Showing posts with label வங்கிக் கொள்ளை. Show all posts
Showing posts with label வங்கிக் கொள்ளை. Show all posts

Saturday, May 22, 2010

மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!


Enric Duran - Robin Hood of the Banks
இதோ ஒரு நவீன ராபின் ஹூட்! ஸ்பெயினை சேர்ந்த என்றிக் டூரன் (Enric Duran ). பார்செலோனா நகரை சேர்ந்த பிரபல முதலாளித்துவ எதிர்ப்பு போராளி. நாடு முழுவதும் பேசப் படும் அளவு புகழ் பெற அவன் செய்த காரியம் ஒன்றே ஒன்று தான். ஸ்பெயின் வங்கிகளில் பெரிய தொகை கடன்களை எடுத்தான். 39 வங்கிகளில் சுமார் அரை மில்லியன் யூரோக்கள் கடனாக எடுத்த போதிலும், அதை திருப்பிச் செலுத்தும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. தான் எடுத்த பணத்தை ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தான். மிகுதியை முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் அமைப்பிற்கு வழங்கினான். ஒரு வருடம் தலைமறைவாக இருந்து விட்டு நாடு திரும்பிய போது, காவல்துறை கைது செய்தது. ஆனால் மக்கள் ஆதரவு அவன் பக்கம் இருந்தது. நீதிபதிகளும் செயலின் நியாயத் தன்மை கருதி விடுதலை செய்ய நேர்ந்தது. "உண்மையில் வங்கிகள் அன்றாடம் மக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான் மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுத்தேன்." இவ்வாறு கூறுகிறார் Enric Duran.

ஸ்பெயினுக்கு வெளியே ஒரு சிலரே அறிந்த "முதலாளித்துவ எதிர்ப்பு வங்கிக் கொள்ளை" பற்றி சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துள்ளன. உலக மக்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லல் படும் நேரம், ஸ்பெயின் உதாரணத்தை பிறரும் பின்பற்றக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை. இருப்பினும் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்று Enric Duran னை, லட்சக்கணக்கான பார்வையாளர் முன்னிலையில் பேட்டி கண்டது. நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதனை மறு ஒளிப்பரப்பு செய்திருந்தது. என்றிக் டூரன் வழங்கிய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

- நீ வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 5000000 யூரோக்கள். இந்த விபரம் சரியா?
- ஆமாம்
- அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கப் போகிறாயா?
- இல்லை
(பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரகோஷம்!)
- உன்னை ஒரு ராபின் ஹூட் ஆக கருதிக் கொள்கிறாயா?
- இல்லை. நான் நானாகவே இருக்கிறேன்.