Saturday, January 04, 2020

நாஸிகளின் "கிரிமினல் படைப்பிரிவு"!


பொதுவாக நாஸிகள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் தான். ஆனால், நாஸிகளின் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு கிரிமினல்களின் படைப்பிரிவு இயங்கியது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், நாஸிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த கிரிமினல்களின் படைப்பிரிவு பெரிதும் உதவியது.

இந்த துணைப்படையின் தலைவர் Diriewanger இன் பெயரால் அந்தக் குழு அழைக்கப் பட்டது. நாசிகளே கண்டு முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் குழுவினரின் கொடூரங்கள் அமைந்திருந்தன. சாதாரண கிரிமினல்களான கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், மற்றும் மனநோயாளிகள் போன்றவர்களே இந்தப் படைப்பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தனர். இந்தக் குற்றங்களுக்காக சிறைத்தண்டனைஅனுபவித்தவர்கள் மன்னிப்பு வழங்கப் பட்டு துணைப்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

இதன் தளபதி Diriewanger கூட ஒரு கிரிமினல் குற்றவாளி தான். தென் ஜெர்மனியில் Wuersburg எனும் இடத்தில் பிறந்த தீவிர வலதுசாரியான Diriewanger ஒரு பேராசியராக பணியாற்றியவன். முதலாம் உலப்போர் முடிந்த காலத்தில் எழுந்த கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய Freikorps இயக்கத்தில் இருந்தவன். அவன் 1922 ம் ஆண்டே நாஸிக் கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருந்த பொழுதிலும், ஒரு 13 வயது சிறுமியை சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றச்சாட்டில் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தான். பிற்காலத்தில் நாஸிகளின் SS படையில் ஒரு இராணுவ ஜெனரல் நண்பராக இருந்த காரணத்தால், ஹிட்லரின் வலதுகரமாக இருந்த அமைச்சர் ஹிம்லரின் செல்வாக்கில் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் நாஸிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்ட போலந்தின் பகுதிகளில் Diriewanger தலைமையிலான கிரிமினல்களின் துணைப்படை உருவாக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் கெட்டோ எனும் தனியான பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தனர். (அதற்குள் மட்டும் யூதர்கள் தாம் விரும்பிய படி வாழ அனுமதிக்கப் பட்டது.) கெட்டோவுக்குள் நுழைந்த Diriewanger கொலைப்படையினர், யூதர்களின் மதச் சம்பிரதாயமான கோஷர் முறையில் இறைச்சி தயாரிக்கும் (முஸ்லிம்கள் இதனை ஹலால் என்பார்கள்) முறையை சாட்டாக வைத்து பல யூதர்களை பிடித்துச் சென்று துன்புறுத்தினார்கள். பின்னர் பெருமளவு கப்பப் பணம் வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் Diriewanger குழுவினரின் கொடூரச் செயல்கள் நாசிகளையே முகம் சுழிக்க வைத்தன. ஒரு தடவை, யூதப் பெண்களை பிடித்துச் சென்று நஞ்சூட்டிக் கொல்லும் "பரிசோதனை" பற்றி ஹிட்லரிடமே முறைப்பாடு செய்யப் பட்டது. கெட்டோ குடியிருப்புகளில் பிடித்த யூதப் பெண்களுக்கு strychnine நஞ்சு செலுத்தி, அவர்கள் மெல்ல மெல்ல துடிதுடித்து இறப்பதை பார்த்து இரசிப்பார்கள். பின்னர் அவர்களது இறந்த உடல்களை துண்டு துண்டாக வெட்டி குதிரை இறைச்சியுடன் சேர்த்து சூப் தயாரித்து குடிப்பார்கள். ஹிட்லர் இது போன்ற கொடூரக் கதைகளை பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதிலும் Diriewanger குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு மென்மேலும் சுதந்திரம் வழங்கப் பட்டது.

நாஸிகள் ஆக்கிரமித்த வெள்ளை ரஷ்யாவில் கம்யூனிச கெரில்லாக்களை அடக்குவதற்கு Diriewanger துணைப்படை பெரிதும் உதவியது. எங்காவது ஒரு கிராமத்தில் கெரில்லாத் தாக்குதல் நடத்தினால், அந்தக் கிராமத்தையே அழிப்பதற்கு முதலில் Diriewanger படையினர் தான் அனுப்பப் பட்டனர். பெண்கள், குழந்தைகள் என்று எந்தப் பாகுபாடும் காட்டாமல் கொன்று குவித்தனர். ஆயிரக்கணக்கான கம்யூனிச கெரில்லாக்கள் உயிரோடு கொளுத்தப் பட்டனர். Diriewanger குழுவினரின் கொலைவெறியாட்டம் காரணமாக, அப்போது வெள்ளை ரஷ்யாவில் மட்டும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர்.

Diriewanger குழுவில் சாதாரண கிரிமினல்கள் சேர்க்கப் பட்டிருந்தாலும், அவர்களை மேலிடத்து உத்தரவுக்கு அடிபணிய வைப்பது சிரமமாக இருந்தது. அதனால் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டன. உத்தரவை மீறுவோர் சவப்பெட்டி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடைக்கப் பட்டனர். அதற்குள் நாட்கணக்காக நின்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த சித்திரவதையை அனுபவித்த ஒருவர், பெட்டி திறக்கப் பட்டதும் ஒரு நடைப்பிணமாக அல்லது கொலைவெறியுடன் பாயக் கூடியவராக இருப்பார். இந்தக் கிரிமினல் படைபிரிவு உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றுடன் வோட்கா குடிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அந்தப் போதையுடன் வெளியே செல்பவர்கள் குறைந்தது நான்கு பேரைக் கொன்று விட்டுத் தான் திரும்பி வருவார்கள்.

உலகப்போர் முடிந்த பின்னர், நேச நாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மனியில், Diriewanger வேறொரு பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இருப்பினும் எப்படியோ மோப்பம் பிடித்த பிரெஞ் படையினர் தென் ஜெர்மனியில் கைது செய்து விட்டனர். தம்மோடு சேர்ந்து போரிட்ட போலிஷ் படையினரிடம் அவனை ஒப்படைத்தனர். போலிஷ் படையினர் அவனை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவே அடித்துக் கொன்று விட்டனர். முன்பு நாஸிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து வார்சோ நகரை மீட்பதற்காக நடந்த விடுதலைப் போராட்டம் நசுக்கப் பட்ட காலத்தில் Diriewanger குழுவினர் நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு பழி தீர்த்துக் கொண்டனர்.


No comments: