Sunday, August 09, 2015

முதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை!


மிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் "கம்யூனிச அறிவு" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை ஆதரித்தாலும், முதலாளித்துவம் பற்றிய அரிச்சுவடி கூட படித்திருக்கவில்லை என்பது, அவர்களுடனான உரையாடலின் போது தெளிவாகின்றது.

உதாரணத்திற்கு சில:

 - மார்க்ஸ், எங்கெல்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விடயம். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, கெய்ன்ஸ் பற்றித் தெரியுமா?
"................" ???

- மூலதனம் என்ற நூல் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. "தேசங்களின் செல்வம்" என்ற நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? "................" ???

- ஸ்டாலின், மாவோ பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. குரொம்வெல், ரொபெஸ்பியர் பற்றி என்ன தெரியும்?
 ".................." ???

- ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உருவான சோஷலிச நாடுகளை உங்களுக்குத் தெரியும். நல்லது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உருவான லிபரல் நாடுகளை குறிப்பிட முடியுமா?
"..............." ???

- கம்யூனிசத்தால் கொல்லப் பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். அதே மாதிரி முதலாளித்துவம் கொன்ற மக்களைப் பற்றிய புள்ளி விபரம் கிடைக்குமா?
 "............." ???

இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. உண்மையில், முதலாளித்துவம் தான், காலாவதியாகிப் போன டைனோசர் காலத்து சமாச்சாரம். அதனால் தான் அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை. அதற்கு மாறாக கம்யூனிசம் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்திராதவர்கள் மிக மிகக் குறைவு. கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கூட அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹெர்பெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? முதலாளித்துவ ஆதரவாளர்களே! அவர் தான் உங்களது தத்துவ அறிஞர்! குருவையே மறக்கலாமா?

ஹெர்பெர்ட் ஸ்பென்சர், கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த லண்டன்வாசி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா என்பது தெரியாது. ஆனால், இருவரது சமாதிகளும், லண்டன் ஹைகேட் மயானத்தில் அருகருகே உள்ளன!

இதிலே முரண்நகை என்னவென்றால், இருவரும் வாழ்ந்த காலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்தனர். மார்க்ஸின் தத்துவம் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தது. பணக்காரர்களின் செல்வம் திரட்டலுக்கு எதிராக, ஏழைகளின் நல்வாழ்வை முன்நிறுத்தினார்.

அதற்கு மாறாக, ஸ்பென்சரின் தத்துவம், வலியது மட்டுமே பிழைக்கும் என்று ஒரு சிறு மேட்டுக்குடியினரின் முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டிருந்தது. இவரது வலியது பிழைக்கும் கொள்கை (உண்மையில் அது டார்வினுடையது அல்ல), இன்றளவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டிப் பேசப் படுகின்றது.

ஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் சமாதி, பிற்காலத்தில் மக்களின் பணத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. அதை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால், நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.

இன்றைக்கும் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மார்க்சின் சமாதியை காண வருகிறார்கள். சீனா, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள். ஆனால், "முதலாளித்துவ அறிஞர்" ஸ்பென்சரின் சமாதி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கே அவரது சமாதி இருப்பது யாருக்கும் தெரியாது. ஸ்பென்சரின் உறவினர்களாவது அங்கே வருவார்களா தெரியாது.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."