Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, July 06, 2013

காதலுக்கு மரியாதையில்லை! சாதியம் இன்னும் சாகவில்லை!


தமிழ் சமூகத்தில், உண்மையான காதல் சினிமாவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் அது சாதிய கட்டுமானங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது. சாதி கடந்த காதல், பல போராட்டங்களுக்கு பின்னரே நிலைத்து நிற்கின்றது. பாமக கட்சியினரின் ஆதிக்க சாதிவெறிக்கு பலியான, தலித் இளைஞன் இளவரசனின் தற்கொலை/கொலை, அந்தப் போராட்டத்தில் ஒரு மைல் கல். அது வெறும் காதல் கதையின் சோக முடிவு அல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் நிகழ்ந்த திருப்புமுனை. முத்துக்குமார், செங்கொடியின் மரணங்கள் போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனச் சாட்சியை உலுக்கிய தியாக மரணம். 

இன்றைக்கும், தமிழர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலிக்கும் பொழுதே, சாதி பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும், சாதிப் பாகுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன். 

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. "தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது", என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.

ஈழத்தில் சாதியத்தை ஒழித்ததில் புலிகளின் பங்களிப்பை மறுக்க முடியுமா?

சாதியக் கட்டமைப்பின் அடக்குமுறை வடிவமான தீண்டாமை ஒழிப்பையே, பலரும் சாதிய ஒழிப்பு என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். புலிகள் தோன்றுவதற்கு முன்னரே, கம்யூனிஸ்டுகளின்  போராட்டத்தால், சாதித் தீண்டாமை ஒழிந்து விட்டது. அறுபதுகளில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றன, இரட்டைக் குவளை முறையை எதிர்த்தும், கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியும் தீண்டாமையை பெருமளவு ஒழித்து விட்டனர். சில இடங்களில் அது ஆயுத மோதலாகவும் பரிணமித்தது. இவை எல்லாம் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு நடந்தவை. 

புலிகளின் ஆட்சிக் காலத்தில், "ஒரு கிலோ பச்சை மிளகாய் கடிக்க வைப்பது, பனை மட்டையால் அடிப்பது" போன்ற மென்மையான தண்டனைகளே, சாதி வெறியர்களுக்கு கொடுத்தனர். அறுபதுகளில் சாதிப் படுகொலைகள் புரிந்த குற்றவாளிகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்திருந்த போதிலும், அவர்கள் யாருக்கும் எந்த விதமான தண்டனையும் நிறைவேற்றப் படவில்லை.

பொது இடங்களில் வெளிப்படையாக சாதிப் பெயர் சொல்லி திட்டுவதை புலிகள் தடை செய்திருந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர், உயர்சாதியினர் வீடுகளில் குடிமைத் தொழில் செய்வதும் தடுக்கப் பட்டது. இந்த தடைகள், வெளிப்பார்வைக்கு சமூக மாற்றத்திற்கானதாக தோன்றின.  உண்மையில், புலிகளுக்கு தாழ்த்தப் பட்ட சாதியினரின் நம்பிக்கையைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், அவர்கள் தான் அதிகளவில் போராளியாக இணைந்து கொள்ள முன்வந்தனர். அதற்கு போர்க்குணாம்சம், இழப்பதற்கு எதுவுமில்லாத தன்மை, வறுமை, வாய்ப்புகள் குறைவு போன்ற பல காரணங்களை கூறலாம். 

அதே நேரம், ஆதிக்க சாதிகளை சேர்ந்த, வசதியான வீட்டுப் பிள்ளைகள், படிப்பில் கவனம் செலுத்தினர் அல்லது பரம்பரை சொத்துக்களை, குடும்ப வியாபாரத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆதிக்க சாதியினரின் பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றனர், அல்லது வெளிநாடு சென்று அங்கு குடியேறி விட்டனர். வெளிநாடு சென்றவர்களை பகைக்க முடியவில்லை. இயக்கத்திற்கும், போர்ச் செலவினத்திற்கும் அவர்களது நிதி பெரிதும் தேவைப் பட்டது.                        

பல்கலைக்கழகம் சென்றவர்களையும் பகைக்க முடியாது. அவர்கள் தான் இன்றைக்கும், தமிழ் தேசிய அறிவுஜீவிகளாக வலம் வருகின்றனர். அவர்களில் சிலர், கொழும்பில் சிங்கள அரசுக்கு தமது மூளை உழைப்பை விற்றுக் கொண்டே, தமிழீழத்தின் அவசியம் குறித்து விரிவுரை ஆற்றுகின்றனர்.         இப்படியான ஏற்றத் தாழ்வான சமூகத்தை நம்பி, ஈழப் போராட்டம் நடத்த முடியுமா? ஆகவே, சாதிய ஒழிப்பை விட, சாதி சமரசமே புலிகளுக்கு முக்கியமாக தேவைப் பட்டது.