Showing posts with label பேரினவாதம். Show all posts
Showing posts with label பேரினவாதம். Show all posts

Saturday, April 22, 2017

நோர்வீஜிய பேரினவாத வெறியும் சாமி இனவழிப்பும் - ஓர் ஆவணம்

தேசியவாதம் என்ற கொள்கை, முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இன்று நமது தமிழ் தேசியவாதிகள், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொழி அடிப்படையிலான தேசிய அரசுக்களை, அடிக்கடி உதாரணமாகக் காட்டுவார்கள். ஆனால், உண்மையில் அவற்றை தேசியவாத அரசுகள் என்று அழைப்பதை விட, பேரினவாத அரசுகள் என்று அழைப்பதே பொருத்தமானது.

ஒரு காலத்தில், ஐரோப்பிய தேசியவாதிகள், சிங்களவர்களை விட படு மோசமான பேரினவாதிகளாக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஏதாவதொரு சிறுபான்மை மொழி பேசும் இனம் ஒடுக்கப் பட்டது, இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டது. இன்று, சிறந்த மனிதநேய வாதிகள் என்று காட்டிக் கொள்ளும், ஸ்கன்டிநேவிய நாடுகளும் அதற்கு விதி விலக்கல்ல.

நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளும், எவ்வாறு "சாமி" என்ற மொழிச் சிறுபான்மையின மக்களை ஒடுக்கினார்கள் என்பதை விபரிக்கும் ஒரு ஆவணப் படத்தை பார்க்க கிடைத்தது.

எழுபதுகளில், இலங்கையின் சிறுபான்மை தமிழ் இனத்தின் ஈழப்போராட்டம் தொடங்கி விட்டது. அதே கால கட்டத்தில், "நாகரீகமடைந்த" வட ஐரோப்பாவில், ஒரு கொடுமையான இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. ஐரோப்பியக் கண்டத்தின், வட முனைப் பகுதியில் வாழ்ந்த சாமி இன மக்கள், பேரினவாதிகளின் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள்.

சாமிகள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த, பனிப்பிரதேசத்திற்கு உரிய பூர்வீக மக்கள் ஆவர். சாமி மொழி பேசும் மக்கள், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். சர்வதேச எல்லைகள், அவர்களின் வாழ்விடங்களை ஊடறுத்துச் செல்கின்றன.

நோர்வே, சுவீடன், பின்லாந்தை சேர்ந்த பேரினவாத ஆட்சியாளர்கள், சாமி இன குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து, பிரித்தெடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்களது கிராமங்களில் இருந்து, குறைந்தது ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விடுதிப் பாடசாலையில் தங்க வைக்கப் பட்டார்கள்.

அங்கே மழலைகளின் மூளைக்குள், ஆக்கிரமிப்பாளர்களின் மொழி, கலாச்சாரம் என்பன திணிக்கப் பட்டன. தாய் மொழியில் பேசுவது தடுக்கப் பட்டது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பணியாளர்களைத் தவிர வேறெந்த பெரியவர்களையும் பிள்ளைகள் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை.

நோர்வே நாட்டு எல்லைக்குள் வாழ்ந்த சாமி இன பிள்ளைகள், நோர்வீஜியர்களின் மொழி, பண்பாடு, நடை, உடை, பாவனைகளை பின்பற்ற வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர். அது போன்று, சுவீடனில் வாழ்ந்த சாமிகள், சுவீடிஷ் மொழியையும், பின்லாந்தில் வாழ்ந்த சாமிகள் பின்னிஷ் மொழியையும் பேச வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

பின்னிஷ் மொழிக்கும், சாமி மொழிக்கும் இடையில் மட்டுமே சில ஒற்றுமைகள் உள்ளன. (தமிழும், மலையாளமும் போல நினைத்துக் கொள்ளுங்கள்.) ஆனால், சாமி மொழிக்கும், நோர்வீஜிய, சுவீடிஷ் மொழிகளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது. (தமிழும், சீன மொழியும் போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்.) எந்த வித சம்பந்தமும் இல்லாத, அந்நிய மொழியை பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்த குழந்தைகள், கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டனர். கூடவே பெற்றோரை, உறவினரை பிரிந்து வாழும் வேதனை வேறு.

ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை இலகுவில் கிரகிக்க முடியாத குழந்தைகள், முட்டாள்கள் என்று சிறுமைப் படுத்தப் பட்டனர். சாமி இன மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. சாமி மக்கள் ஐரோப்பிய மனித இனங்கள் எல்லாவற்றிலும் தாழ்ந்தவர்கள் என்று, அறிஞர்கள் "ஆராய்ச்சிகள்" செய்து "கண்டுபிடித்தனர்." ஹிட்லர் பாணியிலான இனவெறி ஆராய்ச்சிக் குறிப்புகள், இன்றைக்கும் சுவீடனில் உள்ள ஊப்சலா பல்கலைக்கழகத்தில் உள்ளன.

நோர்வேயிலும், இன ஒதுக்கல் கொள்கை உச்சத்தில் இருந்ததாக, எழுபதுகளில் சாமி மக்களிடையே பணியாற்றியவெளிநாட்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். அந்தக் காலங்களில், பெரும்பாலான சாமி இன மக்கள், தமது மொழியைக் கூட, எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருந்தனர்.

பொது இடங்களில், நோர்வீஜியர்கள் சாமி மக்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தி வந்தனர். கடைகளில் வரிசையில் நிற்கும் பொழுது, சாமி ஒருவர் முன்னுக்கு நின்றாலும், பின்னால் நிற்கும் நோர்வீஜியர் முதலில் செல்ல முடிந்தது. ஒரு பேரூந்து வண்டியில், முதலில் நோர்வீஜியர்கள் ஏறிய பின்னர் தான், சாமி இன மக்கள் ஏற முடியும். நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும், தற்போது சாமி இன மக்களுக்கு உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: "சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

Wednesday, October 08, 2014

பிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய நாடு

இந்தப் படத்தில் இருப்பது ISIS போன்றதொரு இஸ்லாமிய தீவிரவாதக் குழு அல்ல. "நாகரிகத்தில் சிறந்த" பிரெஞ்சுப் படையினர். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரியாவில் நடந்த போரின் பொழுது, எதிராளிகளின் தலைகளை வெட்டி மகிழும் காட்சி. பிரான்சில் இதற்குப் பெயர்: "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்."


ஒரு மேற்குலக, முதலாளிய விசுவாசியின் கேள்வி: 

//விவாதிப்பது எனது நோக்கமல்ல... மார்க்சியம் தெரியாதவனுமில்லை... என் வாழ்நாளில் நான் பொய்யனாக வாழ்ந்த காலம், புரட்சி பேசி திரிந்த காலமே. மேற்குலக நாடுகளைப் போல், அதிலும் பிரான்சை போல், "சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம்" என அரசியல் சாசனத்துடன் கூடிய ஒருநாட்டை ஒப்பீட்டு அடிப்படையில் (பிரான்சில் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இருக்கிறது) ஏன் மற்ற நாடுகளில் இல்லையா? இவற்றை விட, தலைசிறந்த முன்னுதாரணமான முதலாளித்துவ கொள்கை இல்லாத ஒரு நாடடின் பேர் உங்களால் தர முடியுமா? மனச்சாட்சியுடன் பதிலளியுங்கள்.// 

விவாதிப்பதற்கு முன்னர், ஒரு விடயத்தை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? "மார்க்சியம் தெரியாதவனல்ல..." என்று கூறும் ஒருவர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தான், மார்க்சியத்தின் தேவை உருவானது என்ற உண்மையை உணராதது ஏனோ? 

உலக வரலாற்றுப் பாதையில் பிரெஞ்சுப் புரட்சி முற்போக்கான பாத்திரம் வகித்துள்ளது என்று மார்க்சியம் கூறுவது தெரியாமல் போனது எப்படி? நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், லிபரல்வாதிகளும், முதலாளிகளும் அதிகாரத்தை கைப்பற்றினர்.

நீங்கள் கூறும் "சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" என்பது லிபரல்வாதிகளின் அரசியல் கோட்பாடு. இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான அரசுகள், லிபரல் கொள்கை அடிப்படையில் தான் ஆட்சி அமைத்துள்ளன. இலங்கை, இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், பிரான்சில் தோன்றிய அதே லிபரல் கொள்கை தான் பின்பற்றப் பட்டு வருகின்றது. 

ஆனால், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய அதே லிபரல் பிரெஞ்சு அரசு, கரீபியன் தீவுகளில் கிளர்ச்சி செய்த கருப்பின அடிமைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்தது! கருப்பின அடிமைகளை சகோதரர்களாக அங்கீகரிக்கவில்லை. அவர்களை சமத்துவமாக நடத்தவில்லை. பிரான்சில், பிரெஞ்சு மொழியின் பேரினவாதம் நிலைநாட்டப் பட்ட வரலாறு தெரியாதா? உலகின் முதலாவது பேரினவாத அரசு பிரான்சில் தான் உருவானது. 

பிரான்சில் உள்ள சிறுபான்மை இனங்களான பாஸ்க், ஒக்கிட்டான், பிறேய்ட்டன், கொர்சிக்கன், பிளாம்ஸ்(டச்சு), அல்சாசியன் (ஜெர்மன்) மொழிகளை பேசிய சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்ட வரலாறு தெரியாதா? பிரான்சில் வாழ்ந்த சிறுபான்மை இன மக்கள், தமது தாய்மொழியை பேசும் உரிமை இருக்கவில்லை. வீடுகளில், பொது இடங்களில் தாய்மொழி பேசினால் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். அவர்கள் மேல் பிரெஞ்சு மொழி பலவந்தமாக திணிக்கப் பட்டது. அதை எல்லாம் மறந்து விட்டீர்களா? 

தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் சிங்களப் பேரினவாத அரசும், பிரான்சின் வழியை பின்பற்றி வருகின்றது. அப்படியானால், சிங்களப் பேரினவாத அரசு உங்கள் கண்களுக்கு "சிறந்த முன்னுதாரணமாக" தெரிகின்றதா? 

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள், எதற்காக அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்தார்கள்? அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படைகள் புரிந்த இனப்படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் உங்களுக்கு "தலைசிறந்த முன்னுராதணமாக" தெரிகின்றதா? முன்னாள் காலனிகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பயங்கரவாத ஆட்சி காரணமாகத் தானே, அங்கே விடுதலைப் போராட்டங்கள் நடந்தன? 

அது தான் போகட்டும். பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரான்சில், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற கொள்கையின் கீழ் புரட்சி நடந்தது. அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? கொடூரமான பயங்கரவாத ஆட்சி நடந்தது. ரொபெஸ்பியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மைக்கு பலர் பலியானார்கள். ஒரே கொள்கையை பின்பற்றியவர்கள் கூட ஒழித்துக் கட்டப் பட்டார்கள். 

நீங்கள் அந்தக் கால பிரான்சில் வாழ்ந்திருந்தால், பொதுத் தேர்தல், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் பற்றி மூச்சுக் கூட விட்டிருக்க முடியாது. அடுத்த கணமே தலையை வெட்டி விடுவார்கள். ஈராக், சிரியாவில், ISIS தலை வெட்டும் வீடியோ பார்த்தீர்கள் தானே? அதே தான் அன்றைய பிரான்சில் நடந்தது. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரான்சில், ஆயிரக் கணக்கான அப்பாவிகளின் தலைகள் வெட்டப் பட்டன. இது தான் நீங்கள் காட்டும் "சிறந்த முன்னுதாரணம்!"

முதலாளித்துவ ஜனநாயகத்தை, சோஷலிச ஜனநாயகத்துடன் ஒப்பிட முடியாது. முதலாளித்துவ நாடுகளில் முதலாளிகளின் சர்வாதிகாரம் இருக்கும். ஒரு சோச‌லிச புரட்சியின் பின்னர் அது ஒழிக்கப் படும். அங்கே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்படும். அது பின்னர் உழைக்கும் மக்களின் ஜன நாயகத்தை கொண்டு வரும்.