Monday, July 04, 2011

அடிமைகள் அரசாண்டால் மிரளும் ஏகாதிபத்தியம்

(இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா - 5)

அடிமைகளின் புரட்சி எந்த நாட்டில் வென்றது?
அமெரிக்க கண்டங்களில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த இரண்டாவது நாடு எது?
உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு எது?
"ஹைத்தி" என்பதே அனைத்துக் கேள்விகளுக்குமான விடை.
அமெரிக்கப் புரட்சி பற்றி உலக நாடுகளின் பாடப்புத்தகங்கள் யாவும் போதிக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான புரட்சியை கண்டுகொள்ளாமல் மறைக்கப் பார்க்கின்றன. பாட நூல்கள் மட்டுமல்ல, எந்தவொரு சரித்திர ஆசிரியரும், ஊடகமும் அதை நினைவு படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு நாட்டில் வெற்றி பெற்ற அடிமைகளின் புரட்சி, பிற நாடுகளுக்கு பரவக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஹைத்தியின் சுதந்திரத்தை அடக்குவதற்காக படை அனுப்பிய நெப்போலியன் பின்வருமாறு கூறினான். "நான் ஹைத்தியின் செல்வத்தை பாதுகாப்பதற்காக படையனுப்பவில்லை. கறுப்பின அடிமைகளின் வெற்றி, உலக கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கு தூண்டுகோலாக இருக்கக் கூடாது." ஹைத்தி விடுதலையடைந்த நேரம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி அடிமையாக்கிக் கொண்டிருந்தார்கள். அன்று உலகம் முழுவதையும் ஆண்ட ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள், ஹைத்தி புரட்சி பற்றி இருட்டடிப்புச் செய்தனர். வேறு சில மத்திய அமெரிக்க, கரீபியன் நாடுகளில் அடிமைகள் கிளர்ச்சி செய்த பொழுது முளையிலேயே அழித்தார்கள்.

ஹைத்தி 200 வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக கெரில்லாப் போராட்டம் நடத்தி விடுதலை பெற்றது. ஹைத்தி மக்கள் தமது விடுதலைக்கு இன்று வரை விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். "சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய பிரெஞ்சு புரட்சியாளர்கள், கறுப்பர்களுக்கு அது பொருந்தாது என்றார்கள். வட-அமெரிக்க புரட்சியாளர்கள் 50 வருடங்களுக்கு பின்னர் தான் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்கள். நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்ட பின்னர் தான், ஹைத்தியின் இறையாண்மையை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. வரலாற்றில் இன்னொரு தடவை அடிமைகளின் புரட்சி வெல்லக் கூடாது, என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். விதிகளை மீறுவோர் ஹைத்தி போன்று நிரந்தர வறுமைக்குள் வருந்துமாறு சபிக்கப்படுவார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் கொலம்பஸ் ஹைத்தியை "கண்டுபிடித்த பொழுது", அதனை "ஹிஸ்பானியோலா" என்று பெயரிட்டார். அங்கே நிலைநிறுத்தப் பட்ட நாற்பது ஸ்பானிய வீரர்களும், ஒரு வருடத்தின் பின்னர் கொலம்பஸ் திரும்பிய பொழுது உயிரோடு இருக்கவில்லை. அவர்கள் கட்டிய கோட்டையும் எரிந்து சாம்பராகிக் கிடந்தது. உள்ளூர் செவ்விந்திய பெண்களை கடத்திச் சென்று பாலியம் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கல் நடவடிக்கை அது. தன்மானம் சீண்டப்பட்டதாக உணர்ந்த ஸ்பானியர்கள் செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள், அல்லது சாகும் வரை வேலை வாங்கினார்கள். பழங்குடியின தீவுவாசிகள் ஒருவர் விடாது அனைவரையும் அழித்தார்கள். அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பியரின் இனவழிப்புக்கு பலியான Taino இன மக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள்.

அதற்குப் பிறகு ஸ்பானியர்கள், தீவின் கிழக்குப் பகுதியில் மட்டும் (இன்று டொமினிக் குடியரசு) குடியேற்றங்களை நிறுவினார்கள். ஹைத்தி பிரெஞ்சு, ஆங்கிலேய கடற்கொள்ளையரின் புகலிடமாக இருந்தது. சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு முதலாளிகள் குடும்பத்தோடு வந்து குடியேறினார்கள். பெரும் முதலிட்டு பெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஆரம்பித்தார்கள். கரும்பு, கோப்பி, பருத்தி, எதை விளைவித்தாலும் பணம் கொட்டியது. அப்பொழுது அந்தப் பகுதி "சென் டொமிங்" (Saint Domingue) என அழைக்கப்பட்டது. பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். பிரெஞ்சுக் காலனிகளில் ஹைத்தியில் மட்டுமே அதிக லாபம் கிடைத்தது. பிரான்சின் மூன்றில் ஒரு அந்நிய இறக்குமதி அங்கிருந்து வந்தது. அன்று பொருளாதார வளர்ச்சிப் படியில் முன்னேறிக் கொண்டிருந்த பணக்கார காலனியாக திகழ்ந்தது. ஹைத்தியில் குடியேறிய நாற்பதாயிரம் பிரெஞ்சு மக்கள் மட்டுமே செல்வத்தின் பெரும் பங்கை அனுபவித்தார்கள். ஆப்பிரிக்க அடிமைகளுக்கு எதுவும் கிடைக்காது. லாபத்தை அதிகரிப்பதற்காக இன்னும் அதிகமாக சுரண்டப்பட்டார்கள்.

1791 ம் ஆண்டு, அதாவது புரட்சி வெடித்த காலத்தில், ஹைத்தியில் அரை மில்லியன் கறுப்பின அடிமைகள் இருந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். அநேகமாமானோர் பெருந்தோட்டங்களின் விரிவாக்கல் காரணமாக பிடித்து வரப்பட்டவர்கள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்த பல மொழிகளைப் பேசும் மக்கள். பெருந்தோட்டங்களில் அடிமை தொழிலும், ஒன்றிணைந்த போராட்ட வாழ்வும் அவர்களிடையே சகோதரத்துவத்தை தோற்றுவித்திருந்தது. ஹைத்தியின் மொத்த சனத்தொகையில் பத்து கறுப்பர்களுக்கு ஒரு வெள்ளையர் இருந்தார். இதனால் பெரும்பான்மையினரான அடிமைகள் விரைவிலேயே தமது பலத்தை அறிந்து கொண்டனர். இதை விட, அடிமைகளின் பூர்வீகமும் புரட்சிக்கு வழிகோலியது. புதிதாக வந்த ஆப்பிரிக்க அடிமைகள் தாயகத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்தவர்கள். பலர் அங்கோலா, கொங்கோ ராஜ்ஜியங்களின் மறவர் குலப் படைவீரர்களாக பணியாற்றியவர்கள். தமது மன்னனுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். அப்படிப்பட்ட பின்னணியை கொண்டவர்கள் அடிமையாக வேலை செய்ய மறுத்ததில் வியப்பில்லை. பெருந்தோட்ட முதலாளிகளை எதிர்த்து கலகம் செய்தார்கள். கலகக்காரர்கள் விரைவிலேயே கெரில்லாப் போராளிகளாக நிறுவனமயப் பட்டனர்.

ஹைத்தியில் அடிமைகளை இறக்குமதி செய்த காலத்தில் இருந்தே, அடிமைகளின் கிளர்ச்சியும் இடம்பெற்று வந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அடிமைகள் காலில் கட்டிய சங்கிலிகளை உடைந்தெறிந்து விட்டு தப்பியோடினார்கள். யாரும் ஊடுருவ முடியாத மலைகளில் புகலிடம் தேடிக் கொண்டனர். அங்கிருந்த படியே உணவுக்காக பெருந்தோட்டங்களை கொள்ளையடிப்பார்கள். அப்படி வரும் சந்தர்ப்பங்களில் பிற அடிமைகளை தப்பியோடுமாறு தூண்டி விடுவார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு புரட்சிக்கு போதுமானதாக இருக்கவில்லை. கறுப்பின அடிமைகள் ஒரு தலைவனுக்காக காத்திருந்தார்கள். "துசா லூவேதியூர்" (Toussaint L'ouverture) ஹைத்தியின் வடக்கேயுள்ள பிறேடா பெருந்தோட்டத்தில் அடிமையாகப் பிறந்தவர். ஒரு பிரபுவின் வீட்டு அடிமையாகும் பாக்கியம் பெற்றதால், எழுதப் படிக்க கற்றிருந்தார். அதனால் பிரான்சில் வெடித்த புரட்சி பற்றிய செய்திகளையும் அறிந்து வைத்திருந்தார். சரியான தருணத்தில் கலகக்காரர்களுடன் இணைந்து கொண்டார்.

துசா விடுதலையடைந்த அடிமைகளைக் கொண்டு கெரில்லாக் குழுக்களை அமைத்தார். அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கினார். யுத்த தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். இதற்காக அவர் எந்தவொரு இராணுவக் கல்லூரியிலும் பயிலவில்லை. சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்ட துசா இராணுவத் தளபதியாக மட்டும் இருக்கவில்லை. புத்தி கூர்மை மிக்க ராஜதந்திரி. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஹைத்தி முழுவதும் அடிமைகளின் கிளர்ச்சி பரவிய பொழுது, அதை அடக்குவதற்காக மூன்று ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், தமக்கிடையிலான வல்லரசுப் போட்டியை இதற்காக ஒத்தி வைத்தன. ஆயினும் வலிமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த ஐரோப்பியப் படைகளால், ஒரு சிறு கெரில்லாக் குழுவை வெல்ல முடியவில்லை. கறுப்பினப் போராளிகள் கெரில்லாப் போருக்கு சாதகமான மலைகளிலும், காடுகளிலும் மறைந்திருந்து தாக்கினார்கள். இயற்கையும் ஐரோப்பியருக்கு ஒத்துழைக்க மறுத்தது. வெப்ப வலைய நெருப்புக் காய்ச்சல் தாக்கி பல படைவீரர்கள் மடிந்தார்கள்.

ஹைத்தியின் வடக்கேயுள்ள பகுதிகள் கறுப்பினப் படையணிகளால் விடுவிக்கப்பட்டன. தெற்கேயுள்ள பகுதிகளை கலப்பின முலாட்டோ படையினர் விடுதலை செய்தனர். பிரெஞ்சு பிரபுக்களுக்கும், கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளே முலாட்டோ என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் தலைமைத் தளபதி பெத்தியோன் (Alexander Petion) கூட ஒரு தலைமைப் பண்பு புரட்சியாளர். லத்தீன் அமெரிக்க நாடுகளை ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்த பொலிவார் சுதந்திர ஹைத்தியில் தஞ்சம் கோரியிருந்தார். அப்பொழுது அவருக்கு அடைக்கலம் கொடுத்த முலட்டோ தலைவர் பெத்தியோன், பணமும், ஆயுதங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார். அந்த உதவிக்கு கைமாறாக என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார் பொலிவார். லத்தீன் அமெரிக்கா முழுவதும் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கினாலே போதும், என்று பதிலளித்தார் பெத்தியோன்.

பெருந்தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஈவிரக்கமற்று கொடுமைப் படுத்தி வந்தார்கள். கிளர்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். புரட்சியின் போது பெருந்தோட்டப் பயிர்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. பெருந்தோட்ட முதலாளிகளை சொந்த அடிமைகளே நஞ்சூட்டி, அல்லது வெட்டிக் கொன்றனர். கறுப்பின அடிமைகளின் தார்மீக ஆவேசம் அனைத்து வெள்ளையருக்கும் எதிராக திரும்பியது. கண்ணில் பட்ட வெள்ளையர்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டனர். படுகொலைக்கு தப்பியவர்கள் அகதியாக பிரான்சு நோக்கி கப்பலேறினார்கள். புரட்சி வெற்றிவாகை சூடிய பொழுது ஹைத்தியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கூட இருக்கவில்லை. அன்று அங்கிருந்த வெள்ளையர்கள் அனைவரும் போலந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவத்தால் அனுப்பபட்ட அவர்கள் தக்க தருணம் பார்த்து புரட்சிப்படைகளுடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் மட்டுமே சுதந்திர ஹைத்தியில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

சுதந்திர ஹைத்தி பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. முன்னாள் அடிமைகள் யாரும் பெருந்தோட்டத்தில் வேலை செய்ய விரும்பவில்லை. இதனால் நிலம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அநேகமாக அனைத்து கறுப்பினத்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். முலாட்டோக்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இறங்கினார்கள். இதனால் சமூகத்தில் புதிய வர்க்க வேறுபாடுகள் தோன்றின. நாட்டுப்புறங்களில் ஏழை விவசாயிகளாக வாழும், கிரயோல் (ஆப்பிரிக்க கலப்பு) மொழி பேசும் கறுப்பினத்தவர்கள். நகர்ப்புறங்களில் பணக்கார மேட்டுக்குடிகளாக வாழும், பிரெஞ்சு மொழி பேசும் முலாட்டோக்கள். பிற்காலத்தில் படித்த கறுப்பின மத்தியதர வர்க்கம் உருவான போதிலும், இந்த சமூகப் பிரிவினை இன்று வரை தொடர்கின்றது.

ஹைத்தி புரட்சி சர்வதேச மட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கியது. முன்னாள் காலனிய எஜமானான பிரான்ஸ், ஹைத்தியை கைப்பற்ற பெரும் பிரயத்தனம் எடுத்தது. தன்னிடம் இருந்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தி போரைத் தொடர எண்ணியது. இதற்காக அமெரிக்காவில் இருந்த பிரெஞ்சுக் காலனியான லூசியானாவை 15 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஹைத்தியில் புரட்சி வெடிக்காதிருந்தால், இந் நேரம் வட அமெரிக்காவில் ஒரு பிரெஞ்சு - அமெரிக்க தேசம் இருந்திருக்கும். ஹைத்தி சுதந்திர நாடாகிய பொழுதிலும், சர்வதேச உறவுகளைப் பேணுவதில் தடை ஏற்பட்டது. சர்வதேச வர்த்தகம் முழுவதும் ஐரோப்பிய வல்லரசுகளின் கைகளில் இருந்தது. இதனால் ஏற்றுமதிக்கு அந்நிய சந்தையை தேடுவதில் சிரமமேற்பட்டது. வேறு வழியின்றி ஹைத்தி, பிரான்சின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. காலனிய இழப்பீடுகளுக்காக, ஹைத்தி பிரான்சுக்கு 150 மில்லியன் பிராங் நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்டது. பதிலுக்கு பிரான்ஸ் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தது.

பிரான்ஸ் 150 மில்லியன் பிராங் பணம் வாங்கிக் கொண்டு, 1825 ல் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அமெரிக்கா 1862 ல் அங்கீகாரம் வழங்கியது. அதற்கும் சுயநலம் தான் காரணம். உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த அமெரிக்காவுக்கு ஹைத்தியின் பருத்தி அத்தியாவசியமாக தேவைப்பட்டது. முதலாம் உலகப்போரின் பொழுது, பனாமாக் கால்வாயை பாதுகாப்பதற்காக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹைத்தி மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்தது. அன்று தொடங்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு 19 ஆண்டுகள் நீடித்தது. "ஹைத்தி மக்களின் நன்மை கருதி" நடவடிக்கை எடுத்ததாக அறிவித்த அமெரிக்கா, அதற்குப் பிறகு பல தடவைகள் படையெடுத்து விட்டது. ஜனநாயகத்தை மீட்பதற்கு, தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு, என்று பல சாட்டுகளைக் கூறிக் கொண்டு அமெரிக்கப் படையினர் வந்து "சும்மா, சுகம் விசாரித்து விட்டு" செல்வார்கள். 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கூட "நிவாரணப் பணிகளை ஒழுங்கு படுத்த" வந்தார்கள். சின்னச்சிறு ஹைத்தி மீது அமெரிக்காவுக்கு என்ன அவ்வளவு கரிசனை?

ஹைத்தியில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட போதிலும், உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படவில்லை. வெள்ளையின பெருந்தோட்ட முதலாளிகளை விரட்டி விட்டு, அந்த இடத்தில் கறுப்பின/கலப்பின மேட்டுக்குடி வர்க்கம் அமர்ந்து கொண்டது. அவர்கள் உழைக்கும் மக்களை கட்டாய வேலை வாங்கியதன் மூலம் தமது
செல்வந்த வாழ்வை நிச்சயப்படுத்திக் கொண்டனர். முன்னாள் அடிமைகள் குடிமைகளானார்கள், ஏழை தொழிலாளர்களானார்கள். வெள்ளையின எஜமானர்களின் இடத்தில் கறுப்பின எஜமானர்கள் அமர்ந்து கொண்டார்கள். இந்த நிலைமை இன்று வரை தொடர்கின்றது. அதிகார வர்க்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிகள் ஏற்படாமல் இல்லை. ஆனால் மக்கள் தமது இயலாமையை அறிந்து வைத்துள்ளனர். அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒன்று அடக்கப்பட்டது. 1919 ல் அவர்களை ஒழுங்குபடுத்தி போராடிய முன்னாள் இராணுவ அதிகாரி காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நீண்ட காலமாக யாரும் புரட்சியை நினைத்தும் பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க மரைன் படையினர், ஹைத்தி இராணுவத்தை கலைத்து விட்டிருந்தனர். அந்த இடத்தில் உள்நாட்டுக் கலகங்களை அடக்கும் சிறப்புப் போலிஸ் பிரிவினை உருவாக்கினர். பிற்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி பெற்ற பொலிசாரே காரணமாக இருந்தனர்.

அமெரிக்க படையினர் வெளியேறிய பிறகு, ஹைத்தி டுவாலியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அல்லலுற்றது. 1986 வரை பல தசாப்தங்களாக தொடர்ந்த டுவாலியர் குடும்ப ஆட்சியின் கீழ் ஹைத்தி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இறுதி மூச்சை விட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் இரவோடு இரவாக காணாமல் போனார்கள். கொலைபாதகச் செயல்களுக்கு அஞ்சாத குண்டர் படைகள், அப்பாவிகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொண்டனர். சந்தேகநபர்களால் சிறைச்சாலைகள் நிரம்பின. சித்திரவதை, கொட்டடிக் கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகின. டுவாலியர் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தெரிவான ஜனாதிபதி தான். அதிலும் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தியரானவர். ஆனால் பதவி சுகமும், சி.ஐ.ஏ. ஆதரவும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கியது. தேசநலனை மறந்து தனது செல்வத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டினார். டுவாலியர் காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 90 வீதமான ஹைத்தி மக்கள், படிப்பறிவற்றவர்களாக வறுமையில் வாடும் பொழுது, ஜனாதிபதியின் குடும்பம் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கிக் கொண்டிருந்தது. 1986 ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி டுவாலியர் குடும்ப கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டியது. இருந்தாலும் அப்போது பதவியில் இருந்த டுவாலியரின் மகன் அரச கருவூலத்தை கொள்ளையடித்துக் கொண்டு பிரான்சுக்கு தப்பியோடினான்.

டுவாலியர் காலத்தில் ஹைத்தியில் வாழ்ந்த மக்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, கூலிப்படையின் கொலைக் கரங்களுக்குள் அகப்பட்டு சித்திரவதைப் பட்டு சாவது. இரண்டு, நாட்டையும் உறவுகளையும் விட்டு விட்டு அயல் நாடுகளுக்கு தப்பியோடுவது. தினசரி ஆயிரக்கணக்கான ஹைத்தி அகதிகள் படகுகள் மூலம் நாற்திசைகளில் உயிர் காக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் வேதனை என்னவென்றால், சுற்ற வரவுள்ள எந்தவொரு நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பெருமளவு ஹைத்தியர்கள் அமெரிக்கா, புளோரிடா கரையில் தஞ்சம் கோரினார்கள். ஆனால் அந்த அகதிகளுக்கு தற்காலிக புகலிடம் அளிப்பதற்கு கூட அமெரிக்க அரசு மறுத்தது. அதே நேரம் அமெரிக்க கம்பனிகள் ஹைத்தியில் சுரண்டிய உழைப்பை, டாலர்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.

"நாளொன்றுக்கு ஒரு டாலர் சம்பாதிக்கும் ஹைத்தியர்கள், எதற்காக 500 டாலர் கட்டி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா வருகிறார்கள்?" என்று அமெரிக்க அரசு இரங்கவில்லை. அடைக்கலம் கேட்டு வந்தவர்களை பிடித்து திருப்பி அனுப்பினார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரியின் கைகளில் நேரில் கொண்டு சென்று ஒப்படைத்தார்கள். விமான நிலையத்தில் காத்திருந்த கொலைஞர்கள், திரும்பி வந்த அகதிகளை கதறக் கதற தரையில் இழுத்து சென்றனர். இதெயெல்லாம் தனி மனித சுதந்திரத்தை உயிரென மதிக்கும் அமெரிக்கா பொறுத்துக் கொண்டிருந்ததா? என்று யாரும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு கியூபாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கவே நேரம் போதவில்லை. படகுகளில் வந்த ஹைத்தியர்கள் அகதிகள் இல்லை என்று கூறிய அதே அமெரிக்கா, ஏக காலத்தில் படகுகளில் வந்த கியூபர்களுக்கு அகதி தஞ்சம் வழங்கியது. "கியூபர்கள் மட்டுமே உண்மையான அரசியல் அகதிகள்" என்று, ஊடகங்கள் தலையில் வைத்து கூத்தாடின. ஆகவே இதிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம்: "அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர், கம்யூனிச நாட்டில் இருந்து வந்த கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க வேண்டும்."

டுவாலியரின் ஆட்சி இரண்டு வலிமை பொருந்திய அரசியல் சக்திகளின் ஆதரவால் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஒன்று, அமெரிக்க அரசு. இரண்டு, பாதுகாப்புப் படைகள். சர்வாதிகாரிக்கு முகஸ்துதி செய்து பதவியில் அமர்ந்திருந்த ஒரு சிறு கும்பலை தவிர, பெரும்பான்மை மக்கள் வெறுப்புடன் இருந்தனர். எதிர்க்கட்சிகள் யாவும் தடைசெய்யப்பட்ட சூழலில், கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே மிச்சமிருந்தது. அன்று தென் அமெரிக்காவில் பிரபலமடைந்த "விடுதலை இறையியல்" தத்துவத்திற்கு பல பாதிரிகள் ஈர்க்கப்பட்டனர். தேவாலயங்களை அடக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான பயில்நிலங்களாக மாற்றினார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் அரிஸ்தீத். தலைநகர் போர்ட் ஒ பிரின்சில் உள்ள பிரபல தேவாலயத்தில் அவரது அரசியல் உரையைக் கேட்க பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூஜைக்கு பின்னர் ஆரம்பிக்கும் மதப் பிரசங்கம், அரசியல் பிரச்சாரமாக மாறும். டுவாலியரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக, சமூகவிரோத கூலிப்படைகளின் வன்செயல்களுக்கு எதிராக, கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பார். கூலிப்படையினர் அரிஸ்தீட்டை கொலை செய்வதற்கு பல தடவை முயன்றனர். ஆனால் பாதுகாப்புச் சுவராக நின்ற மக்களின் ஆதரவால் உயிர் பிழைத்தார்.

பாதிரியார் அரிஸ்தீட்டுக்கு என்பது வீதமான ஹைத்தி மக்கள் ஆதரவளித்த போதிலும், வத்திகான் அவரை பிஷப் பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு காரணம் அரிஸ்தீத் ஒரு மார்க்சிஸ்ட்! "சோஷலிசம் மட்டுமே ஏழைகளுக்கு விடிவைத் தேடித் தரும் மார்க்கம்" என்று போதித்தார். அது மட்டும் தான் அவர் செய்த குற்றம். "ஆறு மில்லியன் ஏழை ஹைத்தியர்களுக்கு உணவளிக்க, உறைவிடம் வழங்க, வளமான வாழ்வுக்கு சோஷலிசம் மட்டுமே தீர்வு." பாட்டாளிகளின் தோழன் அரிஸ்தீத் கத்தோலிக்க அதிகார பீடத்தை எரிச்சலடைய வைத்ததில் வியப்பில்லை. ஆனால் "ஏழைகளின் அன்னை" தெரேசா, ஹைத்தி ஏழைகளிடம் இருந்து சுரண்டிய டுவாலியரின் நிதியை ஏற்றுக் கொண்டார். ஹைத்தி ஏழைகளின் இரத்தக்கறை படிந்த டுவாலியரின் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அக்கிரமக்காரருடன் கைகோர்த்த அன்னை தெரேசாவின் செயல், வத்திகானில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. "தெரேசா புனிதர், அரிஸ்தீத் துரோகி." இது தான் வத்திகானின் (அ)நீதி.

அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில், அரிஸ்தீத் மக்கள் ஆதரவுடன் வென்றதால் அமெரிக்கா வேறு வழியின்றி ஆதரவளிக்க வேண்டியிருந்தது. என்பது வீதமான மக்கள் அரிஸ்தீத் பக்கம் நின்றனர். ஆயினும் அரிஸ்தீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், வாக்களித்த சோஷலிசத்தை கொண்டு வர முடியவில்லை. அதனால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றன. அதன் பின்னணியில் அமெரிக்க்க அரசு இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கூட ஹைத்தியை ஆக்கிரமித்த அமெரிக்க படைகள், இனிமேல் திரும்பி வராதபடிக்கு அரிஸ்தீட்டை தென் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தின. அரிஸ்தீத் ஆட்சி செய்த காலத்திலும், அமெரிக்கா, ஐ.எம்.எப்., உலகவங்கி என்பன கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தன. தமது நிபந்தனைகளுக்கு உட்படா விட்டால் கடன் தர மாட்டோம் என பயமுறுத்தின.

கடன் வழங்கும் நிறுவனங்களின் பொருளாதார சீர்திருத்தங்கள், சில நேரம் சிறுபிள்ளைத் தனமாக இருக்கும். உதாரணத்திற்கு சில. தேசிய தொலைத்தொடர்பு சேவையை தனியார்மயப்படுத்துமாறு கூறினார்கள். ஹைத்தியில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே தொலைபேசி பாவனையாளர்கள். லாபம் தராத தொழிற்துறையை தனியாரிடம் ஒப்படைத்ததால் யாருக்கும் பிரயோசனமில்லாமல் போனது. அதே போலத் தான் பொதுக்கல்வி. கல்விக்கு அரசு மிக மிகக் குறைந்த நிதி மட்டுமே ஒதுக்க வேண்டுமென்பது ஐ.எம்.எப். உத்தரவு. இதனால் பாடசாலைகள் எல்லாம் தனியார்வசம் உள்ளன. பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கிறார்கள். ஏழைகளின் பிள்ளைகள் படிப்புச் செலவை ஏற்க முடியாமல் வேலைக்கு போகின்றனர். ஏற்கனவே 90% வீதமான ஹைத்தியர்கள் கல்வியறிவற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டு கிராமங்களில் வீட்டுக்கொரு ஆடு வளர்ப்பது போல, ஹைத்தியில் பன்றி வளர்ப்பார்கள். ஐநூறு வருடங்களுக்கு முன்னர் காலனிய ஐரோப்பியர் கொண்டு வந்த பன்றிகள் ஹைத்தி சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொண்டவை. அண்மையில் ஒரு தடவை பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் பரவிய பொழுது, ஐ.எம்.எப். உத்தரவுப்படி ஹைத்தி பன்றிகள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதற்கு நஷ்டஈடாக அமெரிக்கா வழங்கிய பன்றிகள், ஹைத்தி காலநிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து விட்டன. ஏழைக் குடும்பங்களுக்கு கஷ்டப்படும் நேரத்தில் உணவளித்து வந்த பன்றிகள் இல்லாததால் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹைத்தியில் ஒவ்வொரு தடவையும் புதிய அரசாங்கம் பதவியில் அமரும் பொழுது, அமெரிக்கா அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும். ஹைத்தியின் வறுமையை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்படும். ஹைத்தியில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பது மட்டுமல்ல, நிகர லாபத்தை அப்படியே அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முடியும். Raynolds என்ற நிறுவனம் அலுமினியத்தின் மூலப்பொருளான பொக்ஸ்சீட் அகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூட்டை கட்டி விட்டது. என்பதுகளிலேயே ஹைத்தியின் கனிம வளங்கள் யாவும் ஓட்ட உறிஞ்சப்பட்டு விட்டன. இப்போது வீடு கட்ட கல்லும், மண்ணும் மட்டுமே மிச்சமிருக்கின்றன. உலகமயமாக்கல் காலத்தில் ஆடை ஏற்றுமதி தொழிற்துறை வந்தது. அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து ஹைத்தியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஹைத்தியின் "ஒரு டாலர் தொழிலாளரின்" உழைப்பை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை அமெரிக்காவில் வால் மார்ட் போன்ற அங்காடிகள் விற்பனை செய்தன. வால்ட் டிஸ்னி, க்மார்ட் போன்றன ஹைத்தியின் உழைப்பை உறிஞ்சும் பிரபல நிறுவனங்கள். தொழிலாளர்களின் நாளாந்த கூலியை இரண்டு டாலராக உயர்த்துவதற்கு அரிஸ்தீத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இடதுசாரி அமைப்புகள் மட்டுமே அவர்களின் உரிமைக்காக போராடின.

ஹைத்தியின் பொருளாதார பின்னடைவுக்கு, அந்நாடு வெளிநாட்டு உதவியில் தங்கியிருப்பதும் முக்கிய காரணம். ஹைத்தி எப்போதும் ஒன்றில் இயற்கை அழிவால் பாதிக்கப்படும் அல்லது சர்வாதிகாரிகளின் செயற்கை அழிவால் அல்லல் படும். இதனால் மில்லியன் கணக்கான மக்கள், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களில் தங்கியுள்ளனர். தொண்டு நிறுவனங்கள் மலிவான அமெரிக்க கோதுமையை உதவி என்ற பெயரில் கொண்டு வந்து கொட்டுகின்றன. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஹைத்திக்கு அமெரிக்கா வழங்கும் கடனால் அமெரிக்கர்களே நன்மையடைகின்றனர். ஆனால் முழு கடன் தொகையையும் வட்டியுடன் ஹைத்தி அரசு கறாராக திருப்பிச் செலுத்த வேண்டும். அமெரிக்க அரசு ஒரு டாலர் கொடுத்தால், அதில் ௦0.85 டாலர்சதம் தொண்டு நிறுவன ஊழியர்களின் ஊதியமாகவோ, அல்லது வேறு செலவினமாகவோ அமெரிக்காவுக்கே திரும்பி வருகின்றது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாருமல்ல. அமெரிக்க அரச சார்பு தொண்டு நிறுவனமான USAID !

**********************************
தொடரின் முன்னைய பதிவுகள்:

1.
இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா
2.அமெரிக்காவின் புராதன பொதுவுடைமை சமுதாயம்
3.பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்
4.அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்

1 comment:

naren said...

ஊடகங்களிள் ஹைத்திப் பற்றி வந்த செய்திகளால், அந்நாட்கு மக்கள் காட்டுமிராண்டிகளாகவும், அடிப்படை மூளை இல்லாதவர்களாகவும், தோற்றுப் போன ஒரு நாடுகாவும், மனதில் ஒரு பிம்பம் உருவானது.

ஆனால் இந்த பதிவை படித்தப்பிறகு அந்நாடு மற்றும் மக்கள் எவ்வள்வு பாரம்பிரியதிற்கு உரியவர்கள் என்பதை உணரமுடியும்.

அடிமைகள் அதுவும் கருப்பின மக்கள் 1804 ஆம் ஆண்டே விடுதலைப் பெற்றனர் என்பதை, இந்த தலைமுறையினர் யாரும் நம்ப தயாராக இல்லை.

அறிய செய்தி,,,,நன்றி.