Tuesday, April 27, 2021

தடுப்பூசி வணிகம் திருட்டு முதலாளித்துவம்

 - கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆரம்ப கால கட்டத்தில், கண்டுபிடித்த பின்னர் அது பொதுச் சொத்து ஆக்கப்பட வேண்டும் என பல உலக நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒரே குரலில் சொன்னார்கள்.

- பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தமது அறிவுச் செல்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்தார்கள். - ஆனால் எல்லோரும் வக்சீன் ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்ட ஒரு நிபந்தனையை காணத் தவறிவிட்டார்கள்.

- ஆராய்ச்சிக்கு நிதி வழங்குவது தொடர்பாக அரசுக்களுக்கும், மருந்துக் கம்பனிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தம் அது.

- அதில் எந்த இடத்திலும் பேட்டன்ட் உரிமையை அல்லது தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுதப்படவில்லை.

- பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு திட்டமானது, ஒரு கட்டத்தில் திடீரென சில வணிக நிறுவனங்களுக்கு சொந்தமான வணிகப் பொருளாக மாறியது. அது எப்படி சாத்தியமாகிற்று?

- பெரும் தொற்று ஒன்றை அணைகட்டி தடுக்கும் நோக்கில் அரசமைப்பு சட்டம் வழங்கிய மனித உரிமைகள் குறைக்கப் பட்டன. பல கோடிக் கணக்கான மனிதர்களின் இயக்கம் இடைநிறுத்தப் பட்டது. ஆனால் வணிக நிறுவனங்கள் இலாபம் சம்பாதிப்பது மட்டும் எல்லையற்று தொடர்ந்தது.

வக்சீன் தயாரிப்பதற்கான திட்டத்தில் பொது மக்களின் பணத்தை முதலிடும் அரசுகள், அது குறித்து நிபந்தனைகள் போட்டிருக்க வேண்டும். செய்யவில்லை!

வக்சீன் உற்பத்தியாளர்கள் தமது அறிவுடைமையையும், தொழில்நுட்பத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும்.

-ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு உள்ளது. ஆனால் அதை அன்பான வேண்டுகோளாக மட்டும் எழுதி இருக்கிறார்கள்.

"தயவுசெய்து நட்பு அடிப்படையில் வக்சீனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..." -இது ஒரு உத்தரவாக இருந்திருக்க வேண்டும். இப்படி கெஞ்சிக் கொண்டிருக்க கூடாது.

- வக்சீன் அறிவுடைமையை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் ஒரு பொதுத் தளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

- ஆனால் இன்று வரையில் எந்தவொரு மருந்துக் கம்பனியும் வக்சீன் தொடர்பான தமது அறிவுடைமையை அந்தப் பொதுத் தளத்தில் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை!

- ஏன் அரசுகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை?

- வக்சீன் தயாரிப்பு செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கலாம் என்றால், ஏன் அதை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து கொள்ளக் கூடாது?

- அரசுகள் பிற்காலத்தில் வரப்போகும் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், எடுத்த உடனே ஏராளமான பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்தளவு தவறு என்பதை இப்போது உணர்கிறார்கள். காலங் கடந்த ஞானம்.

- பெருந்தொற்று எல்லா இடங்களிலும் பரவப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதனால் அரசுகள் சிறந்த முறையில் தயார்படுத்தி இருக்க வேண்டும். எந்தளவு தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். எப்படி, எந்த நிபந்தனையின் கீழ் நிதி வழங்க வேண்டும் என்ற தெளிவு இருந்திருக்க வேண்டும். அது எதுவும் இல்லாமல் பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

- அதனால் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மத இறுதிப் பகுதியிலும் உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் கொடுப்பதற்கு எந்தளவு வக்சீன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

- ஏற்கனவே சில மருந்துக் கம்பனிகள் தம்மிடம் தொழிநுட்ப அறிவைக் கொடுத்தால் மேலதிக வக்சீன்கள் உற்பத்தி செய்து தருவதற்கு சம்ம்மதித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மேற்கத்திய மருந்துக் கம்பனிகள் தமது அறிவுடைமையை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன. சிலர் இதை மருந்து மாபியா என்று சொல்கிறார்கள்.

- உலக மக்கள் அனைவருக்கும் மிக விரைவாக தடுப்பூசி போடுவதைக் காட்டிலும், இலாபம் சம்பாதிப்பது மாத்திரம் இந்த மருந்து நிறுவங்களுக்கு முக்கியமாகப் படுகின்றது.

பெருமளவு நிதியை முதலிடாமல் எந்தவொரு கண்டுபிடிப்பும் வெளியில் வருவதில்லை. இதனை இரண்டு வழிகளில் செய்யலாம்:

- நாம் எல்லோரும் ஒரு பெரிய விலை கொடுக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது உலகில் ஒரு குறிப்பிட்ட மருந்துக் கம்பனியின் ஏகபோக அதிகாரத்திற்கு வழிசமைத்து விடும்.

- இதற்கு மாற்று வழி என்ன? கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளில் முதலிடும் அரசு, அதற்குப் பின்னரான உற்பத்தி, விற்பனை, விநியோகத்தையும் தானே கட்டுப்படுத்த வேண்டும். இதைத் தான் ரஷ்ய, சீன, கியூப, வியட்நாமிய அரசுகள் செய்துள்ளன. அந்நாட்டு அரசுகள் பெருமளவு நிதியை செலவிட்ட அளவுக்கு, பெருந்தொகையிலான வக்சீன்கள் தயாரிக்கப் படுகின்றன.

பிற்குறிப்பு: இது யூடியூப் வீடியோவாக பதிவேற்றப் பட்டுள்ளது:

 

No comments: