Tuesday, August 04, 2015

"இஸ்ரேலியர்கள் சுட்டு வீழ்த்திய இத்தாலி விமானம்!", மர்மம் துலங்குகிறது


மொசாட்டின் சர்வதேச பயங்கரவாதம், ஒரு இத்தாலி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு சென்றுள்ளது. 1980 ம் ஆண்டு (27 June 1980), இத்தாலியின் வடக்கில் உள்ள பொலோன்ஞோ நகரில் இருந்து, தெற்கில் உள்ள பாலேர்மோ நகரிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம், ஊஸ்திச்சா (Ustica) தீவுக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணம் செய்த, குழந்தைகள், பெண்கள் உட்பட எண்பது பயணிகள் மரணமடைந்தனர். அன்று அது ஒரு விபத்து என்று அறிவிக்கப் பட்டாலும், நடந்த சம்பவம் ஒரு மர்மமாக இருந்தது. அப்போதே அது சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம் என்று பல வதந்திகள் உலாவின. ஆனால், யாராலும் அதனை ஊர்ஜிதப் படுத்த முடிந்திருக்கவில்லை.

அண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள இத்தாலி அரச ஆவணங்களில் இருந்து உண்மை தெரிய வந்துள்ளது. அன்றைய இஸ்ரேலிய பிரதமர் மெனாகிம் பெகினின் நேரடி உத்தரவின் பேரில், மொசாட் செலுத்திய ஏவுகணை விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

மொசாட் ஒரு இத்தாலி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு என்ன காரணம்? அந்தக் காலத்தில், ஈராக்கில் சதாம் ஹுசைன் அணு உலை அமைக்கும் திட்டத்திற்கு, பிரான்சும், இத்தாலியும் இரகசியமாக உதவிக் கொண்டிருந்தன.

பிரான்சின் மார்செய் நகரில் இருந்து, அணு உலைக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு, பிரெஞ்சு விமானம் ஒன்று பாக்தாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அனேகமாக, அந்த விமானத்தை தான் இஸ்ரேலியர்கள் குறி வைத்திருந்தனர்.

ஆனால், இறுதி நேரத்தில், இத்தாலி அரசின் ஏற்பாட்டின் படி, பயணப் பாதை மாற்றப் பட்டது. வரப்போகும் ஆபத்தை அறியாமல் சென்று கொண்டிருந்த இத்தாலி பயணிகள் விமானம் ஏவுகணை தாக்குதலில் அகப்பட்டது.

பிரான்ஸ், இத்தாலி அரசுக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க அரசுக்கும், இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தது. எல்லோரும் சேர்ந்து, ஒன்றுமறியாத அப்பாவி பயணிகளான 81 இத்தாலி பிரஜைகளை பலி கொடுத்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்து, சரியாக ஒரு வருடத்தின் பின்னர், ஈராக் வான் பரப்பிற்குள் ஊடுருவிய இஸ்ரேலிய போர் விமானங்கள், அணு உலையை தாக்கி நிர்மூலமாக்கின. அதற்கு பிறகு ஈராக் அரசு அணு உலைத் திட்டத்தை தொடரவில்லை. 

இத்தாலியில் "ஊஸ்திச்சா படுகொலை" (Strage di Ustica) என்று அழைக்கப் பட்ட அந்த சம்பவம், எண்பதுகளில் பரபரப்பாக பேசப் பட்டது. "விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டதாக" அப்போது அறிவிக்கப் பட்டது. "பயணிகள் எல்லோரும் இறந்து விட்டிருப்பார்கள்" என்ற காரணத்தைக் கூறி, அரசு தேடுதல் நடவடிக்கைகளை தாமதப் படுத்தி இருந்தது. இது போன்ற கூற்றுக்கள், அது ஒரு சதியாக இருக்கலாம் என்று பேசப் பட காரணமாக இருந்துள்ளன. 

அண்மைக் காலமாக, சில விமானங்கள் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கிய சம்பவங்களுக்கு பின்னணியிலும் ஏதாவது சதி இருக்கலாம் என்பதை சந்தேகிப்பதற்கு இடமுண்டு.

ஏவுகணை தாக்குதல் பற்றிய கதைகள் அப்போதே அடிபடத் தொடங்கி விட்டன. அரசு மட்டத்தில் கூட அது பற்றி விவாதிக்கப் பட்டது. அண்மையில் 2013 ம் ஆண்டு, மீண்டும் அது குறித்து ஆராய்ந்து விட்டு "விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப் பட்டமை உறுதியாகின்றது" என்று சொன்னார்கள்.

இருப்பினும், உண்மையான குற்றவாளிகளையும், அணுவாயுத திட்டங்களையும் மறைப்பதற்காக, வேறு பல காரணங்களை சொன்னார்கள். சிலநேரம், அன்றைய லிபிய அதிபர் கடாபியை குறி வைத்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். பிரெஞ்சு கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் பரவலாக நம்பப் பட்டது. ஆனால், இதுவரையில் யாரையும் நேரடியாக குற்றஞ் சாட்டவில்லை.

ஐரோப்பாவில் மொசாட் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இத்தாலியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், மொசாட் காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப் பட்டது. மேலும், அன்றிருந்த தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு மொசாட் ஆயுத விநியோகம் செய்து வந்ததை, முன்னாள் உளவாளிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ஊஸ்திச்சா படுகொலையில் மொசாட்டின் பங்கு பற்றிய தகவல்கள், பின்வரும் இத்தாலி மொழி இணையத் தளத்தில் விரிவாக எழுதப் பட்டுள்ளன. அதில் பகிரங்கப் படுத்தப் பட்ட இத்தாலி அரச ஆவணங்களும் உள்ளன.

STRAGE DI USTICA: IL SEGRETO DI ITALIA, ISRAELE, FRANCIA; UNITED STATES OF AMERICA
http://sulatestagiannilannes.blogspot.it/2014/11/strage-di-ustica-il-segreto-di-italia.html?m=1