Thursday, May 07, 2009

வங்கத்தில் மையங்கொள்ளும் அரசியல் புயல்


பங்களாதேஷ்: முன்னர் கிழக்குப் பாகிஸ்தான், பின்னர் சுதந்திர பங்களாதேஷ். இப்போது நாம் காணும் வங்காளதேசம் முன்னர் எப்போதும் தற்போதைய எல்லைகளுடன் சுதந்திர நாடாக இருந்ததில்லை. பண்டையகால வரலாற்றின்படி பௌத்த வங்காளமாக, அசோகச் சக்கரவர்த்தியின் மௌரியச் சாம்ராஜ்ஜியமாக இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், தற்கால எல்லைகள், எழுபதுகளில் ஏற்பட்ட இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்டன என்பதும் மறுக்கவியலாத உண்மை. இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்ட புதிய வங்காளம் பற்றி தற்போது புதிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. முப்பது வருடங்களுக்கு முந்தைய இரகசிய பிரித்தானிய ஆவணங்கள் இந்தப் புதிய தகவல்களைத் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி வங்க தேசத்தில்தான் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டின் இறுதியில், கல்கத்தாவிலிருந்து தமது காலனிய ஆட்சியைத் தொடங்கிய பிரிட்டிஷார், அங்கு ஏற்பட்ட இந்து முஸ்லீம் கலவரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். இதன் விளைவுதான் பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களின் தோற்றம்.

இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் மறு மூலையிலிருந்த வங்க தேசத்தைக் கிழக்குப் பாகிஸ்தான் என அழைத்தது. உருது (ஹிந்தி) மொழியைத் தேசிய மொழியாக்கிய போதுதான் வந்தது பிரச்சினை. கிழக்குப் பாகிஸ்தானில் யாரும் இம்மொழியைப் பேசுவதில்லை. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட மாணவர் கிளர்ச்சியை பாகிஸ்தானிய இராணுவம் வன்முறையைப் பிரயோகித்து அடக்கியது. தொடர்ந்து இனத்தால், மொழியால் வேறுபட்ட (மேற்குப்) பாகிஸ்தானிய இராணுவம் கட்டற்ற அடக்குமுறையை ஏவிவிட்டது. வங்காளப் புத்திஜீவிகள், இந்துக்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனர். பெருமளவில் பெண்கள் பாலியற் பலாத்காரத்திற்குட்பட்டனர். இதுகூட வங்கத்தில் இனவிகிதாசாரத்தை மாற்ற முனைந்த செயலா எனச் சந்தேகிக்கப்பட்டது.

பெருமளவு அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும் , "முக்தி வாஹினி" (விடுதலைப் போராளிகள்) கெரில்லாப் போராளிகளுக்கு இந்திய அரசு ஆயுதப்பயிற்சியளித்து அனுப்பியதும் நிலைமையை மோசமாக்கியது. இதற்கிடையே தனிநாட்டுப் பிரிவினை கோரிய முஜிபுர் ரஹ்மானின் கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றமை, அந்நாட்டு மக்களின் தேசிய உணர்வை வெளிக்காட்டியது. இறுதியில் இந்திய இராணுவம் படையெடுத்துப் பாகிஸ்தானிய இராணுவத்துடன் சண்டையிட்டு பங்களாதேஷ் என்ற தேசத்தை உருவாக்கியது. இதன்போது நடந்த ஒரு சுவையான சம்பவம் போரின் முடிவாகக் கூறப்படுகிறது. கிழக்குப் பாகிஸ்தானில் பல இடங்களைக் கைப்பற்றிய இந்தியப் படையின் கொமாண்டர் தன்னோடு ஒரே பாடசாலையில் கல்விகற்ற பாகிஸ்தானிய கொமாண்டரிடம் அறிவித்ததாவது: "விளையாட்டு முடிந்துவிட்டது. உனது ஆட்களைச் சரணடையச் சொல்" .

அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கைகள், வங்கதேச விடுதலைக்கு அன்றைய சர்வதேச அரசியல் நிலைகளும் காரணம் எனக்கூறுகின்றன. பிரிட்டனுக்கு விஜயம் செய்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் சீனாவுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டதாலும், அமெரிக்கா சீனாவுடன் ராஜதந்திர உறவை ஏற்படுத்தியதாலும்தான் தான் சோவியத் யூனியனுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அன்று பாகிஸ்தானை ஆட்சி செய்த இராணுவத் தளபதி யாஹியா கான் கூட பிரிட்டிஷாரின் ஆதரவைத் தேடியுள்ளார். கிழக்குப் பாகிஸ்தான் எல்லையருகில் இந்தியா படைகளைக் குவித்தமை மோதல் நிலையைத் தோற்றுவித்ததாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கா அப்போது ஏற்பட்ட பதட்ட நிலையையிட்டு கவலையடைந்தது. இந்தியா வங்கதேச விடுதலையுடன் நிற்காது (மேற்கு) பாகிஸ்தான் மீதும் படையெடுத்துக் குழப்பத்தையுருவாக்குமென எதிர்பார்த்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் சோவியத் யூனியனுடன் தொடர்பு கொண்டு இந்தியா அவ்வாறு செய்யாதவாறு பார்த்துக் கொண்டனர். ஆயினும் நிலைமை கட்டுமீறிப் போகுமானால் நடவடிக்கை எடுக்க அமெரிக்கக் கடற்படை வங்காள விரிகுடாவிற்கு அனுப்பப்பட்டது (பாகிஸ்தான் இராணுவத்தை வெளியேற்றும் சாட்டில்). இருப்பினும் பங்களாதேஷ் சுதந்திர நாடாகியதுடன் பிரச்சினை தீர்ந்தது.

வங்காளிகள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தபோதும் மொழிப்பிரச்சினையின் அடிப்படையில்தான் பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஈரான் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த முஸ்லீம்களின் படையெடுப்புகளின் பின்னர்தான் பல இந்தியர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். இருப்பினும் பாகிஸ்தானில் மதம் மாறிய உயர்சாதி இந்துக்களைப் போலல்லாது, பங்களாதேஷில் விவசாயிகளாகவிருந்த தலித் இந்துக்கள் முஸ்லீம்களாக மாறியமை குறிப்பிடத்தக்கது. புராதன இந்து மதமெனச் சொல்லக்கூடிய காளி, விஷ்ணு வழிபாட்டைப்பேணிய வங்காளிகள், (அசோகனின்) மௌரியர் காலத்தில் பௌத்தர்களாகவும், கடைசியில் முஸ்லீம்களாகவும் மாறியமை தனியான வரலாறு. இந்து வங்காளிகள் இந்தியாவின் ஒரு மாநிலமான மேற்கு வங்காளத்தில் வாழ்கின்றனர்.

சந்தேகத்திற்கிடமின்றி பங்களாதேஷ் மொழிவாரியான தேசியவாதிகளால்தான் உருவானது. இருப்பினும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் "தூய்மையான நாட்டிற்கு" (பாகிஸ்தான் எனும் பதத்தின் மொழிபெயர்ப்பு) எதிரான போராட்டம் இஸ்லாமிற்கு எதிரான போராட்டமாகக் கருதப்பட்டது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அன்று பாகிஸ்தானிய இராணுவத்துடன் ஒத்துழைத்தனர். இரத்தம் சிந்திப் போராடியதன் காரணமாக வங்காள தேசியவாதிகாக வாழும் பெரும்பான்மை பங்களாதேஷ் மக்கள் சுதந்திரப் போக்குடைய முஸ்லீம்களாகவே இன்றுவரையிருந்து வருகின்றனர். இதனால் மதவாத ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி (பாகிஸ்தானியக் கட்சியின் கிளை) அதிக ஆதரவாளர்களைத் திரட்டமுடியாமல் போனது. பங்களாதேஷ் உலகின் வறுமையான நாடுகளில் ஒன்று. ஏழைகளான பெரும்பான்மையான வங்காளிகள் மத்தியில் மாவோயிஸ்ட்டுகள் (அண்டைய இந்திய வங்காள மாநில நக்ஸலைட்டுகளின் போராட்டத்தால் உந்தப்பட்டவர்கள்) கடந்த காலத்தில் உருவானார்கள். இருப்பினும், அரச அடக்குமுறைகாரணமாக பெருமளவு உறுப்பினர்கள் கைது செய்யப்பட, மாவோயிஸ்ட்டுகள் தமது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டனர்.

இன்றைய மாறிவரும் சர்வதேச அரசியற் சூழ்நிலை பங்களாதேஷிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கெதிரான போர் பொதுவாக முஸ்லீம்களுக் கெதிரானதெனக் கருதப்படுவதால், ஜமாத்-ஏ-இஸ்லாமி போன்ற மத அடிப்படைவாதக் கட்சிகள் தமது ஆதரவுத் தளத்தை அதிகரித்துவருகின்றன. இந்தக் கட்சி கடந்த காலத்தில் பல வங்காளத் தொண்டர்களைத்திரட்டி ஆப்கானிஸ்தானில் தலிபானிடம் இராணுவப் பயிற்சி பெற அனுப்பியதாகவும், அவ்வாறு சென்ற போராளிகளுக்கு ஆளுக்கு 525 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்தவரை இந்தக் கட்சி பின்லாடனின் அல்-கைதாவுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் சென்ற சி.என்.என் நிருபர்கள் தேடி எடுத்த வீடியோப் பிரதிகளில் ஒன்று பங்களாதேஷில் ஆயுதப் பயிற்சிபெறும் பர்மிய விடுதலை இயக்கமொன்றைப் பற்றியிருந்தது. பர்மாவில் பங்களாதேஷ் எல்லையோர மாநிலமான ராகினில் வாழும் ரொஹிங்கியா முஸ்லீம்கள் தனிநாடு கோரிப்போராடி வருகின்றனர். இந்த ரொஹிங்கியா முஸ்லீம்கள் இனத்தால் மொழியால் வங்காளிகள். பர்மிய அரசின் அடக்குமறை காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகள் பங்களாதேஷினுள் தஞ்சம் புகுந்திருந்தனர். இந்த நாடற்ற மக்கள் மத்தியலிருந்து இஸ்லாமியத் தீவிரவாதக் கட்சிகள் ஆட்களைத்திரட்டி வருகின்றனர். கடந்த வருடம் பங்களாதேஷினுள் ஒரு இரகசியத் தளத்தில் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளின் மகாநாடு இடம்பெற்றது. தமது செயற்பாடுகளின் ஆரம்பக் கட்டமாக அயல்நாட்டு விடுதலை இயக்கங்களான ரொஹிங்கியா ஒருங்கிணைப்புக்குழு(பர்மா) அஸாமிய முஸ்லீம் விடுதலைப் புலிகள்( இந்தியா) ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இரகசியப் பயிற்சி முகாங்களில் முன்னாள் ஆப்கானிஸ்தான் போராளிகள் புதிய உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர்.

இந்திய எல்லைப் பாதுகாவற்படை அதிகாரிகள் பங்களாதேஷ் எல்லைப் பாதுகாவற்படை அதிகாரிகளைச் சந்தித்து கிழக்கு இந்திய மாநிலங்களில் தனிநாட்டுப் பிரிவினை கோரும் விடுதலை இயக்கங்களின் 99 பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும் அவற்றை அகற்றும்படியும் கோரியுள்ளனர். திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, நாகலாந்து சோஸலிசக் குழு, அஸாமிய விடுதலை முன்னணி, ஆகியன பங்களாதேஷினுள் தளமமைத்துள்ள குறிப்பிடத்தக்க இயக்கங்கள். பங்களாதேஷ் அரசு அப்படியெதுவும் தமது நாட்டினுள் இல்லையென மறுத்து வருகின்றது. அங்கே தற்போது ஆட்சியில் இருக்கும் பங்களாதேஷ் தேசியக் கட்சி இஸ்லாமியத் தேசியவாதிகளுடனும் சோஷலிச ஜனநாயகவாதிகளுடனும் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்துள்ளதாகவும், அவர்கள் தமக்குப் பாதகமற்ற தீவிரவாதக் குழுக்களைப் பொறுத்து வருவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும், இந்திய அரசின் நெருக்குதல் காரணமாக எடுக்கப்பட்ட "குற்றத் தடுப்பு நடவடிக்கை" (கவனிக்கவும்: பயங்கரவாத எதிர்ப்பு என்ற பதம் பாவிக்கப்படவில்லை) யின்போது 3000 பேர் கைதுசெய்யப்பட்டு, 500 ற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பங்களாதேஷின் துறைமுகப்பட்டணமான கோக்ஸ் பஸார் தெற்கு ஆசியாவினுள் ஆயுதம் கடத்தப் பயன்படும் பிரதான மையமாக இருக்கின்றது. எண்பதுகளில் கம்போடியப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தற்போது தாய்லாந்து எல்லையிலுள்ள கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. அங்கு வாங்கப்படும் ஆயுதங்கள் கப்பல் மூலமாக கோக்ஸ் பஸாரை வந்தடைவதாக இந்தியப் புலனாய்வறிக்கை தெரிவிக்கின்றது. கிழக்கு இந்திய மாநில விடுதலையியக்கங்களிடம் RPG , AK-47 போன்ற நவீன ஆயுதங்கள் காணப்படுகின்றமை இந்திய அரசிற்குப் புதிய கவலையைத் தோற்றுவித்துள்ளது

6 comments:

அட்பொக்ஸ் said...

தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை பார்வையிடும் ஒரு வாசகன், பல பயனுள்ள, என்னைபோன்ற பலர் அறிந்திருக்கவே இல்லாத விடயங்களை தந்து வருகிறீர்கள், வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி.
எனது தளத்தில் உங்களது பதிவுகளிக்கான blogger ற்க்கான இணைப்பை வழங்க விரும்புகிறேன், அனும்திப்பீர்களா..?

Unknown said...

இந்திரா காந்தியைப் பற்றி எமர்ஜென்சி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் பங்களாதேஷ் பிரிவினையை தனது அரசியல் ஆதாயத்திற்காக(அகதிகளை ஓட்டு வங்கிகளாக)பயன்படுத்தியதாக படித்திருக்கிறேன்.

எல்லா காலங்களிலும் அகதிகள் பிரச்சனை இப்படித்தான் பயன்படுத்தப் படுகின்றன போலும்.

நல்ல பதிவு நண்பரே.

Kalaiyarasan said...

பாராட்டுதலுக்கு நன்றி அட்பொக்ஸ். நீங்கள் தாராளமாக எனது பதிவுகளுக்கான சுட்டிகளை இணைத்துக் கொள்ளலாம். எனது தளத்தையும், பெயரையும் குறிப்பிடும் வரையில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

Kalaiyarasan said...

கிருஷ்ண பிரபு, தொடர்ச்சியாக பின்னூட்டமளித்து ஊக்குவிப்பதற்கு நன்றி. நீங்கள் நினைப்பது சரியே. பங்களாதேஷ் பிரிவினையை அந்த நாட்டு மக்களின் நன்மை கருதி செய்யவில்லை. இந்தியாவின் சொந்த நலன்கள் அதிகம் இருந்துள்ளன.

Anonymous said...

பங்களா தேஷ் அன்று உருவாகும் சூழலை ஏற்படுத்தியது யார்.பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும்,
பாகிஸ்தானின் ராணுவமும் எப்படி நடந்து கொண்டன. அதையெல்லாம்
யோசிக்காமல் இந்தியாவை திட்டுவதால் இந்திய விரோதிகளுக்கு
கலையகம் பிடித்திருக்கிறது.

Kalaiyarasan said...

அனானி அவர்களே! வங்காளத்தில் பாகிஸ்தான் செய்த அக்கிரமங்களை இங்கே யாரும் அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் இந்தியா செய்த கொடுமைகளையும் மன்னிக்க முடியாது. பங்களாதேஷ் பிரிந்த பின்னர், இந்தியா தனக்கு சார்பானவர்களை மட்டுமே ஆட்சியில் அமர்த்த விரும்பியது. இதற்காக தன்னலமற்ற வங்காள தேசியவாதிகள் பலர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர், என்ற வரலாற்றையும் மறக்கமுடியாது.