள் உள்ளன. ஆனால் கூரையற்றவர்களுக்கு அதுவும் இல்லை. எங்காவது பூங்காவில், தெருவோரமாக நடைபாதையில், அல்லது ஒரு கட்டிட மறைவில் படுத்து உறங்க வேண்டியது தான். வெயில், மழை, குளிர், உறைபனி, எத்தகைய காலநிலையிலும் சமாளித்து தப்பிப் பிழைக்க வேண்டும். பலவீனமானவர்கள் 'மைனஸ்' குளிரில் விறைத்து இறந்தும் போவார்கள். வீடற்றவர் முகாமில் தங்குவதற்கு அரசு சில நடைமுறைகளை பின்பற்றுகின்றது. நிலையத்தில் குறிப்பிட்ட அளவு இடம் மட்டுமே உண்டு. அதுவும் சில நாட்களுக்கு நாள். தினசரி அல்கஹோல் பாவனையால் உடல் தளர்ந்தவர்களுக்கு முதலிடம். அதனால் சிலர் வேண்டுமென்றே குடிக்கு அடிமையாகிறார்கள். அரச உபகாரம் வேண்டி பதிய வரும் ஒருவர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் தனது உடமைகளை திருடனிடம் பறி கொடுத்து விட்டு வீதிக்கு வந்த ஒருவர் அவ்வாறு பதிய முடியாது. புதிய அடையாள அட்டை வேண்டுமானால் நீண்ட பரிசோதனைக்கு பிறகு பணம் கட்டிப் பெற வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் இழந்த ஒருவர் பணத்திற்கு எங்கே போவார்? அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அப்படியான தருணங்களில் தெருவோர நடைபாதையே புகலிடம்.
நமது நாடுகளில், வேலையிழந்த, வீடிழந்த, உறவினர்களால் கைவிடப்பட்ட பலருக்கு பிச்சை எடுத்து வாழ்வது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுப்பெடுக்க வேண்டுமென்ற கடமை உணர்ச்சி அரசாங்கத்திற்கு கிடையாது. தனது பிரஜைகள் இரந்துண்டு வாழ்வதைக் கண்ட பிறகும், தனது சமூகக் கடமையை தட்டிக் கழிக்கும் அரசுகள் இருப்பதற்கு நாமும் ஒரு காரணம். "அரசாங்கத்திற்கு அந்தப் பொறுப்பு கிடையாது" என்று நாமும் தான் சேர்ந்து கொண்டு அநீதிக்கு வக்காலத்து வாங்குகிறோம். பிச்சைக்காரர்கள் இருப்பது தவிர்க்கவியலாத சமுதாய அமைப்பு, என்று ஒதுங்கிக் கொள்கிறோம். மத நம்பிக்கையாளர் என்றால், "இது எல்லாம் முற்பிறவியில் பாவம் தேடியதால் வந்த வினை", என்று விளக்கம் கொடுப்பார். ஜெர்மனியிலும் பிச்சைக்காரர்கள் உள்ளனரா? பிச்சைக்காரகள் என அழைக்கக் கூடிய பிரிவு, "வளர்ந்த நாடுகள்", "பணக்கார நாடுகள்" எங்குமே காணப்படும் தோற்றப்பாடு தான். ஆனால் அங்கெல்லாம் அரசு வெட்கத்துடன் தனது பொறுப்புணர்வை ஏற்றுக் கொள்கின்றது. இருப்பினும் பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, நிர்வாக சீர்கேடுகள் என்பன பலரை தெருக்களிலும், பூங்காக்களிலும் படுக்க நிர்ப்பந்திக்கின்றது. மேற்குலக சமூகத்தில் அவர்களை "Drop Outs " என்று அழைப்பார்கள். அல்லது வீடற்றவர்கள் என பொதுவாக சொல்வார்கள். அரச நிர்வாகம் அவர்களை "நிரந்தர வதிவிடம் அற்றவர்கள்" என்று குறிப்பிடுகின்றது. மக்களை கட்டுப்படுத்தும் ஆட்சிமுறைக்குள் அடங்கவில்லை என்பதால் அப்படி ஒரு பெயர். ஜெர்மனியில் மட்டும் முப்பதாயிரம் வீடற்றவர்கள் வாழ்கின்றனர்.
குய்ந்தர் வல்ராப் (Günter Wallraff ) என்ற ஜெர்மன் எழுத்தாளர், ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறு பக்கத்தை கண்டு, உணர்ந்து எழுதி வருகிறார். இதற்கென தனது பெயரை, வேண்டுமானால் உருவத்தை கூட மாற்றிக் கொண்டு ஊடுருவியுள்ளார். ஜெர்மனியில் துருக்கிய தொழிலாளர்கள் படும் அவலங்களை வெளிக் கொணர்ந்தவர். அந்த நூல் நெதர்லாந்து மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது. (அவரது நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக அறியவில்லை.) தற்போது "அற்புதமான புது உலகம்" (Aus der schönen neuen Welt) என்ற பெயரில் ஒரு நூல் வெளியாகி உள்ளது. இந்த நூலில் அவர் ஒரு வீடற்றவர் போல வேடமிட்டு வாழ்ந்த அனுபவங்களை பதிவு செய்துள்ளார். அந்த விபரங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (ஆப்பிரிக்க அகதி போல, "கால் சென்டர்" பணியாளராக, தொழிற்சாலையில் சுரண்டப்படும் தொழிலாளியாக எல்லாம் கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அவை குறித்து அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.)ஜெர்மனியில் வீடற்றவர்களாக, தெருவில் பிச்சைக்காரர் போல வாழ்பவர்கள் யாரும், "பிறவிப்பயனை அனுபவிக்கும் பாவிகள்" அல்லர். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் "பரம்பரை ஏழைகள்" கிடையாது. ஒரு காலத்தில் ராஜா மாதிரி வாழ்ந்தவர்கள். பணத்தில் புரண்டவர்கள். ஆடம்பர பங்களாவில் சொகுசாக வாழ்ந்தவர்கள். கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்த தொழிலதிபர்கள். தமது கல்வித் தகமையை காட்டி அதிக சம்பளம் பெற்ற நடுத்தர வர்க்க புத்திஜீவிகள். அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி. ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களை ஏளனத்துடன் பார்த்தவர்கள், தாங்களும் அந்த நிலைக்கு வருவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். என்ன செய்வது? இரக்கமற்ற முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. "வல்லவன் பிழைப்பான். பலவீனமானவன் வீழ்வான்.", என்ற அடிப்படை முதலாளித்துவ சூத்திரத்தை அவர்கள் வாழ்க்கையிலும் உணர்த்திக் காட்டியது. "வியாபாரத்தில் வெற்றி பெறுவதே இலட்சியம். வேண்டிய அளவு பணம் சேர்ப்பதே கொள்கை." என்று முழங்கினார்கள். வெற்றி என்பது இன்னொருவனின் தோல்வி என்பதையும், சேகரிக்கப்பட்ட பணம் இன்னொருவன் இழந்த செல்வம் என்பதையும் மிகத் தாமதமாகத் தான் புரிந்து கொண்டார்கள்.
57 வயது விக்டர் தற்போது நோய் வாய்ப்பட்டு மெலிந்து போயுள்ளார். அவரது கண்கள் எப்போதும் அச்சத்துடன் பார்க்கின்றன. ஒரு காலத்தில் அவர் ஒரு "போக்குவரத்து நிறுவனத்தின்" முதலாளி. நன்றாக ஓடிக் கொண்டிருந்த கம்பெனி ஒரு நாள் படுத்து விட்டது. காரணம், மிகப் பெரிய வாடிக்கையாளர் ஒருவரின் இழப்பு. அதன் அர்த்தம் வருமான இழப்பு. வங்கிக் கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை. வீடு பறி போனது. குடும்பம் குலைந்தது. உறவினர்கள் காணாமல் போனார்கள். போக்குவரத்து கழகம் நடத்திய முதலாளி காசில்லாததால் சீட்டில்லாமல் பயணங்கள் செய்து பிடிபட்டார். தண்டப்பணம் கட்ட முடியாமல் சிறை சென்றார். இப்பொழுது வானமே கூரையாக தெருவில் படுக்கிறார்.
ஹென்னிங் இன்னும் நடுத்தர வயதைக் கூட எட்டிப் பிடிக்கவில்லை. பங்குச்சந்தை ஆலோசகராக வர வேண்டிய வங்கி ஒன்றின் திறமையான பணியாளர். ஒரு நாள் "டிஸ்கோதேக்" கில் மனைவிக்கு தொந்தரவு கொடுத்த ஒருவனை பிடித்து அடித்ததில் அவன் இறந்து விட்டான். பிறகென்ன? நாலரை வருடங்கள் சிறைவாசம். "தன்னால் தானே சிறைக்கு சென்றார்," என்று குற்ற உணர்ச்சி கொண்ட மனைவி விடுதலை அடையும் வரை காத்திருந்தார். அதற்குப் பிறகு விவாகரத்து பெற்று சென்று விட்டார். விடுதலையான பின்னர் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. சிறை சென்று வந்த வங்கிப் பணியாளருக்கு வேலை கொடுக்க யாரும் விரும்பவில்லை. தற்போது வீடற்றவர் முகாமில் காலம் தள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மன்பிரெட் திறமையான மென்பொருள் பொறியியலாளர். சாப்ட்வெயர் கம்பெனி முதலாளி. ஒரு காலத்தில் இவரின் கீழே பத்து "புரோகிராமர்கள்" வேலை செய்தார்கள். பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரான கம்பெனி ஒன்று மோசடி செய்த பணத்தின் ஒரு பகுதிக்கு (1 .2 மில்லியன்) இவரது நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு இவரையும் குற்றவாளியாக கருதியதால் ஐந்து மாதங்கள் சிறை செல்ல
நேர்ந்தது. விடுதலை ஆன பிற்பாடு ஜெர்மனி முழுவதும் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் யாருமே அவருக்கு வேலை கொடுக்கவில்லை. "தண்டிக்கப்பட்டு சிறை சென்ற சாப்ட்வெயர் என்ஜினியரை நம்ப முடியாது, ஆபத்தான பேர்வழி ..." என்பது அவர்களது அச்சம்.
விவாகரத்தின் பின்னர் மனநோயாளியான வங்கி நிர்வாகி, குடியால் நினைவாற்றலை இழந்த டாக்டர், இவ்வாறு பலதரப் பட்ட நபர்களை Günter Wallraff சந்தித்துள்ளார். முன்னொருகாலத்தில் "யார் சிறப்பாக செயல்படவில்லையோ, அவர் வெளியேற்றப் படுவார்..." என்று சமூகம் குறித்த தவறான கோட்பாடுகளை நம்பியதாகவும், வீடிழந்து தெருவில் வாழும் வாழ்க்கை எவ்வளவு விரைவில் நடக்கக்கூடியது என்பதை அனுபவத்தில் கண்டு உணர்ந்துள்ளதாக கூறியுள்ளார். தெருவில் கட்டிட நிழலில் படுக்கும் சிறு இடத்திற்கு கூட சண்டை போட்ட இரு ஜெர்மன் ஜோடியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தனது வசதியான படுக்கையை கொடுத்து உணவையும் பகிர்ந்து கொண்ட போலந்து நாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளிகளின் சகோதரத்துவத்தை கண்டு கண் கலங்கியதாக எழுதுகிறார்.
ஜெர்மன் தெருக்களில் வாழ்பவர்களில் சில ஜாலியான பேர்வழிகளும் உண்டு. முய்ன்ஷேன் (ஆங்கிலத்தில் : மியூனிச்) நகரில் அன்றைய மாநில முதலமைச்சர் Edmund Stoiber மீது முட்டை வீசிய வீரச் செயலை சொல்லி பெருமைப் பட்டார் மதியாஸ். அன்று கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், " எற்றுக்கொள்ள முடியாத இனக்கலப்பு" பற்றியும், வெளிநாட்டவருக்கு எதிராகவும் அர்த்தமற்ற கதைகளை கூறிக் கொண்டிருந்தார். முட்டை வீசிய குற்றத்திற்காக பொலிஸ் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்தது. இன்னொரு மறக்க முடியாத நபர் தோமஸ். வீடுகளுக்கு வண்ணம் பூசும் வேலையில் நன்றாக சம்பாதித்தவர். ஆனால் திடீரென வேலையை விட்டு விட்டு நாடோடியாக அலைகின்றார். எத்தனை காலத்திற்கு தான் வேலை வேலை என்று அலைவது? ஓய்வு வேண்டாமா? அவரது நீண்ட விடுமுறைக் காலமான 27 வருடங்களை ஐரோப்பிய தெருக்களில் கழித்துள்ளார். தென் இத்தாலி வரை ஆண்டியாக அலைந்து விட்டு வந்துள்ளார். அவர் தனது முடிவையிட்டு ஒரு நாளும் வருந்தியது கிடையாது. "ஊரைத் தெரிந்து கொண்டேன். உலகம் புரிந்து கொண்டேன்." என்று ஜாலியாக வாழ்கிறார்.
_______________________________
மேலதிக விபரங்களுக்கு :
Günter Wallraff
Günter Wallraff: Undercover Journalist