Saturday, February 15, 2025

யாழில் பெரியார் சிலை உடைப்போம்! வெள்ளாள- தாலிபான்கள் மிரட்டல்!!


ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஒரு சைவ மத அடிப்படைவாதியும், ஆதிக்க வெள்ளாள சாதிவெறியனுமான  ஆறுமுக நாவலனின் சிலை இருக்கலாம் என்றால், ஏன் சமூக நீதிப் போராளியான பெரியாருக்கு சிலை வைக்க முடியாது?

இவ்வளவு காலமும் தமிழ்த் தேசிய முகமூடிக்கு பின்னால் இருந்த வெள்ளாள ஆதிக்க சாதி வெறியர்கள் தற்போது தமது சுயரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

Well done. சாதி வெறி, இனவெறி, மதவெறி பிடித்தலையும் காகிதப் புலிகளின் முகத்திரை கிழிகிறது!

இதற்கு தான் ஈழத்திற்கு பெரியார் அவசியம்.

யாழ் நகரில் பெரியார் சிலை வைக்கப் போவதாக தகவல் வந்தவுடனே, புலித் தோல் போர்த்திய வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. 

"சிலை உடைக்கப் படும்!" என்று இந்த சாதி வெறியன் பிரான்சில் இருந்து கொண்டு மிரட்டுகிறான். பிரான்ஸ் போன்ற ஜனநாயக பண்பு கொண்ட நாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டு, தாலிபான், ISIS பாணியில் பெரியார் சிலையை தகர்க்க போவதாக மிரட்டும் அளவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் சாதிவெறி தலைவிரித்து ஆடுகிறது. இ‌ந்த சாதி வெறி ஓநாய்களை தான் "தீவிர தமிழ்த் தேசியவாதிகள்" என்று சிலர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

"பெரியார்களுக்கு எல்லாம் பெரியார்" பிரபாகரன் சமூகநீதி குறித்து எழுதிய ஒரு புத்தகம் வேண்டாம், ஒரு கட்டுரை காட்டட்டும் பார்ப்போம்? சும்மா வாயில் வந்த படி எதையாவது உளற வேண்டியது. 

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பெரியார் இருந்திருந்தால் நிச்சயமாக இனப் படுகொலை நடந்திருக்காது.  40000 மாவீரர்களை பலி கொடுத்து இருக்க மாட்டீர்கள். 

ஏனென்றால் இனப் படுகொலைக்கு பலியான, மாவீரர்களான மக்கள் 90% ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் அல்லது வறுமையில் வாடிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

 சாதியின் பெயரில் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக, பெரியார் அமைதி வழியில் போராட்டம் நடத்தினார். ஆனால் இவன் போன்ற வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்களை தமிழீழ வேள்வித் தீயில் வீசி கொன்று குவித்து விட்டு, "மாவீரர்களை வணங்குகிறேன்... இனப் படுகொலைக்கு நீதி கேட்கிறேன்..." என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். எல்லாம் கபட நாடகம். பகல் வேஷம். தமிழர்களை சுரண்டி வாழும் இவன் போன்ற சாதிவெறி ஓநாய்களை விரட்டி அடிக்க வேண்டுமானால் ஈழத்திற்கு பெரியார் தேவை. இனிமேல் நடக்கப் போவது தான் உண்மையான விடுதலைப் போராட்டம்.



Thursday, February 13, 2025

புலிக்குழு & ஒட்டுக்குழு ஒற்றுமையாக தையிட்டியில் கைகோர்த்த அதிசயம்!


புலிக் குழுவும், ஒட்டுக் குழுவும், சிங்களப் பேரினவாதிகளும், தமிழ்த் தேசிய பெருமைவாதிகளும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக போராட்டம் நடத்துவதை கனவில் கூட கண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நேற்று அந்த அதிசயம் நிஜத்தில் நடந்தது! 

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த விகாரையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தேர்தலில் தோல்வியுற்ற எதிர்க் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றின. 

வழமையாக சைக்கிள் கட்சி எனப்படும் TNPF, அதிலும் 10 பேர் மட்டுமே, பௌத்த மதத்தில் புனித நாளான ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் "விகாரை எதிர்ப்பு போராட்டம்" செய்வார்கள். முன்பு இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்த காலத்தில் கட்டிய விகாரையை அகற்ற (இடிக்க) வேண்டும் என்றும், அபகரித்த அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்துகிறார்கள். 

அவர்களுக்கு நஷ்ட ஈடு, அல்லது வேறு இடத்தில் காணி வழங்க ஆளுநர் முன்வந்த போதிலும், கடும்போக்கு சைக்கிள் கட்சியின் அழுத்தம் காரணமாக நில உடைமையாளர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். சைக்கிள் கட்சியும் அவர்களை தனது இனவாத அரசியலுக்கு பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகிறது. 

அது ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது இலங்கையில் ஒரு இடதுசாரி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைத்த பின்னர், வலதுசாரி எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை எதிர்க்க காரணம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. அவர்களது கண்களில் தையிட்டி விகாரை விவகாரம் தென்பட்டது.

பிறகென்ன கேட்கவா வேண்டும்? விகாரை கட்ட அனுமதித்த சிங்களப் பேரினவாத வில்லன்கள், விகாரை கட்டி முடிக்கும் வரை காத்திருந்த தமிழ்த் தேசிய புனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு  பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டார்கள். அடேங்கப்பா!

சிங்கங்களும், புலிகளும் ஒன்று சேர்ந்து நட்பு பாராட்டுவது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ஏற்கனவே பிரேமதாசா காலத்தில் பார்த்த விஷயம் தான். என்ன ஒரு வித்தியாசம்? அன்று ஆயுதங்களுடன் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. இன்று வாய்ப் பேச்சு அரசியல் நடக்கிறது. 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியவாதிகள் எழுப்பும் கோஷங்களுக்கு, ஒட்டுக் குழு EPDP மற்றும் சிங்களப் பேரினவாத UNP கட்சியினரும் சேர்ந்து சொன்னார்கள் என்று நேரில் கண்ட ஒருவர் சொல்லி பெருமைப் பட்டார். அட... அட... புல்லரிக்குது!

போராட்ட களத்திற்கு ராஜபக்சே கட்சியினர் மட்டுமே வரவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு யாரும் அழைப்பு அனுப்பவில்லையோ தெரியாது. இல்லாவிட்டால் வடக்கின் எதிர்வினையாக தெற்கில் விகாரை ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கலாம். எப்படியாவது மதக் கலவரம், இனக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது. 

அது சரி. இறுதியாக ஒரு கேள்வி. ஒரு வேளை சர்ச்சையில் உள்ள விகாரையின் முழுப் பொறுப்பையும் தீவிர தமிழ்த் தேசியவாதி கஜேந்திரகுமார் அல்லது அவரது TNPF கட்சியிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? அவர்கள் சொன்ன படி விகாரையை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்புகிறீர்களா? ஒருபோதும் இல்லை! அவர்கள் ஒன்றும் பொன் முட்டை இடும் வாத்தை வெட்டும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல. விகாரையை தொடர்ந்தும் வைத்திருந்து தென்னிலங்கை சிங்கள யாத்ரீகர்களை வரவழைத்து பணம் சம்பாதிக்க பார்ப்பார்கள். இது நடக்கா விட்டால் இருந்து பாருங்கள்.

Wednesday, January 08, 2025

"இலஞ்சம் வேண்டாம்!" - இலங்கையில் அலறும் அ‌திகா‌ரிக‌ள்!!


இலங்கை தொடர்பான இந்த தகவல்களை உங்களுக்கு எந்தவொரு தமிழ் ஊடகமும் சொல்ல போவதில்லை. 

👇👇👇

இலங்கையில் இன்று(8-1-2025), தனியார் வாகன முதலாளிகள் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். ஆம், முதலாளிகளின் வேலைநிறுத்தம்!

ஏன் தெரியுமா? 

புதிய இடதுசாரி NPP அரசாங்கம் கொண்டு வந்த "கிளீன் சிறிலங்கா" (Clean Srilanka) திட்டத்தின் கீழ் விபத்துக்களை தடுப்பதற்கான பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் நடக்கின்றன. அதனால் வாகன முதலாளிகள் அதிகம் பாதிக்கப் படுகின்றார்களாம். 

1. பேருந்து வண்டிகளில் பழுதான உதிரிப்பாகங்கள் இருக்க கூடாது. தேவையற்ற கம்பிகளை கழற்ற வேண்டும். வீதியில் ஒலி மாசடைய வைக்கும், அதிக சத்தம் போடும் ஹாரன் அடிக்க கூடாது. பஸ் வண்டிக்குள் பயணிகளுக்கு இடைஞ்சலாக காதை செவிடாக்கும் அளவிற்கு அதிக சத்தமாக பாட்டு போட கூடாது.

2. சாரதி இருக்கைக்கு முன்பக்கமாக உள்ள கண்ணாடிக்கு அருகில் சாமி படங்கள் (புத்தர் சிலைகள் உட்பட) இருக்க கூடாது. ஏனெனில் அவற்றிற்கு மாலைகள், வர்ண விளக்குகள் அலங்காரம் செய்வதால் சாரதியின் பார்வையை மறைக்கிறது.

3. பந்தயம் ஓடுவது, அதி வேகமாக வாகனத்தை செலுத்துவது தடுக்கப் படுகிறது. பாடசாலைகள் போன்ற இடங்களில் போகும் பொழுது வேகத்தை குறைக்க வேண்டும். மீறினால் அதிக அபராதம் விதிப்பது மட்டுமல்ல, வாகன உரிமம் இரத்து செய்ய படலாம். 

உண்மையில் இது போன்ற பல பாதுகாப்பு விதிகள்  ஏற்கனவே சட்டத்தில் எழுதப் பட்டுள்ளன. ஆனால் முந்திய அரசாங்கங்களின் காலத்தில் யாரும் கணக்கெடுக்கவில்லை. வாகன விதி மீறல்கள் காரணமாக ஏராளமான வீதி விபத்துக்கள் நடந்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. 

அது மட்டுமல்ல, தற்போது இலங்கை முழுவதும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுக்கிறார்கள்! பொது மக்கள் விழிப்பாக இருப்பதால் லஞ்சம் வாங்க தயங்குகிறார்கள் அல்லது அச்சப் படுகிறார்கள். இதனால் ஒரேயடியாக லஞ்சம் ஒழிந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. வெகுவாக குறைந்து விட்டது. 

உலகில் எந்த நாட்டிலும் ஒரு இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது போன்ற அதிசயங்களை எதிர்பார்க்கலாம். அதனால் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள வலதுசாரி ஊடகங்கள் இது போன்ற தகவல்களை மறைக்க பார்ப்பார்கள். அது மட்டுமல்லை, முதலாளிகளுக்கு அடிவருடி பிழைக்கும் தமிழ்த் தேசிய புனிதர்கள் கூட இதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்.

Monday, November 25, 2024

இலங்கையில் முதலாவது இடதுசாரி அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள்

 ஒரு இடதுசாரிக் கட்சி மட்டுமே இது போன்ற அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். 

👇👇👇

தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறை மாவட்டத்தில், NPP சார்பில் போட்டி இட்ட தமிழ் பெண் வேட்பாளர் சரொஜா சாவித்திரி போல்ராஜ், அதிகப் படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளார். 

இன்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். 

சாவித்திரி போல்ராஜ் NPP செயற்பாட்டு குழு உறுப்பினர். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மாத்தறை மாவட்டத்தில் இருந்து தெரிவான முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெறுகிறார்.

வடக்கு கிழ‌க்கு தமிழர்களை மூளைச்சலவை செய்யும் வகையில், காலங்காலமாக JVP எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்த தமிழினவாதிகள், இன்று வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் அமைச்சர்கள் இல்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவர்களது கண்களுக்கு மலையக தமிழ் அமைச்சர்கள் தமிழர்களாக தெரியவில்லை. திருகோணமலையில் இருந்து ஒரு தமிழ் பிரதி அமைச்சர். அவரையும் புறக்கணிக்கிறார்கள். வடக்கில் இருந்து ஒரு தமிழ் அமைச்சர் இல்லை என்பது தான் இவர்களது முறைப்பாடு. இதைத் தான் யாழ்- வெள்ளாளிய மைய வாத சிந்தனை என்கிறோம். 

அது சரி, இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் JVP யில் சேர விடாமல் தடுத்தவர்கள் யார்? எந்த நேரமும் JVP தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை பரப்பி வந்த போலித் தமிழ்த் தேசியவாதிகள் தான். No doubt. சரி இப்பவாவது திருந்தினார்களா? தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்களா? 

NEVER. 

ஒருவர் அமைச்சராக வருவதற்கு கல்வித் தகைமை இருந்தால் மட்டும் போதாது. நீண்ட காலமாக கட்சியில் வேலை செய்திருக்க வேண்டும். அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்து அவர்களை அரசியல்மயப் படுத்திய கள அனுபவம் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் வழிகாட்டும் சித்தாந்தமான மார்க்சிய- லெனினிசம் பற்றிய அறிவுத் தெளிவு வேண்டும். 

இது எதுவும் இல்லாமல் வெறுமனே ஒரு தமிழனாக அல்லது முஸ்லிமாக இருப்பது மட்டுமே சிறப்புத் தகைமை ஆகாது. அப்படி எதிர்பார்ப்பது கூட ஒரு பேரினவாத மனநிலை தான். 


Saturday, July 13, 2024

சாவகச்சேரி மருத்துவமனை ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழலை அம்பலப் படுத்திய டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம். சாவகச்சேரியில் முன் ஒருபோதும் இல்லாத மக்கள் எழுச்சி. 

அரச நிதியில் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் டாக்டர் அர்ச்சுனா சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வைத்திய அதிகாரியும், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். போலிஸ் அனுப்பி கைது செய்து வெளியேற்ற எடுத்த முயற்சி மக்கள் போராட்டம் காரணமாக தோல்வி அடைந்தது. 

சாவகச்சேரி பகுதியில் பூரண கடையடைப்பு அறிவிக்கப்படடது. இதே நேரம் "சிங்களப் பொலிஸ் எதற்கு வந்தது?" என்று கேட்டு அரசியல் செய்ய சென்ற "தீவிர தமிழ்த் தேசியவாதி" சுகாஸ் @Sugashkanu மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு ஓடினார். எல்லா இடங்களிலும் இவர்களது தமிழ்த் தேசிய நாடக அரசியல் எடுபடாது என்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தமிழ் மக்கள் இனியும் இந்த கபடவேடதாரிகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. 

இன்று இலங்கை முழுவதும் ஒரு Whitsle blower ஆக அறியப்படும் அர்ச்சுனா, மருத்துவ ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். குறிப்பாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் இலங்கை அரசுக்கு "நல்ல பிள்ளை" பெயர் எடுப்பதில் யாழ் மருத்துவமனை நிர்வாகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். அரசு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் பெரும் பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். அத்துடன் நிர்வாகத்தில் பிரதேசவாதம், சாதியவாதம் தலை தூக்கி உள்ளமை மருத்துவ துறை சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் இயங்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், புலி விசுவாசிகள் யாரும் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை வைத்து இனவாத பிழைப்பு அரசியல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் சிங்கள அரச கைக்கூலிகள் தான் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியம் ஒரு குட்டி முதலாளிய வர்க்க அரசியல் என்பது மறுபடியும் நிரூபிக்க பட்டிருக்கிறது. யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல் தொடர்பாக தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரம், அவர்களது வர்க்க கோபாவேசத்தை மழுங்கடிக்கும் வகையில் so called தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் "இது ஒரு இன அழிப்பு!" என்றார். இவர்களுக்கு இனத்தை தவிர வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது. சும்மா எதையாவது உளற வேண்டியது. 

இன்னொரு எம்.பி. கஜேந்திரன் ஊழல் செய்த டாக்டர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றார். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே அரச மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசை கண்டிக்கவில்லை! என்னே அதிசயம்! இந்த விஷயத்தில் அரசுக்கு முட்டுக் கொடுப்பது தவறாக தெரியவில்லை. இவர்கள் யாரும் போராட்டம் நடத்திய மக்களை சென்று சந்திக்கவில்லை. 

இவர்களை விட, புலிகளின் பெயரால் ஜிகாத் (புனிதப் போர்) நடத்தும் ஏக இறைவனின் போராளிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தானடா விட்டாலும் சதை ஆடும். சிங்கள அரசுக்கு நெருக்கடி வந்தால் புலி அரசியலை கையில் எடுப்பார்கள். இந்த விஷயத்திலும் "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?" என்று புறநானூறு பாடினார்கள். அதாவது சாவகச்சேரி மருத்துவமனை ஊழலை வெளிக் கொணர்ந்த டாக்டர் அர்ச்சுனாவின் தந்தை முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தாராம். அந்த பெருமை மட்டும் அவர்களுக்கு போதும். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன வந்தது? 

சரி, தனியார் மருத்துவமனை தொடர்பாக இவர்களது நிலைப்பாடு என்ன? முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இயங்கியது மருத்துவமனையில் பணியாற்றிய so called "தமிழ்த் தேசிய மருத்துவர்கள்", தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் நோக்கம் பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்பதாக மாறி விட்டது. இது தான் குட்டி முதலாளிய அரசியல் சிந்தனை. "காசு இருந்தால் மருத்துவம். இல்லை என்றால் வருத்துவோம்!" - இது தானே மருத்துவ மாபியாவின் கொள்கை? இதற்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தை. தமிழ்த் தேசியவாதிகள் கூட்டுக் களவாணிகள்.